திங்கள், 27 ஏப்ரல், 2020

மௌலானா பதில்கள்.


கேள்வி: அரசு மூலம் தரப்படும் லோன் - கடன் பெற்று வியாபாரம்
செய்யலாமா...?

பதில்: வட்டிக்கு கடன் வாங்கி அதன் மூலம் வியாபாரம் செய்வதால் அபிவிருத்தியின்மையும், வாழ்வில் நிம்மதியின்மையும் உருவாகும். அத்தோடு மறுமையில் வட்டியைப் புசிப்பவருக்கு கொடுக்கப்படவிருக்கும் தண்டனைகள் குறித்த எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளுங்கள். இப்போது புரிந்திருக்குமே அரசிடம் வட்டிக்குக் கடன் பெற்று வியாபாரம் செய்வது கூடாது என்பது



கேள்வி: அரசு வழங்கும் இலவசங்களை வாங்கலமா..?

பதில்: கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் அரசு சார்பில் வழங்கப்படும் இலவசங்களைப் பெறுவதில் தவறில்லை.

. அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு அதைப் பெறுவதற்கு தகுதியுள்ளவராக இருப்பது.

ஆ. அதைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவரது கண்ணியம் குன்றாமல் இருப்பது.

இ. அப்பொருளின் உபயோகம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பது

கேள்வி: நிலம், துணி போன்றவற்றை வாங்கிக் கொடுத்து புரோக்கர்
கமிஷன் பெறுவது கூடுமா..?

பதில்: அனுமதிக்கப்பட்ட பொருட்களை வாங்குவது, விற்பது, அதற்காக கூலி (கமிஷன்) பெறுவது, அதை இருவரிடமிருந்தோ அல்லது ஒரு தரப்பிலிருந்தோ நிர்ணயம் செய்வதும் அதைப் பெறுவதும் கூடும்.
நூல்: ஷாமீ, பக்கம்: 42, பாகம்: 3, பதாவா மஹ்மூதிய்யா, 4/170

கேள்வி: சீட்டு கட்டி ஏலம் மூலம் பணம் பெற்று நம் தேவைகளுக்கு
பயன்படுத்தலாமா...?

பதில்: பிறரின் பொருளை அவரது மனதிருப்தியின்றி பெறுவது ஆகுமாகாது என நபியவர்கள் நவின்றுள்ளார்கள். எனவே, பிறரின் பொருளை வலுக்கட்டாயமாக நாம் அனுபவிப்பதோ, அல்லது நம் பொருளை (வட்டியில் உள்ளது போல் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு) அதிகமாகக் கொடுப்பதோ கூடாது.

ஒருவர் நிர்ட்பந்தத்தால் ஏலத்தில் தமக்குக் கிடைக்க வேண்டிய பணத்தைவிட குறைவாக பெற்று (ஏலச் சீட்டு விதிமுறைப்படி) திருட்பி செலுத்தும்போது அதிகமாக செலுத்துகிறார்.

உதாரணமாக 10,000 மதிப்புள்ள சீட்டில் சேர்ந்து, அவசர தேவையின் நிமித்தம் ரூ 8.000/- பெற்றுக்கொள்கிறார். அல்லது கடைசியில் ஏலம் எடுப்பவர் தான் கட்டிய பணத்தைவிட அதிகம் பெறுகிறார். இவ்விரண்டு முறைகளுமே கூடாது ஒரு மனிதர் சிரமத்திலுள்ள போது அவருக்கு உதவி செய்யும்படி மார்க்கம் நமக்கு ஆர்வமூட்டு
கிறது. இதுதான் மனிதத் தன்மையும்கூட மாறாக, சிரமத்தின்போது பிறருக்கு உதவி செய்து, கொடுத்த தொகையைவிட அதிகம் பெறுவது வட்டியாகும்.

எனவே, வட்டி சம்பந்தமான எந்த கொடுக்கல் வாங்கலும் தடை செய்யப்பட்டது தான். ஒருவருக்கு கடன் அளித்து அதன் மூலம் வேறு ஆதாயம் பெறுவதும் வட்டிதான்
(
தாவீ ஷரீப், பக்கம்: 229, பாகம்: 2
பதாயிஉஸ் ஸனாயிஃ, பக்கம்: 518, பாகம்: 6

கேள்வி: தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதுவது அவசியமா? அவ்வாறில்லையெனில் குர்ஆன் சபிக்குமா? விளக்கம் தேவை

பதில்: இயன்ற அளவு எழுத்துகளை சரியாக உச்சரிப்பதற்கும், அர்த்தத்தில் மாற்றமும் ஏற்படாமல் இருக்க சரியான இடங்களில் நிறுத்தி ஓதுவதற்கும் தேவையான அளவு தஜ்வீதை அறிந்திருப்பது அவசியம்.

ஒரு மனிதர் தஜ்வீத் கற்பதற்கு மிக முயற்சி செய்தும் வயோதிகத்தினால் கற்றுக் கொள்ள முடியவில்லையெனில் அவர் விதிவிலக்காகும். கற்பதற்கு சக்தியிருந்தும் கற்க முயற்சி செய்யவில்லையெனில், அவர் பாவியாவார்
(இம்தாதுல் ஃபதாவா, பக்கம்: 305, பாகம்: 1)

கேள்வி: தங்க பிஸ்கட்டுகளை வாங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின்
அதை விற்பது கூடுமா...?

பதில்: தங்க பிஸ்கட்டுகளை வாங்கி குறிப்பிட்ட காலத்திற்கு பின் விற்பது கூடும். ஆனால், தட்டுப்பாடு, பஞ்சம் போன்ற நேரங்களில் அதிக விலைக்கு விற்கலாம் என்ற நோக்கில் பொருட்களை பதுக்கிவைப்பது கூடாது. இதை ஹதீஸில் தடை செய்யப்பட்டுள்ளது

கேள்வி: குர்பானி எல்லோரின் மீது கடமையா அல்லது ஜக்காத்
கொடுப்பவர்கள்மீது மட்டும் கடமையா?

பதில்: துல்ஹஜ் பிறை 10,11, 12 ஆகிய நாட்களில் 612 கிராம் வெள்ளி, அல்லது அதன் கிரயத்திற்கு சமமான பொருட்கள், நகைகள் அல்லது பணம் தமது தேவைக்கு அப்பாற்பட்டதாக இருப்பவர்கள்மீது குர்பானி கடமையாகும்
(
ஹிதாயா, பக்கம்: 292, பாகம்: 4)
மேலும், காண்க: மனார் ஜனவரி 2005, 2006 இதழ்கள்

கேள்வி: லுஹ்ர் - அஸ்ர் ஜமாஅத் தொழுகையில் இமாம் சப்தமாக
கிராஅத் ஏன் ஓதுவதில்லை? பர்ளுத் தொழுகையில் முதலிரண்டு
ரக்அத்தில் இணைப்பு சூரா ஓதும் நாம், 3வது, 4வது ரக்அத்தில்
ஓதுவதில்லையே ஏன்..?

பதில்: மார்க்கச் சட்டங்களில் பொதிந்துள்ள நுட்பம், நோக்கங்கள் யாவற்றையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன். இந்த நுட்பங்கள், நோக்கங்கள் பற்றி தெரிந்துகொள்வதை மார்க்கம் நம்மீது கடமையாக்கவில்லை. எனினும், மக்களின் உள்ளங்கள் திருப்திபெறும் நோக்கில் மார்க்க அறிஞர்கள் மார்க்கச் சட்டத்திலுள்ள சில நுணுக்கங்களை விவரித்துள்ளார்கள்.

ஐவேளைத் தொழுகையின் நேரங்களை இரு விதமாக பிரிக்கலாம்.
1. இரவுத் தொழுகைகளான மஃக்ரிபு இஷா, பஜ்ர், போன்ற நேரங்களில் மக்களின் வேலைகள் வெளியிலுள்ள இரைச்சல்கள் குறைந்து அமைதியான நிலை காணப்படும். இதன் மூலம் மனதில் நிம்மதி கிடைக்கும். இது போன்ற நேரங்களில் மனிதன் கேட்கவும் விளங்கவும் தயாராக இருக்கிறான். இந்நேரங்களில் குர்ஆனை கேட்பதால் உள்ளத்தில் பெரும் தாக்கமும் உண்டாகும்

இதனால்தான் பஜ்ர் தொழுகையில் நீண்ட கிராஅத் ஓதுவது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றமாக லுஹ்ர் - அஸ்ர் நேரங்களில் கடை வீதிகளின் சப்தங்கள் - இரைச்சல்கள் உள்ள நேரம். மட்டுமன்றி மக்களுக்கு பல வேலைகள் சிந்தனைகள் உள்ள நேரம். இதையே அல்லாஹ் 'பகல் நேரங்களில் உங்களுக்கு நீண்ட வேலைகள் உள்ளது" என நபியைப் பார்த்து கூறுகிறான். (73:7)

எனவே, இந்த நேரத்தில் மனித உள்ளங்களில் ஓர்மை, முழு கவனம்
இல்லாததால் கிராஅத்தை மெதுவாக ஓத கூறப்பட்டுள்ளது
அல்மஸாலிஹுல் அக்லிய்யா, பக்கம் - 94)

ஆரம்பத்தில் இரு ரக்அத்கள்தான் இருந்தன. பின்னர் அதை பரிபூரணப்படுத்த லுஹர் - அஸ்ர் - இஷாவில் இரு ரக்அத்களும் மஃக்ரிபில் ஒரு ரக்அத்தும் இணைக்கப்பட்டன. எனவே, பின்னர் இணைக்கப்பட்டது முதலில் உள்ளதை விட அந்தஸ்தில் குறைவு என்பது பொதுகச் சட்டம், எனவே இரண்டிற்கும் வித்தியாசத்தை வெளிப்படுத்த 3வது, 4வது ரக்அத்களில் இணைப்பு சூரா ஓத கூறப்படவில்லை.
(
அல்மஸாலிஹுல் அக்லிய்யா, பக்கம்: 101)

கேள்வி: ஜமாஅத் தொழுகையில் ஒரு ரக்அத் - இரு ரக்அத் பிந்தி வந்து சேர்ந்தவர், இமாம் ஸலாம் கொடுத்தபின் மறதியாக ஸலாம் கொடுத்துவிட்டார். நினைவு வந்ததும் உடனே எழுந்து தொழுகையை பூர்த்தியாக்கிவிட்டார். இவர் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டுமா
அல்லது திருப்பித் தொழ வேண்டுமா இதற்கு பல்வேறு விதமான
பதில்கள் கூறப்பட்டுள்ளன. சரியான விளக்கம் தேவை..?

பதில்: ஜமாஅத் தொழுகையின்போது இடையில் சேர்ந்தவர் மீதி ரக்அத்களை மறந்து இமாம் ஸலாம் கொடுத்தபின் தானும் ஸலாம் கொடுத்தபின் கிப்லாவைவிட்டு நெஞ்சை திருப்பாமல், எவ்வித பேச்சுகளையும் பேசாமல் இருந்து, (அதாவது தொழுகைக்கு முரணான சொல், செயல் எதிலும் ஈடுபடாமல் இருந்து) அவருக்கு தானாக ஞாபகம் வந்தோ அல்லது பிறரின் சொல்கேட்டோ மீதி ரக்அத்களை தொழுது, ஸஜ்தா ஸஹ்வு செய்துவிட்டால் அவரது தொழுகை நிறைவேறிவிடும்.

ஆனால் இமாமுக்கு முன்னரோ அல்லது இமாமுடன் சேர்ந்து ஸலாம் கொடுத்து விட்டு, ஞாபகம் ஏற்பட்டு உடனே எழுந்து மீதி ரக்அத்களை பூர்த்தியாக்கினால் இப்போது ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதுவே சரியான சட்டமாகும்
(
ரத்துல் முஹ்தார், பக்கம்: 82, பாகம்: 2)

இது போன்ற சமயத்தில் மதரஸாக்களுக்கு எழுதி கேட்டு தெரிந்து கொள்ளவும்

கேள்வி: மாப்பிள்ளை வீட்டார் கேட்காமல் அன்பளிப்பு என்ற பெயரில் வரதட்சிணை கொடுத்தால் அதைப் பெறுவது கூடுமா? பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் கேவலப்படுத்தக் கூடாது என்பதற்காக கடன் வாங்கி கொடுக்கும் அளவுக்கு வரதட்சணை வளர்ந்துவிட்டது என்பதை கவனத்தில் கொள்க.

பதில்: மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் வரதட்சனை கேட்பதற்கு மார்க்கச் சட்டப்படி எந்த உரிமையும் இல்லை. பெயர் மாற்றினாலும் வரதட்சினையின் சட்டம் மாறாது. எனவே, அன்பளிப்பு என்ற பெயரில் பெறுவதும் கூடாது.

மாப்பிள்ளை வீட்டார் கேட்காமல், தமது பெண்ணுக்கு துணிமனிகள், தேவையான சாமான்கள் கொடுக்கலாம். எனினும், இவ்வாறு கொடுக்கவில்லையெனில் மாப்பிள்ளை வீட்டார் கேவலப்படுத்துவார்கள் என்ற அச்சத்தில், தமது வசதிக்கு மீறி கடன் வாங்கி வரதட்சணை கொடுப்பது, மணமகள் வீட்டார் இதை பெறுவது இரண்டுமே கூடாது.

கேள்வி: மார்க்கச் சட்டப்படி தாடியை சிரைத்தல் கூடாததுதான்
தாடியை ஒழுங்குபடுத்த வெட்டுவது கூடுமா..?

பதில்: ஒரு கைப்பிடியைவிட குறைவான தாடியை வெட்டுவது கூடாது. ஒரு கைப்பிடியைவிட அதிகமான தாடியை வெட்டலாம்
ஃபதாவா மஹ்மூதிய்யா, பக்கம்: 297, பாகம்: 17

2007 ஏப்ரல் மாத மனாருல் ஹுதா இதழிலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக