வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அல்-ஃபாத்திஹா.


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் ................................................

நான் இங்கு பாத்திஹா என்றால் என்ன..? அந்த வார்த்தையை சப்தமாக ஏன் சொல்லப்படுகிறது என்பதைப் பற்றி பேச வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

எங்க வீட்டில் இன்னிக்கு பாத்தியா..... உங்க வீட்டில் என்னிக்கு பாத்தியா..? இப்படி பலர் பேச நாம் கேட்டுள்ளோம்.


முதலில் இந்த பாத்தியா என்ற வார்த்தையே முற்றிலும் சரியில்லாதது என்பது மட்டுமல்ல அறவே பொருள் இல்லாததாகும்.

ஃபாத்திஹா என்பதுதான் சரியான உச்சரிப்பு ஆகும் ஃபாத்திஹா என்றால் தோற்றுவாய், திறப்பு என்பதாக அதற்கு பொருள் சொல்லப்படும். 

இது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஆரம்பிக்கின்ற சூராவின்  பெயராகும். திருக்குர்ஆனுடைய தொடக்கத்திலும் தொழுகையை ஆரம்பிக்கின்ற பொழுது முதலாவதாக  இந்த சூராவை தொடங்குவதால் தான் இதற்கு ஃபாத்திஹா என்பதாக பெயர் சொல்லப்படுகிறது.

துஆ  ஓதப்படுவதற்கு முன்னதாக அல்ஃபாத்திஹா என்று சத்தமாக சொல்வதின் நோக்கம் அந்த சூராவை  அனைவரும் ஓதுங்கள் என்பதாகும்.

சூரத்துல் பாத்திஹாவின் சிறப்பைப் பற்றி நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள். தவ்ராத் இன்ஜீல் ஸபூர் வேதங்களில் இந்த சூராவிற்கு நிகராக எதுவும் கிடையாது என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த பாத்திஹா சூரா அந்த வேதங்களில் இடம்பெற்றிருந்தால் அப்போதைய மக்கள் வழிகெட்டோ வழிதவறியோ போயிருக்க மாட்டார்கள் மட்டுமல்ல நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கூட்டத்தார் உருவம் மாற்றப்பட்டு இருக்க மாட்டார்கள் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே …..

ஏழு ஆயத்துகள் கொண்ட இந்த சூராவை ஒருதடவை ஓதியவர் குர்ஆன் முழுவதையும் ஓதியவரை போன்றவராவார் இன்னும் அவர் சதகா தான தர்மம் செய்த பயனையும் அடைவார் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நோய்வாய்ப்பட்ட மனிதர்களை கண்டால் சூரத்துல் பாத்திஹாவை அதிகம் ஓதி வாருங்கள் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள் மற்றொரு ஹதீஸில் வந்துள்ளது ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகைக்கு பிறகு நாற்பத்தி ஒரு தடவை சூரத்துல் பாத்திஹா ஓதி தன் கைகளில் ஊதி கண்ணில் தடவிக் கொண்டால் கண் வலி நீங்கி விடும் என்பதாக நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 

ஆக பாத்திஹா என்பது திருக்குர்ஆனினுடைய தலைசிறந்த  ஒரு முதன்மையான ஒரு சூரா என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும். 

இதனுடைய அடிப்படையில் தான் நமது குடும்பத்தில் இறந்துவிட்ட உற்றார் உறவினர்களுக்கு திருக்குர்ஆனை ஓதி அதனுடைய நன்மையை எத்தி  வைக்கும் நிகழ்ச்சிக்கு ஃபாத்திஹா என்பதாக சுருக்கமாக நாம் சொல்கின்றோம். இது தெரியாமல் நம்மில் சிலர் அல்-பாத்திஹா என்று சொன்னாலே சிரிக்கின்றார்கள் இவர்களுடைய இந்த செயல் இஸ்லாத்தைப் பற்றிய அறிவு அவர்களுக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை காட்டுகிறது.

 எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழியை அறிந்து தெரிந்து புரிந்து இவ்வுலகில் வாழ்ந்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்று நாளை மறுமையில் சொர்க்கம் செல்ல கூடிய கூட்டத்தில் நம் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பானாக 


எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றிகூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ


மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக