ஜும்ஆ பயான் 20/03/2026
தலைப்பு : “காலமெல்லாம் ரமலானாக ”
ஹிஜ்ரி 1447.
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد
وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ
"உமக்கு 'யகீன்' (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக.”
أَحَبُّ الأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ
அல்லாஹ்வுக்கு பிடித்தமான அமல் நடுநிலையாக இருக்க வேண்டும் அது குறைவாக இருந்தாலும் சரியே(நூல்: புகாரி,)
இன்று ஜும்அத்துல் விதா என்பது ரமலான் மாதத்தின் இறுதி ஜும்ஆ (வெள்ளிக்கிழமை) ஆகும். இது ஒரு முஃமினின் வாழ்வில் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு தருணம். பிரியும் ரமலானுக்கு விடை கொடுக்கும் அதே வேளையில், ரமலானில் பெற்ற நன்மைகளைத் தக்கவைக்க உறுதி பூணும் நாள் இது.
ரமலான் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு கண்ணியமிக்க விருந்தினர். அந்த விருந்தினர் இப்போது நம்மை விட்டு விடைபெறத் தயாராகிவிட்டார். ஜும்அத்துல் விதா என்பது அந்த விருந்தினரை வழியனுப்பும் நாள்.
இந்த ஒரு மாத காலம் நம்மிடம் தங்கியிருந்த அந்த விருந்தினர், நாளை மறுமையில் அல்லாஹ்விடம் நம்மைப் பற்றி என்ன சாட்சி சொல்லும் "யா அல்லாஹ், இவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்" என்று சொல்லுமா? அல்லது "இவன் என்னை அலட்சியப்படுத்தினான்" என்று சொல்லுமா?
சஹாபாக்கள் ரமலான் முடிந்துவிட்டால் அழுவார்களாம். "அந்தப் பாக்கியமிக்க மாதம் முடிந்துவிட்டதே, அடுத்த ஆண்டு நாம் இருப்போமோ மாட்டோமோ" என்ற கவலை அவர்களுக்கு இருக்கும்.
ரமலானை நன்மைகளுடன் கழித்தவர்களுக்கு இது ஈத் (பெருநாள்) போன்ற மகிழ்ச்சி.
பாவமன்னிப்புப் பெறாதவர்களுக்கு இது நஷ்டம்.
கண்ணியமிகு ரமலான் நம்மை விட்டு விடைபெற்றுச் செல்லக்கூடிய நிலையில். அந்த விருந்தினர் நமக்கு விட்டுச் சென்ற பாடங்கள் மரணம் வரை நம்மோடு இருக்க வேண்டும்.
நாம் "ரமலானின் வணக்கசாளிகளாக" (Ramadan Worshippers) இருக்கக் கூடாது; மாறாக "ரப்பனி" எனும் "இறைவனின் வணக்கசாளிகளாக" (Worshippers of the Lord) இருக்க வேண்டும்.
ரமலான் நமக்கு எதைக் கற்றுத்தந்தது? அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
"யா அய்யுஹல்லதீன ஆமனூ குதிப அலைகுமுஸ் ஸியாம்... லஅல்லக்கும் தத்தக்கூன்" (2:183)
நோன்பின் இலக்கே தக்வா (இறையச்சம்) தான். ரமலானில் பகல் நேரத்தில் தண்ணீர் பக்கத்தில் இருந்தும் நாம் குடிக்கவில்லை. ஏன்? யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்க்கிறான் என்ற அந்த 'தக்வா' தான் காரணம். ரமலானுக்குப் பிறகு அநியாயம் செய்யும்போதோ, வட்டி வாங்கும்போதோ, பொய் பேசும்போதோ அதே "அல்லாஹ் பார்க்கிறான்" என்ற உணர்வு நமக்கு வரவேண்டும். அதுவே ரமலான் நமக்குள் ஏற்படுத்திய உண்மையான மாற்றம்.
நரைமுடி வந்த காரணம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுடியில் சில நரைமுடிகளைக் கண்ட ஸஹாபாக்கள் ஆச்சரியத்துடன் அதுகுறித்துக் கேட்டபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த பதில்
شَيَّبَتْنِي هُودٌ وَأَخَوَاتُهَا
"ஸூரா ஹூதும், அதன் சகோதரி (போன்ற மற்ற) ஸூராக்களும் என்னை நரைக்கச் செய்துவிட்டன."(நூல்: திர்மிதி
ஏன் இந்த ஸூராக்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நரைக்கச் செய்தன?
இந்த ஸூராக்களில் மறுமையின் பயங்கரங்கள், முந்தைய சமுதாயங்கள் அழிக்கப்பட்ட விதம் மற்றும் இறைவனின் கடுமையான எச்சரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஸூரா ஹூதில் இடம்பெற்ற ஒரு வசனம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பாரமான ஒன்றாக இருந்தது:
"فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ"
"நீர் ஏவப்பட்டது போன்றே (நேரான பாதையில்) உறுதியாக நிலைத்திருப்பீராக." (11:112) இந்த வசனத்தில் வரும் "நிலைத்திருத்தல்" (Istiqamah) என்பது அத்தனை எளிதானதல்ல. தன் வாழ்நாள் முழுவதும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் கட்டளைப்படி உறுதியாக நிற்பது என்பது ஒரு மாபெரும் பொறுப்பு. அந்தப் பொறுப்பின் பாரத்தை உணர்ந்ததால்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் முடிகள் நரைத்தன என்று அறிஞர்கள் விளக்குகிறார்கள்.
"ரமலானில் நோன்பு நோற்பது எளிது,
ஆனால் ரமலான் கற்றுத் தந்த ஒழுக்கத்தில்
மரணம் வரை 'நிலைத்திருப்பது' (Istiqamah) தான்
ஒரு முஃமினின் உண்மையான வெற்றி!”
தொடக்கத்தை விட முடிவே சிறந்தது!
ஒரு போரின் போது (பெரும்பாலான அறிவிப்புகளில் இது கைபர் போரைக் குறிக்கும்), குஸ்மான் என்ற ஒருவர் முஸ்லிம்களின் தரப்பில் மிக ஆக்ரோஷமாகப் போரிட்டுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மற்ற ஸஹாபாக்கள், "இவர் எவ்வளவு வீரமாகப் போரிடுகிறார்! இவருக்குக் கிடைக்கும் நற்கூலி மகத்தானது" என்று வியந்து பேசினார்கள்.
அப்போது இதைக் கேட்ட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்:
"நிச்சயமாக இவர் நரகவாசி" என்று கூறினார்கள். ஸஹாபாக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. "இவ்வளவு வீரமாகப் போரிடுபவர் எப்படி நரகவாசியாக முடியும்?" என்று எண்ணி, ஒரு ஸஹாபி அவரைத் தொடர்ந்து கண்காணித்தார்.
போரில் குஸ்மான் படுகாயமடைந்தார். காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியவில்லை. உடனே அவர் தனது வாளின் பிடியைத் தரையில் ஊன்றி, அதன் கூர்மையான முனையைத் தன் மார்பில் வைத்து, அதன் மீது சாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைக் கண்ட அந்த ஸஹாபி ஓடி வந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் விபரத்தைக் கூறினார். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு முக்கியமான தத்துவத்தைக் கூறினார்கள்:
"إِنَّمَا الأَعْمَالُ بِالْخَوَاتِيمِ"
"நிச்சயமாக நற்செயல்கள் அனைத்தும் அதன் முடிவைப் பொறுத்தே அமைகின்றன."(நூல்: புகாரி
"தொடக்கத்தை விட முடிவே சிறந்தது!
ரமலானில் காட்டிய வேகத்தை விட,
மரணம் வரை காட்டும் 'விவேகமும்' 'நிலைத்தன்மையும்' தான்
நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்!”
இபாதத்தை நிறுத்த காலம் இல்லை
وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ
"உமக்கு 'யகீன்' (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக.”
முடிவு முக்கியம்
பர்ஸீஸா பனூ இஸ்ரவேல் சமுதாயத்தில் வாழ்ந்த ஒரு மகா(ஆபித்). வணக்கசாளி அவர் ஒரு தனி மடத்தில் (Monastery) தங்கி பல ஆண்டுகளாக அல்லாஹ்வை வணங்கி வந்தார். அவருடைய வணக்க வழிபாடுகள் மற்றும் இறை அச்சத்தைக் கண்டு மக்கள் அவரை ஒரு பெரிய மகானாக மதித்தனர். ஷைத்தானால் கூட பல ஆண்டுகள் அவரை நெருங்க முடியவில்லை.
அந்த ஊரில் வாழ்ந்த மூன்று சகோதரர்கள் போருக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்தபோது, ஊரிலேயே மிகவும் நம்பிக்கைக்குரியவரான பர்ஸீஸாவைத் தேர்ந்தெடுத்தனர். முதலில் பர்ஸீஸா மறுத்தாலும், சகோதரர்களின் வற்புறுத்தலால் அவளைத் தனது மடத்திற்கு அருகிலுள்ள ஒரு அறையில் தங்க வைக்கச் சம்மதித்தார்.
ஷைத்தான் பர்ஸீஸாவை ஒரே நாளில் வீழ்த்தவில்லை. அவன் மிக மெதுவாகத் தனது தந்திரங்களை விரித்தான்:
"அந்தப் பெண் பசியாக இருப்பாள், அவளுக்கு உணவு கொண்டு போய் வை" என்று பர்ஸீஸாவின் மனதில் போட்டான். அவர் உணவை அந்த அறையின் வாசலில் வைத்துவிட்டு ஓடி வருவார்.
"வாசலில் வைத்தால் யாராவது எடுத்துச் செல்வார்கள், உள்ளே போய்க் கொடு" என்றான். பிறகு, "அவள் தனியாகப் பயப்படுவாள், அவளிடம் நலம் விசாரி" எனப் பேசத் தூண்டினான்.
தனிமையும், தொடர்ச்சியான பேச்சும் இறுதியில் அவரைப் பெரும் பாவமான 'ஜினா'வில் (விபச்சாரம்) தள்ளியது. அந்தப் பெண் கர்ப்பமானாள்.
தவறு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம் பர்ஸீஸாவைச் சூழ்ந்தது. அப்போது ஷைத்தான் வந்து, "அந்தப் பெண்ணையும், பிறக்கப்போகும் குழந்தையையும் கொன்று புதைத்துவிடு; சகோதரர்கள் கேட்டால் அவள் நோயால் இறந்துவிட்டதாகச் சொல்" என்று யோசனை கூறினான். பர்ஸீஸா அவ்வாறே செய்தார்.
சகோதரர்கள் திரும்பி வந்து கேட்டபோது, பர்ஸீஸா சொன்ன பொய்யை அவர்கள் நம்பினர். ஆனால், ஷைத்தான் அந்தச் சகோதரர்களின் கனவில் தோன்றி, உண்மை நடந்த இடத்தையும், அவர்கள் தங்கை புதைக்கப்பட்ட இடத்தையும் காட்டிக் கொடுத்தான். அவர்கள் தோண்டிப் பார்த்தபோது உண்மை தெரிந்தது. பர்ஸீஸா கைது செய்யப்பட்டு மரண தண்டனைக்கு (சிலுவையில் அறைய) கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மரணத்தை எதிர்நோக்கி இருந்தபோது, ஷைத்தான் மனித வடிவில் வந்து, "பர்ஸீஸாவே! உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது நான்தான். இப்போது கூட உன்னை என்னால் காப்பாற்ற முடியும். எனக்கு ஒரே ஒரு முறை 'ஸஜ்தா' (சிரம் பணிதல்) செய்" என்றான். பர்ஸீஸா தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, ஷைத்தானுக்கு ஸஜ்தா செய்தார்.
அடுத்த நொடியே ஷைத்தான் சொன்னான்: "நிச்சயமாக நான் உன்னை விட்டும் விலகிக்கொள்கிறேன், நான் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்."
பல ஆண்டுகள் இறைவனை வணங்கிய பர்ஸீஸா, இறுதியில் ஒரு கொலையாளியாகவும், அதைவிடக் கொடுமையாக ஒரு இறைமறுப்பாளராகவும் (முஷ்ரிக்) மரணித்தார்.
ஆரம்பம் அழகாக இருப்பதை விட, முடிவு ஈமானோடு அமைவதே வெற்றி! ரமலானில் நாம் தொழுத அந்தத் தலைகள், ரமலானுக்குப் பிறகும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும், எதற்கும் பணியக் கூடாது!”
அறிவும் அந்தஸ்தும் இருந்தாலும் போதாது
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் பல்ஆம் இப்னு பாஊரா இவர் சாதாரண மனிதர் அல்ல; அல்லாஹ்வுடைய "இஸ்முல் அஃஸம்" (அல்லாஹ்வின் மிக உயர்ந்த திருநாமம்) தெரிந்தவர். அந்தப் பெயரைச் சொல்லி அவர் துஆ செய்தால், அது உடனடியாக அங்கீகரிக்கப்படும். அவ்வளவு பெரிய அந்தஸ்தில் அவர் இருந்தார். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அவரிடம் கல்வி கற்றனர்.
மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றபோது, அந்த ஊர் மக்கள் பயந்துபோய் பலாமினிடம் வந்தனர். "மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும் அவர்களது கூட்டத்திற்கும் எதிராக நீங்கள் துஆ செய்ய வேண்டும்" என்று வேண்டினர்.
முதலில் பல்ஆம் இப்னு பாஊரா மறுத்தார். "அவர் அல்லாஹ்வின் தூதர், வானவர்கள் அவருக்குத் துணையாக இருக்கிறார்கள். அவருக்கு எதிராக நான் எப்படி துஆ செய்ய முடியும்?" என்று கேட்டார்.
அந்த ஊர் தலைவர்கள் பல்ஆம் இப்னு பாஊராவின் மனைவியிடம் விலை உயர்ந்த பரிசுகளையும், பொற்காசுகளையும் கொடுத்தனர். பேராசை கொண்ட மனைவி, பல்ஆம் இப்னு பாஊரா மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு எதிராகப் பிரார்த்திக்கத் தூண்டினாள். பலமுறை மறுத்த பல்ஆம் இப்னு பாஊரா, இறுதியில் தனது மனைவியின் வற்புறுத்தலால் ஒரு மலையின் மீது ஏறி நின்று மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு எதிராகத் துஆ செய்யத் தொடங்கினார்.
அவர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு எதிராகப் பேச முயலும் போதெல்லாம், அவரது நாவிலிருந்து மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குச் சாதகமான வார்த்தைகளே வந்தன.
அவரது உடல் நடுங்கியது. இறுதியில், அல்லாஹ் கொடுத்த தண்டனையால் அவரது நாக்கு மார்பு வரை தொங்கியது. நாயைப் போல அவர் மூச்சிறைக்கத் தொடங்கினார். அவரது அனைத்து ஆன்மீக ஆற்றல்களும், "இஸ்முல் அஃஸமும்" அவரிடமிருந்து பிடுங்கப்பட்டன.
அல்லாஹ் இந்தச் சம்பவத்தை ஒரு கடுமையான உவமையோடு குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
"இன்னும் (நபியே!) நீர் அவர்களுக்கு ஒருவனுடைய வரலாற்றை ஓதிக்காண்பிப்பீராக! அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின்தொடர்ந்தான்; அதனால் அவன் வழிகெட்டவர்களில் ஒருவனாகிவிட்டான்." (அல்குர்ஆன், 7:175)
அல்லாஹ் அவரை ஒரு "நாய்க்கு" ஒப்பிடுகிறான். நாய் சுமையை ஏற்றினாலும் நாக்கைத் தொங்கப்போடும், சும்மா இருந்தாலும் நாக்கைத் தொங்கப்போடும். அதுபோல, அறிவு இருந்தும் அதை நிலைநிறுத்தாதவன் நாய்க்குச் சமம் என்கிறான் அல்லாஹ்.
ஒரே குடும்பம் - இரு வேறு முடிவுகள்
உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ்-ன் வீழ்ச்சி (முர்தத் ஆனவர்)
அபீசீனியாவிற்கு (ஹிஜ்ரத்) சென்ற பிறகு, அங்குள்ள சூழலால் ஈமானை இழந்தவர். இவர் தனது மனைவி உம்மு ஹபீபா (ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கு சென்ற பின் கிறிஸ்தவ மதத்தைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கி, இறுதியில் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார் (முர்தத் ஆனார்). அவர் மது அருந்துவதிலும், வழிகேட்டிலும் மூழ்கினார். தன் மனைவியையும் மதம் மாற வற்புறுத்தினார், ஆனால் அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டார்கள்.
அவரது மனைவி உம்மு ஹபீபா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அவரை எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை.
அவர் குடிபோதைக்கும், வழிகேட்டிற்கும் அடிமையாகி அந்த நிலையிலேயே மரணித்தார்.
இத்தனைக்கும் அவர் ஒரு ஸஹாபியாக இருந்தவர், ஹிஜ்ரத் செய்தவர். ஆனால் அவரிடம் "இஸ்திகாமத்" (நிலைத்தன்மை) இல்லை.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹுவின் உறுதி (நிலைத்திருந்தவர்) அவரது சகோதரர் அப்துல்லாஹ்வோ மார்க்கத்தில் மலைபோல உறுதியாக நின்றார். உஹுத் போரின் போது அவர் செய்த ஒரு துஆ இன்றும் வரலாற்றில் அழியாமல் உள்ளது.
اللَّهُمَّ ارْزُقْنِي رَجُلاً شَدِيدًا بَأْسُهُ، أُقَاتِلُهُ وَيُقَاتِلُنِي، ثُمَّ يَأْخُذُنِي فَيَجْدَعُ أَنْفِي وَأُذُنِي
"யா அல்லாஹ்! இன்று நான் ஒரு பலமான எதிரியைச் சந்திக்க வேண்டும். அவன் என்னைக் கொன்று, என் காதுகளையும் மூக்கையும் அறுக்க வேண்டும். நாளை மறுமையில் நீ என்னிடம் 'ஏன் உன் உறுப்புகள் அறுக்கப்பட்டன?' என்று கேட்கும்போது, 'உனக்காகவும் உன் தூதருக்காகவும் தான் யா அல்லாஹ்' என்று நான் சொல்ல வேண்டும்" என வேண்டினார்.
அவர் அப்படியே ஷஹீத் ஆனார். அவரது உடல் சிதைக்கப்பட்டது. அவர் சொர்க்கத்தின் உயர் நிலையை அடைந்தார்.(நூல்): தபகாத் இப்னு ஸஃது
ரமலான் என்பது ஒரு ஒருமாத காலப் பசி அல்ல; அது நம் வாழ்நாள் முழுமைக்குமான ஒரு பயிற்சிப் பாசறை. ரமலானில் நாம் தொழுத அந்தத் தொழுகை, நாம் பேணிய அந்த நாவடக்கம், நாம் காட்டிய அந்த ஈகை குணம் - இவை அனைத்தும் ரமலான் முடிந்தவுடன் கழற்றி எறியப்பட வேண்டிய உடைகள் அல்ல; மாறாக, நம் மரணம் வரை நாம் அணிய வேண்டிய கவசங்கள்.
ஈமானின் மிகப்பெரிய சோதனை
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஃபாத் ஆன செய்தி கேட்டவுடன் மதீனாவே அதிர்ச்சியில் உறைந்தது. பெரும் வீரரான உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களே நிலைகுலைந்து போனார்கள். "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கவில்லை, மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தன் இறைவனைச் சந்திக்கச் சென்றது போலச் சென்றுள்ளார்கள். யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார் என்று சொல்கிறாரோ அவர் தலையைத் துண்டிப்பேன்" என்று வாளை ஏந்தி நின்றார்கள்.
மக்களின் ஈமான் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு, வெளியே வந்து மக்களை நோக்கி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார்கள்:
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீர உரை
أَمَّا بَعْدُ، مَنْ كَانَ مِنْكُمْ يَعْبُدُ مُحَمَّدًا ﷺ فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ، وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ فَإِنَّ اللَّهَ حَيٌّ لاَ يَمُوتُ
"யார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தீர்களோ, நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள். ஆனால், யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தீர்களோ, நிச்சயமாக அல்லாஹ் உயிருடன் இருப்பவன்; அவன் மரணிக்க மாட்டான்.”
நாம் ரமலானின் வணக்கவாளிகளாக இருந்தால், ரமலான் மறைந்துவிடும். ஆனால் அல்லாஹ்வின் வணக்கவாளிகளாக இருந்தால், அல்லாஹ் என்றும் மாறாதவன்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்த பிறகும் ஸஹாபாக்கள் மார்க்கத்தில் நிலைத்திருந்தது போல, ரமலான் முடிந்த பிறகும் நாமும் மார்க்கத்தில் நிலைத்திருப்போம் (ஃபஸ்தகிம் கமா உமிர்த்த).”
ரமலானில் நாம் பெற்ற அந்த 'தக்வா' எனும் கேடயத்தை கழற்றி எறிந்துவிடாதீர்கள். "ஃபஸ்தகிம் கமா உமிர்த்த" - ஏவப்பட்டபடி உறுதியாக நில்லுங்கள். "வஃபுத் ரப்பக ஹத்தா யஃதியக்கல் யகீன்" - உங்கள் மூச்சு அடங்கும் வரை அந்த இறைவனை வணங்குங்கள். ரமலான் ஒரு தொடக்கமே தவிர முடிவு அல்ல. நம்முடைய உண்மையான 'ஈத்' (பெருநாள்) என்பது, நாம் ஈமானோடு மரணித்து சொர்க்கத்தில் நுழையும் அந்த நாள்தான்!
"கண்ணீர் மல்க விடை கொடுக்கிறோம் ரமலானே...
உன்னிடம் கற்ற பாடங்களை - எங்கள்
உயிர் பிரியும் வரை மறவோம் ரமலானே!”
யா ரஹ்மானே! ரமலானில் நாங்கள் பெற்ற அந்தப் பயிற்சியை, நற்பண்புகளை எங்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க அருள் செய்வாயாக! எங்களை ரமலானின் வணக்கவாளிகளாக ஆக்கிவிடாமல், உனது நிரந்தரமான நல்லடியார்களாக ஆக்குவாயாக!
யா முகல்லிபல் குலூப்! உள்ளங்களை மாற்றக்கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது மார்க்கத்தில் மரணம் வரை நிலைபெறச் செய்வாயாக! (சப்பித் குலூபனா அலா தீனிக்).
யாஅல்லாஹ்! எங்கள் வாழ்வின் இறுதி முடிவை (கவாத்தீம்) அழகாக்கி வைப்பாயாக! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமாவை எங்கள் நாவுகளில் மரணத் தருவாயில் வரச் செய்வாயாக!
யா ரப்பல் ஆலமீன்! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எம்மை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து, உனது ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நுழையச் செய்வாயாக!
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.






