புதன், 15 ஏப்ரல், 2020

கண்டிப்பு.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

எனது பெயர் ................................................

நான் இங்கு கண்டிப்பது சம்பந்தமாக பேச வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

யாரிடத்தில் ஒழுக்கம் இருக்கிறதோ, அவர்களிடத்தில் கண்டிப்பு நிச்சயம் இருக்கும், மனிதர்கள் எல்லோருக்கும், அது ஆணாயினும், பெண்ணாயினும் கண்டிப்பு என்பது நல்ல வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது.. குருநாதரின் கண்டிப்பை விரும்பாத சிஷ்யன் ஒருக்காலும் எதிர்காலத்திலும் கல்ல' குருவாக திகழமுடியாது. அவன் வழிகாட்ட தகுதியில்லாதவனாகிவிடுகிறான். ஆசிரியரின் கண்டிப்பை விரும்பாத மாணவன். ஒருக்காலும் பிற்காலத்தில் நல்ல ஆசிரியனாக உருவாகமாட்டான்

குருவிடத்தில் சிஷ்யனும், ஆசிரியரிடத்தில் மாணவனும், பெற்றோரிடத்தில் பிள்ளைகளும் அமீரிடத்தில் மாஃமூரும் முதலாளியிடத்தில் தொழிலாளியும் கணவனிடம் மனைவியும் ஆட்சியாளர்களிடம் மக்களும், எஜமானனிடம் அடிமையும், இறைவனிடம் அடியார்களும் கண்டிப்பை விரும்பவில்லை என்றால் அவர்கள் நல்லவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கவே மாட்டார்கள்.

இறைவனின் கண்டிப்பு நபிமார்களையும், நபிமார்களின் கண்டிப்பு அவர்களின் தோழர்களையும், மற்றும் அவர்களை பின்பற்றியவரையும் ஒழுக்கமுள்ளவர்களாக இவ்வையகம் புகழும்படியான வாழ்க்கையை வாழ வைத்தது

ஹழ்ரத் உமர் ஃபாரூக் (ரலி அவர்களின் கண்டிப்பு இஸ்லாமை உலகம் முழுவதும் பரவச் செய்ததுடன், அவர்கள் காலத்தில் மக்களையும் ஒழுக்கமுள்ளவர்களாக நல்லவர்களாக வாழவைத்தது. உலகத்தில் அதிகமானோர் யாரின் கண்டிப்பையும் விரும்புவதில்லை. அதனால் உலகத்தில் நிம்மதி என்பது இல்லை. கண்டிப்பதை விரும்பாதவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் ஆகிவிடுவார்கள், வெற்றியை எல்லாவற்றிலும் இழந்து விடுவார்கள், கண்டிப்பு ஒரு மனிதனை ஒழுக்கமுள்ளவராக்கும்

நமக்கு தேன் தரக்கூடிய தேனீயிடம் ஒழுக்கமும், கண்டிப்பும் உண்டு. தேன் கூட்டில் ராணித்தேனீ என்று ஒரு தேனீ இருக்கும். தேனீக்கள் வெளியில் சென்று மலர்களில் இருந்து சேகரித்து வரக்கூடிய தேனை, ராணித்தேனீ ஒவ்வொரு தேனீயின் தேனையும் சோதனை செய்யும் அதில் எந்த தேனீயிடத்திலாவது குறைபாடுள்ள தேனை சேகரித்து கொண்டு வந்திருந்தால் அந்த தேனீயின் கழுத்தை துண்டித்து கொன்றுவிடும். தேன் கூட்டிற்கு கீழே சாதாரணமாக இதைக் காணலாம்

இறைவன் ஆதம் (அலை அவர்களுக்கு சுவனத்தில் ஒரு மரத்தின் கனியின் பக்கம் செல்லக்கூடாது என்று கண்டித்திருந்தான். அக்கனியை உண்டால் அசூசையான மலமும், சிறுநீரும் வெளியாகும். சுவர்க்கம் பரிசுத்தமான இடம், அங்கே அசுத்தம் செய்யமுடியாது. ஆனால் ஹழ்ரத் ஆதமும், ஹவ்வாவும் அக்கண்டிப்பை மீறியபோது, அசுத்தமானவர்களாக ஆகிவிட்டனர், இறைவன் சுவனத்திலிருந்து அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டான்

இறைவன் அண்டசராசரங்களில் கூட ஒரு வரம்பை கட்டுப்பாட்டை ஏற்படுத்தி வைத்திருப்பதால்தான் கோளங்கள் ஒழுங்குமுறையாக சுற்றிவருகிறது. கோள்கள் கட்டுப்பாட்டை, வரம்பை மீறினால் உலகம் என்னவாகும்..?

சுய இஷ்டத்திற்கு உலகம், உலகத்திலுள்ள எந்தவொரு படைப்பு நடந்தாலும் குழப்பம்தான் உருவாகும். கண்டிப்புக்கு அப்பாற்பட்டவனாக வாழும் மனிதன் சுயஒழுக்கமுள்ளவனாகவும் தனக்கும், பிறருக்கும் நலவை உண்டாக்கக்கூடிய மனிதனாகவும் இருக்க முடியாது

எனவே நம்மை நமது ஆசிரியரோ அல்லது பெற்றோரோ ஹஸ்ரத் அவர்கள் நம்மை கண்டிப்பது நமது நன்மைக்கே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனக்கு இங்கு பேச வாய்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரகாத்துஹு.


மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக