“இறுதி நபியின் இறுதி உபதேசம் ﷺ.”
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ اما بعد… بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ
இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான தலைவர்கள் வந்திருக்கிறார்கள்.
மன்னர்கள் வந்திருக்கிறார்கள்.
அறிஞர்கள் வந்திருக்கிறார்கள்.
பெரும் செல்வந்தர்கள் வந்திருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார்கள்.
உலகத்திற்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது ﷺ அவர்கள் விட்டுச் சென்ற செய்தி மட்டும் இன்று வரை உயிரோடு இருக்கிறது.
நபி ﷺ அவர்கள் நம்முடைய காலத்தில் வாழவில்லை, நாம் அவர்களைப் பார்த்ததில்லை.,அவர்களுடன் அமரவில்லை,அவர்களுடன் சாப்பிடவில்லை. ஆனால் ,அவர்கள் நம்மைப் பற்றி கவலைப்பட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
“உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்துள்ளார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு மிகவும் வருத்தமானது. உங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். முஃமின்களிடம் இரக்கமும் கருணையும் கொண்டவர்.” (அல்குர்ஆன் 9:128)
இந்த வசனத்தை நமது உள்ளத்தில் வைத்துக்கொள்ளுங்கள்:
“நபி ﷺ அவர்கள் நம்மைப் பற்றி கவலைப்பட்டார்கள்.”
ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு துல்ஹஜ் 9-ஆம் நாள் அரஃபா பெருவெளியில், ஜபலுர் ரஹ்மா குன்றின் அடிவாரத்தில், தன் ஒட்டகமான 'கஸ்வா'வின் மீது அமர்ந்து இறுதித் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் ஆற்றிய உரை ‘ஹஜ்ஜத்துல் வதா’ (விடைபெறும் ஹஜ்ஜின் இறுதிப் பேருரை) என்று அழைக்கப்படுகிறது.
லட்சத்திற்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் முன்னிலையில் மனித உரிமைகள், சமத்துவம், இறையச்சம் ஆகியவற்றை நிலைநிறுத்திய முழுமையான உரை இதுவாகும்.
ஹிஜ்ரி 10-ல் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது ஒரே ஹஜ்ஜை நிறைவேற்ற மதீனாவிலிருந்து மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். அரஃபா மைதானத்தில் மக்கள் திரண்டிருந்த வேளையில், நண்பகல் தொழுகைக்குப் பின் நபியவர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்தினார்கள். நபியவர்களின் வார்த்தைகளை ரபீஆ இப்னு உமய்யா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உரத்த குரலில் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
நபியவர்கள் உரையைத் தொடங்குவதற்கு முன் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு இவ்வாறு கூறினார்கள்:
أَيُّهَا النَّاسُ، اسْمَعُوا قَوْلِي، فَإِنِّي لاَ أَدْرِي لَعَلِّي لاَ أَلْقَاكُمْ بَعْدَ عَامِي هَذَا بِهَذَا المَوْقِفِ أَبَدًا
"மக்களே! எனது வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டிற்குப் பிறகு இதே இடத்தில் உங்களை மீண்டும் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது." நூல்: சீரா இப்னு ஹிஷாம்
மனித உயிர்கள் மற்றும் உடைமைகளின் புனிதம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا
"உங்கள் இந்த நாளும், உங்கள் இந்த மாதமும், உங்கள் இந்த நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அதுபோலவே உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும், உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும் (ஒருவருக்கொருவர் பாழாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது)." நூல்: ஸஹீஹ் அல்-புகாரி
அரஃபா பெருவெளியில் குழுமியிருந்த லட்சக்கணக்கான மக்களிடம் நபியவர்கள் நேரடியாகத் தடையை மட்டும் விதிக்காமல், மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் விதமாக மூன்று தொடர் கேள்விகளை முன்வைத்தார்கள்:
"இது எந்த மாதம்?" — மக்கள், "இது துல்ஹஜ் (புனித மாதம்)" என்றனர்.
"இது எந்த ஊர்?" — மக்கள், "இது மக்கா (புனித பூமி)" என்றனர்.
"இது எந்த நாள்?" — மக்கள், "இது ஹஜ்ஜுடைய (புனித) நாள்" என்றனர்.
ஒவ்வொரு கேள்விக்கும் நபியவர்கள் சிறிது மௌனம் காத்ததால், அந்தப் பெயர்களை மாற்றி வேறு பெயர் வைப்பார்களோ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு அந்தச் சூழலில் ஒரு ஆழ்ந்த அமைதியும் கவனக்குவிப்பும் உருவானது.
அனைவரின் கவனமும் முழுமையாக ஈர்க்கப்பட்டதும் நபியவர்கள் கூறினார்கள்:
"உங்கள் இந்த நாளும், உங்கள் இந்த மாதமும், உங்கள் இந்த நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அதுபோலவே உங்கள் உயிர்களும், உங்கள் உடைமைகளும், உங்கள் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்."
அதாவது, ஒரு முஸ்லிம் புனித நகரமான மக்காவில், புனித மாதத்தில், ஹஜ்ஜின் நாளில் எந்த அளவுக்குப் பாவம் செய்ய அஞ்சுவானோ, அதே அச்சமும் புனித உணர்வும் எக்காலத்திலும் பிற மனிதர்களின் உயிர், சொத்து மற்றும் மானத்தின் மீது இருக்க வேண்டும் என்பதை இந்த உவமை உணர்த்துகிறது.
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள்
போர்க்களத்தில் ஒரு எதிரி நிலைகுலைந்து, "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று கூறிய பிறகும், அவர் உயிருக்குப் பயந்துதான் பொய் சொல்கிறார் என்று கருதி உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவரைக் கொன்று விடுகிறார்கள்.
இச்செய்தியைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கடுமையான கோபமும் வேதனையும் அடைந்து:
أَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَقَتَلْتَهُ؟
"அவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறிய பிறகா அவரைக் கொன்றாய்?!" என்று மீண்டும் மீண்டும் கேட்டார்கள்.
உஸாமா ரலியல்லாஹு அன்ஹு, "இறைத்தூதரே! அவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே கூறினார்" என்றார். அதற்கு நபியவர்கள், "அவரது உள்ளத்தைப் பிளந்து பார்த்தாயா?" என்று கேட்டுவிட்டு, "மறுமை நாளில் 'லா இலாஹ இல்லல்லாஹ்' உனக்கு எதிராக சாட்சி சொல்ல வரும்போது நீ என்ன செய்வாய்?"
என்று கூறினார்கள் உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "நான் அன்றுவரை முஸ்லிமாகாமல் இருந்திருக்கக் கூடாதா (அப்போது இந்த மாபெரும் தவறு நடந்திருக்காதே)" என்று ஏங்கும் அளவுக்கு உயிரின் புனிதத்தை நபியவர்கள் உறுதிப்படுத்தினார்கள். நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 96)
பிறர் உடைமையின் புனிதம்:
போர்க்களத்தில் மரணித்த கிர்கிரா நபியவர்களின் பயணப் பொதிகளைப் பாதுகாத்து வந்த 'கிர்கிரா' என்ற நபித்தோழர் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். மக்கள் அவரைப் பார்த்து, "அவருக்குச் சொர்க்கம் கிடைத்துவிட்டது" என்று வாழ்த்தினார்கள். ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அதிர்ச்சியளிக்கும் உண்மையை உடைத்தார்கள்:
كَلَّا، إِنَّ الشَّمْلَةَ الَّتِي أَخَذَهَا يَوْمَ خَيْبَرَ مِنَ المَغَانِمِ، لَمْ تُصِبْهَا المَقَاسِمُ، لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا
"நிச்சயமாக இல்லை! கைபர் போரின்போது பொதுச் சொத்திலிருந்து பங்கு வைப்பதற்கு முன்பாக அவர் திருடி மறைத்து வைத்த ஒரு போர்வை, அவர் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது."
பொது உடைமையிலிருந்து ஒரு போர்வையை அநீதியாக எடுத்த செயலானது, ஒருவரின் களப்பணியையே வீணாக்கி நரகிற்குக் கொண்டுசெல்லும் அளவுக்கு பிறர் உடைமையின் புனிதம் கடுமையானது என்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது.
நூல்: ஸஹீஹ் அல்-புகாரி
மனித மானத்தின் புனிதம்:
மாஇஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலை இழிவாகப் பேசிய இருவர்
விபச்சாரம் செய்ததாகத் தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்டு மரண தண்டனை (கல்லெறி தண்டனை) பெற்று இறந்த மாஇஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி, வழியில் சென்ற இருவர்: "நாய் செத்ததைப் போல இவர் செத்துப் போனார்" என்று இழிவாகப் பேசிக்கொண்டனர்.
அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்த நபியவர்கள், சற்று தூரம் சென்றதும் அழுகிய ஒரு கழுதையின் சடலத்தைக் கண்டார்கள். அந்த இருவரையும் அழைத்து, "இறங்கி இந்தக் கழுதையின் பிணத்தை உண்ணுங்கள்" என்றார்கள். அவர்கள் பதறிப்போய், "இறைத்தூதரே! இதை யாராவது உண்பார்களா?" என்றனர்.
அப்போது நபியவர்கள் கூறினார்கள்:
فَمَا نِلْتُمَا مِنْ عِرْضِ أَخِيكُمَا آنِفًا أَشَدُّ مِنْ أَكْلِ مَيْتَةٍ
"சற்றுமுன் உங்கள் சகோதரரின் மானத்தில் கைவைத்தீர்களே, அது இந்தக் கழுதையின் பிணத்தை உண்பதை விடக் கொடிய பாவமாகும்!" நூல்: சுனன் அபீ தாவூத்
உயிரைக் காப்பது, அடுத்தவர் உழைப்பையும் உடமையையும் அபகரிக்காமல் இருப்பது, சமூகத்தில் பிறரது நற்பெயரையும் கண்ணியத்தையும் குலைக்காமல் பேணிக் காப்பது ஆகியவையே ஓர் இஸ்லாமிய சமூக ஒழுங்கமைப்பின் அடிப்படைத் தூண்கள் என்பதை இந்த இறுதிப் பேருரை ஆணித்தரமாக நிலைநிறுத்துகின்றன.
அடுத்து வட்டி ஒழிப்பு…
அறியாமைக் காலத்துப் பழக்கமான வட்டியை அடியோடு ஒழித்துக்கட்டிய நபியவர்கள், தம் சொந்தக் குடும்பத்திலிருந்தே அதைத் தொடங்கினார்கள்:
وَإِنَّ رِبَا الجَاهِلِيَّةِ مَوْضُوعٌ، وَأَوَّلُ رِبًا أَضَعُ رِبَانَا رِبَا عَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، فَإِنَّهُ مَوْضُوعٌ كُلُّهُ
"அறியாமைக் காலத்து வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. முதன்முதலாக நான் தள்ளுபடி செய்யும் வட்டி, எனது பெரிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியாகும். அது முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது."நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1218)
அறியாமைக் கால வட்டி முறை
இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) வட்டி முறை மிகக் கொடூரமான சுரண்டலாக இருந்தது. ஒருவர் கடன் வாங்கி, தவணை நாளில் அதைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், கடன் கொடுத்தவர்: "கடனை அடைக்கிறாயா அல்லது தொகையை (வட்டியை) அதிகரிக்கட்டுமா?" என்று கேட்பார். இதனால் அசல் தொகையை விட வட்டி பல மடங்கு பெருகி (இரட்டிப்பாகி), எளிய மக்கள் தங்கள் வீடுகளையும், கால்நடைகளையும், இறுதியில் தங்கள் பொருட்களையும் தங்கள் பிள்ளைகளையும் அடிமைகளாக விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சொந்தக் குடும்பத்திலிருந்தே தொடங்கிய சீர்திருத்தம்
ஒரு தலைவன் கொள்கைகளைப் பிரசங்கிப்பது எளிது; ஆனால் அதைத் தன் சொந்தக் குடும்பத்தின் மீது முதலில் அமல்படுத்துவதே உண்மையான தலைமைத்துவம்.
நபியவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் பெரும் செல்வந்தராகவும், மக்களுக்குப் பெரிய அளவில் கடன் வழங்கி வட்டி ஈட்டுபவராகவும் இருந்தார்கள். மக்கா வெற்றிக் காலத்தில்தான் அவர் தம் இஸ்லாத்தை பகிரங்கப்படுத்தினார்கள்.
அதற்கு முன்பிருந்தே பலரிடமும் அவருக்கு வர வேண்டிய வட்டிப் பாக்கிகள் பெருந்தொகையாக நிலுவையில் இருந்தன.
நபியவர்கள் சட்டம் போடும்போது:"பிறர் வாங்கிய வட்டியை ரத்து செய்கிறேன்" என்று கூறாமல், "நமது வட்டியிலிருந்து முதன்முதலாக நான் தள்ளுபடி செய்வது எனது பெரிய தந்தை அப்பாஸ் உடைய வட்டியாகும்" என்று அறிவித்தார்கள்.
தன் சொந்தக் குடும்பத்திற்கு வர வேண்டிய மிகப்பெரிய பொருளாதார லாபத்தை ஒரு நொடியில் ரத்து செய்ததன் மூலம், எந்தவொரு தனிமனிதனுக்கும் இதில் விதிவிலக்கு இல்லை என்பதை உலகுக்கு நிரூபித்தார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் வசனம் இறக்கிய சூழல்
தாயிஃப் நகரத்து 'பனூ ஸகீஃப்' கோத்திரத்தினர், மக்காவிலிருந்த 'பனூ மக்ஸூம்' கோத்திரத்தினருக்கு அறியாமைக் காலத்தில் வட்டிக்குக் கடன் கொடுத்திருந்தனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, தாயிஃப் வாசிகள் மக்காவாசிகளிடம் வந்து, "நாங்கள் ஒப்பந்தப்படி வாங்கிய கடனுக்கான வட்டிப் பாக்கியைத் தாருங்கள்" என்று கோரினர்.
மக்காவாசிகள், "நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிவிட்டோம்; இஸ்லாத்தில் வட்டி வாங்குவது ஹராம் என்பதால் இனி ஒரு பைசா கூட வட்டியாகத் தர மாட்டோம்" என்று மறுத்துவிட்டனர்.
இப்பிரச்சினை மக்காவின் ஆளுநரான அத்தாப் பின் அஸீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றது. அவர் இதை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார். அப்போது அல்லாஹ் இந்தத் தீர்க்கமான வசனங்களை இறக்கி வைத்தான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
"நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உண்மையான முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சுங்கள்; வட்டியிலிருந்து எஞ்சியிருப்பதை விட்டுவிடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால், அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் ஒரு போர்ப் பிரகடனத்தை எதிர்பாருங்கள்! நீங்கள் தவ்பா செய்து மீண்டுவிட்டால், உங்கள் மூலதனம் (அசல் தொகை) உங்களுக்கே உரியது. நீங்கள் அநீதி இழைக்கவும் கூடாது; அநீதிக்கு உள்ளாக்கப்படவும் கூடாது." திருக்குர்ஆன் 2:278-279
இந்த வசனம் இறங்கியதும் நபியவர்கள், "அசல் தொகையை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள்; எஞ்சிய ஒரு ரூபாய் வட்டியைக்கூட வசூலிக்கக் கூடாது" என்று தீர்ப்பளித்தார்கள். வட்டி வாங்குபவர்கள் மீது இறைவன் போர்ப் பிரகடனம் செய்கிறான் என்ற கடுமையான எச்சரிக்கை சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பேரிச்சம்பழப் பரிவர்த்தனையில் வந்த மறைமுக வட்டி (ரிபா அல்-ஃபள்ல்)
பணத்தில் மட்டுமல்லாமல், பொருட்களின் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி நுழைந்துவிடக் கூடாது என்பதில் நபியவர்கள் மிகக் கண்டிப்புடன் இருந்தார்கள்.
ஒருமுறை அபூஸயீத் அல்-குத்ரீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் தரமான 'பர்னீ' ரகப் பேரீச்சம்பழத்தை நபியவர்களிடம் கொண்டு வந்தார்கள்.
நபியவர்கள், "இவ்வளவு நல்ல பேரீச்சம்பழம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டார்கள்.
அதற்கு பிலால் ரலியல்லாஹு அன்ஹு"எங்களிடம் தரம் குறைந்த பேரீச்சம்பழம் இருந்தது; நபியவர்கள் உண்பதற்காக, அந்தத் தரம் குறைந்த பேரீச்சம்பழத்தில் இரண்டு மரக்காலைக் கொடுத்து, இந்த நல்ல பேரீச்சம்பழத்தில் ஒரு மரக்காலை பண்டமாற்று முறையில் மாற்றிக்கொண்டு வந்தேன்" என்றார்.
இதைக்கேட்டதும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பதறிப்போய் இவ்வாறு கூறினார்கள்:
أَوَّهْ أَوَّهْ، عَيْنُ الرِّبَا، عَيْنُ الرِّبَا، لاَ تَفْعَلْ
"அந்தோ பரிதாபம்! இது அப்பட்டமான வட்டியாகும்! இது அப்பட்டமான வட்டியாகும்! இனி ஒருபோதும் இவ்வாறு செய்யாதீர்!"
பிறகு அதற்குச் சரியான பொருளாதார வழியையும் கற்றுக் கொடுத்தார்கள்:
"உயர்தரப் பழம் வாங்க விரும்பினால், உன்னிடமுள்ள தரம் குறைந்த பழத்தைப் பணத்திற்கு விற்றுவிடு; பிறகு அந்தப் பணத்தைக் கொண்டு நல்ல பழத்தை விலைக்கு வாங்கிக்கொள்." நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 2312),
வட்டியோடு தொடர்புடைய நால்வருக்குமான சாபம்
வட்டியை வாங்குபவர் மட்டுமின்றி, அந்தப் பொருளாதாரச் சுரண்டல் அமைப்புக்குத் துணைபோகும் அனைவரையும் நபியவர்கள் எச்சரித்தார்கள்:
لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ
"வட்டி வாங்குபவர், வட்டி கொடுப்பவர், அதற்கான ஆவணத்தை எழுதுபவர், அதற்குச் சாட்சியாக இருக்கும் இருவர் ஆகிய அனைவரையும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சபித்தார்கள். மேலும், 'அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவர்களே' என்றும் கூறினார்கள்." நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1598)
உழைப்பின்றிப் பிறரது உழைப்பை உறிஞ்சும் வட்டி முறையை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஒழித்து, அதற்கு மாற்றாக 'ஸகாத்' (கட்டாயத் தர்மம்), 'ஸதகா' (தன்னார்வக் கொடை), 'கர்ள் ஹஸன்' (மறுமை நன்மையை நாடித் தரப்படும் வட்டியில்லாக் கடன்) ஆகியவற்றை நிலைநாட்டி, அடித்தட்டு மக்களைக் கடன் வலையிலிருந்து விடுவித்தார்கள்.
அறியாமைக் கால பழிவாங்கும் கொலைகள் ரத்து
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
وَإِنَّ دِمَاءَ الجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ، وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الحَارِثِ
"அறியாமைக் காலத்துப் பழிவாங்கும் கொலைகள் அனைத்தும் செல்லாததாக்கப்பட்டுவிட்டன. நமது இரத்தப் பழிகளிலிருந்து முதன்முதலாக நான் தள்ளுபடி செய்வது இப்னு ரபீஆ இப்னுல் ஹாரிஸின் இரத்தப் பழியாகும்."
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1218)
இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில் முறையான அரசாங்கமோ, பொதுவான நீதிமன்றங்களோ, சட்ட விதிகளோ இருக்கவில்லை. "பழங்குடிவாதம்" (அஸபிய்யா) மட்டுமே சமூகத்தை இயக்கியது.
ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவன் வேறொரு கோத்திரத்து நபரை கொன்றுவிட்டால், கொலையாளியை மட்டும் தண்டிக்கும் வழக்கம் அவர்களிடம் இல்லை. மாறாக, பாதிக்கப்பட்ட கோத்திரம், கொலையாளியின் முழு கோத்திரத்தின் மீதும் போர் தொடுக்கும்.
ஒரு சாமானியன் கொல்லப்பட்டால், அவனுக்குப் பகரமாக எதிரிக் கோத்திரத்தின் தலைவரையோ அல்லது பலரையோ கொன்றால்தான் பழி தீர்ந்ததாகக் கருதினர்.
ஒரு கொலைக்குப் பதிலாக மற்றொரு கொலை, அதற்குப் பதிலாக இன்னொன்று எனப் பல தலைமுறைகளுக்கு ரத்தப் பழி தொடரும்.
அற்ப காரணங்களுக்காகத் தொடங்கிய போர்கள் (உதாரணமாக, ஒரு குதிரைப் பந்தயத் தகராறினால் மூண்ட 'தாஹிஸ் வல் கப்ராவ்' போர் 40 ஆண்டுகளும், ஒட்டகத்தைத் தாக்கியதால் மூண்ட 'பஸூஸ்' போர் 40 ஆண்டுகளும்) பல தலைமுறைகளை அழித்தொழித்தன.
நபியவர்கள் இந்த நீண்ட ரத்தச் சங்கிலியை ஒரே பிரகடனத்தின் மூலம் அறுத்தெறிந்தார்கள்:
"அறியாமைக் காலத்துப் பழிவாங்கும் கொலைகள் அனைத்தும் காலடியில் போட்டு மிதிக்கப்பட்டுவிட்டன (செல்லாததாக்கப்பட்டுவிட்டன)."
இதன் மூலம் சட்டத்தைக் கையில் எடுக்கும் தனிநபர் பழிவாங்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, குற்றவியல் நீதியும் தண்டனை வழங்கும் அதிகாரமும் இஸ்லாமிய அரசு மற்றும் நீதிமன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.
சொந்தக் குடும்பத்திலிருந்தே தொடக்கம் வட்டியை ஒழிக்கும் போது தன் பெரிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வட்டியை முதலில் ரத்து செய்தது போலவே, ரத்தப் பழியை ரத்து செய்யும்போதும் நபியவர்கள் தன் சொந்தக் குடும்பமான பனூ ஹாஷிம் வம்சத்திலிருந்தே தொடங்கினார்கள்:
"நமது இரத்தப் பழிகளிலிருந்து முதன்முதலாக நான் தள்ளுபடி செய்வது இப்னு ரபீஆ இப்னுல் ஹாரிஸின் இரத்தப் பழியாகும்."
ரபீஆ இப்னுல் ஹாரிஸ் என்பவர் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பெரிய தந்தை ஹாரிஸின் மகனாவார் (அதாவது நபியவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்). ரபீஆவுக்கு 'ஆயித்' (அல்லது 'ஆதம்') என்ற பச்சிளம் ஆண் குழந்தை இருந்தது.
அறியாமைக் காலத்தில், அந்தப் பச்சிளங்குழந்தை பால் குடிப்பதற்காகவும் கிராமப்புறச் சூழலில் வளர்வதற்காகவும் 'பனூ ஸஅத்' கோத்திரத்தில் விடப்பட்டிருந்தது (நபியவர்கள் ஹலீமா அஸ்ஸஅதிய்யாவிடம் வளர்ந்தது போல).
அப்போது 'பனூ ஸஅத்' கோத்திரத்திற்கும், 'ஹுதைல்' கோத்திரத்திற்கும் இடையே கடுமையான போர் மூண்டது. போரின்போது பனூ ஸஅத் கூடாரங்களில் இருந்த அந்தப் பச்சிளங்குழந்தையின் மீது ஹுதைல் கோத்திரத்தார் எறிந்த கல் அல்லது அம்பு பட்டு, குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நபியவர்களின் குடும்பமான 'பனூ ஹாஷிம்' மிக வலிமையான, கௌரவமிக்க குடும்பம் என்பதால், நினைத்திருந்தால் ஹுதைல் கோத்திரத்தாரிடம் ரத்தத்திற்கு ரத்தம் பழிவாங்கியிருக்க முடியும் அல்லது பெரும் நஷ்டஈடு வசூலித்திருக்க முடியும். ஆனால் நபியவர்கள்: "நமது குடும்பத்திற்கு வர வேண்டிய அந்த ரத்தப் பழியை எந்த இழப்பீடும் கோராமல் அல்லாஹ்வுக்காக நான் தள்ளுபடி செய்கிறேன்" என்று பொதுவெளியில் அறிவித்தார்கள். இது எதிரிகளுக்கும் நடுநிலையாளர்களுக்கும் மிகப்பெரிய தார்மீகப் பாடமாக அமைந்தது.
மக்கா வெற்றி நாளில் நபியவர்களின் பொதுமன்னிப்பு
பழிவாங்கும் உணர்வை நபியவர்கள் எவ்வாறு அடியோடு வேரறுத்தார்கள் என்பதற்கு மக்கா வெற்றி மிகச்சிறந்த உதாரணம்.
13 ஆண்டுகள் முஸ்லிம்களைச் சித்திரவதை செய்து, அவர்களின் வீடுகளைப் பறித்து, சொந்த ஊரை விட்டு விரட்டியடித்த குறைஷிகள் தலைகுனிந்து நின்றனர். கஃபாவின் வாசலில் நின்ற நபியவர்கள் குறைஷிகளைப் பார்த்து:
"மக்காவாசிகளே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்துகொள்வேன் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "நீங்கள் கண்ணியமிக்க சகோதரர்; கண்ணியமிக்க சகோதரரின் மகன்" என்றனர்.
நபியவர்கள் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சகோதரர்களுக்குக் கூறிய வார்த்தைகளைக் கூறி:
لاَ تَثْرِيبَ عَلَيْكُمُ اليَوْمَ، اذْهَبُوا فَأَنْتُمُ الطُّلَقَاءُ
"இன்று உங்கள் மீது எந்தப் பழியும் இல்லை; நீங்கள் செல்லுங்கள், நீங்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள்!"
என்று அறிவித்தார்கள். தங்களைக் கொடுமைப்படுத்திய கொடிய எதிரிகளையும் பழிவாங்காமல் பொதுமன்னிப்பு வழங்கி, பழிவாங்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். நூல்: அஸ்-ஸீரதுன் நபவிய்யா (இப்னு ஹிஷாம்)
ஜுஹைனா மற்றும் லுகைத் கோத்திரத்தாரின் இழப்பீட்டு வழக்கு
நபியவர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக, ஒரு கொலை நிகழ்ந்துவிட்டால் அதைத் தனிநபர்கள் கையில் எடுக்க அனுமதிக்காமல் சட்டப்படி நஷ்டஈடு (திய்யா) அல்லது தகுந்த தண்டனையை அரசு மூலமாக மட்டுமே பெற்றுத் தந்தார்கள்.
அறியாமைக் காலத்துப் பகைமையின் காரணமாக ஒருவர் பிறரைக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழி என்ற பெயரில் அவரது குடும்பத்தாரையோ கோத்திரத்தாரையோ தாக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். திருக்குர்ஆனின் இந்த வசனத்தை நடைமுறைப்படுத்தினார்கள்:
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
"சுமக்கும் எந்த ஓர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவின் சுமையைச் சுமக்காது (ஒருவர் செய்த குற்றத்திற்கு மற்றொருவர் தண்டிக்கப்பட மாட்டார்)."திருக்குர்ஆன் 6:164
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அரஃபா மைதானத்தில் ஆற்றிய இந்தப் பிரகடனம், ஆத்திரத்திலும் பழிவாங்கும் வெறியிலும் இயங்கிக்கொண்டிருந்த ஓர் காட்டுமிராண்டிச் சமூகத்தை, சட்டம், நீதி, ஒழுங்கு மற்றும் மன்னிப்பின் வழியில் இயங்கும் உலகளாவிய நாகரிகச் சமூகமாக மாற்றியமைத்தது.
பெண் உரிமை மற்றும் பாதுகாப்பு
நபியவர்கள் லட்சக்கணக்கான ஆண்களுக்கு மத்தியில் பெண்களின் உரிமையை வலியுறுத்தி ஆணித்தரமாக இவ்வாறு கூறினார்கள்:
فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ، وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لاَ يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ... وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالمَعْرُوفِ
"மக்களே! பெண்களின் விவகாரத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! நிச்சயமாக நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் அடைக்கலத்திலேயே (பொறுப்பிலேயே) உங்கள் வசம் எடுத்துள்ளீர்கள்; அல்லாஹ்வின் வாக்கைக் கொண்டே (திருமண உடன்படிக்கை மூலம்) அவர்களை உங்களுக்கு ஆகுமானவர்களாக ஆக்கிக்கொண்டீர்கள். உங்கள் படுக்கைகளில் நீங்கள் விரும்பாத எவரையும் அனுமதிக்காமல் இருப்பது அவர்கள் மீது உங்கள் உரிமையாகும்... மேலும், அவர்களுக்கு முறைப்படி உணவும் உடையும் வழங்குவது உங்கள் மீதுள்ள கடமையாகும்."நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 1218)
பெண்ணியத்திற்கு நபியவர்கள் தந்த கண்ணியம்
"அல்லாஹ்வின் அடைக்கலம்" (بِأَمَانِ اللَّهِ) என்ற பொறுப்புணர்வு
அறியாமைக் காலத்தில் பெண்கள் விற்பனைப் பொருளாகவும், தந்தை இறந்தால் மகனுக்குச் சொத்தாகப் பங்கு பிரிக்கப்படும் அடிமையாகவும், பெண் குழந்தை பிறந்தாலே உயிரோடு புதைக்கும் அவல நிலையிலும் இருந்தனர்.
நபியவர்கள் பெண்களை ஆண்களின் "சொத்து" என்ற நிலையிலிருந்து மாற்றி, "அவர்கள் அல்லாஹ்வின் அமானிதம் (அடைக்கலம்)" என்று அறிவித்தார்கள். ஒரு கணவன் தன் மனைவியிடம் அநீதியாக நடந்துகொண்டால், அவன் அவளது குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவளை அடைக்கலமாகத் தந்த சர்வலோக இரட்சகனான அல்லாஹ்வுக்கே பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்ற இறையச்சத்தை விதைத்தார்கள்.
கணவன் மட்டுமே அதிகாரம் செலுத்தும் ஒருதலைப்பட்ச அதிகார அமைப்பை நபியவர்கள் உடைத்தெறிந்தார்கள். மனைவிக்குக் கணவன் மீது என்ன கடமை உள்ளதோ, அதேபோன்று கணவனுக்கும் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் (உணவு, உடை, இருப்பிடம், பாசம், பாதுகாப்பு) உண்டு என்பதை "முறைப்படி" (بِالمَعْرُوفِ - சமூக மதிப்பிற்குரிய வகையில்) வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
உமர் பின் அல்-கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்கள்: "அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்கள் விஷயத்தில் எந்தவொரு மதிப்பையும் உரிமையையும் நாங்கள் கருதியதில்லை. அல்லாஹ் அவர்கள் குறித்து (குர்ஆனில்) வழிகாட்டுதலை இறக்கி, அவர்களுக்கென்று உரிமைகளை ஒதுக்கும் வரை இந்நிலையே நீடித்தது.
ஒருநாள் நான் ஒரு விஷயத்தை ஆலோசித்துக்கொண்டிருந்தபோது, என் மனைவி ஒரு ஆலோசனையைச் சொன்னார். உடனே நான், 'இதில் தலையிட உனக்கு என்ன வேலை?' என்று கடிந்து கொண்டேன். அதற்கு என் மனைவி, 'கத்தாபின் மகனே! உங்களை வியக்கிறேன்; உங்களிடம் யாரும் மறுத்துப் பேசக் கூடாதா? இறைத்தூதர் ﷺ அவர்களிடம் அவர்களுடைய மனைவியர் கருத்து வேறுபட்டு விவாதிக்கிறார்கள்; அவர்களில் ஒருவர் நபியவர்களிடம் ஒரு நாள் முழுக்கப் பேசாமல் கோபித்துக் கொள்ளவும் செய்கிறார்' என்றார்." நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 4913)
பெண்களுக்குத் தன் கருத்தைக் கூறும் உரிமையையும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் தார்மீக சுதந்திரத்தையும் நபியவர்கள் வழங்கியிருந்ததை இந்த நிகழ்வு காட்டுகிறது.
கன்ஸா பின்த் கிதாம் (ரலி) வழக்கு
பெண்களின் விருப்பத்திற்கு மாறாகத் தந்தையோ பொறுப்பாளரோ திருமணம் செய்து வைக்க முடியாது என்பதை நபியவர்கள் சட்டமாக்கினார்கள்.
கன்ஸா பின்த் கிதாம் ரலியல்லாஹு அன்ஹா என்ற பெண் விவாகரத்து பெற்றவராக இருந்தார். அவரது தந்தை, அவரது விருப்பத்திற்கு மாறாக ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அப்பெண்மணி நேராக நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் வந்து முறையிட்டார்.
நபியவர்கள் அந்த வழக்கைத் தீர விசாரித்துவிட்டு: அந்தத் திருமணத்தை ரத்து செய்து (செல்லாது என) அறிவித்தார்கள். அப்பெண்மணி தான் விரும்பிய நபரைத் திருமணம் செய்துகொள்ள முழு சுதந்திரம் அளித்தார்கள். நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 5138)
ஒரு பெண் தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படைத் தன்னுரிமையை நபியவர்கள் நிலைநாட்டிய விதம் இதுவாகும்.
பெண்கள் பளிங்குப் பாத்திரங்கள் போன்றவர்கள்:
நபியவர்கள் பெண்கள் மீது எவ்விதக் கடுமையான வார்த்தைகளோ அல்லது உடல்ரீதியான வன்முறையோ பிரயோகிக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்தார்கள்.
ஒரு பயணத்தின் போது, 'அன்ஜஷா' என்ற தோழர் ஒட்டகங்களை வேகமாக ஓட்டுவதற்காகப் பாடல்களைப் பாடினார். ஒட்டகங்கள் வேகமாக ஓடத் தொடங்கியதும், அவற்றின் மீதிருந்த கூடாரங்களில் அமர்ந்திருந்த பெண்கள் குலுங்கி அச்சமடைந்தனர். உடனே நபியவர்கள் அவரைப் பார்த்து:
رُوَيْدَكَ يَا أَنْجَشَةُ، رِفْقًا بِالقَوَارِيرِ
"அன்ஜஷாவே! நிதானமாக ஓட்டு; பளிங்குப் பாத்திரங்களைக் கையாள்கிறாய், மென்மையாக நடத்து!" என்று உத்தரவிட்டார்கள். பெண்களின் மென்மையான மனதையும் உடலமைப்பையும் கண்ணாடியைப் போன்று உடையக்கூடிய 'பளிங்கு' என உவமித்துக் காத்தார்கள்.நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 6149)
நபியவர்களின் சொந்த நடைமுறை:
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சாட்சியமளிக்கிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தம் வாழ்நாளில் தம் கரங்களால் எந்தவொரு பெண்ணையோ, எந்தவொரு பணியாளரையோ அல்லது எவரையுமே அடித்ததில்லை (போர்க்களத்தில் அநீதிக்கு எதிராகப் போரிட்டதைத் தவிர)."
— நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 2328)
நன்மக்களின் அடையாளம்
நபியவர்கள் தம் வாழ்வின் பல்வேறு தருணங்களிலும், குறிப்பாக இந்த இறுதிப் பேருரையிலும் ஆண்களின் தார்மீகத் தரத்தை அளக்கும் அளவுகோலாகப் பெண்களை நடத்தும் முறையையே வைத்தார்கள்:
خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي
"உங்களில் சிறந்தவர் யாரெனில், தன் மனைவியிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே ஆவார். உங்களை விட என் மனைவியரிடம் நான் சிறந்தவனாக நடந்து கொள்கிறேன். நூல்: ஜாமிஉத் திர்மிதி (ஹதீஸ் எண்: 3895)
பெண்களைச் சுமையாகவும் போகப் பொருளாகவும் மட்டுமே பார்த்த ஒரு காட்டுமிராண்டி யுகத்தில், அவர்களை அல்லாஹ்வின் அமானிதம் என்றும், சொர்க்கத்தின் வாயில்கள் (தாய், மகள், மனைவி வடிவில்) என்றும் அறிவித்து, அவர்களின் பாதுகாப்பை இறுதி மூச்சு வரை போதித்தார்கள்.
இனவாத எதிர்ப்பு மற்றும் மனித சமத்துவம்
மனிதர்கள் அனைவரும் சமம், இறையச்சமே சிறப்பிற்கான ஒரே அளவுகோல் என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்:
يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى
"மக்களே! அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவனே; உங்கள் தந்தையும் ஒருவரே (ஆதம்). ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விடவோ, அரபி அல்லாதவருக்கு அரபியரை விடவோ எந்த உயர்வும் இல்லை. ஒரு வெள்ளையருக்கு கறுப்பரை விடவோ, ஒரு கறுப்பருக்கு வெள்ளையரை விடவோ எவ்வித மேன்மையும் இல்லை; இறையச்சத்தைத் (தக்வா) தவிர!" நூல்: முஸ்னத் அஹ்மத்
நபியவர்கள் மனித சமத்துவத்தை நிலைநிறுத்த இரண்டு
அசைக்க முடியாத அடிப்படைகளை முன்வைத்தார்கள்:
இறைவன் ஒருவனே: படைத்தவன் ஒருவனே என்பதால், எந்தவொரு குறிப்பிட்ட இனத்திற்கும் இறைவனிடம் தனிச் சலுகை கிடையாது.
தந்தை ஒருவரே: மனிதர்கள் அனைவரும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் என்ற ஒரே மனிதரின் வழித்தோன்றல்களே; ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர். எனவே, பிறப்பால் ஒருவருக்கு உயர்ந்த அந்தஸ்தோ தாழ்ந்த அந்தஸ்தோ இருக்க முடியாது.
அன்றைய அரபுகள் தங்களை மட்டுமே நாகரிகமானவர்களாகக் கருதி, அரபி அல்லாத பிற நாட்டினரை 'அஜமீ' (பேசத் தெரியாத ஊமைகள்/காட்டுமிராண்டிகள்) என்று இழிவாக அழைத்தனர். அதேபோல், குறைஷி வம்சத்தினர் மற்ற கோத்திரங்களை விட தங்களை உயர் குலத்தவர்களாகப் பாவித்தனர். நபியவர்கள் அந்த அரபு மேலாதிக்கத்தையும், நிற மேட்டிமையையும் ஒரே பிரகடனத்தில் அடியோடு காலடியில் போட்டு மிதித்தார்கள்.
மேன்மையின் ஒரே அளவுகோல் 'இறையச்சம்' (தக்வா)
மனிதனை உயர்த்தும் ஒரே காரணி அவனது நற்செயல்களும், உள்ளத்தில் இருக்கும் இறைபயமும் மட்டுமே. இது திருக்குர்ஆனின் இந்த வசனத்தை மெய்ப்பிக்கிறது:
إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ
"நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிக இறையச்சம் உடையவர்தான்."திருக்குர்ஆன் 49:13
ஒருமுறை குறைஷி அல்லாத கிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்த மூத்த நபித்தோழர் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், கருப்பின அபிசீனியரான பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. கோபத்தின் உச்சியில் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி:
يَا ابْنَ السَّوْدَاءِ
"கருப்புப் பெண்ணின் மகனே!" என்று அவரது தாயின் நிறத்தைக் குறிப்பிட்டு ஏசிவிட்டார்.
பிலால் ரலியல்லாஹு அன்ஹு மிகுந்த மனவேதனையுடன் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் வந்து முறையிட்டார். இதைக் கேட்ட நபியவர்களின் முகம் கோபத்தால் சிவந்தது. அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து:
أَعَيَّرْتَهُ بِأُمِّهِ؟! إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ
"அவரது தாயை இழிவாகக் கூறி அவரைக் கேவலப்படுத்தினாயா? நிச்சயமாக நீ அறியாமைக் காலத்துப் பண்பு இன்னும் மிச்சமிருக்கும் மனிதராகவே இருக்கிறாய்!" என்று மிகக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
நபியவர்களின் இந்த வார்த்தையைக் கேட்டதும் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு கதறி அழுது, தனது கன்னத்தை நிலத்தில் வைத்து, "பிலாலின் பாதம் என் முகத்தை மிதிக்கும் வரை என் முகத்தை இந்த மண்ணிலிருந்து எடுக்க மாட்டேன்" என்று பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மன்னிப்புக் கோரினார். நிறவெறிக்கு நபியவர்களின் அவையில் எள்முனையளவும் இடமில்லை என்பதற்கு இது பெரும் சான்று.நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ் எண்: 30)
மக்கா வெற்றியின் போது பிலால் (ரலி) கஃபாவின் மீது அதான் கூறியது
மக்கா வெற்றியடைந்த தருணம், அரபு வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாகும். மக்கத்து குறைஷித் தலைவர்கள் அனைவரும் தலைகுனிந்து நின்ற வேளையில், கஃபாவின் உச்சிக்கு ஏறித் தொழுகைக்கான அழைப்பை (அதான்) விடுக்க நபியவர்கள் யாரைத் தேர்ந்தெடுத்தார்கள்
முன்னாள் அடிமையாகவும், கருப்பினத்தவராகவும் இருந்து மக்கத்துத் தெருக்களில் சித்திரவதை செய்யப்பட்ட பிலால் இப்னு ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையே தேர்ந்தெடுத்தார்கள்.
கஃபாவின் மீது ஏறி பிலால் ரலியல்லாஹு அன்ஹு கம்பீரமாக அதான் கூறியதைக் கண்ட குறைஷித் தலைவர்கள் சிலர்: "இந்தக் கறுப்புக் காகத்திற்குத்தான் கஃபாவின் மீது ஏற இடம் கிடைத்ததா? என் தந்தை இறந்துபோய் இந்த நாளைப் பார்க்காமல் தப்பியது எவ்வளவோ நல்லது" என்று தங்களின் குலப்பெருமையைப் புலம்பினர். அப்போதுதான் அல்லாஹ்,
يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் : 49:13)
என்ற வசனத்தை இறக்கி அவர்களின் போலிப் பெருமையை உடைத்தான். நூல்: தஃப்சீர் இப்னு கஸீர்
பாரசீக சல்மான் மற்றும் ரோம் சுஹைப் ஆகியோரின் கண்ணியம்
இஸ்லாமியச் சமூகத்தில் வெளிநாட்டினர் எவ்வாறு மதிக்கப்பட்டனர் என்பதற்கு இவர்களின் வரலாறு சிறந்த சான்றாகும்:
பாரசீக நாட்டைச் சேர்ந்த சல்மான் ரலியல்லாஹு அன்ஹு அகழ் போரின் போது அகழி வெட்டும் யோசனையை முன்வைத்தார். அப்போது அன்ஸாரிகள், "சல்மான் எங்களைச் சேர்ந்தவர்" என்றும், முஹாஜிர்கள், "இல்லை, சல்மான் எங்களைச் சேர்ந்தவர்" என்றும் உரிமை கொண்டாடினர். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள்:
سَلْمَانُ مِنَّا أَهْلَ البَيْتِ
"சல்மான் எங்களைச் சேர்ந்தவர்; எனது குடும்பத்தைச் (அஹ்லுல் பைத்) சேர்ந்தவர்!" என்று அறிவித்து, அரபி அல்லாத ஒருவருக்குத் தங்கள் சொந்தக் குடும்பத்தின் அந்தஸ்தை வழங்கி கௌரவித்தார்கள்.நூல்: அல்-முஸ்தத்ரக் (ஹதீஸ் எண்: 6539)
பிறப்பு, நிறம், குலம், நாடு ஆகிய புறக் காரணிகளை வைத்து மனிதர்களைப் பிரித்தாளும் அனைத்துக் கொடுங்கோன்மைகளையும் உடைத்தெறிந்து, "மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போல சமமானவர்கள்" என்ற உலகளாவிய சமத்துவக் கோட்பாட்டை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நடைமுறையில் சாத்தியப்படுத்திக் காட்டினார்கள்.
வழிகேட்டிலிருந்து காக்கும் இரு வழிகாட்டிகள்
நபியவர்கள் கூடியிருந்த லட்சக்கணக்கான தோழர்களை நோக்கிக் கூறினார்கள்:
تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ
"உங்களிடையே இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன்; அவ்விரண்டையும் நீங்கள் உறுதியாகப் பற்றிப் பிடித்திருக்கும் வரை ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள்: ஒன்று அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்), மற்றொன்று அவனுடைய தூதரின் சுன்னத் (நபிவழி)."நூல்: முஅத்தா இமாம் மாலிக்
திருக்குர்ஆன் (كِتَابَ اللَّهِ) — நிலையான அரசியல் மற்றும் வாழ்வியல் சாசனம்
திருக்குர்ஆன் என்பது மனிதகுலத்திற்கான இறுதி இறைவேதம். முந்தைய இறைவேதங்கள் காலப்போக்கில் மனிதக் கரங்களால் மாற்றங்களுக்கு உள்ளாயின. ஆனால் குர்ஆனைப் பற்றி அல்லாஹ்வே கூறுகிறான்:
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
"நிச்சயமாக நாமே இந்த அறிவுரையை (குர்ஆனை) இறக்கி வைத்தோம்; மேலும் நிச்சயமாக நாமே அதைப் பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்."திருக்குர்ஆன் 15:9
குர்ஆன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ மக்களுக்கோ உரியதல்ல; அது மறுமை நாள் வரை வாழும் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் தேவையான அடிப்படைக் கொள்கைகள், சட்டங்கள், ஒழுக்க விழுமியங்களை உள்ளடக்கிய முழுமையான வழிகாட்டியாகும்.
சுன்னத் (سُنَّةَ نَبِيِّهِ) — குர்ஆனின் நடைமுறை விளக்கம்
சுன்னத் (நபிவழி) என்பது திருக்குர்ஆனை நடைமுறையில் வாழ்ந்து காட்டிய வடிவமாகும். குர்ஆனின் சட்டதிட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான நேரடி வழிகாட்டலே சுன்னத் ஆகும்.
சுன்னத் இன்றி குர்ஆனை முழுமையாகப் பின்பற்ற முடியாது:
குர்ஆன் தொழுகையை நிலைநிறுத்தக் கூறுகிறது; ஆனால் ஃபஜ்ருக்கு 2 ரக்அத்கள், லுஹ்ருக்கு 4 ரக்அத்கள் தொழ வேண்டும் என்பதையும், ருகூஃ, சுஜூது செய்யும் முறையையும் சுன்னத்தே கற்றுத்தருகிறது ("என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்" — புகாரி: 631).
குர்ஆன் ஸகாத் கொடுக்கப் பணிக்கிறது; ஆனால் எந்த அளவிற்கு எவ்வளவு சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்பதை நபியவர்களின் சுன்னத்தே நிர்ணயிக்கிறது.
குர்ஆன் ஹஜ்ஜை விதியாக்குகிறது; ஆனால் அதன் கிரியைகளைச் செய்யும் முறையை நபியவர்கள் இறுதி ஹஜ்ஜில், "உங்களின் ஹஜ்ஜுடைய வழிமுறைகளை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்" (முஸ்லிம்: 1297) என்று செயல்வடிவமாகக் காட்டினார்கள்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபியவர்களின் குணநலன் பற்றிக் கேட்கப்பட்டபோது:
كَانَ خُلُقُهُ الْقُرْآنَ
"அவர்களின் நற்குணம் திருக்குர்ஆனாகவே இருந்தது (அதாவது குர்ஆனின் நடமாடும் வடிவமாகவே திகழ்ந்தார்கள்)." நூல்: ஸஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 746)
"உறுதியாகப் பற்றிப் பிடித்தல்" (تَمَسَّكْتُمْ بِهِمَا) என்பதன் பொருள்
நபியவர்கள் "படியுங்கள்" அல்லது "மனனம் செய்யுங்கள்" என்று மட்டும் கூறாமல், "பற்றிப் பிடியுங்கள்" என்று கூறினார்கள். இதன் பொருள்:
தனிநபர் வாழ்க்கையில் குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டலின்படி நடப்பது.
குடும்பம், சமூகம், பொருளாதாரம் மற்றும் நீதி நிர்வாகத்தில் இவ்விரண்டையுமே இறுதியான நடுவராக ஏற்றுக்கொள்வது.
கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது சுயவிருப்பத்திற்கோ பழக்கவழக்கங்களுக்கோ முன்னுரிமை தராமல் இவ்விரண்டின் பக்கமே மீள்வது.
இர்பாழ் பின் ஸாரியா ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்:
وَعَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
«وَعَظَنَا رَسُولُ اللَّهِ ﷺ مَوْعِظَةً وَجِلَتْ مِنْهَا القُلُوبُ، وَذَرَفَتْ مِنْهَا العُيُونُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ فَأَوْصِنَا، قَالَ:
أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ تَأَمَّرَ عَلَيْكُمْ عَبْدٌ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الخُلَفَاءِ الرَّاشِدِينَ المَهْدِيِّينَ، تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ، فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»
"அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் ஒருமுறை எங்களுக்குக் கண்களில் கண்ணீர் வழியும்படியும், இதயங்கள் நடுங்கும்படியும் ஓர் உருக்கமான உபதேசம் செய்தார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதரே! இது விடைபெறுபவரின் உபதேசம் போலிருக்கிறதே! எங்களுக்கு எதை உபதேசிக்கிறீர்கள்?' என்றார்.
அதற்கு நபியவர்கள்:
'அல்லாஹ்வை அஞ்சி நடக்குமாறும், ஓர் அபிசீனிய அடிமை உங்கள் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் பணிக்கிறேன். எனக்குப் பின்னால் உங்களில் யார் வாழ்கிறாரோ, அவர் பல கருத்து வேறுபாடுகளைக் காண்பார். அப்போது எனது சுன்னாவையும், நேர்வழி நின்ற நல்லாட்சி புரிந்த கலீஃபாக்களின் (குலஃபாவுர் ராஷிதீன்) சுன்னாவையும் நீங்கள் பற்றிப் பிடியுங்கள்; அதைக் கடைவாய்ப் பற்களால் கவ்விப் பிடித்துக் கொள்ளுங்கள்! மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் பித்அத்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்; ஏனெனில் ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும்!' என்றார்கள்." நூல்: சுனன் அபீ தாவூத்
கலீஃபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் ஆட்சிப் பிரகடனம்
நபியவர்களின் மறைவுக்குப் பின் முதல் கலீஃபாவாகப் பொறுப்பேற்ற அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஆட்சியின் முதல் உரையே குர்ஆன் மற்றும் சுன்னாவை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது:
"மக்களே! நான் உங்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்; ஆனால் உங்களை விட நான் சிறந்தவன் அல்லன். நான் நன்மையைச் செய்தால் எனக்கு உதவுங்கள்; நான் தவறிழைத்தால் என்னை நேர்வழிப்படுத்துங்கள்... அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் நான் கட்டுப்பட்டு நடக்கும் வரை நீங்கள் எனக்குக் கட்டுப்படுங்கள். நான் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்தால், எனக்குக் கட்டுப்படும் கடமை உங்களுக்கு இல்லை!" நூல்: அல்-பிதாயா வந்-நிஹாயா (இப்னு கஸீர்)
ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கு எல்லை வகுப்பதும், நீதியை நிலைநாட்டுவதும் குர்ஆனும் சுன்னாவும் மட்டுமே என்பதை இந்த நிகழ்வு தெளிவுபடுத்துகிறது.
உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் சீர்திருத்தம்
உமைய்யா ஆட்சிக்காலத்தில் பழங்குடிப் பெருமைகளும் குடும்ப ஆதிக்கமும் மீண்டும் தலைதூக்கிய போது, 'ஐந்தாவது நேர்வழி நின்ற கலீஃபா' என்று போற்றப்படும் உமர் பின் அப்துல் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் முழங்கிய வாசகம்:
أَلَا لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ، أَلَا إِنَّهُ لَيْسَ بَعْدَ نَبِيِّكُمْ نَبِيٌّ، وَلَا بَعْدَ الْكِتَابِ الَّذِي أُنْزِلَ عَلَيْهِ كِتَابٌ
"படைத்தவனுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் எந்தப் படைப்பினத்திற்கும் கட்டுப்படக் கூடாது. அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் நபிக்குப் பிறகு எந்த நபியும் இல்லை; அவருக்கு அருளப்பட்ட வேதத்திற்குப் பிறகு எந்த வேதமும் இல்லை. அல்லாஹ் எதை ஆகுமாக்கினானோ அது மறுமை நாள் வரை ஆகுமானது; அவன் எதைத் தடுத்தானோ அது மறுமை நாள் வரை தடுக்கப்பட்டதே ஆகும்!"
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் விட்டுச் சென்ற இந்த வழிகாட்டுதல் வெறும் தத்துவக் கோட்பாடு அல்ல; காலங்கள் மாறினாலும், சவால்கள் உருவெடுத்தாலும் முஸ்லிம் சமூகம் தன் சுயத்தை இழக்காமல், திசைமாறாமல் நேர்வழியில் பயணிப்பதற்கான நிரந்தரத் திசைகாட்டியாகும்.
உரையின் முடிவில் நபியவர்கள் திரண்டிருந்த லட்சக்கணக்கான தோழர்களை நோக்கி:
وَأَنْتُمْ تُسْأَلُونَ عَنِّي، فَمَا أَنْتُمْ قَائِلُونَ؟
"என்னைப்பற்றி (மறுமையில்) உங்களிடம் விசாரிக்கப்படும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று வினவினார்கள்.
அதற்கு மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில்:
نَشْهَدُ أَنَّكَ قَدْ بَلَّغْتَ وَأَدَّيْتَ وَنَصَحْتَ
"நிச்சயமாக நீங்கள் (இறைச் செய்தியை) முழுமையாகச் சேர்த்துவிட்டீர்கள், உங்கள் தூதுத்துவப் பொறுப்பை நிறைவேற்றிவிட்டீர்கள், நன்மையையே நாடினீர்கள் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்றனர்.
அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்னர் மக்களை நோக்கிச் சுட்டிக்காட்டி மூன்று முறை இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:
اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ
"இறைவா! நீயே சாட்சி! இறைவா! நீயே சாட்சி! இறைவா! நீயே சாட்சி!" நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.
மேலும் இறுதியாக:
فَلْيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ
"இங்கு வந்திருப்பவர், வராதவருக்கு இந்தச் செய்திகளை எத்திவைக்கட்டும்" என்று கட்டளையிட்டார்கள். நூல்: ஸஹீஹ் அல்-புகாரி
மார்க்கம் முழுமை பெற்றதை அறிவிக்கும் திருக்குர்ஆன் ஆயத்
அரஃபா மைதானத்தில் நபியவர்களின் இந்த பேருரை நிறைவடைந்த தருணத்தில், ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக அல்லாஹ் வசனத்தை இறக்கி வைத்தான்:
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; எனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைப்படுத்தி விட்டேன்; இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்."திருக்குர்ஆன் 5:3
இந்த வசனம் இறங்கியதும் மார்க்கப் பணி நிறைவடைந்துவிட்டது, நபியவர்கள் நம்மைப் பிரியும் காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்ணீர் சிந்தினார்கள். இந்நிகழ்வு நடந்து சுமார் 81 நாட்களுக்குப் பிறகு பெருமானார் ﷺ அவர்கள் வஃபாத்தானார்கள்.
அரஃபா பெருவெளியில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை என்பது ஒரு சகாப்தத்தின் நிறைவாக மட்டுமின்றி, எக்காலத்திற்குமான மனிதகுலத்தின் வாழ்வியல் சாசனமாகவும் திகழ்கிறது.
மனித உயிர்கள், உடைமைகள் மற்றும் மானத்தின் புனிதத்தை நிலைநிறுத்தியது; உழைப்பைச் சுரண்டும் வட்டி முறையை அடியோடு ஒழித்தது; பழிவாங்கும் வன்முறைக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது; பெண்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாத்தது; நிறம், இனம், மொழி கடந்த உலகளாவிய மனித சமத்துவத்தை நிலைநாட்டியது என இந்த உபதேசத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒட்டுமொத்த சமுதாய நீதிக்கான அடித்தளங்களாகும்.
தான் கொண்டுவந்த இறைச்செய்தியை முழுமையாக மக்களிடம் எத்திவைத்துவிட்டதற்கு வானையும் பூமியையும் சாட்சியாக்கிய நபியவர்கள், உலக முடிவுக்குள் எந்தக் குழப்பமும் வழிகேடும் தங்களை அண்டாமல் இருக்க அல்லாஹ்வின் வேதத்தையும் (திருக்குர்ஆன்), தன் வழிகாட்டலையும் (சுன்னத்) மட்டுமே பற்றிக்கொள்ளுமாறு இறுதிப் புகலிடத்தை வழங்கிச் சென்றார்கள்.
அந்தப் பேருரையின் நிறைவில் நபியவர்கள் இட்ட கட்டளையான, "இங்கு வந்திருப்பவர், வராதவருக்கு இந்தச் செய்திகளை எத்திவைக்கட்டும்!" என்பது வெறும் வார்த்தையல்ல; ஒவ்வொரு காலத்திலும் வாழும் மனிதர்களின் பொறுப்புணர்வை உலுக்கும் வரலாற்று அழைப்பாகும். அவ்வழிகாட்டல்களை தனிநபர் மற்றும் சமூக வாழ்வில் பிரதிபலிப்பதே அந்த இறுதித் தூதருக்கு நாம் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும்.
யா அல்லாஹ்! அகிலங்களின் அருட்கொடையாக வந்த எங்கள் உயிரினும் மேலான இறுதித் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் எமக்குக் கற்றுத்தந்த இந்த உயரிய உபதேசங்களை எங்கள் வாழ்க்கையில் முழுமையாகப் பின்பற்றி வாழும் பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக!
யா ரஹ்மான்! பிற மனிதர்களின் உயிர், உடைமை, மானத்திற்கு மதிப்பளித்து, எந்தவொரு அநீதியும் செய்யாமல் வாழுமளவிற்கு எங்கள் உள்ளங்களில் தூய இறையச்சத்தையும் நீதியையும் நிலைநிறுத்துவாயாக!
யா கரீம்! அனைத்து விதமான வட்டி, அநியாயச் சுரண்டல்கள், ஏமாற்று வழிகளிலிருந்து எங்களையும் எங்கள் குடும்பங்களையும் எங்களின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பாயாக! ஹலாலான பரக்கத்தான வாழ்வாதாரத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.






