புதன், 22 ஏப்ரல், 2020

தலைமுடி தரும் கல்வி


பெண்கள் தங்கள் தலைமுடியைப் பராமரிப்பதைப் பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும். குழந்தையைவிட பல பெண்கள் தங்கள் கூந்தலுக்கே முன்னுரிமையளிக்கின்றனர் வாசனை எண்ணெய் தடவுவதும், வகிடு எடுத்து வளைவு நெளிவாக வாரி முடிப்பதும் என்று ஏகப்பட்ட வேலைகள்.


அவ்வளவு தூரம் அக்கறையெடுத்து, அவ்வளவு மதிப்பளித்து பாதுகாத்த கூந்தலில், ஒரு முடி கீழே விழுந்தால் என்ன செய்கிறார்கள்? அருவெறுப்போடு அதை யெடுத்து அப்படியே குப்பையில் தூக்கியெறிகிறார்கள்.

தலையில் இருந்தபோது கூந்தலுக்கு எவ்வளவு மதிப்பு எவ்வளவு கவனம் எவ்வளவு பராமரிப்பு ஆனால், தலையிலிருந்து உதிர்ந்தால், அதைவிட இழிவானது வேறொன்றும் இருக்க முடியாது.

இப்படித்தான் மனிதர்களும் தன்னுடைய நிலையில் ஒரு மனிதன் சரியாக இருக்கும் வரையில் தான் ஒரு மனிதனுக்கு மதிப்பு, புகழ் எல்லாம். அந்த நிலையிலிருந்து அவர் இழிந்தால், அவரை யாரும் மதிக்க மாட்டார்கள் மாறாக, இழித்துப்பேசி அருவெறுப்போடு பார்ப்பார்கள்.

நன்றாகக் கற்பிக்கின்ற, நல்லொழுக்கமாக நடக்கின்ற, மாணவர்கள் மீது அக்கறை செலுத்துகின்ற ஆசிரியர்களை, மாணவர்கள் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவர் ஆனால், அந்த ஆசிரியர்க்குரிய தகுதியினின்று அவர் நழுவி, படிக்கின்ற மாணவியிடம் ஒழுக்கக் கேடாக நடந்தால், தலையிலிருந்து உதிர்ந்த முடியை விடக் கேவலமாக ஆகிவிடுவார். எனவே, இதை மனதில் கொண்டு எல்லோரும் நடக்க வேண்டும்.

தலையில் இழிந்த மயிரனையர் மாந்தர்தம்
நிலையில் இழிந்த கடை

என்ற வள்ளுவர் குறளை எவரும் மறக்கக்கூடாது இல்லையேல் மானம் இழந்து மடிய வேண்டிவரும்

 ( மதிப்பிற்குரிய மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை புத்தகத்தில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு இச்செய்தியை பயன்படுத்திக் கொள்ளவும்.)

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக