செவ்வாய், 28 ஏப்ரல், 2020

அல்லாஹ் விரும்பும் மனிதன்




(மவ்லவி காரி அப்துல் பாரி பாகவி, வேலூர்.)

அல்லா ஹுத்தஆலாவிடமிருந்து நபி மூசா கலீமுல்லாஹ் (அலை)
அவர்களுக்கு வஹீ வந்தது ஏ மூசா, நாம் உங்களைத் தேர்வு செய்திருக்கிறோம்.

நபி மூசா (அலை) அவர்கள் கேட்டார்கள்
யா ரப்பே...! எந்த சிறப்பு அம்சத்தை வைத்து மக்களைத் தேர்வு செய்கிறாய்? அது என்னவென்று தெரிந்தால அதை நான் மேலும் அதிகப்படுத்திக் கொள்வேன்.


அல்லா ஹு ரப்புல் இஜ்ஜத் பதிலளித் தான்; தாய் தன் குழந்தையை
அடிக்கும் போது அது பயந்து ஓடாமல் தாயையே கட்டிப் பிடித்துக்
கொள்கிறதல்லவா? அதே போல் என் அடியான் என்னிடம் நடந்து
கொள்வதை நான் பெரிதும் பிரியப்படுகிறேன்

பலரும் இந்த காட்சியை அனுபவ பூர்வமாக பார்த்திருக்க முடியும்
இரண்டு மூன்று வயது குழந்தையைத் தாய் அடிக்க நேர்ந்தால் அடிக்க அடிக்க அக்குழந்தை தாயைக்கட்டி அணைத்துக் கொள்ளுமே அன்றி தாயை விட்டு வெளியில் ஓடாது.

முற்றிலும் இதே போன்று லாபமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ
சுகமோ துக்கமோ எல்லா நிலைமைகளிலும் மனிதன் அல்லாஹுத ஆலாவையே நம்பி இருக்கவேண்டும். இதையே இறைவன் நபி மூசா (அலை) அவர்களுக்கு அறிவித்தான்.

குழந்தையிடம் மற்றொரு பழக்கமும் உண்டு. அது தன் தேவைகள்
அனைத்திற்கும் தாயையே எதிர்பார்க்கும், வேறு எவரையும் அது
கருதுவதில்லை தந்தையைக்கூட அது எண்ணிப் பார்ப்பதில்லை தனக்கு  எல்லாமே தாய்தான் என்பது அதன் எண்ணம். அதே போன்று தான் அல்லாஹ்வும் எல்லாரும் எதற்கும் என்னையே எதிர் பார்க்க வேண்டும். என்னிடமே கேட்க வேண்டும் என்று கூறுகிறான்

எல்லா நிலைமைகளிலும் அல்ஹம்துலில்லாஹ் என்றே சொல்ல வேண்டும். நாம் அதிருப்தியடைவதாலோ, பொறுமை இழப்பதாலோ துன்பம் அகன்றிடப் போவதில்லை. அதனால் ஈமானுக்கு அபாயம் நேர்ந்திடலாம். இவ்வுலகுடன் மறுமையும் கூட கையை விட்டு கழன்று விடலாம். இது பேரிழப்பன்றோ.

நம் பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படவில்லையே கூடாது, நம்பிக்கை இழக்கக்கூடாது நம்பிக்கை இழப்பது நிராகரிப்ப நிலையாகும். அன்புப்பிள்ளை, அழகுப் பிள்ளை, அறிவுப் பிள்ளை நபி யூசுப் (அலை) அவர்களை விட்டுப் பிரிய நேர்ந்த நபி எஃகூபு (அலை) அவர்கள், அது சம்பந்தமாக துஆ கேட்டார்கள். கேட்டுக் கொண்டே இருந்தார்கள், எப்போது எவ்வளவு காலத்திற்குப் பிறகு அது ஒப்புக் கொள்ளப்பட்டது என்று அறிந்தால் ஆச்சரியப் படுவீர்கள் பதினான்காயிரத்து நாநூறு நாட்கள் அதாவது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அது ஒப்புக் கொள்ளப்பட்டது

நபிகள், சஹாபாக்கள் அனுபவித்த துன்பங்களை, துயரங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனால் மன வலிமை உண்டாகும் ஈமான் பலம் பெறும், அத்துடன் அல்லாஹ்வின் நன்மக்களை அணுகலாம் நிலைமைகளை எடுத்துரைத்து ஆலோசனைகள் பெறலாம். அதுவும் நமக்கு பயன்படும்

மேலும் நமது இயலாமையை பலகீனத்தை, படைத்தவன் முன்
எடுத்துரைத்து நன்மையை, சுகத்தை, இரு உலக வெற்றியை வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வப்போது இஸ் திஃபார் பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எக்கட்டத்திலும் ஈமான் வளர்ச்சியடைய வேண்டுமேயன்றி தளர்ச்சியடையவே கூடாது

பொறுமையாயிருந்தும் தொழுதும் உதவகோருங்கள்' என்பது அல்லாஹ்வின் ஆணை. கேளுங்கள் கொடுக்கப்படும். இன்று அல்லது நாளை என்பது அதன் பொருள். அல்லாஹ் அருள் புரிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக