“பேச்சில் வேண்டும் கவனம்”
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَبِهِ نَسْتَعِينُ عَلَى أُمُورِ الدُّنْيَا وَالدِّينِ، وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى أَشْرَفِ الأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، سَيِّدِنَا وَنَبِيِّنَا مُحَمَّدٍ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ، وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ.
أَمَّا بَعْدُ:
مَا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ:
وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது
நாவு அளவால் சிறியது; ஆனால் அதன் செயல்பாடும் விளைவும் மிகப்பெரியது.
ஒரே ஒரு வார்த்தை ('லா இலாஹ இல்லல்லாஹ்') மனிதனை முஸ்லிமாக மாற்றுகிறது.
ஒரே ஒரு வார்த்தை ('கபில்து') அந்நியப் பெண்ணை வாழ்நாள் மனைவியாக்குகிறது.
ஒரே ஒரு வார்த்தை ('அஸ்தஃபிருல்லாஹ்') வாழ்நாள் முழுதும் செய்த பாவங்களை அழித்து மன்னிப்பைப் பெற்றுத் தருகிறது.
ஒரே ஒரு வார்த்தை ('சுப்ஹானல்லாஹ்') மீசானுடைய தராசில் நன்மையின் எடையை மலையளவு உயர்த்துகிறது.
அதே நாவு சொல்லும் தவறான ஒரு வார்த்தை மனிதனை நரகத்தில் கொண்டு சேர்க்கிறது.
நாம் நினைக்கிற கருத்தைப் பிறருக்கு உணர்த்த அல்லாஹ் தந்த மாபெரும் பாக்கியம் நாவு.
பேச முடியாதவர்களைப் பார்க்கும்போதுதான் நாவின் அருமை நமக்குத் புரிகிறது.
அதே நாவு சொல்லும் ஒரே ஒரு பொய்யான வார்த்தை, செய்த நன்மைகள் அனைத்தையும் சாம்பலாக மாற்றிவிடுகிறது.
கத்தியால் ஏற்பட்ட காயம் காலப்போக்கில் ஆறிவிடும்; ஆனால், நாவினால் ஏற்பட்ட காயம் ஆயுள் முழுதும் ஆறவே ஆறாது.
இறைவனின் படைப்பில் நாவிற்கு எலும்புகள் கிடையாது; ஆனால், இதயங்களை உடைக்கும் சக்தி அதற்கு உண்டு.
பற்கள் கடினமானவை — அதனால் அவை வயது முதிரும்போது உதிர்ந்து விடுகின்றன; நாவு மிருதுவானது — அதனால் அது மரணம் வரை நிலைத்து நிற்கிறது.
மென்மையும் மிருதுவுமே மனிதனை நெடுங்காலம் வாழவைக்கும் என்பதை இறைவன் நாவின் மூலமாக உணர்த்துகிறான்.
கூர்மையான வாளை விடக் கூர்மையானது மனிதனின் நாவு; வாள் உடலைக் காயப்படுத்தும், நாவு உள்ளத்தைக் காயப்படுத்தும்.
யோசிக்காமல் பேசும் வார்த்தை, அம்பறாத்தூணியிலிருந்து புறப்பட்ட அம்பைப் போன்றது; அதை மீண்டும் பெறவே முடியாது.
பேசுவதற்கு முன் வார்த்தைகள் உனக்கு அடிமை; பேசிய பிறகு நீ அந்த வார்த்தைகளுக்கு அடிமை.
சிந்திக்காமல் பேசப்படும் ஒரு கெட்ட வார்த்தை, அல்லாஹ்வின் பெருங்கோபத்தை சம்பாதித்து நரகத்தின் ஆழத்தில் தள்ளிவிடும்.
சிந்தனையோடு பேசப்படும் ஒரு நல்ல வார்த்தை, இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தந்து சொர்க்கத்தின் கதவுகளைத் திறக்கும்.
இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்:-
"உன் எண்ணங்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அவை உனது சொற்களாகும்.
உன் சொற்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அவை உனது செயல்களாகும்.
உன் செயல்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அவை உனது பழக்க வழக்கங்களாகும்.
உன் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அவை உனது குணநலன்களாகும்.
உனது குணநலன்களில் கவனம் செலுத்து; ஏனெனில் அதுவே உனது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது!”
தன் வாயால் அழிந்த ஃபிர்அவ்ன்
நதியில் மிதந்து வந்த குழந்தை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எடுத்து வளர்க்க ஆசியா அம்மா ஆசைப்படுகிறார். அதை ஃபிர்அவ்ன் அந்த குழந்தையைக் கொல்ல ஓடிவந்தபோது, ஆசியா அம்மா அக்குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்து பாதுகாத்து, "இந்தக் குழந்தை எனக்கும் உனக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கக்கூடும்; இதைக் கொல்லாதீர்கள், இது நமக்கு பயனளிக்கலாம் அல்லது நம் குழந்தையாக வளர்க்கலாம்" என வேண்டுகிறார்கள்.
وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ لَا تَقْتُلُوْهُ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ
(குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.(அல்குர்ஆன் : 28:9)
இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிட்டுப் பேசுகையில், ஃபிர்அவ்ன் அப்போது, "இது உனக்குக் கண் குளிர்ச்சியாக இருக்கட்டும் (ஐனீ லக்), எனக்கு வேண்டாம் (ஃபலீ)" என்று அலட்சியமாக உரைத்தான்.
"வல் பலாஉ முஅக்கலும் பில் மந்திக்" — மனிதனுக்கு வரும் சோதனைகளும் விதிகளும் அவனது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளுடனே பிணைக்கப்பட்டுள்ளன.
ஃபிர்அவ்ன் அன்று அமைதியாக இருந்திருந்தால் அல்லது நல்ல வார்த்தை கூறியிருந்தால் அவனுக்கும் நேர்வழி (ஹிதாயத்) கிடைத்திருக்கக் கூடும். ஆனால் அவன் கூறிய எதிர்மறையான வார்த்தையே அவனது அழிவுக்குக் காரணமாக அமைந்தது.
அழிவைத் தீர்மானித்த வார்த்தைகள்
ஃபிர்அவ்னிடம் ஒருவர் ஒருமுறை விளையாட்டாக, "எகிப்து நாடு எனக்குச் சொந்தம் என்று யாராவது சொன்னால் என்ன செய்வது?" என்று கேட்டபோது, "அப்படிச் சொல்பவனைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்ல வேண்டும்" என்றான்.
பிற்காலத்தில் தானே இறைவன் ("அன ரப்புகுமுல் அஃலா") எனக் கூறியபோது, அவன் தன் நாவால் சொன்ன அதே தண்டனையான தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு அழிவதை அல்லாஹ் அவனுக்கு வழங்கினான்.
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் கோபம், அதிகாரம், செல்வம் அல்லது அறியாமையின் காரணத்தால் தவறான, ஆபத்தான வார்த்தைகளைப் பேசிவிடக் கூடாது.
நமது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே நமக்கான நன்மையையோ அல்லது சோதனையையோ தீர்மானிக்கின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கை
إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالاً، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالاً، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஒரு அடியான் இறைவனின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை, அதன் முக்கியத்துவத்தைச் பெரிதாக எண்ணாமல் பேசுகிறான்; அதன் காரணமாக அல்லாஹ் அவனது அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான்.
அவ்வாறே, ஒரு அடியான் இறைவனின் பெருங்கோபத்திற்குரிய ஒரு வார்த்தையை, அதன் விளைவைப் பற்றி யோசிக்காமல் பேசுகிறான்; அதன் காரணமாக அவன் நரகத்தில் வீழ்ந்து விடுகிறான்."நூல்: ஸஹீஹ் அல்-புகாரி
பற்களும் நாவும் – ஒரு தத்துவப் பாடம்
ஒரு பெரியவரிடம் உபதேசம் கேட்டபோது, அவர் வாயைத் திறந்து காட்டினார்.
மனித உடலில் கடினமான பற்கள் வயது முதிரும்போது உதிர்ந்து விடுகின்றன; ஆனால் மென்மையான நாவு வாழ்நாள் இறுதி வரை நிலைத்து நிற்கிறது மென்மை, நளினம் மற்றும் மிருதுவான தன்மையே காலத்தைக் கடந்து நிற்கும் என்பதை இது உணர்த்துகிறது.
ஹுதைபிய்யா உடன்படிக்கை
ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு, இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் முஸ்லிம்களும் உம்ரா செய்வதற்காக மக்கா நோக்கிச் சென்றபோது, குரைஷிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விடாமல் 'ஹுதைபிய்யா' என்னுமிடத்தில் தடுத்தனர். அங்கு இரு தரப்பிற்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
குரைஷிகளின் சார்பாக வந்த சுஹைல் இப்னு அம்ரு என்பவனின் வற்புறுத்தலால், ஒப்பந்தத்தின் ஷரத்துகள் (விதிகள்) மிகவும் கண்டிப்பானவையாக எழுதப்பட்டன. அதில் ஒரு முக்கியமான ஷரத்து
"மக்காவிலிருந்து யாராவது தப்பித்து மதீனாவிற்கு (முஸ்லிம்களிடம்) வந்தால், அவர் முஸ்லிமாக மாறியிருந்தாலும் சரி, அவரை குரைஷிகளிடமே திருப்பி அனுப்ப வேண்டும்."
இந்த ஒப்பந்தப் பத்திரம் எழுதப்படும்போது, சுஹைல் இப்னு அம்ரு அரபி மொழியில் "ரஜுல்" (رَجُلٌ - ஆண் / மனிதன்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தான்.
அரபியில் 'ரஜுல்' என்றால் குறிப்பான ஆண் மகனையே குறிக்கும். (பெண்ணைக் குறிக்க 'இம்ரஅதுன்' - اِمْرَأَةٌ என்ற சொல் பயன்படும்).
ஒப்பந்தத்தில் "மக்காவிலிருந்து ஒரு ஆண் (ரஜுல்) வந்தால் திருப்பி அனுப்ப வேண்டும்" என்றே பொறிக்கப்பட்டது.
ஒப்பந்தம் முடிந்த சில நாட்களில், அபூ ஜந்தல் ரலியல்லாஹு அன்ஹு அபூ கதாதா ரலியல்லாஹு அன்ஹு போன்ற ஆண்கள் மக்காவிலிருந்து தப்பி வந்தபோது, ஒப்பந்தத்தின்படி நபிகளார் அவர்களைக் கணத்த இதயத்தோடு குரைஷிகளிடம் திருப்பி அனுப்பினார்கள்.
ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது, மக்காவிலிருந்து உம்மு குல்தூம் பின்த் உக்பா ரலியல்லாஹு அன்ஹா என்ற மூமினான பெண்மணி, தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காகப் பெருத்த சிரமங்களுக்கு இடையே மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தார்.
அவரைத் தொடர்ந்து தேடிவந்த அவருடைய சகோதரர்கள் (அமாரா மற்றும் வலீத்), "ஒப்பந்தத்தின்படி எங்கள் சகோதரியை எங்களிடம் திருப்பித் தர வேண்டும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கோரினார்கள்.
அப்போது அல்லாஹ் குர்ஆனின் 60-வது சூராவான சூரா அல்-மும்தஹினாவின் 10-வது வசனத்தை இறக்கினான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ...
"நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்... அவர்கள் உண்மையான மூஃமின்கள் என நீங்கள் அறிந்தால், அவர்களை நிராகரிப்பாளர்களிடம் திருப்பி அனுப்பாதீர்கள்!"(சூரா அல்-மும்தஹினா 60:10)
இங்குதான் எழுதப்பட்ட சொற்களின் வலிமையும், மார்க்கத்தின் நுட்பமும் வெளிப்படுகிறது:
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எக்காலத்திலும் கொடுத்த வாக்கையோ, ஒப்பந்தத்தையோ மீறியதே இல்லை.
ஒப்பந்தத்தில் எழுதப்பட்டது "ரஜுல்" (ஆண்) என்ற சொல் மட்டுமே. அதில் "பெண்கள்" (நிஸாஅ) என்ற சொல் இடம்பெறவில்லை.
குரைஷிகள் தங்களின் அறியாமையினாலும், ஆண்களை மட்டுமே முதன்மையாகக் கருதும் மனப்பான்மையினாலும் 'ரஜுல்' என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ஆனால், இறைவன் அந்தச் சொல்லின் சட்ட ரீதியான எல்லையைப் பயன்படுத்தி, மூஃமினான பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்கினான்.
குரைஷிகளால் நபிகளார் மீது "நீங்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டீர்கள்" என்று குற்றம் சாட்ட முடியவில்லை. ஏனென்றால், அவர்களின் சொந்த ஆவணத்தில் 'ஆண்' என்ற வார்த்தை மட்டுமே இருந்தது.
ஒரு ஒப்பந்தத்திலோ அல்லது வழக்கிலோ நாம் பயன்படுத்தும் ஒரு சிறிய வார்த்தை கூட ஒருவரின் வாழ்வையோ அல்லது உரிமையையோ தீர்மானிக்கும்.
உபாதா இப்னு அஸ்-ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:-
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ يَوْمًا، وَاتَّبَعَهُ أَصْحَابُهُ، فَجَعَلَ لا يَمُرُّ بِشَيْءٍ إِلا صَدَقَهُ، وَلا يَسْبِقُهُ أَحَدٌ، فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ لِي أَنْ لا أَرَاكَ بَعْدَ يَوْمِي هَذَا، وَأَنْ يَجْعَلَ يَوْمِي قَبْلَ يَوْمِكَ، وَاللَّهِ لَئِنْ مِتَّ قَبْلَنَا لَنَرَيَنَّ بَعْدَكَ مَا لا نُحِبُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَفْضَلَ الأَعْمَالِ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، وَلَكِنَّ لِلنَّاسِ سَاعَاتٍ وَأَحْوَالاً، وَلَكِنْ شَيْءٌ يُكْفَى بِهِ الْعَبْدُ، الشَّدِيدُ عَلَى النَّفْسِ»، فَقَالَ مُعَاذٌ: يَا رَسُولَ اللَّهِ، الصِّيَامُ وَالصَّدَقَةُ؟ قَالَ: «إِنَّ الصِّيَامَ وَالصَّدَقَةَ لَحَسَنٌ، وَلَكِنَّ لِلنَّاسِ فِيهِ سَاعَاتٍ، وَشَيْءٌ يُكْفَى بِهِ الْعَبْدُ، وَهُوَ شَدِيدٌ عَلَى النَّفْسِ»، فَمَا تَرَكَ مُعَاذٌ شَيْئًا مِنْ أَعْمَالِ الْبِرِّ إِلا ذَكَرَهُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «حَسَنٌ، وَلَكِنَّ لِلنَّاسِ فِيهِ سَاعَاتٍ، وَشَيْءٌ يُكْفَى بِهِ الْعَبْدُ، وَهُوَ شَدِيدٌ عَلَى النَّفْسِ»، ثُمَّ أَشَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى لِسَانِهِ، فَقَالَ: «الصَّمْتُ إِلا مِنْ خَيْرٍ»، فَقَالَ مُعَاذٌ: وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخِذَ مُعَاذٍ، ثُمَّ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ! وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ - أَوْ عَلَى مَنَاخِرِهِمْ - إِلا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟ فَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْكُتْ عَنْ شَرٍّ، قُولُوا خَيْرًا تَغْنَمُوا، وَاكْفُفُوا عَنْ شَرٍّ تَسْلَمُوا».
உபாதா இப்னு அஸ்-ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் வாகனத்தில்) ஏறிச் சென்றார்கள். அவர்களுடன் சஹாபாக்களும் பின் தொடர்ந்து சென்றார்கள். (வழியில்) நபியவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பொருளும் அவர்களை உண்மையாளராக ஏற்றுக்கொண்டன (சாட்சி கூறின). மேலும், யாரும் நபியவர்களை முந்திச் செல்லவில்லை.
அப்போது முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளுக்குப் பிறகு தங்களை (இழந்து) நான் பார்க்காமல் இருக்கவும், எனது மரணத்தை தங்களது மரணத்திற்கு முன் ஆக்கவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்குப் பிறகு நாங்கள் வாழ நேரிட்டால், நாங்கள் விரும்பாத பலவற்றை பார்க்க நேரிடும்" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:
"நிச்சயமாக அமல்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதாகும். ஆனால், மக்களுக்கு அதற்கென குறிப்பிட்ட நேரங்களும் சூழ்நிலைகளும் இருக்கின்றன. ஆனால், அடியானுக்குப் போதுமான, நஃப்ஸுக்கு (மனதிற்கு) மிகவும் பாரமான ஒரு விஷயம் உள்ளது" என்றார்கள்.
உடனே முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்: "அல்லாஹ்வின் தூதரே! நோன்பும் தர்மமுமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபியவர்கள்: "நிச்சயமாக நோன்பும் தர்மமும் நல்லவைதான். ஆனால், மக்களுக்கு அதிலும் சில குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே உள்ளன. அடியானுக்குப் போதுமான, மனதிற்கு மிகவும் பாரமான ஒரு விஷயம் இருக்கிறது" என்றார்கள்.
முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நன்மைகளில் எதையும் விடாமல் ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "நல்லதுதான், ஆனால் மக்களுக்கு அதிலும் குறிப்பிட்ட நேரங்களே உள்ளன. அடியானுக்குப் போதுமான, மனதிற்கு மிகவும் பாரமான ஒரு விஷயம் இருக்கிறது" என்றே கூறிவந்தார்கள்.
பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய நாவை சுட்டிக்காட்டி: "நன்மையான விஷயங்களைத் தவிர மற்றவற்றில் மௌனமாக இருப்பதுதான் அது!" என்று கூறினார்கள்.
உடனே முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்: "(அல்லாஹ்வின் தூதரே!) நாங்கள் பேசுவதற்காகவுமா விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவோம்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தொடையில் தட்டி:
"முஆதே! உன்னைப் பெற்றவள் இழக்கட்டும்! மனிதர்களை நரகத்தில் முகங்குப்புற (அல்லது மூக்கின் மீது) விழ வைப்பது அவர்களின் நாவுகள் அறுவடை செய்த (தீய) பேச்சுகளைத் தவிர வேறு என்ன? எனவே, அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் நன்மையானதையே பேசட்டும் அல்லது தீமையானதை விட்டு மௌனமாக இருக்கட்டும்! நீங்கள் நல்லவற்றைப் பேசுங்கள்; லாபமடைவீர்கள்.
தீயவற்றைப் பேசாமல் தவிர்ந்து கொள்ளுங்கள்; ஈருலக ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பு பெறுவீர்கள்" என்று கூறினார்கள். நூல்: அல்-முஃஜமுல் கபீர் - இமாம் அத்-தப்ரானீ)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: تُوُفِّيَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ يَوْمَ أُحُدٍ، فَوُجِدَ عَلَى بَطْنِهِ حَجَرٌ مَرْبُوطٌ مِنَ الْجُوعِ، فَمَسَحَتْ أُمُّهُ الترَابَ عَنْ وَجْهِهِ، وَقَالَتْ: أَبْشِرْ يَا بُنَيَّ بِالْجَنَّةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ؟ لَعَلَّهُ كَانَ يَتَكَلَّمُ بِمَا لا يَعْنِيهِ، أَوْ يَمْنَعُ مَا لا يُنْقِصُهُ».
(مسند أبي يعلى الموصلي)
அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உஹுதுப் போரின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவர் ஷஹீதானார் (கொல்லப்பட்டார்). பசியின் காரணத்தால் அவருடைய வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்தது. அவருடைய தாயார் (அருகில் வந்து) அவருடைய முகத்திலிருந்து மண்ணைத் துடைத்தவாறு, "என் அருமை மகனே! உனக்குச் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுக!" என்று கூறினார்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்பெண்ணை நோக்கி:"உனக்கு எவ்வாறு தெரியும்? ஒருவேளை அவர் தனக்குச் சம்பந்தமில்லாத (தேவையற்ற) விஷயங்களைப் பேசியிருக்கலாம்; அல்லது தன்னிடம் இருக்கும் பொருள் குறைந்துவிடாது என்னும் நிலையிலும் (பிறருக்குக் கொடுக்காமல்) கஞ்சத்தனம் செய்திருக்கலாம் அல்லவா?" என்று கூறினார்கள். நூல்: முஸ்னத் அபீ யஃலா
நாவினால் ஏற்படக்கூடிய 5 முக்கிய பாவங்கள்,
நாவினால் நிகழும் 'ஷிர்க்'
இஸ்லாத்தில் இணைவைப்பு இரு வகைப்படும்:
ஷிர்க் அக்பர் (பெரிய இணைவைப்பு): மனிதனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி, நரகத்தில் நிரந்தரமாக்கும் பாவம்.ஷிர்க் அஸ்கர் (சிறிய இணைவைப்பு): ஈமானைப் பலவீனப்படுத்தி, நன்மைகளை அழித்துவிடும் பாவம். நாவினால் பேசப்படும் பல வார்த்தைகள் அறியாமையினாலும், நிதானமின்மையினாலும் இந்த இரு வகைகளுள் ஒன்றைச் சார்ந்ததாக அமைந்துவிடுகின்றன.
"அல்லாஹ்வையன்றி உனக்குப் பலனுமளிக்காத, உனக்கு நஷ்டமுமேற்படுத்தாத எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர்!" (சூரா யூனுஸ் 10:106).
அல்லாஹ்வின் விதியை (கத்ர்) நிந்தித்தல் & குறை கூறுதல்:
வாழ்க்கையில் கஷ்டங்கள், இழப்புகள் வரும்போது கோபத்தில் "கடவுளுக்குக் கண்ணே இல்லை", "அல்லாஹ் என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறான்?", "நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இப்படித் தண்டனை தருகிறான்?" என்று கூறுவது. இது அல்லாஹ்வின் நீதி, ஞானம் மற்றும் அவனது ஆற்றல் மீது சந்தேகம் கொள்வதாகும். படைப்பாளனை நோக்கிப் படைப்பு கேட்கும் இத்தகைய கேள்விகள் ஈமானை அசைத்துப் பார்க்கக்கூடியவை.
அல்லாஹ்வின் பெயரைத் தவிர்த்துப் பெற்றோர் மீது, பிள்ளைகள் மீது, தலை மீது, அல்லது தொழில் மீது சத்தியம் செய்வது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ, அவர் இணைவைத்து விட்டார்." நூல்: அபூ தாவூத்
ஒரே ஒரு வார்த்தையால் அழிந்தவனும், சொர்க்கம் சென்றவனும்
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
நாவினால் வெளிப்படும் ஒரு வார்த்தை மனிதனின் முடிவை எப்படித் தீர்மானிக்கிறது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
பனீ இஸ்ரவேல் சமுதாயத்தில் இரு மனிதர்கள் இருந்தனர். ஒருவர் எப்போதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடக்கூடியவராக இருந்தார்; மற்றொருவர் பாவங்களில் ஈடுபடுபவராக இருந்தார்.
வணக்கசாளி, அந்தப் பாவியைக் காணும்போதெல்லாம் "பாவங்களை விட்டு விலகு!" என்று உபதேசம் செய்துகொண்டே இருந்தார். ஒருநாள், அந்தப் பாவி ஒரு மிகப்பெரிய பாவத்தைச் செய்துகொண்டிருந்தபோது, வணக்கசாளி அவரிடம் சென்று, "அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! இந்த நிலையை விட்டு விலகு!" என்றார்.
அதற்கு அந்தப் பாவி, "என்னை என் இறைவனின் போக்கிலேயே விட்டுவிடு! என்னை உளவு பார்ப்பவனாகவா அல்லாஹ் உன்னை அனுப்பினான்?" என்று கோபமாகக் கேட்டார்.
அப்போது, அந்த வணக்கவாளி நிதானமிழந்து, தன் நாவினால் பின்வரும் வார்த்தையைக் கூறினார்:
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்! அல்லது உன்னைச் சொர்க்கத்தில் சேர்க்கவே மாட்டான்!"
இருவரும் மரணித்த பிறகு, அல்லாஹ் இவ்விருவரையும் தன் முன்னிலையில் நிறுத்தினான். அல்லாஹ் அந்த வணக்கசாளியைப் பார்த்து, "என் ஆற்றலை நீ அறிந்துகொண்டாயா? அல்லது என் கையில் இருக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த உன்னால் முடியுமா?" என்று கேட்டுவிட்டு, வானவர்களை நோக்கி, "இவனை (வணக்கசாளியை) நரகத்தில் தூக்கி எறியுங்கள்!" என்று கட்டளையிட்டான்.
பின்னர், அந்தப் பாவியைப் பார்த்து, "என்னுடைய அருளினாலும் கருணையினாலும் நீ சொர்க்கத்தில் நுழைவாயாக!" என்று தீர்ப்பளித்தான்.
(நூல்: சுனன் அபூ தாவூத் 4901, அஹ்மத்
அந்த வணக்கவாளி காலமெல்லாம் தொழுது, இபாதத் செய்தவராக இருந்தாலும், "அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்" என்று அல்லாஹ்வின் அதிகாரத்திலும் ரஹ்மத்திலும் (கருணையிலும்) தலையிட்டு நாவினால் பேசிய ஒரு வார்த்தை, அவரது அனைத்து நன்மைகளையும் அழித்து நரகத்தில் தள்ளியது.
இந்த ஹதீஸை அறிவித்த நபித்தோழர் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவார்கள்: "அந்த மனிதர் தன் நாவினால் பேசிய ஒரே ஒரு வார்த்தை, அவருடைய இம்மையையும் மறுமையையும் அப்படியே பாழ்படுத்திவிட்டது!"
எத்தகைய அமல்கள் செய்திருந்தாலும், நாவைக் கட்டுப்படுத்தத் தவறினால், அறியாமையிலோ அல்லது கோபத்திலோ வெளிப்படும் வார்த்தைகள் நம்மை இறைவனின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
மார்க்க அடையாளங்களைக் கேலி செய்வதன் ஆபத்து
மார்க்கத்தையும், மார்க்கக் கட்டளைகளைப் பின்பற்றுபவர்களையும் கேலி செய்வது என்பது ஒரு மனிதனை அறியாமலேயே அவனை இஸ்லாத்தின் எல்லையை விட்டு வெளியேற்றக்கூடிய (குஃப்ரில் தள்ளக்கூடிய) கொடிய பாவமாகும்.
ஒரு மனிதனின் இயல்பான நடத்தை, உலகியல் சார்ந்த பலவீனம் அல்லது தனிப்பட்ட குறைபாட்டிற்காக அவரைக் கேலி செய்வது பெரும் பாவமாகும் (ஹராம்). ஆனால், ஒருவர் வைத்துள்ள தாடி, அணியும் சுன்னா உடை, ஹிஜாப் (பர்தா), ஓதும் குர்ஆன், தொழுகை அல்லது அவரது மார்க்கப் பேணலைக் கண்டு கிண்டல் செய்தால், அது அந்த தனிநபரை நோக்கிய கேலி அல்ல. மாறாக, அவர் பின்பற்றும் மார்க்கக் கட்டளையையும், அதை நமக்கு வழிகாட்டிய அல்லாஹ்வையும் அவனது தூதரையும் கேலி செய்வதாகும்.
ஷஆஇருல்லாஹ் (அல்லாஹ்வின் அடையாளங்கள்):
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:"எவர் அல்லாஹ்வின் அடையாளங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ, நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்தினால் ஏற்படுவதாகும்."(சூரா அல்-ஹஜ் 22:32)
அல்லாஹ்வின் அடையாளங்களை மதிப்பது ஈமானின் அடையாளம் எனும்போது, அதை ஏளனம் செய்வதும் கேலி பேசுவதும் ஈமானற்ற தன்மையின் (நயவஞ்சகத்தின்) வெளிப்பாடாகும்.
குர்ஆனின் சூரா அத்-தவ்பா (9:65-66) வசனங்கள் இறங்குவதற்குக் காரணமான வரலாற்று நிகழ்வு மார்க்க அடையாளங்களைக் கேலி செய்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகும்.
ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டு, கடும் கோடைக் காலத்தில், மிக நீண்ட தொலைவிலுள்ள தபூக் பகுதிக்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தலைமையிலான முஸ்லிம்களின் படை புறப்பட்டுச் சென்றது.
அந்தப் பயணத்தின் போது, நயவஞ்சகர்களில் (முனாஃபிக்கீன்களில்) ஒருவன் ஒரு சபையில் அமர்ந்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், குர்ஆன் மனனம் செய்த ஹாஃபிழிகளான நபித்தோழர்களையும் சுட்டிக்காட்டி பின்வருமாறு கேலியாகப் பேசினான்:
"இவர்களைப் (ஹாஃபிழ்கள் மற்றும் அறிஞர்களைப்) போல அதிகமான சாப்பாட்டு ராமர்களையும், பேசுவதில் பெரும் பொய்யர்களையும், போர்க்களத்தில் அதிக பயந்தாங்கொள்ளிகளையும் நாம் கண்டதே இல்லை!"
அங்கே அமர்ந்திருந்த அவ்ஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு என்ற உண்மையாளரான நபித்தோழர் இதைக் கேட்டு கடும் கோபமடைந்து, "நீ பொய் சொல்கிறாய்! நீ ஒரு நயவஞ்சகன். நிச்சயமாக நான் இதை அல்லாஹ்வின் தூதரிடம் தெரிவிப்பேன்" என்று கூறிவிட்டு நபிகளாரிடம் சென்றார். ஆனால், அதற்குள்ளாகவே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக அல்லாஹ் நபிகளாருக்கு அந்தச் செய்தியையும், அதற்கான குர்ஆன் வசனத்தையும் இறக்கிவிட்டான்.
செய்தி தெரிந்ததும், கேலி பேசிய வதீஆ இப்னு ஃபஜாம் என்பவன் ஓடோடி வந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒட்டகத்தின் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சும்மா தமாஷாகப் பேசினோம். நீண்ட பயணத்தின் சலிப்பைப் போக்குவதற்காக விளையாட்டாகப் பேசிய வார்த்தைகள்தான் இவை" என்று சாக்குப்போக்குக் கூறினான்.
அவன் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு கற்களில் கால் இடறி ஓடிவரும் நிலையில், நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனைக் திரும்பிப் பார்க்காமல், அல்லாஹ் இறக்கிய வசனத்தை மட்டுமே ஓதிக்காட்டினார்கள்:
وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ
"நீர் அவர்களிடம் (இதைக் குறித்துக்) கேட்டால், 'நாங்கள் சும்மா விளையாட்டாகவும் தமாஷாகவும் உரையாடிக் கொண்டிருந்தோம்' என்றுதான் கூறுவார்கள். (அதற்கு நீர்) 'அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவனுடைய தூதரையா நீங்கள் கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?' என்று கேளும். சாக்குப்போக்குக் கூறாதீர்கள்! நம்பிக்கை கொண்ட பின் நிச்சயமாக நீங்கள் நிராகரித்து விட்டீர்கள் (காஃபிராகிவிட்டீர்கள்)."(சூரா அத்-தவ்பா 9:65-66)
'தமாஷ்' என்ற சாக்குப்போக்கு செல்லாது: மார்க்க விஷயங்களிலும், நல்லோர்களின் அடையாளங்களிலும் நகைச்சுவை (Jokes) என்ற பெயரில் கேலி செய்யவே கூடாது. அல்லாஹ் "விளையாட்டாகப் பேசினோம்" என்ற அவர்களின் சாக்குப்போக்கை ஏற்க மறுத்துவிட்டான்.
"நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்து விட்டீர்கள்" என்ற இறைவசனம், மார்க்கக் கேலி மனிதனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. உலமாக்கள், ஹாஃபிழ்கள் அல்லது மார்க்கத்தைப் பேணுபவர்களிடம் ஏதேனும் மனித பலவீனங்களைக் கண்டால் கூட, அவர்களின் மார்க்கப் பேணலையும் உடைகளையும் சுட்டிக்காட்டி ஏளனம் செய்யக் கூடாது.
3) புறம் பேசுதல் (ஃகீபத்)
மனித உறவுகளையும், சமூக ஒற்றுமையையும் அடியோடு அறுத்து எறியக்கூடிய கொடிய நோய் புறம் பேசுதல் ஆகும்.
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோழர்களைப் பார்த்து, "புறம் பேசுதல் (கிஃபத்) என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்" என்றனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"உன் சகோதரன் வெறுப்பதை அவனில்லாத நேரத்தில் நீ பேசுவதாகும்."
அப்போது கேட்கப்பட்டது: "அல்லாஹ்வின் தூதரே! நான் சொல்லும் குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே இருந்தால் என்ன செய்வது?"
அதற்கு நபிகளார் கூறினார்கள்:
"நீ சொல்லும் குறை அவனிடம் உண்மையிலேயே இருந்தால் நீ அவனைப் பற்றிப் புறம் பேசிவிட்டாய்! நீ சொல்லும் குறை அவனிடம் இல்லை என்றால், அவன் மீது நீ அவதூறு சுமத்திவிட்டாய்!"(நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2589)
அல்லாஹ் குர்ஆனில் புறம் பேசுவதை மிக அருவருப்பான ஒரு செயலோடு ஒப்பிட்டுக் காட்டுகிறான்:
وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ
"...உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? அதனை நீங்கள் அருவருப்பீர்கள்!"(சூரா அல்-ஹுஜுராத் 49:12)
இறந்த மனிதன் தன் உடலிலிருந்து மாமிசம் பிய்க்கப்படுவதைத் தடுக்க முடியாது; அதேபோலத் தான் இல்லாத இடத்தில் தன்னைப் பற்றிப் பேசப்படும் புறத்தைப் தற்காத்துக் கொள்ள அந்த மனிதனால் முடியாது. எனவேதான் அல்லாஹ் அதைச் செத்த சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்குச் சமமாகக் கூறுகிறான்.
இமாம் அப்துல்லாஹ் இப்னு வஹ்ப் அல்-மிஸ்ரி (ரஹ்)
இமாம் அப்துல்லாஹ் இப்னு வஹ்ப் அல்-மிஸ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் (ஹிஜ்ரி 125 – 197) அவர்கள் எகிப்தைச் சேர்ந்த மாபெரும் ஹதீஸ் கலை வல்லுநராகவும், ஃபிக்ஹ் (மார்க்கச் சட்ட) மேதையாகவும் திகழ்ந்தவர். இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மற்றும் இமாம் லைஸ் இப்னு ஸாத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இமாம்களின் முதன்மைச் சீடராக விளங்கியவர். கல்வியிலும், பேணுதலிலும் (தக்வா) உச்சத்திலிருந்த இவர், தன் நாவைப் பேணுவதற்காகக் கையாண்ட வழிமுறைதான்
அப்துல்லாஹ் இப்னு வஹ்ப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:- "நான் யாரைப் பற்றியாவது புறம் பேசினால் (கிஃபத் செய்தால்), அதற்காக ஒரு நாள் நோன்பு நோற்பேன் என்று எனக்குத்தானே நேர்ச்சை (நத்ர்) செய்து கொண்டேன். ஆனால், நான் புறம் பேசுவதும், அதற்காக நோன்பு நோற்பதுமாகவே இருந்தது. நோன்பு நோற்பது எனக்கு எளிதாகிவிட்டதால், புறம் பேசுவது முற்றிலும் நிற்கவில்லை."
"பின்னர், நான் யாரைப் பற்றியாவது புறம் பேசினால், ஒரு திர்ஹம் (வெள்ளி நாணயம்) தர்மம் செய்வேன் என்று நேர்ச்சை செய்தேன். பணத்தின் மீது மனித இயல்பாக இருக்கும் பற்றின் காரணமாக, ஒரு திர்ஹம் தர்மம் செய்வது எனக்குக் கடினமாக இருந்தது. அதன் பிறகுதான் புறம் பேசுவதை நான் முற்றிலுமாக விட்டுவிட்டேன்.”
தீய பழக்கங்களிலிருந்து விடுபட விரும்புபவர்கள், தங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றை இழக்கும்படியான சுயதண்டனையை விதித்துக்கொண்டால் மட்டுமே அந்தப் பழக்கத்திலிருந்து முழுமையாக மீள முடியும்.
நாம் பொதுவாகத் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை மட்டுமே 'இபாதத்' என்று நினைக்கிறோம். ஆனால், முன்னோர்களான சலஃபுகளின் பார்வையில், பிற முஸ்லிம்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதும், நாவைக் கட்டுப்படுத்துவதும் மாபெரும் இபாதத்தாகும்.
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உங்களில் உண்மையிலேயே ஏழை (முஃப்லிஸ்) யார் தெரியுமா?" எனக் கேட்டார்கள். தோழர்கள், "காசு பணம் இல்லாதவர்" என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வரும் ஒருவன், ஒருவனைத் திட்டியிருப்பான்; மற்றொருவனைப் பற்றிப் புறம் பேசியிருப்பான்; இன்னொருவனின் பொருளைச் சாப்பிட்டிருப்பான். அவனது நன்மைகள் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். நன்மைகள் தீர்ந்த பிறகு, அவர்களின் பாவங்கள் இவன் மீது சுமத்தப்பட்டு, இவன் நரகத்தில் தூக்கி எறியப்படுவான். இவனே ஏழை" என்றார்கள் நூல்: முஸ்லிம்.
கோள் சொல்லுதல் (நமீமத்)
இரு மனிதர்கள், குடும்பங்கள் அல்லது நண்பர்களுக்கு இடையே பகையையும் சண்டையையும் மூட்டிவிடும் நோக்கத்தில், ஒருவர் பேசியதை அப்படியே இன்னோருவரிடம் கொண்டு சென்று பேசுவது கோள் சொல்லுதல் (நமீமத்) எனப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ نَمَّامٌ
"கோள் சொல்பவன் (நம்மாம்) சொர்க்கத்தில் நுழைய மாட்டான்."
நூல்: ஸஹீஹ் அல்-புகாரி
நரக வேதனையைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து சென்றபோது நிறுத்தி, "இந்தக் கப்ருகளில் இருப்பவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். அவர்கள் இருவரும் பெரிய விஷயம் என்று நினைக்காத ஒன்றிற்காக வேதனை செய்யப்படுகிறார்கள்" என்றார்கள்.
பின்னர் அதற்கான காரணத்தைக் கூறினார்கள்:
"ஒருவர் தான் சிறுநீர் கழிக்கும் போது (சுத்தம் பேணாமல்) மறைக்காமல் இருந்தார்."
"மற்றொருவன் மனிதர்களிடையே கோள் சொல்லி (நமீமத் பேசி)த் திரிந்துகொண்டிருந்தான்."நூல்: ஸஹீஹ் அல்-புகாரி
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்:
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நபிகளாரின் மற்றொரு மனைவியான ஸஃபிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி, "அவர் குள்ளமானவர் என்பது உங்களுக்குப் போதுமான சான்றாக இருக்கிறதே" என்று தன் கையால் சைகை செய்து கூறினேன்.
அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முகம் மாறிப் பின்வருமாறு கூறினார்கள்:
"ஆயிஷாவே! நீ இப்போது ஒரு வார்த்தையைப் பேசிவிட்டாய். அந்த வார்த்தையைக் கடலின் தண்ணீரில் கலந்தால், அது கடல் முழுவதையும் (அதன் சுவையையும் நிறத்தையும்) மாற்றிவிடக்கூடிய அளவிற்கு ஆபத்தானது!"
நூல்: சுனன் அபூ தாவூத்
ஒருவரின் உயரத்தைக் குறித்துக் கூறிய ஒரு சிறிய வார்த்தையே கடலையே மாசுபடுத்தும் அளவு பாவமானது என்றால், நாம் அன்றாடம் பேசும் புறங்களின் நிலை என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மிஃராஜ் (விண்ணுலகப் பயணம்) இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நரகத்தைக் கடந்து சென்றபோது ஒரு கூட்டத்தினரைக் கண்டார்கள்.
அவர்களுக்கு செம்பு நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் அவர்கள் தங்களின் முகங்களையும் நெஞ்சுகளையும் தாங்களே கிழித்துக் காயப்படுத்திக் கொண்டிருந்தனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், "இவர்கள் யார்?" எனக் கேட்டதற்கு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் "இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள்; அதாவது புறம் பேசித் திரிந்தவர்கள் மற்றும் மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்" என்று பதிலளித்தார்கள்.நூல்: சுனன் அபூ தாவூத்
அனுமதிக்கப்பட்ட 6 பிரத்யேக சூழ்நிலைகள்
மார்க்கச் சட்டப்படி அனைத்து இடங்களிலும் புறம் பேசுவது ஹராம் என்றாலும், மக்களின் நலன் கருதி 6 குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஒருவரைப் பற்றிய குறையைக் கூறுவது அனுமதிக்கப்பட்டுள்ளது (இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 'ரியாலுஸ் ஸாலிஹீன் கிதாபில் கூறுகிறார்கள்.
அநீதிக்கு எதிராக முறையிடுதல் (அல்-மழ்லூம்): பாதிக்கப்பட்ட ஒருவர் ஆட்சியாளரிடமோ அல்லது நீதிபதியிடமோ சென்று அநீதி இழைத்தவரைப் பற்றிக் கூறுவது.
தீமையைத் தடுக்க உதவி கோருதல்: ஒருவரின் தீய பழக்கத்தை மாற்றத் தகுதியுள்ளவரிடம் சென்று உதவி கோருவது.
மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) கேட்டல்: ஒருவர் முஃப்தியிடம் சென்று, "என் கணவர்/சகோதரர் எனக்கு இந்த அநீதியைச் செய்கிறார், இதற்கு மார்க்கத் தீர்ப்பு என்ன?" என்று கேட்பது (ஹிந்த் பின்த் உக்பா ரலி அவர்களின் சம்பவம் போல).
முஸ்லிம்களை எச்சரித்தல் (நஸீஹத்): வியாபாரத்தில் ஏமாற்றுபவரைப் பற்றி எச்சரிப்பது. திருமணப் பேச்சுவார்த்தையின் போது பெண்/மாப்பிள்ளையின் குறையை உண்மையாகவும் நேர்மையாகவும் தெரிவிப்பது.தவறான கொள்கையுடைய வழிகேடர்களைப் பற்றி மக்களை எச்சரிப்பது.
அடையாளத்திற்காகக் கூறுவது: ஒருவர் குருடர், நொண்டி அல்லது செவடன் என்ற அடைமொழியால் மட்டுமே அறியப்பட்டால், அவரைக் குறைத்து மதிப்பிடும் நோக்கமின்றி அடையாளத்திற்காக மட்டும் கூறுவது.
வெளிப்படையாகப் பாவம் செய்பவர்: பகிரங்கமாகப் பாவம் செய்யும் பாவியைப் பற்றிப் பேசுவது.
4) பொய் பேசுதலின் ஆபத்து
இஸ்லாமிய நெறிமுறைகளில் பொய் என்பது மனிதனின் ஈமானை (நம்பிக்கையை) அடியோடு அரித்து அழிக்கும் ஒரு கொடிய நஞ்சாகும்.
பொய் பேசும் பழக்கம் உள்ளவனிடம் மற்ற எல்லாத் தீய குணங்களும் தானாகவே குடியேறிவிடும். ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்களைப் பேச வேண்டிய சூழல் உருவாகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
عَبْدِ اللَّهِ بنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ صِدِّيقًا، وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ كَذَّابًا»
"நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழிகாட்டுகிறது; நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் உண்மை பேசிக்கொண்டே இருக்கிறான்; இறுதியில் அவன் அல்லாஹ்விடம் 'உண்மையாளன்' (ஸித்தீக்) எனப் பதியப்படுகிறான்.
நிச்சயமாக பொய் தீமைக்கு வழிகாட்டுகிறது; தீமை நரகத்திற்கு வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய் பேசிக்கொண்டே இருக்கிறான்; இறுதியில் அவன் அல்லாஹ்விடம் 'பொய்யன்' (கத்தாப்) எனப் பதியப்படுகிறான்."நூல் : ஸஹீஹ் அல்-புகாரி
செய்திகளை ஆராயாமல் பரப்புவது
இன்றைய நவீன உலகில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை ஆராயாமல் ஷேர் செய்வதும், "நான் கேள்விப்பட்டதைத்தானே சொன்னேன்" என்று அலட்சியமாகப் பேசுவதும் பொய்யின் ஒரு வடிவமே ஆகும்.
நபிகளாரின் எச்சரிக்கை:
كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ
"தான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் (உறுதிப்படுத்தாமல்) பேசுவதே ஒரு மனிதன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்."நூல்: ஸஹீஹ் முஸ்லிம்.
"يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)
சிரிப்பூட்டுவதற்காக தமாஷாகப் பொய் சொல்வது
இன்றைய காலத்தில் மேடைப் பேச்சாளர்கள், நகைச்சுவையாளர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டத்தில் பிறரைச் சிரிக்க வைப்பதற்காகக் கற்பனையாகவும், பொய்யாகவும் கதைகளை அளப்பது சாதாரணமாகிவிட்டது. அல்லது 'ஏப்ரல் ஃபூல்' (April Fool) என்ற பெயரில் பொய் சொல்லி ஏமாற்றுவதும் நடக்கிறது.
நகைச்சுவைக்காகப் பொய் பேசுபவனுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை 'கேடுதான்' என்று சாபமிட்டுக் கூறியுள்ளார்கள்:
وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ
"மக்களைச் சிரிப்பூட்டுவதற்காகப் பொய் பேசுபவனுக்குக் கேடுதான்! அவனுக்குக் கேடுதான்!! அவனுக்குக் கேடுதான்!!"நூல்: சுனன் அபூ தாவூத்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன் தோழர்களுடன் நகைச்சுவையாகப் பேசியுள்ளார்கள். ஆனால், அந்த நகைச்சுவையில் ஒரு துளி கூட பொய் இருக்காது.
ஒரு முதிய பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் சொர்க்கம் செல்ல துஆ செய்யுங்கள்" என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முதிய பெண்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்" என்றார்கள். அந்தப் பெண்மணி வருத்தத்துடன் அழத் தொடங்கினார்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புன்னகைத்து, "வயதான நிலையில் யாரும் சொர்க்கம் செல்ல மாட்டார்கள்; அல்லாஹ் அனைவரையும் இளமையாகவும் அழகாகவும் மாற்றியே சொர்க்கத்தில் நுழைவிப்பான்" என்று விளக்கமளித்தார்கள் (சூரா அல்-வாகிஆ 56:35-37 சுட்டிக்காட்டி).நூல்: ஷமாயில் அத்-திர்மிதி)
இங்கே நபிகளார் நகைச்சுவை செய்தார்கள், ஆனால் அதில் உண்மை மட்டுமே இருந்தது.
அப்துல்லாஹ் இப்னு ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
நான் சிறுவனாக இருந்தபோது, நபிகளார் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். நான் விளையாடச் செல்ல முயன்றபோது, என் தாய் என்னை அழைத்து, "இங்கே வா, உனக்கு ஒரு பொருள் தருகிறேன்" என்றார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் தாயைப் பார்த்து, "அவனுக்கு என்ன கொடுக்க எண்ணினாய்?" எனக் கேட்டார்கள். என் தாய், "அவனுக்குக் கொடுப்பதற்காகப் பேரீச்சம்பழம் வைத்திருந்தேன்" என்றார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"நீ அவனுக்கு எதையும் கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால், உன் கணக்கில் ஒரு 'பொய்' எழுதப்பட்டிருக்கும்!"நூல்: சுனன் அபூ தாவூத்
சிறு குழந்தையைத்தானே ஏமாற்றுகிறோம் என்று கூட அலட்சியமாக இருக்கக் கூடாது; அதுவும் இறைவனிடம் பொய்யாகப் பதியப்படும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் (விண்ணுலகப் பயணம்) அல்லது கனவில் கண்ட காட்சியை விவரிக்கும் போது பின்வருமாறு கூறினார்கள்:
நான் இரண்டு மனிதர்களைக் கண்டேன். அங்கு ஒருவன் உட்கார்ந்திருந்தான்; மற்றொருவன் தன் கையில் வளைந்த இரும்பு கொக்கியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.
நின்றுகொண்டிருந்தவன், உட்கார்ந்திருப்பவனின் ஒரு பக்கக் தாடையிலும், மூக்கிலும், கண்ணிலும் அந்த இரும்புக் கொக்கியைச் செலுத்தி பிடரி வரை கிழித்தான். பின்னர் மறுபக்கம் சென்று அதேபோல் கிழித்தான். ஒரு பக்கம் கிழித்து முடிப்பதற்குள் மறுபக்கம் பழையபடி சரியாகிவிடும். மீண்டும் மீண்டும் அவன் அதைச் செய்துகொண்டே இருந்தான்.
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் "இவர் யார்?" எனக் கேட்டதற்கு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், "இவர் காலையில் தன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று உலகம் முழுவதும் பரவும்படியான பொய்களைப் பேசிய பொய்யர் ஆவார்" என்று பதிலளித்தார்.நூல்: ஸஹீஹ் அல்-புகாரி
பொய் பேச அனுமதி அளிக்கப்பட்ட 3 பிரத்யேக இடங்கள்
அனைத்து இடங்களிலும் பொய் ஹராம் என்றாலும், மாபெரும் நன்மைகளுக்காக 3 சூழ்நிலைகளில் மட்டும் பொய் பேசுவதற்கு அல்லது வார்த்தைகளைச் சுற்றி வளைத்துப் பேசுவதற்கு (தவ்ரியா) மார்க்கத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது:
1)இரு மனிதர்கள் / குடும்பங்களைச் சேர்த்து வைப்பதற்கு: சண்டையிட்டுப் பிரிந்த இருவரிடம் சென்று, "அவர் உங்களைப் பற்றி நல்லபடியாகப் பேசினார்" என்று கூறி சமாதானம் செய்வது.
2)எதிரிகளிடமிருந்து நாட்டின் மற்றும் முஸ்லிம்களின் பாதுகாப்பைப் பேணுவதற்காகத் தந்திரமாகப் பேசுவது.
3)கணவன் - மனைவி இடையே குடும்ப அன்பையும் பந்தத்தையும் நீடிக்கச் செய்வதற்காக பரஸ்பரம் தாஜா செய்து பேசுவது.நூல்: ஸஹீஹ் முஸ்லிம்
5) சபிப்பது (லாஅனத்) என்பதன் மார்க்க விளக்கம்
அரபி மொழியில் 'லாஅனத்' (اللَّعْنَة) என்றால் "ஒருவரை அல்லாஹ்வின் ரஹ்மத் என்னும் பேரருளிலிருந்தும், கருணையிலிருந்தும் தூரமாக்குதல்" என்று பொருளாகும்.
ஒரு முஸ்லிமை நோக்கி "அல்லாஹ் உன்னைச் சபிப்பானாக" என்றோ, "நாசமாகப் போவாய்" என்றோ கூறுவது, அந்த மனிதன் இறைவனின் அருளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திப்பதற்குச் சமமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கை:
عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«وَلَعْنُ الْمُؤْمِنِ كَقَتْلِهِ»
"ஒரு மூஃமினைக் (இறைநம்பிக்கையாளரைச்) சபிப்பது அவனைக் கொலை செய்வதற்குச் சமமாகும்."நூல்: ஸஹீஹ் அல்-புகாரி
சாபம் தன்னிடம் திரும்பும் ஆபத்து:
நாம் பிறரைச் சபிக்கும்போது, அந்தச் சாபம் காற்றில் மிதந்து சென்று வானத்தின் கதவுகளை அடைகிறது. வானத்தின் கதவுகள் அடைக்கப்படவே, பூமிக்குத் திரும்பி வந்து, நாம் சபித்த நபரை அடைகிறது. அந்த நபர் சாபத்திற்குத் தகுதியானவராக இருந்தால் அவர் மீது விழுகிறது; இல்லையென்றால், அதைச் சொன்னவர் மீதே அந்தச் சாபம் திரும்பி வந்து விழுகிறது.நூல்: சுனன் அபூ தாவூத்
மறுமையில் பரிந்துரைக்கும் (ஷஃபாஅத்) பாக்கியம் பறிபோகுதல்:
நாவு தடிப்பாகப் பேசுவதையும், பிறரைச் சபிப்பதையும் வழக்கமாகக் கொண்டவர்கள் மறுமை நாளில் பெரும் பாக்கியங்களை இழப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
لَا يَكُونُ اللَّعَّانُونَ شُفَعَاءَ وَلَا شُهِدَاءَ يَوْمَ الْقِيَامَةِ
"அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் (நல்லோர்களுக்குச் சாதகமாகச்) சாட்சி கூறுபவர்களாகவோ, பரிந்துரை (ஷஃபாஅத்) செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்."நூல்: ஸஹீஹ் முஸ்லிம்
தாய்மார்களுக்கான எச்சரிக்கை: பிள்ளைகளைச் சபித்தல்
கோபத்திலோ, சகிப்புத்தன்மையின்மையிலோ அல்லது பழக்க தோஷத்திலோ தாய்மார்களும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சேட்டைகளைக் கண்டு சபிப்பது மிகவும் ஆபத்தானது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"உங்களுக்கு எதிராகவோ, உங்கள் பிள்ளைகளுக்கு எதிராகவோ, உங்கள் பணியாளர்களுக்கு எதிராகவோ, அல்லது உங்கள் செல்வங்களுக்கு எதிராகவோ சாபமிட்டுப் பிரார்த்திக்காதீர்கள்! ஏனெனில், அல்லாஹ்விடம் கேட்கப்படும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் அந்த நேரத்தில் உங்களின் சாபம் அமைந்துவிட்டால், அல்லாஹ் அதை அப்படியே ஏற்று நிறைவேற்றி விடுவான்!"
நூல்: ஸஹீஹ் முஸ்லிம்
பெற்றோர்கள் கோபத்தில் சொல்லும் "நாசமாப் போவாய்", "உருப்படாமல் போவாய்" போன்ற சொற்கள் இறைவனின் ஏற்கும் நேரத்தில் (இஜபாத்தின் நேரம்) அமைந்துவிட்டால், பிள்ளைகளின் வாழ்க்கையும் எதிர்காலமும் பாழ்பட்டுவிடும்.
ஷேக் சுதைஸ் அவர்களின் தாயார்
இன்றைய உலகில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், மக்கா ஹரம் ஷரீஃப் (கஃபத்துல்லாஹ்) மஸ்ஜிதுல் ஹராமின் தலைமை இமாமுமான ஷேக் அப்துர் ரஹ்மான் அஸ்-சுதைஸ் அவர்களின் சிறுவயது நிகழ்வு:
ஷேக் சுதைஸ் சிறுவனாக இருந்தபோது, ஒரு நாள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரவிருந்தனர். அவருடைய தாயார் மிகவும் சிரமப்பட்டு விருந்தினர்களுக்காக உணவைத் தயாரித்து வைத்திருந்தார். சிறுவன் சுதைஸ் விளையாட்டாக வந்து, அந்த உணவின் மீது ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப்போட்டு அதை பாழாக்கிவிட்டான்.
எந்த ஒரு தாய்க்கும் இயல்பாகவே கடும் கோபம் வரக்கூடிய சூழல் இது. ஆனால், அவருடைய தாய் தன் நாவைக் கட்டுப்படுத்தி, கோபத்திலும் சாபமிடுவதற்குப் பதிலாக, நேர்மறையான நல்ல வார்த்தையைக் கூறி துஆ செய்தார்:
"அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டட்டும்! உன்னை ஹரம் ஷரீஃபின் இமாமாக ஆக்கட்டும்!"
தாயார் கோபத்தின் உச்சக்கட்டத்திலும் சபிப்பதைத் தவிர்த்து, தன் பிள்ளைக்கு நல்வாழ்த்துக் கூறியதால், அல்லாஹ் அந்தத் தாயின் துஆவை அப்படியே ஏற்றுக்கொண்டான். இன்று ஷேக் சுதைஸ் அவர்கள் அகில உலக முஸ்லிம்களும் பின்பற்றித் தொழும் ஹரம் ஷரீஃபின் தலைமை இமாமாக உயர்ந்துள்ளார்கள்.
ஒட்டகத்தைச் சபித்த பெண்மணிக்கு நபிகளார் தந்த தண்டனை
ஒரு பயணத்தின் போது, அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணி தான் ஏறி வந்த ஒட்டகம் மெதுவாகச் சென்றதால் கோபமடைந்து, "அல்லாஹ் உன்னைச் சபிப்பானாக!" என்று அந்த ஒட்டகத்தைச் சபித்துவிட்டார்.
இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனடியாகக் கூறினார்கள்:
"அந்த ஒட்டகத்தின் மீதிருக்கும் பொருள்களை இறக்குங்கள்; அதை அவிழ்த்து விட்டு விடுங்கள். ஏனெனில், அது சாபம் இடப்பட்ட பொருளாகிவிட்டது!"
அந்த ஒட்டகம் சாபமிடப்பட்டதால், அதன் மீது பயணிக்கவோ, அதன் பொருள்களைப் பயன்படுத்தவோ நபிகளார் அனுமதிக்கவில்லை. அந்த ஒட்டகம் மக்களிடையே தனியாக உலா வந்ததையும், அதை யாரும் தொடக்கூட அஞ்சியதையும் நபித்தோழர்கள் கண்டார்கள்.நூல்: ஸஹீஹ் முஸ்லிம்
கோபம் வரும்போது அமைதி காப்பது மற்றும் உடனே 'அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' ஓதுவது.
கோபத்திலும் சாப வார்த்தைகளுக்குப் பதிலாக "அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டட்டும் (ஹதாயக்கல்லாஹ்)", "அல்லாஹ் உன்னைச் சீராக்கட்டும்" போன்ற நல்வார்த்தைகளைப் பேசிப் பழகுவது.
இதுவரை அறியாமல் சபித்திருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்காக நல்வாழ்த்துக் கூறி துஆ செய்வது.
அருட்கொடை. அதே நேரத்தில் நம்மை நரகத்தில் வீழ்த்தக்கூடிய மாபெரும் சோதனையும்கூட! நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வானவர்களால் பதியப்படுகிறது என்பதை உணர்வோம்.நம் நாவைப் பொய், புறம், கோள் சொல்லுதல், கேலி பேசுதல், சபித்தல் போன்ற பாவங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.
பேசுவது வெள்ளியென்றால், சரியான இடத்தில் அமைதியாக இருப்பது தங்கம்.
நாவைக் கட்டுப்படுத்த தெரிந்தவன் தன் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவன் ஆகிறான்.
தேவையில்லாத பேச்சைக் குறைப்பவன், தன் வாழ்வில் ஏற்படும் பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகளைக் குறைத்துக் கொள்கிறான்.
நாவைப் பூட்டி வைப்பவனுக்கு, சோதனைகளின் கதவுகள் தானாகவே பூட்டிக்கொள்கின்றன
"நல்லதைப் பேசுவோம்; அல்லது அமைதியாக இருப்போம்" என்ற நபிகளாரின் பொன்மொழியை நம் வாழ்க்கையின் தாரக மந்திரமாக ஏற்று நடப்போம்.
நம் நாவை எப்போதும் குர்ஆன் ஓதுவதிலும், அல்லாஹ்வின் திக்ரிலும், நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் பசுமையாக வைத்திருப்போம்.
நாவைக் கட்டுப்படுத்தும் நற்பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
யா ரப்பல் ஆலமீன்! நீ எங்களுக்கு அளித்த நாவெனும் அருட்கொடையை உனக்கு விருப்பமான வழியில் பயன்படுத்தும் பாக்கியத்தைத் தருவாயாக! எங்கள் நாவுகளிலிருந்து வெளிப்படும் பொய், புறம், கோள் சொல்லுதல், அவதூறு, பிறரைக் காயப்படுத்தும் சொற்கள் மற்றும் அனைத்துத் தீய பேச்சுகளிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ்! கோபத்திலும் சோதனைகளிலும் எங்கள் நாவைக் கட்டுப்படுத்தும் நிதானத்தையும், சகிப்புத்தன்மையையும் எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக! அறியாமையினாலும், உணர்ச்சிவசப்பட்டும் எங்கள் நாவினால் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அல்லது சபித்திருந்தால், அந்தப் பாவங்களை மன்னித்து, அவர்களிடம் நன்முறையில் மன்னிப்புக் கேட்கும் மனப்பக்வத்தை எங்களுக்குத் தருவாயாக!
யா அல்லாஹ்! எங்கள் நாவுகளை எப்போதும் உன்னுடைய திக்ரினாலும், குர்ஆன் திலாவத்தினாலும், ஸலவாத்தினாலும், இன்சொற்களினாலும் பசுமையாக வைத்திருப்பாயாக!
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.




















































































































































































