சனி, 4 ஏப்ரல், 2020

"தியாகம்” ஒரு கண்ணோட்டம்"

மனைவியர் ஆண்மக்கள் தங்கம் வெள்ளி கையிருப்புகள்,
பயிற்சி பெற்ற குதிரை, கால்நடைகள் மற்றும் விளை நிலங்கள்
நேசிப்பது மக்களுக்கு அலங்காரமாக காட்டப்படுகின்றன
ஆசைப்பொருட்களை இவைகள் உலக வாழ்வின் சுகங்களாகும். அல்லாஹ்விடம் தான் அழகிய புகலிடம் உள்ளது
                                அல்குர் ஆன் : (3 : 14)

தனக்கு மிஞ்சியதைக் கொடுப்பது தருமம், தனக்குள்ளதைக் கொடுப்பது தயாளம், தன்னையே கொடுப்பது தியாகம்

தியாகம் என்ற சொல்லை செவியுற்ற மாத்திரத்திலேயே ஹளரத்
இப்றாஹீம் நபி (அலை) அவர்கள்தான் நினைவலையில் தோன்றுவார்கள்.

ஒன்றை ஒன்றுடன் ஒப்பிட்டு நோக்கினால்தான், அந்த ஒன்றின் அருமை புரியும். அந்த நியதிக்கேற்ப ஹளரத் இப்றாஹீம் (அலை) அவர்கள் பல கட்டத்தில் புரிந்த தியாகங்களை சாமானியர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நோக்குவோம்

நாம் செய்த தியாக வாக்குறுதி.

ஆத்மாக்கள் அனைத்தும் சுகத்தையே விரும்பின. எனவே அவை
சுவனத்தையே இறைவனிடம் யாசித்தன, யாசிக்க மட்டும் செய்யவில்லை சண்டையும் பிடித்தன

யாஅல்லாஹ் ஆதம் நபி (அலை) அவர்களை கவனத்தில் குடியிருக்கச் செய்தாய்! அவர்கள் உனது கட்டளையை மறந்ததால் அவர்களை பூமிக்கு அனுப்பி விட்டாய். ஆனால் நாங்களாக இருந்தால் உன் கட்டளையை மறந்திருக்க மாட்டோம். சுவனத்திலேயே வாழுவோம்!" என்று ஆத்மாக்கள் கூறின

அதைச் செவியுற்ற இறைவன்; "இல்லை நீங்களும் அவரைப்
போன்றுதான் செய்வீர்கள். நீங்களும் அவரின்வழித் தோன்றல்கள்தானே என்று கூறினான். "எங்கள் இறைவா! நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம் வேண்டுமானால் எங்களுக்கு சந்தர்ப்பம் தந்து பார் என்று ஆத்மாக்கள் கூறின  சரி! நீங்கள் குற்றமற்ற பத்தினித் தன்மையை நிருபிப்பதற்கு உங்களுக்கு நான் ஒரு வாய்ப்புத் தருகிறேன். ஆனால் ஆதமைப் போன்று உங்களை கவர்க்கத்தில் உலா வரவிட்டு நான் சோதிக்க விரும்பவில்லை
உங்களை பூமிக்கு அனுப்புகிறேன். நான் கூறிய முறைப்படி அங்கு நீங்கள் நடப்பீர்களானால், உங்களை நான் சுவனத்தில் நிரந்தரமாக வாழச்செய்வேன் என்று இறைவன் வாக்களிக்கிறான்

இறைவா! பூமிக்கல்ல. அகல பாதாளம் எங்கே வேண்டுமானாலும்
எங்களை நீ அனுப்பு, நாங்கள் சோதனையை வென்று காட்டுகிறோம்! என்று ஆத்மாக்கள் சவால்விட்டன. சென்று வாருங்கள்! வென்று வாருங்கள் என்று இறைவன் வாழ்த்துக்கூறி அந்த ஆத்மாக்களை அனுப்பி வைத்தான்

ஆத்மாக்கள் ஆத்மார்த்த உலகிலிருந்து எதார்த்த உலகிற்கு வந்த
போதுதான் தங்கள் சவாலை நீருபிக்க எத்துணை எதிர் நீச்சலடிக்க
வேண்டியுள்ளது என்பதை அவைகள் கண்டு கொண்டன.

பலமான வரவேற்பு

போட்டி மிக்க கடைத்தெரு வழியாகச் சென்றால், ஒரு காட்சியைக்
காணலாம். சில கடைகளில் இங்கே வாருங்கள்! இங்கே வாருங்கள்என்று வழிச்செல்வோரை வருந்தி அழைப்பார்கள். சிலர் கையசைப்பார்கள், சிலர் கண்ணாலேயே அழைப்பார்கள். சில கடைகளில் உள்ள பொருட்களே, தனது கவர்ச்சியால் செல்லுவோர் மனதைப் பிடித்திழுக்கும்

சந்தையில் புகுந்தால் கிலோ ஐந்து ரூபாய்! கிலோ ஐந்து ரூபாய்
"ரூபாய்க்கு இரண்டு! ரூபாய்க்கு இரண்டு" என்பன போன்ற கோரஸுசள் ஒலிக்கும். ஒன்றும் வாங்கும் நோக்கமில்லாமல் அந்த வழியாகச் செல்வோரைக் கூட வாங்கச் செய்ய அந்த வரவேற்புகள் பெரு முயற்சி செய்யும்

இது போன்றே இந்த உலகிலுள்ள அனைத்து பொருட்களும், அனைத்து நிலைகளும் மனிதனைக் கூவி அழைக்கின்றன. தங்கள் கவர்ச்சியாலும், காந்த சக்தியாலும் அவைகள் ஒவ்வொன்றும் மனிதனை வளைத்துப் போட முயற்சி மேற்கொள்கின்றன. அவன் நாடிச் செல்லும் வேலையை மறக்கடிக்க அவை பிரயத்தனம் செய்கின்றன. நோக்கமே மறக்கடிக்கப்படும் போது அவன்
வெற்றியடைவது எவ்வாறு

விளையாட்டுப் பருவம்

மனிதனை மறக்கடிக்கச் செய்யும் முதல் காந்த சக்தி தாயும், தந்தையும் தான், அவர்கள் அவனை அன்பு மழையால் நனைக்கிறார்கள் கண்ணே! மணியே என்ற பாச வார்த்தைகளால் கட்டிப் போடுகிறார்கள். தங்கள் கண்களைவிட அவனை அதிகமாகப் பாதுகாத்து அவன் மனதில் இடம் பிடிக்கிறார்கள். பாசம்தான் உலகம், பாசம்தான் சுகம் அதை மிஞ்சிய சுகம் உலகில் ஏதுமில்லை என்று அவனை எண்ண வைக்கிறார்கள்

அந்த விளையாட்டுப் பருவத்தில்தான் ஒருநாள் ஹளரத் இப்றாஹீம்
(அலை) அவர்கள் தனது தாயிடம் வினத் தொடுக்கிறார்கள்; "தாயே! எனது இறைவன் யார்? நான் தான் உனது இறைவன்' 'அப்படியானால் உனது இறைவன் யார்? 'உனது தந்தைதான் எனது இறைவன்அப்படியானால் தந்தையின் இறைவன் யார்?' நமது அரசன்தான் எல்லாருக்கும் இறைவன் அப்படியானால் அரசனின் இறைவன் யார்?' எனக்கு விளக்கம் தெரியவில்லை உனது தந்தையிடம் கேட்டுப்பார்' என்று கூறி தாய் கழற்றிக் கொண்டார்கள்

தந்தை வந்த போது அவர்கள் தாயிடம் தொடுத்த வினாக்களைத்
தொடுத்தார்கள், அதே பதில்தான் கிடைத்தது. இறுதியாக நமது அரசனுக்கு இறைவன் யார்? என்ற கேள்வியைக் கேட்டதும் கன்னத்தில் அறை விழுந்தது இனிமேல் இது போன்று பேசக்கூடாது. மீறிப் பேசினால் உன்னைக் கொன்று விடுவேன் என்ற எச்சரிக்கையும் பதிலாகக் கிடைத்தது

ஹளரத் இப்றாஹீம் (அலை) அவர்கள் அரும்பாக இருக்கும் போதே
தியாகத் தழும்பை ஏற்றுக் கொண்டார்கள்

அந்த பருவத்தில் நமது நிலை எப்படி இருக்கும்? குணங்குடி மஸ்தான் (ரஹ்) பதிலளிக்கிறார்கள்

மாதா பிதாவுமென்னை
மயக்கி உன்னைக்
காதலிக்க வொட்டாரென்
கண்ணே ரஹ்மானே

இளமைப் பருவம்

தாயின் மடியில் சுகங்கண்ட மனிதன் அதையே நிரந்தர சுகமாகக்
கொண்டானா? இல்லை. ஏழெபட்டு வபதாள போது அவனது சுகக் காற்றுதிசை மாறி வீசத் தொடங்கியது

விளையாட்டும், பொழுதுபோக்கும் அவனைக் கவர்ந்து இழுத்தன
தன்னை அழகு படுத்துவதிலும், தனது ஆடை அணிகலன்களை அழகுபடுத்துவதிலும் அந்த இன்பம் இருப்பதாக அவன் உணருகிறான். அரும்பு மீசையைக் கண்ட உடன் அதைத் தடவுவதில்தான் இன்பம் இருப்பதாகக் கருதுகிறான். நிலைக்கண்ணாடி முன் நின்று தனது வடிவத்தைக் காணுவதில்
இன்பம் கண்டான். உடலை வனப்பாக வளர்ப்பதுதான் உலகம் என்றெண்ணினான்

இந்த நிலையை அடைந்த அவனுக்கு தாயின் அரவணைப்பு எரிச்சலைத் தருகிறது. இதுகாறும் தன் தாயின் மடியில் சுகங்கண்ட அவன் தனது நண்பர்களின் தோளில் கைபோட்டு நடப்பதில் தான் இன்பம் இருப்பதாக உணருகிறான். இதுவரை இன்பமளித்து வந்த பெற்றோர் சொல் அவனுக்கு தன்னைக் கட்டுப்படுத்தும் கடிவிலங்காகத் தோற்றம் தருகிறது

மற்றவர்க்கு நட்பும், உடல் ஆழகும் உடையழகும் கவர்ச்சியாகத் தோன்றும் பருவத்தில் ஹளரத் நபி இப்றாஹீம் (அலை) அவர்கட்கு தோன்றிய சிந்தனையைப் பாருங்கள்

இரவு தோன்றியபோது அவர்கள் கண்ணைப் பறிக்கும் விண்மீன்களைக் கண்டார்கள் இது எனது இறைவனாக இருக்குமோவென எண்ணம் கொண்டார்கள். காலைப் பொழுதில் அவை மறைந்த போது, மறைபவை என் இறைவனாக இருக்க முடியாது என்று கண்டார்கள். மறுநாள் ஒளி சிந்தும்
நிலவைக் கண்டபோது இது என் இறைவனாக இருக்கமோவென எண்ணம் கொண்டார்கள், பகற்பொழுதில் அதுவும் மறைந்தபோது இதுவும் என இறைவனாக இருக்க தகதியற்றது என்று கூறினார்கள். மறுநாள் ஒளி வெள்ளமான கதிரவனைக் கண்டபோது இது மிகப் பெரியதாக உள்ளது அநேகமாக இது என் இறைவனாக இருக்கலாமென முடிவு செய்தார்கள். மாலைப் பொழுதில் அதுவும் மறைந்து விடவே உண்மையான ஞானம் பெற்றார்

வானங்களை பூமியை, விண் மீன்களைப் படைத்தவனே எனது
இறைவன் என்று விண்ணப்பிக்கவும் செய்தார்கள்'

பின்னர், தான் பெற்ற தெளிவை தந்தைக்கு தெரிவித்தார்கள். தந்தை
வீட்டை விட்டு விரட்டினார். தனது நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்அந்த மக்கள் அவர்களை தீக்கிரையாக்க முயன்றார்கள்

ஹளரத் நபி இப்றஹீம் (அலை) அவர்கள் இறைவனுக்காக தனது உடலை தியாகம் செய்த பருவத்தில், நமது நிலை எப்படியுள்ளது என்பதை குணங்குடி மஸ்தான் (ரஹ்) விளக்குகிறார்கள்

பிற்றத் துருத்தி தனைப்
பீக்குளியைச் சாக்கடையை
கார்த்தேன் வளர்த்தேன்
என்கண்ணே ரஹ்மானே
சோற்றுப் பொதியைச்
சுமந்து அலைந்து சுழன்று
காற்றுத் தரும்பானேன்
என் கண்ணே ரஹ்மானே

வாலிபப் பருவம்

தன்னைக் கவனிப்பது, தன் அழகைக் கவனிப்பது, தன் நண்பனிடம்
கதைப்பது போன்றவற்றில் இன்பம் கண்ட மனிதன் அதிலேயே நிலைத்து நின்றானா? இல்லை! வாலிபம் வந்தணைத்தவுடன் நிலமையே மாறியது வாலிபம் வந்தவுடன் வாழ்க்கைத்துணை என்ற காந்தம் அவனைப் பிடித்திழுக்கிறது. அது போது அவன் மனம் விளையாட்டில் லயிக்காது தன்னைக் கவனிக்கச் சொல்லாது, தனது சரீரத்தைக் கவனிக்கச் சொல்லாது உண்ணச் சொல்லாது உறங்கச் செல்லாது, மானைக் கண்டால் லைலா மயிலைக் கண்டால் லைலா! என்று அவன் பைத்தியமாய் அலைய ஆரம்பித்துவிடுகிறான்

மனைவி வருகிறாள் காதல் மொழி பேசுகிறாள், குழந்தை பிறக்கிறது
மழலை மொழியால் கொஞ்சுகிறது, அதுவே சுகம், அதுவே உலகம் என்று முடங்கிக் கிடப்பவனுக்கு இறையை அடையும் எண்ணம் எங்ஙனம் தோன்றப் போகிறது

குணங்குடி அப்பா பாடுகிறார்கள்

பெண்டுபிள்ளை யென்றே
பிதற்றுதல் பொய்யல்லாமற்
கண்ட பலன் ஒன்று மில்லை
என் கண்ணே ரஹ்மானே

இக்கால கட்டத்தை அடைந்த ஹளரத் இப்றாஹீம் (அலை) அவர்களோ பந்த பாச வலையில் சிக்கவில்லை. இறைவனுக்காக அந்த வலைகளை அறுத்தெறிந்தார்கள், பாரான் எல்லையில் தண்ணீர் இல்லாத காட்டில் மகன் இஸ்மாயீலையும், மனைவி ஹாஜரா அம்மையாரையும் விட்டுத் துறந்தார்கள் பின்னர் அதுவும் போதாதென்று, மகன் இஸ்மாயீலை அறுத்து இறை நேசத்தை
நிரூபிக்கத் தயாரானார்கள், அது வல்லவோ தியாகம்

முதுமைப் பருவம்

மனைவி மக்கள் என்று கிறங்கிக் கொண்டிருந்த மனிதனுக்கு தெளிவுபிறக்கிறது. பணம் என்ற சரக்கு இல்லையாயின் மனைவியும் சுகம் தரமாட்டாள் மதலைகளும் மகிழ்வளிக்க மாட்டார்கள் என்பதை அவன் கண்டு கொள்கிறான் அவன் திசை மாறிப் பறக்கிறான். மனைவியுடன் உறவு கொள்வதை விட
பணத்துடன் உறவு கொள்வதைப் பெரிதாக நினைக்க ஆரம்பிக்கிறான்
குழந்தைகளைக் கொஞ்சுவதை தவிர்த்து பணம் காய்க்கும் மனிதர்களைக் கெஞ்சுகிறான்

அவனுக்கு உண்ண நேரம் கிடைப்பதில்லை உறங்க நேரம் கிடைப்பதில்லை. மனைவி மக்களிடம் பேச நேரம் கிடைப்பதில்லை. குடும்பத்தார் உறங்கிய பின் வீடு வந்து, அவர்கள் விழிக்கு முன் பறந்துவிடுகிறான். அந்த அளவு பணம் அவனை கவர்ந்திழுக்கிறது. சுகம் தரும் மனைவி மக்களையே நினைக்க நேரமில்லாத அவனுக்கு இறை நெருக்கத்துக்கு எவ்வாறு நேரம் கிடைக்கும்

குணங்குடி அப்பா பாடுகிறார்கள்

வேட்டை பெரிதென்றே
வெறிநாயைக் கையில்
பிடித்து காட்டிற் புகலானேன்
என் கண்ணே ரஹ்மானே

ஆனால், ஹளரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் நிலை வேறாக இருந்தது, அவர்கள் பணத்தையும் பெரிதாக நினைக்கவில்லை பன்னூற்றுக்கணக்கான ஆடுகளை சொத்தாகப் பெற்றிருந்த அவர்கள் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்த "ஸுப்பூஹுன் குத்தூஸுன்-ரப்புல் மலாயிக்கத்தி-வர்ரூஹ் என்ற இறை ஸ்தோத்திரத்தை திரும்ப செவியுறுவதற்காக அந்த ஆட்டு மந்தையைத் தியாகம் செய்தார்கள்

அணையும்போது பெறும் ஞானம்

கோடிக் கோடி தேடினாலும் மனிதனுக்கு தேவை அடங்கவில்லை. மூப்பு ஏற்பட்டதும் பலகீனம் தழுவிக் கொள்கிறது. இனியும் பொருளைத் தேட முடியாது தேடாமல் குடும்பத்தாரைத் திருப்திபடுத்தவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்போது அவனுக்கு வாழ்க்கை கசக்கிறது

அவனது உழைப்புக் குறைவதைக் கண்ட உறவினர்கள் அவனை
உதாசீனப்படுத்துகிறார்கள். அப்போது அவனுக்கு ஞானம் பிறக்கிறது. மனைவி மக்களுக்காக உழைத்து ஓடாகும் போதே, இறையன்பையும் சம்பாதிக்காமல் போய் விட்டேனே! இறையாணையை மதிக்காது இருந்து விட்டேனே! அவன் என்னை என்ன செய்வானோ
அப்போது அவனுக்கு எழும் மனப் போராட்டத்தைக் குணங்குடிமஸ்தான் (ரஹ்)அப்பா விளக்குகிறார்கள்

விடாவென் தேகம்
விழுமிடந்தான் வீதிகளோ
காடோ செடியோ வென் கண்ணேஹ்மானே
பாசமுடன் வளர்த்த பாழுடல் நாய்க்கிரையோ
காகங் கழுக்குக் கிரையோ என் கண்ணே ரஹ்மானே

அணையும் நேரத்தில் இறைவன், ஹரத் இப்றாஹீம் (அலை) அவர்களை அணைத்துக் கொண்டான் கொண்டான். அவர்களை தனது கலீல்" (நண்பன்) என்று குறிப்பிட்டான் அவர்கள் கொண்ட அன்பின் அடையாளத்தை ஆலயமாக எழுப்பச் செய்தான்
அந்த ஆலயத்தில் அவர்களின் நினைவுச் சின்னத்தையும் அமையச் செய்தான்

ஐயாயிரம் ஆண்டு முன்னே

தனக்காக வாழ்ந்தவர், தான் உள்ளவரை நினைக்கப்படுவார்.

அவர்களின் தியாகத்தை இறைவன் ஏற்றுக்

குடும்பத்துக்காக வாழ்ந்தவர் குடும்பத்தார் உள்ளவரை நினைக்கப்படுவார்

நாட்டுக்காக வாழ்ந்தவர், நாட்டவர் உள்ளவரை நினைக்கப்படுவார்

ஆனால் இறைவனுக்காக வாழ்ந்தவர் என்னென்றும் நினைக்கப்படுகிறார்.

என்ற நியதிக்கேற்ப ஐயாயிரம் ஆண்டுகள் முன் நடந்த அந்த தியாகச் செம்மலை இன்றும் நினைக்கிறோம்! என்றும் நினைப்போம்


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.

9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக