சனி, 4 ஏப்ரல், 2020

சிலிக்கான் செல்லுப் புரட்சி



சிலிக்கான் செல்லுப் புரட்சி

மனிதனை யும், ஜின்னையும் என்னை அறிந்து
வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை
அல் குர்ஆன் : (51 : 56)

மேற்காணும் திருவசனம் சிந்தனையாளர் மத்தியில் ஒரு கேள்வியைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. இறைவன் மனிதனைப் படைத்த நோக்கம் அல்லாஹ்வை அறிந்து வணங்குவதற்காகத்தான் என்பது உண்மையானால் உலகிலுள்ள மற்ற வேலைகள் செய்ய யாரைப் படைக்கப்பட்டுள்ளது? மண்ணைப் பொன்னாக்கும் சாதனை படைப்பது மனித வேலையல்லவா..? விண்ணை முட்டும் கட்டிடங்களை கட்டுவது மனித வேலையல்லவா? விவசாயப் புரட்சி யார் செய்வார்? கல்விச்சாதனை யார் படைப்பார்? வியாபாரம் செய்வது மனிதப் பணியல்லவா? பிணி நீக்குவது மனிதப் பணியல்லவா? ஏன் மனித இனத்தை விருத்தி செய்வது கூட மனிதனைப் படைத்த நோக்கமல்லவா? நீதி நேர்மையை நிலை நாட்டுவது கூட மனிதனைப் படைத்த நோக்கமல்லவா

காலம் செல்லச் செல்ல திருக்குர் ஆனின் கூற்று தெளிவடைந்து கொண்டே செல்வதைப் போன்று மேற்காணும் கேள்விகளுக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது

ஆம்! பிற பணிகளைச் செய்வது மனிதனைப் படைத்த நோக்கமல்ல
அந்தப் பணிகளை கம்யூட்டர்கள் செய்து விடுகின்றன. இயந்திர மனிதன் என்று பெயர் பெற்ற ரெபோட்டுகள் அவைகளைச் செய்து விடுகின்றன, அப்பணிகளில் மனிதன் படைக்காத சாதனைகளை கம்ப்யூட்டரின் மூலக்கூராகிய சிலிக்கான் செல்லுகள் செய்து சாதனை படைக்கின்றன

மனிதனின் மூளையை விட சிலிக்கான் செல்லுகள் அதிக திறமை படைத்தவை. மணிக் கணக்காக மூளையைக் கசக்க வேண்டிய கணக்குகளை கண்மூடி விழிக்கு முன் செய்ய கால்குலேட்டர்கள் வந்து விட்டன. மனித உடலில் புகுந்து அவன் எலும்புகளுக்குள் ஊடுருவி சிகிச்சை செய்ய சிலிக்கான் செல்லுகள் தயாராகி விட்டன. ஏன்? லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சந்திர மண்டலத்தில் காலடிவைத்த மனிதனின் நாடித்துடிப்பை அறிந்து பூமியில் இருந்து கொண்டே அவனுக்கு சிகிக்சை அளித்து அவை சாதனை
படைக்கவில்லையா...?

விவசாயப் பண்ணைகளில் விதைப்பது, நாற்றுப் பறித்து நடுவது தண்ணீர் பாய்ச்சுவது, உரமிடுவது, பூச்சிமருந்து அடிப்பது, காய் கனிகளைப் பறிப்பது, அவற்றை பதன்படுத்துவது போன்ற எண்ணற்ற மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே கம்ப்யூட்டர் செய்வது சாதனையல்லவா...?

மனித இன விருத்திக்குக் கூட மனிதன் தேவையற்றவன். ஒரு சிறு வீரிய அணுவைக் கம்ப்யூட்டரிடம் கொடுத்தால் போதும் அதை மனிதனாக்கிக் காட்ட அவை தயாராகிவிட்டன

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலிக்கான் செல்லுப் புரட்சியைப் பற்றி அன்றே கோடிட்டுக் காட்டினார்கள்

மனிதன் அணியும் செருப்பின் வார் அவன் வீட்டில் இல்லாத போது
நடந்த நிகழ்வுகளை அறிவிக்கும்என்று அவர்கள் கூறினார்கள். செறுப்பின் வார் நிகழ்வுகளைப் பதிவு செய்யும். அவன் அதை அணிந்ததும் ஒன்று விடாமல் ஒலி பரப்பும்

பெருமானார் கோடிட்டுக் காட்டியதைப் போன்றே இன்று தொழிற்சாலைகள், நிர்வாகத் துறைகள், வியாபாரஸ்தலங்கள் எங்கும் கம்யூட்டர் மயம். பசுமைப் புரட்சிக்கும் மனிதன் கையாலாகாதவன், கல்விப் புரட்சிக்கும் அவன் கையாலாகாதவன், போகும் போக்கைப் பார்த்தால் வெகு விரைவில் எந்தப் பணிக்கும் மனிதன் லாயக்கில்லாதவன், தேவையற்றவன் என்பது நிரூபணமாகப் போகிறது

அப்போது மனிதன் சிந்திக்க துவங்குவான். நான் ஏன் பிறந்தேன் எனக்கு இந்த உலகில் ஒரு வேலையும் இல்லையே! அவ்வாறு அவன் எழுப்பப் போகும் கேள்விக்கு அன்றே திருக்குர்ஆன் விடையறிவித்து விட்டது. ஆம் இறைவனை அறிந்து வணங்குவதற்காக நீ படைக்கப்பட்டிருக்கிறாய். நிச்சயம் அந்தப் பணியை மனிதன், ஜின் அல்லாது எந்த உயிரினங்களும் செய்யப்
போவதில்லை. சிலிக்கான் செல்லுகளும் செய்யப் போவதில்லை. மனிதன் மட்டுமே அதில் சாதனை படைக்கத் தகுதியானவன்

20.ம் நூற்றாண்டுக்குப் பின் மனிதன் எழுப்பப் போகும் கேள்வியை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுப்பி விடை கண்டவர்கள் மஹான்களானார்கள், இறை நேசர்களானார்கள், இறைத் தூதர்களானார்கள்.


நபிகள் நாயம் (ஸல்) அவர்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள்விளையாட்டுப் பருவத்திலேயே
சிந்தனையில் ஆழ்ந்திருப்பார்கள். பிற குழந்தைகளெல்லாம் குதித்தோடும் போது, அவர்கள் மட்டும் மூலையில் அமர்ந்து மூளையை கசச்சகிக் கொண்டிருப்பார்கள் நான் ஏன் படைக்கப் பெற்றேன். இவ்வாறு குதித்தோடியாடவா; இல்லை. நான் ஏதோ மகத்தான பணிக்குத்தான் படைக்கப் பெற்றிருக்கிறேன். அது என்ன பணி? அவர்களுக்கு விடை கிடைக்கவில்லை

ஆடு மேய்க்கும் சிறுவராக மலைச்சரிவிலும், பாறைக்குன்றிலும் சுற்றிவரும் போதும் அவர்களின் கேள்விக்கு விடை கிடைக்க வில்லை. வியாபாரம் செய்யும் வாலிபராக ஒட்டகத்தின் மீதேறி பாலைவனத்தில் பவனிவரும் போதும் விடை கிடைக்கவில்லை. கதீஜாவின் மணாளராக குடும்பத் தலைவராக சுற்றி வரும் போதும் விடை கிடைக்கவில்லை. ஹிரா மலைப் பொதும்பில் தனிமையில்
மாதக் கணக்கில் தவமிருந்த போதுதான் அவர்களின் கேள்விக்கு விடைகிடைத்தது. ஒதுவீராக! அதை உச்சாடனம் செய்வீராக அந்தப் பெயரை நீர்ஒதிக் கொண்டே இருக்க வேண்டுமென்பதுதான் உம்மை படைத்த "சூட்சுமம்"

விடை கிடைத்ததும் வேட்கை அதிகமாகியது. அந்த இறைவனை நான் காண வேண்டும். அவனிடம் பேசி இன்புற வேண்டும். நான் அவன் அன்பிலேயே தோய்ந்து விட வேண்டும். எனக்கு குடும்பம் தேவையில்லை. எனக்கு மனைவி மக்கள் தேவையில்லை. எனக்கு ஊண் உறக்கம் தேவையில்லை. ஏன் இந்த உலகமே தேவையில்லை; எனக்கு அவன் தான் வேண்டும், என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்! என் கண்ணில் உலகத்தின்
மாயைகள் எதையும் காட்டாதீர்கள் என்று அவர்கள் கூவினார்கள்

அந்த வேட்கையில் பத்தாண்டுகள் கழிந்த பின்புதான் அவர்களின்
நோக்கம் நிறைவேறியது. இறைவனைக் கண்டார்கள். அவனிடம் பேசி இன்புற்றார்கள், அவன் அன்பிலே தோய்ந்தார்கள், அந்த நிகழ்வை நாம்மிஃராஜ் என்று குறிப்பிடுகிறோம்

ஹளரத் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள்

எட்டு வயதுப் பாலகரான ஹளரத் இப்றாஹீம் (அலை) அவர்கள் ஒரு நாள் தன் தாயிடம் கேட்கிறார்கள்

அம்மா! எனது இறைவன் யார்? நான் தான் மகனே! உனது இறைவன்
அப்படியானால் உனது இறைவன்யார்? இதிலென்ன சந்தேகம், உனது
தந்தைதான் எனது இறைவன், அப்படியானால் எனது தந்தைக்கு யார் தெய்வம்

அரசன்தான் உனது தந்தைக்கு தெய்வம். அப்படியானால் அரசனுக்கு யார்தெய்வம்? எனக்கு அதற்கு மேல் பதில் சொல்லத் தெரியவில்லை மகனே உனது தந்தை வந்தால் கேட்டுப்பார்

தந்தையும் வந்தார், ஹளரத் இப்றாஹீம் (அலை) அவர்கள் தாயிடம்
தொடுத்த கேள்விகளைத் தொடுத்தார்கள். அவரும் தாயைப் போன்றே மழுப்பிக் கொண்டே வந்தார். இறுதியாக ஹளரத் இப்றாஹீம் (அலை)அவர்கள் அரசனுக்கு யார் தெய்வம்? என்று கேட்டதும் தந்தைக்கு கோபம் வந்துவிட்டது இந்தப் பிஞ்சுப் பருவத்திலே அரசனை அவமதித்துப் பேசுவதா? அவருக்கு கோபம் தலைக்கு ஏறியது. கன்னத்தில் பளாரென்று அறைந்தார். இனி இதுபோன்று கேட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்! ஜாக்கிரதை என்று மிரட்டினார்

விடை கிடைக்காத பாலகர் வளர்ந்து வாலிபரானார்கள் நட்சத்திரத்தைப் பார்த்தார்கள், இது எனது இறைவனாக இருக்குமோ? இல்லை அது மறைகிறதே! மறைவது எனது இறைவனாக இருக்க முடியாது. சந்திரனைப் பார்த்தார்கள். இது எனது இறைவனாக இருக்குமோ? இல்லை அதுவும் மறைந்தது. சூரியனைப் பார்த்தார்கள். இறுதியில் வானங்களை, பூமிகளைப் படைத்தவனே எனது இறைவன், அவனை வழிபட வே நான் படைக்கப்பெற்றுள்ளேன். என அவர்கள் அறிந்து கொண்டார்கள்
                    அல்குர்ஆன் : (6:76)

பின்னர் எனது இறைவனைக் காண வேண்டும், பேச வேண்டும் என்றும் ஆவல் மிகக் கொண்டார்கள், அதற்காக தன்னைப் பலி கொடுக்கத் தயாரானார்கள். இறைவன் திருநாமத்தை யாரோ உச்சரிப்பதைச் செவியுற்ற உடன் எங்கே? அவன்! எங்கே? அவன்அவனைப் பார்க்க வேண்டுமே என்று கூறி அதற்காக தனது சொத்துக்களை இழக்க தயாரானார்கள். இறைவனைக் காணுவதற்காக எதையும் துறக்க தயாரானார்கள், தனது மனைவி, மக்களை, தண்ணீரில்லாக் காட்டில் விட்டு வந்தால் இறைவனைக் காண முடியும் என்றறிந்து அதையும் செய்தார்கள். இறுதியில் அதற்காக தனதருமைப் புதல்வனை அறுக்கவும் தயாராகிவிட்டார்கள். அப்போது தான் இறைவன் அவர்களிடம் உரையாடினான்

இறைவன் அவர்களிடம் நேரில் உரையாடினான், பெயர் கூவி அழைத்தான். உமது கனவு நினைவாகிவிட்டது என்று நற்செய்தி கூறினான் அன்றுதான் அவர்கள் மனம் சாந்தி பெற்றது
                   அல்குர்ஆன் : (37 : 104)


ஹளரத் நபி மூஸா (அலை) அவர்கள்

இறை சந்திப்பு எதிர்பாராமல் கிடைத்தது ஹளரத் நபி மூஸா(.அலை)
அவர்களுக்குத்தான். அவர்கள் காட்டு வழியாக வரும் போது "யா மூஸா இன்னீ அனரப்பிக்க” (அல்குர்ஆன் : 20:12) எனக் குரல் கேட்டது. அவர்கள் பெயர்கூவி அழைத்து இறைவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதைச் செவியுற்றார்கள். அந்த இன்பத்தில் தோய்ந்து போனார்கள். இறைவனிடம் அளவு கடந்து பேசினார்கள்
ஆனால், அதற்குப் பின் அவர்களின் வேட்கை அதிகமாகியது. மீண்டும் இறைவனிடம் வசனிக்க ஆசை மிகக் கொண்டார்கள். 40 நாட்கள் உண்ணா நோன்பிருக்க இறைவன் கட்டளையிட்டான், செய்தார்கள், இறைவனிடம் மீண்டும் வசனிக்கும் பாக்கியம் பெற்றார்கள் திருப்தியடையவில்லை. உன்னை என் கண்ணால் காண வேண்டும் என்றார்கள் எம்மைக்காண உமது கண்ணுக்கு சக்தி போதாது என்று இறைவன் கூறினான் அதை மெய்ப்பிக்கும் வண்ணம் மலையில் தனது திருக்காட்சியைத் தந்தான் அது தாங்க இயலாமல் அந்த மலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது

ஆனாலும் அவர்கள் அவர்கள் பார்க்க இறைவன் அனுமதி தராவிட்டாலும் அவர்கள் மீண்டும்மீண்டும் இறைவனிடம் வசனிக்க சந்தர்ப்பத்தைத் தந்தான். ஒரு சமயம் அவர்களின் நண்பர்கள் எழுபது நபர்களுடன் வருமாறு இறவன் உத்தரவிட்டான். அப்போது ஆவலின் உந்துதலால் நண்பர்களை விட்டுவிட்டு அவர்கள் தனியே வேகமாக வந்து விட்டார்கள், இறைவன் அது குறித்து அவர்களிடம் குறை பட்டான். நீங்கள் வேகமாக வந்துவிட்டதால் அந்த நண்பர்கள் திசை திரும்பி விட்டார்கள் என்றும் அறிவித்தான்

சொல்லிக் கொடுத்த பாடம்

ஆசிரியர் பாடங்களை பயிற்றுவிப்பார். பின்னர் பரிட்சையின் போது
பயிற்றுவித்ததில் கேள்விகள் கேட்பார் அது போன்றே இறைவனும் செய்தான். அவன் மனித கோடிகளின் உயிர்களைப் படைத்து தன் முன்னிறுத்தி அவர்களை உலகிற்கு அனுப்பப் போவதாகவும், அங்கு அவர்கள் இறைவனை அறிவதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு வாழ வேண்டுமென்றும் கற்றுக் கொடுத்தான் நான் உங்கள் இறைவன் அல்லவா? நான் சொன்னதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்வீர்களா? என்றான் அனைத்து உயிர்களும் ஆமோதித்தன

அதன் பின் அந்த உயிர்களை சன்னஞ்சன்னமாக உலகிற்கு
அனுப்பினான். படித்த பாடத்தை நினைவிற் கொண்டு வாழுமாறு கட்டளையிட்டான். ஆனால் உலகிற்கு வந்து பல உயிர்கள் அந்த நோக்கத்தை மட்டும் மறந்து போயின. அதைத் தவிர்த்து அவர்கள் பிள்ளை பெறுவதிலும் அவற்றை வளர்ப்பதிலும், அவர்களுக்காகவே உழைத்து போடுவதிலும் ஈடுபட்டார்கள். வீட்டைக் கட்டினார்கள், காட்டை வாங்கினார்கள். ஓடினார்கள் ஆடினார்கள், ஆனால் அசல் நோக்கத்தை மட்டும் மறந்து போனார்கள்.

துப்புக் கெட்ட தொழிலாளி

ஒருவன் ஒருவனை தோட்டத்தின் காவலாளியாக எற்படுத்தியிருந்தான் ஒரு நாள் அந்தத் தோட்டத்தில் காய் கனிகள் களவு போனது. அதை அறிந்த தோட்டத்தின் உரிமையாளன் காவலாளியைக் கூப்பிட்டு விசாரித்தான். அவன் "முதலாளி! நான் தோட்டத்தை அலங்கரித்துள்ளேன், பாத்தி பாத்தியாகப் பிரித்து தண்ணீர் பாய்ச்ச வசதி செய்திருக்கிறேன்என்று பதில் கூறினான். அந்தப் பதிலைக் கேட்டதும் முதலாளி திருப்தி அடையவில்லை, மாறாக கோபமேகொள்கிறான்

துப்புக் கெட்டவனே? உன்னை யார் தோட்டத்தை அழகுபடுத்தக்
கூறியது? உனக்கு கொடுத்த வேலையை நீ பார்க்க தவறிவிட்டாய், காய் கனிகளெல்லாம் திருடு போய் விட்டன. அழகு படுத்துகிறாராம் அழகு! என்று முதலாளி கோபத்தால் கொதிப்படைந்தார்

அந்த தொழிலாளியின் நிலைதான் மறுமையில் மனிதர்களின் நிலை இறைவன் அவர்களிடம் விசாரணை செய்வான். நான் உங்களிடம் சொல்லியனுப்பிய பணியைப் பார்த்து வந்திர்களா? என்னை அறிந்தீர்களா...? என்னைக் கண்டு கொண்டீர்களா? என்று இறைவன் கேட்பான். அப்போது சிலர் "இறைவா! நான் நிறைய பிள்ளை குட்டியைப் பெற்று விட்டேன் அவர்களுக்கு உழைத்துப் போடுவதற்கே நேரம் போதவில்லையென்று பதிலளிப்பர். வேறு சிலர் இறைவா! நீ எனக்கு பெரும் தொழிலைத் தந்து விட்டாய், அதை நிர்வாகம் செய்வதிலேயே காலமெல்லாம் கழிந்து விட்டது என்று கூறுவர். இன்னும் சிலர் நான் வீட்டைக் கட்டினேன். விவசாயம் செய்தேன் என்று கூறுவர்

அவர்களின் பதிலைச் செவியுற்ற இறைவன் "துப்புக் கெட்டவர்களே
உங்களை இதற்காகவா படைத்தேன். நான் செய்யச்சொன்னதைச் சொய்யாமல் வந்து நிற்கிறீர்களே" என்று கடிந்துரைக்க மாட்டானா?நாம் அதற்குச் சொல்லப்போகும் பதிலென்ன...?



இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.

9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக