சனி, 11 ஏப்ரல், 2020

அளவோடு பெற்று வளமோடு வாழ்க



قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
பொருளுக்கும் ஒவ்வொரு அளவை ஆக்கியுள்ளான் "அல்லாஹ்
அல்குர் ஆன் : (65 : 3)

நல்லதும் அல்லாததும் அல்லாஹ் விதித்த விதிக்கிணங்கவே
நடைபெறும்என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்

அல்லாஹ் நிர்ணயித்த அளவே அனைத்தும் நடைபெறும்" என்ற
விதிமுறை மனிதன் வாழும் காலம், அவன் உட்கொள்ளும் உணவு, அவனது நடவடிக்கை போன்றவற்றை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என்பதல்ல. மனிதன் சந்திக்கும் அனைத்து நிலைகளையும் கட்டுப்படுத்தும் என்பதே உண்மையாகும்

ஒருவன் எத்தனை தடவை மூச்சுவிடுவான், எத்தனை வார்த்தைகள்
பேசுவான், எத்தனை காட்சிகளைப் பார்ப்பான், எத்தனை வாசனைகளை நுகர்வான், எத்தனை தூரம் நடப்பான் என்பதெல்லாம் கூட இறை நிர்யணத்திற்குட்பட்ட அளவுகளே

நபிகள் நாயம் (ஸல்) நவின்றுள்ளார்கள்; “ஒவ்வொரு பொருளும் அளவோடு வழங்கப்படுகின்றன. இயலாமை ஏற்படுவதும் புத்திசாலித்தனம் நிகழுவதும் கூட விதியின்பால் பட்டவைகளே அறிவிப்பவர் : ஹளரத் இப்னு உமர் (ரலி) நூல் : (முஸ்லிம்)

மனிதன் வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தும் செல்வம்
வரையறுக்கப்பட்டதன் காரணமாக அவன் விரயம் செய்வதை தடுக்கப்படுகிறது விரையம் செய்து அவன் தனக்குள்ள அளவை செலவளித்து தீர்த்துவிட்டால் பிற்காலத்தில் செல்வம் மிகத் தேவைப்படும் வேளையில் அவன் சிரமப்பட வேண்டிய தேற்படும். விரயம் செய்து விட்டவனுக்கு ஏற்படும் நிலைகுறித்து திருக்குர் ஆன் விளக்குகிறது

أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ


ஒரு மனிதனுக்கு பேரீத்த மரம், திராட்சைக் கொடி அடர்ந்த தோப்பு இருந்தது. அதன் நடுவே நீரோடைகள் ஒடிக் கொண்டிருந்தன. அதில் வகை வகையான கனிகள் நிறைந்திருந்தன. அந்த மனிதரை முதுமை தழுவிக் கொண்டது. சின்னஞ் சிறிய குழந்தைகளும் அவருக்கு இருந்தார்கள். அப்போது அந்தத் தோட்டத்தில் நெருப்புக் காற்றுவீசி அனைத்தையும் கரித்து விட்டது உங்களில் எவரும் விரும்புவாரா இத்தகைய நிலை ஏற்படுவதை அல்குர்ஆன் : (2 : 266)

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا

உனது கரத்தை கழுத்தோடு இறுக்கிக் கொள்ளவும் வேண்டாம், அதை முழுமையாக விரித்தும்விட வேண்டாம். அப்போது நஷ்டமடைந்தவனாக பழிச்சொல்லுக்கு ஆளானவனாக அமர்ந்துவிடுவாய் அல்குர்ஆன் : (17 : 29)

 إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا

அளவு கடந்து விரையம் செய்யாதீர்! விரையம் செய்பவர்கள்
ஷைத்தானின் நண்பர்களாவார்கள், ஷைத்தான் தனது இறைவனுக்கு
நன்றி மறுத்தவனாவான் அல்குர் ஆன் : (17 : 27)

நேரம் பொன் போன்றது

வறுமை ஏற்படாதிருக்க மனிதன் செல்வத்தை சேமித்து வைப்பதைப்
போன்றே அனைத்தையும் சேமித்துப் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மணித்துளிகளும் விலை மதிப்பற்றதாகும்

நெப்போலியனைப்பற்றி அறியாதவர் யாரும் இருக்க முடியாது. சரித்திர பிரசித்தி பெற்ற அம் மாவீரன் இறக்கும் போது அவனுக்கு வயது நாற்பத்தி இரண்டு. இரு நூறு ஆண்டுகள் சாதிக்க வேண்டிய சாதனைகளை அவன் இருபது ஆண்டு கால அவகாசத்தில் சாதித்திருக்கிறான்.

எண்ணற்ற இறை நேசர்கள் நமக்கு கிடைத்ததைப் போன்ற மணித் துளிகளிலேயே இறையன்பைப் பெற்றிருக்கிறார்கள். சரித்திர நாயகர்கள் சரித்திரம் படைத்துள்ளார்கள். அத்தகைய மணித் துளிகளை சாமானிய நேரத்தில் நாம் வீணடித்துவிட்டால் சாதனை படைக்கும் தருணத்தில் மணித்துளிகளின்றி சாதனை இடையிலேயே முறிபடும்.

நதியின் கரையில் நீ ஒலுச் செய்தாலும், மூன்று தடவைக்கு மேல் உனது உறுப்புகளைக் கழுகாதே" என நபிகள் நாயகம் (ஸல்) நவின்றுள்ளார்கள்.

நதியில் எத்தனை தடவை 'தண்ணீரை அள்ளி உறுப்புகளைக் கழுகினாலும் தண்ணீர் குறையப் போவதில்லை. வழியும் தண்ணீர் அதிலேயே விழுகிறது என்றாலும் அது நேரத்தை விரயம் செய்யவும், நமது உறுப்புக்களின் சக்தியை விரயம் செய்யவும் துணையாகிறது. அந்த விரயத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்துள்ளார்கள்.

நான்கு நிகழ்வுகள் ஏற்படும் முன் நான்கு நிலைகளை முறையாக
பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணம் சம்பவிப்பதற்கு முன் வாழ்க்கை வயோதிகம் வரும் முன் வாலிபம், நோய் ஏற்படும் முன் நலம், வேலை சூழ்ந்து கொள்வதற்கு முன் ஓய்வு," எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்று மணித்துளிகளின் அருமையை உணர்த்தியுள்ளார்கள்.

அளவான பேச்சு

மனிதன் பேசும் வார்த்தைகளும் இறைவனால் அவனுக்கு அளந்து
கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் பேசித் தீர்த்துவிட்டால் அவனுக்கு ஒதுக்கப்பட்ட வார்த்தைகளின் அளவு தீர்ந்து போயிருக்கும். இந்நிலையில் அவனது ஆயுள் முடிந்திருக்காது, அதனால் அவன் அந்திம காலத்தில் பேச அவசியமிருந்தும் பேச சக்தியற்றவனாக முடக்கப்படுவான்

இதனாற்றான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனது நாவைநீ
கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்என்று கூறியுள்ளார்கள்


 மவ்னத்தைக் கடைப்பிடித்தவர் வெற்றி பெற்றிடுவார் எனவும் அவர்கள் நவின்றுள்ளார்கள் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : (திர்மிதி.)

ஹளரத் அபூபக்ரு ஸித்தீக் (ரலி) போன்றவர்கள் தன் வாயில் கற்களைப் போட்டுக் கொள்வார்கள். அவசியமேற்பட்ட போது கற்களை வெளியாக்கி பேசிவிட்டு திரும்பவும் அவைகளை வாயில் போட்டுக் கொள்வார்கள்

சிந்தனை இன்றேல் நிந்தனை

பேசும் வார்த்தைகளை மட்டுமல்ல, சிந்திக்கும் சிந்தனைகளைக் கூட
கட்டுப்பாட்டுக்குள் வைத்தாக வேண்டும்.. ஒவ்வொரு மனிதனும் இவ்வளவு விசயங்களைத் தான் சிந்திக்கலாமென்ற அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் சிந்தனையை செலுத்தி வீணடித்து விட்டால் இறுதி காலத்தில் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து செயலற்றவனாக அவன் சிரமப்படநேரிடும். எனவே தேவையானவற்றில் மட்டுமே சிந்தனையைச் செலுத்த வேண்டும்

அது போன்றே தேவையான வற்றை மட்டுமே நினைவிலிறுத்திப் பழக வேண்டும். நமது மூளை என்ற கம்ப்யூட்டரில் மெமரிபவராக (நினைவலைகளின் காப்பிடம்) பயன்படும் பகுதி ஒரு குறிப்பிட்ட அலைகளைப் பாதுகாக்கவே சக்தி பெற்றதாகும். அதில் தேவையானவற்றைப் பதுக்கியவரே அறிவாளி ஆவார்.

அங்க அசைவுகள்

நாம் நடக்கும் நடையைக் கூட ஒரு கட்டுப்பாட்டுள் வைக்க வேண்டும் தேவையில்லாத வற்றிற்கெல்லாம் நடந்து தனது சக்தியை வீணடித்து விட்டவர்கள் பிற்காலத்தில் காலொடிந்து கிடப்பது கண்கூடு. விந்து விட்டவன் நொந்து கெடுவான் என்றொரு பழமொழி வழக்கிலுள்ளது.  உடலிலிருந்து வெளியாகும் சக்திகளில் விலைமதிக்க முடியாத சக்தி விந்து என்பதாகும் அதை இளமையின் முற்பகுதியில் வீணடித்து விட்டவன் அனுபவிக்க வேண்டிய பிற்பகுதியில் வீரியம் குறைந்து சிரமப்படுவான் என்பதை அந்தப் பழமொழி குறிக்கிறது

இந்த நியதி உடலிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சக்திக்கும்
பொருந்தும். ஒவ்வொரு அசைவும் அளந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விரயமும் பாதிப்பைத் தரும்

கம்ப்யூட்டர் யுகம்

மனிதனின் ஒவ்வொரு அசைவுகளும் வரையறுக்கப் பட்டிருப்பதாக
கூறுவது இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் ஆச்சரியத்தைத் தரும் செய்தியல்ல மனிதன் ஒலிக்கும் ஒலி வேகத்துக்கு அளவுகள் இருப்பதும், அவன் விடும் குத்துக்குக் கூட அளவுகள் இருப்பதும், அவன் அன்பைப் பொழிய பயன்படுத்தும் முத்தத்துக்குகூட அளவுகள் இருப்பதையும் கம்ப்யூட்டர் கண்டு பிடித்துக் கூறுகிறது

وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ ۚ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ ۚ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ

وَهُوَ الَّذِي يَتَوَفَّاكُمْ بِاللَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰ أَجَلٌ مُسَمًّى ۖ ثُمَّ إِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

அல்லாஹ் கூறுகிறான்- "மறைபொருளின் திறவு கோல்கள் அவனிடம் உள்ளன. அவனன்றி எவரும் அவற்றை அறிய இயலாது. தரையில் கடலில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் அவன் அறிகிறான். அவனறியாமல் ஒரு இலை கூட விழுவது கிடையாது. பூமியின் ஆழ்பகுதியில் மறைந்து கிடக்கும் வித்தாக இருப்பினும், ஈரப்பசை உள்ள ஈரப்பசை அற்ற எந்தப் பொருளாக இருப்பினும் தெளிவான பதிவேட்டில் அதன் விபரம் இல்லாமலில்லை. அவன்தான் உங்களை இரவில் தூங்கச் செய்கிறான் பகலில் நீங்கள் சம்பாதிக்கின்றவற்றையும் அவன் அறிகிறான். அல்குர்ஆன் :(6 : 59,60)

அளவோடு பெற்று வளமோடு வாழ்வோமாக



இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக