புதன், 29 ஏப்ரல், 2020

மெளலானா பதில்கள்


கேள்வி:ஆண்கள் மேலாடை (பனியன் கூட) இல்லாமல் கைலி மட்டும் அணிந்து ஒளூ செய்தால் கூடுமா? அல்லது மேலாடை அணிந்து ஒளு செய்ய வேண்டுமா..?

பதில் : மேலாடை (சட்டை, ஜுப்பா, பனியன்) இல்லாமல் கைலி அணிந்து கொண்டு ஒளு செய்தால் கூடும். அதில் தவறதுமில்லை. ஆனால் இயன்ற வரை தலையை மறைப்பது சிறந்தது
(ஆப்கே மஸாயில், பக்கம் - 39.43, பாகம் - 2)


கேள்வி : ஒளூ செய்யும் போது உடலுக்குள்ளேயே காற்று பிரிவது போல் ஒருவித சப்தம் கேட்கிறது ஒளு கூடுமா..?

பதில் : துவாரத்திலிருந்து காற்று பிரிந்தது உறுதியாக தெரியாமல் உடலுக்குள்ளேயே காற்று பிரிவது போன்ற மாயையினால் ஒளு முறியாது. அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.
(ஃபதாவா ரஹீமிய்யா, பக்கம் - 110, பாகம் - 1

கேள்வி : ஃபர்ளுத் தொழுகை (தனியாக தொழும் சமயம்) சுன்னத், நஃபில் (ஸலாத்துல்ஹாஜத், தஸ்பீஹ் தொழுகை) ஆகிய தொழுகைகளில் பாத்திஹா சூரா, துணை சூராக்களை காதுகளுக்கு கேட்கும் படி ஓத வேண்டுமா? காதுகளுக்கு கேட்காமல் ஓதினால் தொழுகை கூடுமா...?

பதில்ஃபர்ளுத் தொழுகை (தனியாக தொழும் சமயம்), சுன்னத், நஃபில் ஆகிய தொழுகைகள் நிறைவேறுவதற்கு எழுத்துக்களை சரியாக உச்சரித்து ஓதுவது அவசியம் தான் கேட்கும் அளவு சிறிது சப்தமாக ஒதுவது சிறந்ததாகும். ஃபஜ்ர், மஃக்ரிப், இஷா போன்ற இரவுத் தொழுகையில் சிறிது சப்தமாக ஓதலாம். உதடுகள் அசையாமல் மனதிற்குள்ளேயே ஒதினால் தொழுகை கூடாது
(ஆப்கே மஸாயில், பக்கம்-26, பாகம்-2)

(ஷாஃபியீ மத்ஹபின்படி பாத்திஹா சூராவை தனக்கு கேட்கும் அளவு சப்தமாக ஓதுவது ஃபர்ளு (கடமை) ஆகும். மனதிற்குள்ளேயே ஓதினாலோ -வெறும் உதடுகள் மட்டும் அசைத்து ஓதினாலோ தொழுகை கூடாது
மற்ற துணை சூராக்களை தனக்கு கேட்கும் அளவு ஓதுவது சுன்னத்தாகும். மனதிற்குள் அல்லது உதடு அசைத்து மட்டும் ஓதினால் சுன்னத்தின் நன்மை கிடைக்காது
(ஆதாரம்: பைஞுல் இலாஹ் - 1/107)

கேள்வி : தவறிவிட்ட ஐநேரத்தொழுகையை களாச்செய்யும் போது ஒவ்வொரு தொழுகைக்கும் இகாமத் கூற வேண்டுமா? மேலும் அதாவாக தொழும் பர்ளுத் தொழுகையை தனியாகத் தொழும் போது இகாமத் கூற வேண்டுமா..?

பதில் : அதாவாக தொழும் ஃபர்ளுத்தொழுகையை தனியாகத்தொழும் போது இகாமத் கூறுவது சிறந்ததாகும். இகாமத் கூறாமல் தொழுதால் தொழுகை கூடிவிடும். இது போன்றே களாத்தொழுகையில் ஒவ்வொரு களா பர்ளுத் தொழுகைக்கும் தனித்தனியே இகாமத் கூறுவது சிறந்ததாகும். இகாமத் கூறாமல் இன்ன நேரத்தின் பர்ளுததொழுகையை களாவாக தொழுகிறேன் என்று நிய்யத் செய்து தொழுவதும் கூடும்  : ரத்துல் முஹ்தார், பக்கம் - 555, பாகம் - 1

கேள்வி : ஃபர்ளு மற்றும் ஏனைய தொழுகையில் ஓரே சூராவை இரு
அத்துகளில் ஓதினால் தொழுகை கூடுமா...?

பதில் : ஃபர்ளுத் தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் வெவ்வேறு சூரா ஓதுவதுதான் சரியாகும். பல சூராக்கள் ஞாபகம் இருக்கும் போது ஒரே சூராவை இரு ரக்அத்துகளிலும் ஓதுவது மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) ஆகும். எனினும் தொழுகை கூடிவிடும். மறந்து இவ்விதம் ஓதினால் மக்ரூஹ் அல்ல

நஃபில் தொழுகையில் மறந்து, வேண்டுமென்று எப்படி ஒதினாலும் மக்ரூஹ் அல்ல. ஒரு நபருக்கு ஒரே ஒரு சூராதான் தெரியும் என்றிருப்பின் இரு ரக்.அத்களிலும் அதையே ஓத வேண்டும் இதில் மக்ரூஹ் ஏற்படாது

ஒருவர் முதல் ரக்அத்தில் 'குல் அவூது பிரப்பின்னாஸ்' என்ற சூராவை ஒதிவிட்டால் இரண்டாவது ரக்அத்திலும் இதையே ஒத வேண்டும்.
(துர்ருல் முக்தார், பக்கம் - 546, பாகம் - 1
பதாவா மஹ்மூதிய்யா, பக்கம் - 93, பாகம் - 7)

கேள்வி : ஒரு நபர், ஃபர்ளான தொழுகையை நிறைவேற்றாமல் இரவு நேரத்தில் அதிகமான திக்கு, து.ஆக்களில் ஈடுபடுகிறார். இது ஏற்றுக் கெள்ளப்படுமா..?

பதில் : ஷஹாதத் கலிமாவிற்கு பிறகு இஸ்லாத்தின் மிகப்பெரும் கடமை தொழுகையே. ஐவேளைத் தொழுகையை விட உயர்ந்த அமல்கள் வேறேதும் இல்லை, மேலும் தொழுகையை விடுவது மிகப்பெரும் பாவம். கடும் எச்சரிக்கைகள் நபிமொழிகளில் வந்துள்ளன

ஆக ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றாமல் மற்ற நன்மையான காரியங்கள் (திக்ரு - து.ஆ) செய்தால் அது ஏற்கப்படாது என நாம் கூற முடியாது எனினும் தொழுகையை விடுவதால் ஏற்படும் பேரிழப்பை, பெருங்குறையை திக்ரு தஸ்பீஹ்கள் மூலம் ஈடு செய்ய முடியாது. (ஆப்கே மஸாயில், பக்கம்-95, பாகம்- 2.

கேள்வி : பேண்ட், ஷர்ட் இன் செய்து தொழுதால் தொழுகை கூடுமா..?

பதில் : பேண்ட் அணிந்து, ஷர்ட் இன் செய்து தொழுதால் தொழுகை கூடிவிடும். எனினும் தொழுகையின் போது இன் ஷர்ட்டை வெளியில் எடுத்து விட வேண்டும். பேண்ட்டை கரண்டைக்கு மேல் வைக்க வேண்டும். கரண்டைக்குக் கீழ் ஆடை அணிவது தொழுகை மட்டுமின்றி மற்றெல்லா நேரங்களிலும் ஆண்களுக்கு தடை செய்யப்பட்டதாகும். மாற்றுக் கலாச்சார ஆடைகளைக்கான சுன்னத்தான ஆடைகள் அணிவது சிறந்ததாகும்

கேள்வி : ஒரு பிரயாணி ஜும்ஆவுக்காக பள்ளி சென்ற சமயம் ஜும்ஆ முடிந்து விட்டால் அவர் ஜும்ஆ (இரு ரக்அத்) தொழ வேண்டுமா? அல்லது லுஹர் (நான்கு ரக்அத்) தொழ வேண்டுமா..?

பதில் : மார்க்கத்தில் கூறப்பட்ட தொலைதூரம் பயணம் செல்லும் பிரயாணிக்கு ஜூம்ஆத்தொழுகை கடமையில்லை. வாய்ப்புகிடைத்தால் ஜும்ஆத் தொழுவது சிறந்தது. எனவே ஜும்ஆத்தொழுகை கிடைக்காத பட்சத்தில் லுஹர் தொழுகை இரு ரக்அத்கள் கஸ்ராக (சுருக்கி) தொழ வேண்டும்
(ரத்துல் முஹ்தார், பக்கம் - 153, பாகம் -2)

முஹர்ரம் 1430, ஜனவரி 2009 மனருல் ஹதா மாத இதழிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக