வியாழன், 30 ஏப்ரல், 2020

இத்தா கேள்வி:பதில்


தொகுப்பு: எம். ஷெய்கு அப்துல் காதிர் காஷிஃபி

இத்தா குறித்து வாசகர்கள் கேட்ட பல ஐயங்களுக்கு விளக்கமாகவே இக்கட்டுரை கேள்வி பதிலாக தரப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள பல விளக்கங்கள் திறமைமிக்க மார்க்கச் சட்ட வல்லுனர்களான முஃப்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஃபதாவா ரஹீமிய்யா.
அஹ்ஸனுல் ஃபதாவா எனும் ஃபத்வா தொகுப்புகளிலிருந்து எழுதப்பட்டுள்ளது. (ஆசிரியர்)


கேள்வி: இத்தா எத்தனை நாட்கள் இருக்க வேண்டும்? சிலர் நாற்பது நாட்களுடன் இத்தாவை முடித்துக்கொள்கிறார்கள். சிலர் இத்தா இருக்கக்கூடிய நேரத்தில் யாருடனும் பேசுவதில்லை யாரையும் சந்திப்பதில்லை. இன்னும் சிலரோ இதற்கு நேர்மாற்றமாக எந்த ஒரு வித்தியாசமுமின்றி அனைவருடனும் பேசுகின்றனர் அனைவரையும் சந்திக்க அனுமதிக்கின்றனர். ஆகவே, இது குறித்து ஷரீஅத் என்ன கூறுகிறது? தெளிவான விளக்கம் தேவை

பதில்: இத்தா இருக்கக்கூடிய பெண்கள் ஐந்து வகைப்படுவர்

1. கணவன் இறந்ததற்காக இத்தா இருக்கும் பெண்கள். இவர்கள் கண்டிப்பாக 4 மாதம் 10 நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.
 وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ
(காண்க திருக்குர்ஆன், 2:234)

2. தலாக் (விவாகரத்து) செய்யப்பட்ட பெண்களில் மாதவிடாய் வந்து கொண்டிருக்கும் பெண்கள். இவர்கள் மூன்று  மாதவிடாய் காலம் இத்தா இருக்க வேண்டும். (ஷாஃபிஈ மத்ஹபின்படி மூன்று துஹ்ர் அதாவது தூய்மையாக இருக்கும் மூன்று காலம் இத்தா இருக்க வேண்டும்.)

 وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا ۚ وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ ۚ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

காண்க:திருக்குர்ஆன்,2:228)

3. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களில் வயோதிகத்தை அடைந்து
மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள்

4. இதுவரை மாதவிடாய் ஏற்படாத பெண்கள். இவ்விரு வகையான பெண்கள் மூன்று மாதம் இத்தா இருக்க வேண்டும்.
 وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ ۚ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
(காண்க திருக்குர்ஆன், 65:4)

5. கர்ப்பமுற்றுள்ள பெண். அதாவது மேற்கூறப்பட்ட நான்கு வகையினரும் கர்ப்பமுற்றவர்களாக இருப்பார்களேயானால், அவர்களிஇத்தா காலம் குழந்தை பிறக்கின்ற வரையிலாகும்.

 وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ ۚ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مِنْ أَمْرِهِ يُسْرًا
(திருக்குர்ஆன்,65:41

கணவன் இறந்த அல்லது தலாக் விடப்பட்ட மறு நிமிடமே குழந்தை
பிறந்துவிட்டாலும் இத்தா முடிந்துவிடும். அல்லது பல மாதங்கள்
நீடித்தாலும், அதுவரை இத்தா இருப்பது அவசியம். எத்தனை மாதங்கள் கழித்து குழந்தை பிறப்பினும் சரியே

கணவன் இறந்ததால், இத்தா இருக்குகும் பெண்களாயினும் அல்லது
விவாகரத்தால் இத்தா இருக்கும் பெண்களாயினும், நாற்பது நாட்களுடன் இத்தாவை முடித்துக்கொள்வது ஷரீஅத்துக்கு முரணான செயலாகும் இதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இவ்வழக்கம் தவறானது; கண்டிக்கத் தக்கது

கேள்வி: இதுவரை மாதவிடாய் வராத 4ஆவது வகைப் பெண்கள் மூன்று மாதம் இத்தா இருக்கும் சமயத்தில் மூன்று மாதத்திற்கு இடையே அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுமேயானால், என்ன செய்வது

பதில்: அவர்கள் இத்தாவை மூன்று மாதம் முடிவதைக் கொண்டு முடித்துக் கொள்ளக் கூடாது. மாறாக, இரண்டாம் வகைப் பெண்களைப் போன்று புதிதாக மூன்று மாதவிடாய்க் காலம் (ஷாஃபிஈ மத்ஹபின்படி மூன்று சுத்தத்தின் காலம்) இத்தா இருக்க வேண்டும். இவ்வாறு இடையே ஏற்படும் மாதவிடாய் மூன்று மாதம் முடிய ஒரு வினாடி இருக்கும் சமயத்தில் ஏற்பட்டபோதிலும் சரியே

கேள்வி: இத்தாவின்போது மருத்துவமனைக்குச் செல்வது அங்கேயே தங்கி சிகிச்சை பெறுவது போன்றவை கூடுமா..?

பதில்: மருத்துவமனைக்கு சென்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்த நிலையில் அங்கு செல்வதும், அங்கு தங்கிதான் சிகிச்சை பெற முடியும் என்ற நிர்பந்தமான நிலையில் அங்கேயே தங்குவதும் கூடும்

ஆனால், இவை நிர்பந்தமான நிலைகளாகும். எனவே, நிர்பந்தம் இருக்கும் அளவே இவற்றுக்கு அனுமதி உள்ளது. நிர்பந்தம் நீங்கிவிடின் உடனடியாக வீட்டுக்குத் திரும்புவது அவசியமாகும்

கேள்வி: நான்கு மாதம் பத்து நாள், மூன்று மாதம் என்று மாதங்களை கணக்கிட்டு இத்தா இருக்கும்போது சந்திர மாதத்தைக் கொண்டு மாதத்தைக் கணக்கிடுவதா? அல்லது நாட்களை கணக்கிட்டுக்கொள்வதா...?

பதில்: பல இஸ்லாமியக் கடமைகள் சந்திர மாதத்தின்படியே கணக்
கிடப்படுவதால், இங்கும் சந்திர கணக்கை வைத்தே கணக்கிடப்படும்
எனவே, யதார்த்தமாக ஒரு பெண் மாத ஆரம்பத்திலேயே தலாக் விடப்பட்டாலோ அல்லது கணவன் இறந்தாலோ அவள் சந்திரக் கணக்கின்படி மூன்று மாதம் அல்லது நான்கு மாதம் பத்து நாட்கள் கணக்கிட்டு கொள்ள வேண்டும். அம்மாதங்கள் 29 நாட்களாயிருப்பினும் சரியே.

ஆனால், மாதத்தின் இடையே இத்தா இருக்க வேண்டியது ஏற்பட்டால் அப்போது நாட்களை கணக்கிட்டு 30 நாட்கள் ஒரு மாதமாக கணக்கில் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் மூன்று மாதம் இத்தா இருக்கும் பெண்கள் 90 நாட்களும் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தாஇருக்கும் பெண் 130 நாட்களும் இத்தா இருக்க வேண்டும்.

கேள்வி: கர்ப்பிணிப் பெண், குழந்தையின் பிறப்பை வைத்து இத்தா இருக்கும்போது வயிற்றிலேயே குழந்தை இறந்திருந்தால் அதை எடுப்பது எப்படி? இத்தா இருப்பது எப்படி..?
 
பதில்: மருந்து அல்லது அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப் பையை சுத்தப்படுத்த வேண்டும். கருவுற்று நான்கு மாதம் அல்லது அதைவிட அதிகமான காலம் கழித்து குழந்தை இறந்திருப்பின் மேற்கூறிய முறைப் படி கர்ப்பப் பையை சுத்தப்படுத்துவதன் மூலம் இத்தா முடிந்துவிடும்

நான்கு மாதத்தைவிட குறைவாக இருந்தால் மீண்டும் மூன்று மாத விடாய் காலம் இத்தா இருக்க வேண்டும்

கேள்வி: கர்ப்பிணியின் இத்தாவின் முடிவு குழந்தை பிறப்பைக் கொண்டு என்றிருக்கும்போது, அப்பெண் இத்தா சீக்கிரம் முடிய வேண்டும் என்பதற்காக கருவை கலைத்தால் சட்டம் என்ன..?

பதில்: கருத்தரித்து நான்கு மாதம் ஆன பின்பு அக்கருவை கலைத்தால் அதன் மூலம் இத்தா முடிந்துவிடும். அதற்கு முன்பே கருவை கலைத்தால் அதன் மூலம் இத்தா முடியாது. எனவே, அதன் பிறகு மூன்று மாதவிடாய் காலம் இத்தா இருக்க வேண்டும். இப்படி கருக்கலைப்புக்குப் பின்னர் மூன்று நாள் இரத்தம் வந்தால் அது ஒரு மாதவிடாயாக கருதப்படும் இதன் பின்னர் இரண்டு மாதவிடாய் காலம் இத்தா இருந்தால் போதும்

மூன்று நாட்களைவிடக் குறைவாக இரத்தம் வந்து நின்றுவிட்டால் அதை ஒரு மாதவிடாயாக கருதப்படாது. எனவே, மூன்று மாதவிடாய் காலம் இத்தா இருக்க வேண்டும். (இது ஹனஃபி மத்ஹபின் பிரகாரமாகும்.)

கேள்வி: கருவை நான்கு மாதத்திற்கு பிறகு கலைத்தால், இத்தா முடிந்துவிடும் என்பது சரி. ஆனால் கருக்கலைப்பது கூடுமா
ஷரீஅத்தில் அது குறித்த சட்டமென்ன..?

பதில்: கருத்தரித்து நான்கு மாதத்திற்கு பிறகு கருவை கலைக்க அனுமதி இல்லை. நான்கு மாதங்களுக்கு முன்பே கருவை கலைப்பதில் மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு நிலவினாலும், சரியான சொல் யாதெனில், அது மிகவும் கடுமையான நிர்பந்தம் இருந்தாலே தவிர கூடாது.

அதாவது தாய் அல்லது குழந்தைக்கு அல்லது இருவருக்கும் உயிர் ஆபத்து அல்லது கடுமையான நோய் ஏற்படும் என்றிருந்தால்கூடும்

கேள்வி: திருமணம் முடிந்து உறவுகொள்வதற்கு முன்பு கணவன்
இறந்துவிட்டால், எத்தனை நாட்கள் இத்தா இருக்க வேண்டும்..?

பதில்: நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருப்பது அவசியமாகும்
உறவுகொள்வதற்கு முன் இறந்தாலும் சரியே; பின்னர் இறந்தாலும்
சரியே

கேள்வி: இத்தாவின்போது அந்நிய ஆண்களுடன் பேசலாமா..?

பதில்: முடிந்த வரை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பர்தாவைப் பேணி போசுவது கூடும். இது இத்தாவின்போது மட்டுமல்ல. எப்போதுமே மஹ்ரமல்லாத ஆண்களுடன் பேசுவதை விட்டும் தவிர்ந்திருப்பது அவசியமாகும்

கேள்வி: இத்தா இருக்கும் பெண்கள் திறந்த வெளியில் வருவது கூடாதா? சிலர் கூடாது என்கிறார்களே..?

பதில்: வீட்டிலுள்ள திறந்த வெளி முற்றத்திற்கு வரலாம். வீட்டுக்கு
வெளியே வரக் கூடாது

கேள்வி: இத்தா இருக்கும் பெண் தனது மருமகன் அதாவது மகளுடைய கணவரிடம் பேசலாமா?

பதில்: பேசுவது கூடும். (இருப்பினும், தனிமையில் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். மஹ்ரமான மற்றவர்களின் முன்னிலையில் பேசுவது நல்லது.)

கேள்வி: தாய், இத்தாவின்போது தனது மகன் அல்லது மகளுடைய
மணவிழாவில் கலந்துகொள்ளலாமா? எப்படி கலந்துகொள்ளலாம் ? மகனை மணமுடித்துக்கொள்ளும்படி ஆலோசனை கூறாலாமா..?

பதில்: இத்தாவின்போது மகனுக்கு மணமுடிக்க ஆலோசனை கூறலாம். எனினும், மணவிழாவில் கலந்துகொள்ளக் கூடாது. மேலும் அன்று இத்தாவில் எப்போதும் உடுத்தக்கூடிய சாதாரண ஆடைகளையே அணிய வேண்டும். அதற்கென பிரத்யேகமாக உயர்ரக ஆடைகளை அணியக் கூடாது. மருதாணி போன்ற பொருட்களால் அழகு அலங்காரம் செய்வது கூடாது. வீட்டை விட்டும் வெளியே செல்லக் கூடாது. இத்தா முழுவதும் இப்படித்தான் இருக்க வேண்டும்

கேள்வி: வெளிநாடு சென்றிருக்கும் கணவன் எவ்வித தொடர்பும் தகவலும் இல்லாமல் இருக்கும்போது மனைவி எவ்வளவு காலம் காத்திருந்து மறுமணம் செய்யலாம் ...?

பதில்: அப்பெண் காழியிடம் அல்லது ஷரீஅத் நீதிமன்றத்தில் மனு கொடுக்க வேண்டும். அவர் கணவர் பற்றிய தகவல், முகவரியை பல ஊடகங்கள் மூலம் அலசி ஆராய்ந்து தேட வேண்டும்

இதன்பிறகும் கணவர் கிடைக்கமாட்டார் மரணித்திருக்கலாம் என்று உறுதி ஏற்பட்டால், அப்போது நான்கு வருடம் கழித்து அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துகொள்ள காழி அனுமதி கொடுக்கலாம். நான்கு வருடம் என்பதுகூட அப்பெண் அதுவரை பொறுமையாக இருப்பாள்.

தவறான வழிகளில் சென்றுவிடமாட்டாள் என்ற நிலை இருக்கும்போதுதான் தவறான வழிகளில் சென்றுவிடும் அடாயம் இருந்தால், நான்கு வருடத்திற்கு முன்பாகவே அப்பெண்ணின் நிலைக்கேற்ப மறுமணம் புரிய அனுமதி கொடுக்கலாம். ஆனால், கண்டிப்பாக ஒரு வருடம் காத்திருப்பது அவசியம். அதற்குள்ளாக அனுமதி கொடுக்கக் கூடாது. மேலும், இது முழுக்க காழி அல்லது முறையான ஷரீஅத் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை வைத்துதான் முடிவு செய்யப்படும்

இவ்வாறு அலசி ஆராய்ந்து கிடைக்கமாட்டார் என்ற நிலை வந்து
மேற்கூறப்பட்டவாறு மறுமணம் முடிந்த பிறகு காணாமல் போன முதல் கணவர் வந்துவிட்டால், இரண்டாவது திருமணம் முறிந்துவிடும். முதன் கணவருடனே உள்ள திருமணத் தொடர்பு தொடரும்.

கேள்வி: இத்தா எப்பொழுதிலிருந்து ஆரம்பமாகும்? கணவன் இறந்து விட்டால் மய்யித்தை அடக்கம் செய்யப்பட்ட பின்னர்தான் இத்தா ஆரம்பமாகும் என்று சிலர் சொல்வது சரியா..?

பதில்: சரியல்ல. கணவன் இறந்த உடனேயும், தலாக் விடப்பட்ட உடனேயும் இத்தாவின் நேரம் தொடங்கிவிடும்

கேள்வி: கணவன் தலாக் கூறியது மனைவிக்கு பல நாட்கள் கழித்துத்தான் தெரிகிறது என்றால், எவ்வாறு கணக்கிடுவது..?

பதில்: கணவன் தலாக் கூறியது மனைவிக்கு தெரியவில்லை என்றாலும், தலாக் கூறப்பட்ட நேரத்திலிருந்தே இத்தாவை கணக்கில்வைக்க வேண்டும். உதாரணமாக தலாக் விடப்பட்டு ஒரு மாதவிடாய் காலம் கழிந்த பின்புதான் மனைவிக்குத் தெரியுமென்றால், இப்பெண் மேலும் இரண்டு மாதவிடாய் காலம் மட்டும் இத்தா இருந்தால் போதும் தலாக் விடப்பட்டு மூன்று மாதவிடாய் காலம் கழித்துத்தான் தெரியவந்தது என்றால் இப்பெண் இதன் பிறகு இத்தா இருக்க வேண்டியதில்லை

கேள்வி: இத்தா இருக்கும் பெண்கள் வெள்ளைப் புடவைதான் கட்ட
வேண்டும் என்று பலர் நம்புகின்றனர். பல ஊர்களில் நடைமுறைமிலும் உள்ளது. இது சரியா..?

பதில்: இத்தா இருக்கும் பெண் வெள்ளைப் புடவைதான் கட்ட வேண்டும் என்று கூறுவது மிகப்பெரும் தவறாகும். மாற்று மதக் கலாச்சாரத் தாக்கமாகும். இதற்கு ஷர்அத்தில் எவ்வித ஆதாரமும் கிடையாது. வழக்கம்போல் உடுத்தும் எந்தப் புடவையும் அணியலாம்

கேள்வி: யார் வீட்டில் இத்தா இருக்க வேண்டும்? கணவனின் வீட்டிலா? பெண்ணின் தாய் வீட்டிலா..?

பதில்: கணவர் மரணிப்பதற்கு முன் அல்லது தலாக் விடுவதற்கு முன் கணவர் வசித்துவந்த வீட்டில்தான் இத்தா இருக்க வேண்டும். அது வாடகை வீடாக இருப்பினும் சரியே

2007 ஜூலை மாத மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக