வியாழன், 9 ஏப்ரல், 2020

ஸஹாபாக்கள் வெற்றிக்கு காரணமென்ன..?




மௌலானா, கலிலுர்ரஹ்மான் சஜ்ஜாத் நுஃமானி நத்வி ஸாஹிப்

இறைக்கட்டளைகள் எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றே! அதுதான் உளத்தூய்மை. 'இக்லாஸ்' என்றும் 'தஸ்கியத்துந் நஃப்ஸ்' என்றும் வழக்குச் சொல்லால் இது அழைக்கப்படுகிறது


ஐம்பெரும் கடமைகள்

என்னை நினைவுகூர்வதற்காக தொழுவீராகஎன்றும், நோன்பு கடமையாக்கப்பட்டது குறித்துக் கூறும்போது, "நீங்கள் இறையச்சமுடையோராக ஆக வேண்டும் என்பதற்காக" என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நினைவுகூர்தல் என்பது உள்ளத்தால் ஏற்படுகிறது. 'தக்வா'வைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும்போது, "இதுதான் தக்வாவின் இடம்" என உள்ளத்தின் பக்கமே சுட்டிக்காட்டினார்கள்

ஸகாத் குறித்து அல்லாஹ் கூறும்போது, "நபியே! அவர்களிடமிருந்து
பொருளை எடுங்கள்! அவர்(களின் மனங்)களைப் பரிசுத்தப்படுத்துங்கள்" எனக் கூறுகின்றான்

ஹஜ்ஜின் நோக்கம் என்ன? என்பதற்கு விடையளிக்கும் அல்லாஹ், "யார் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை மகிமைப்படுத்துவாரோ அது அவர் உள்ளத்தின் தக்வாவுக்குச் சான்றாகும் எனப் பகர்கின்றான் "வாழ்வியல், சமூகவியல், அரசியல் என இஸ்லாமியத் துறைகள் அனைத்தின் நோக்கமும் உளத்தூய்மையே
நமது செயல்களும் நம் உள்ளமும்

நாம் கடமைகளை நிறைவேற்றுகிறோம். நோக்கம் பெறப்படுகிறதா
என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்
உள்ளத்தின் நிலையைக் கவனித்தே செயல்கள் மதிப்பிடப்படுகின்றன. ஒரு பேரறிஞர் கூறுகிறார். "உனது திறமைகளையும், வணக்க வழிபாடுகளையும் கவனித்து உன்னை எடைபோட இயலாது. உன் மனைவி, மக்கள் பணியாளர்கள், அண்டை அயலார் உன்னைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் உன்னை எடைபோட இயலும்' எனவே
மன சீர்திருத்தமே முழு வாழ்க்கையின் செயல்பாடாக உள்ளது

மனத்தூய்மையை ஏற்படுத்தும் காரணிகள்

மனித உள்ளத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதில் சகவாசம்
முக்கிய இடம் வகிக்கிறது. நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களை அன்புடன் பார்த்தபின் எப்படி மாறிவிட்டார்கள். ஈமான் கொண்டு ஒரு தொழுகையைக் கூட நிறைவேற்றவில்லை அதற்குள் அவர்களின் உள்ளங்கள் தூய்மை பெற்றுவிட்டன. அதன் காரணம் அவர்களிடம் காணப்பட்ட நான்கு தன்மைகள்தான்

1. முஹப்பத் (அன்பு), 2. ஸுஹ்பத் (தோழமை), 3. இத்திலாஃ (தன்
குறையறிவித்தல்), 4. இத்திபாஃ (குறைக்கு அளிக்கப்படும் சிகிச்சையப்
பின்பற்றுதல்)

1.முஹப்பத் (அன்பு)

நபித்தோழர்கள் புறக் கண்ணுக்குப் புலப்படும் அண்ணலாரின்
உருவத்தின் மீதுகூட பேரன்பு கொண்டிருந்தனர்
களைப்புற்ற முகமும், சிவந்த கண்களுமாக வழமைக்கு மாறான நிலையில் தம் தோழர் ஹள்ரத் சவ்பான் (ரலி) அவர்களை ஓர் அதிகாலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். கண்டும் காணாதது போன்று செல்வது அன்னாரின் வழக்கமல்ல எனவே, தோற்ற மாற்றம் குறித்து விசாரிக்கின்றார்கள்

ஸவ்பானே! உமக்கு என்ன நேர்ந்தது?" என்று அண்ணலார் வினவ
என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே! நான் நலமாக உள்ளேன்
என்று ஸவ்பான் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்

மீண்டும் நபி (ஸல்) அவர்கள், "பின்னர் ஏன் இந்த நிலை என்று கேட்க அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நேற்று வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தேன். நான் கணித்த நேரத்தைவிட தாமதம் ஏற்பட்டுவிட்டது. இரவு நெருங்கிவிட்டதால் வழியில் ஆபத்துகள் ஏற்படலாம் என்று கருதி அவ்வூரார் என்னை அங்கேயே இரவு தங்கவைத்தனர். நான் இஸ்லாத்தை ஏற்றது முதல் தங்களைவிட்டுத் தூரமாக இருப்பதில் இதுவே முதலிரவு
என்பதால் நான் எப்படிச் சொல்வேன். என்னால் இருக்க முடியவில்லை இரவோடு இரவாக ஓடி வந்துவிட்டேன். இதோ! பொன்முகம் கண்டுவிட்டேன். நிம்மதி பெற்றுவிட்டேன் என்று கூறினார்கள்

தங்கள் பசி, தாகம், களைப்பு,சோகம் அத்தனையும் அந்தத் திருமுகம்
கண்டு போக்கிக்கொண்டவர்கள் நபித்தோழர்கள் இது அண்ணலாரின் புற உடல்மீது அவர்கள் வைத்திருந்த பேரன்பின் ஒரு துளி

இரத்தம் குடித்தார்

ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் தனது உடம்பில் இரத்தம்
கத்தி எடுத்ததன் மூலம் பெறப்பட்ட இரத்தத்தை யாருடைய காலடியும் படாத இடத்தில் புதைக்குமாறு கூறி, ஹள்ரத் தல்ஹா (ரலி) அவர்களை அனுப்பினார்கள். எடுத்துச் சென்றவர் குடித்துவிட்டுத் திரும்பினார். காரணம் கேட்டபோது, "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் இவ்வுலகில் தங்களின் பணியாளனாக இருக்கிறேன். ஆனால், மறுமையில் தாங்கள் எங்கே! நான்
எங்கே! நானோ மன்னிப்புக்காகத் தவித்துக்கொண்டிருப்பேன். எனவே
அல்லாஹ்வின் நேசராகிய தங்கள் இரத்தத்தை என் உடம்போது சேர்த்துக் கொண்டேன். தங்களின் இரத்தம் யாருடைய உடலில் கலந்துவிட்டதோ அவரது உடல் நரகிலிருந்து பாதுகாக்கப்படமல்லவா? என்று கூறினார்கள்

இச்சம்பவத்தால் சிலர் முகம் சுளிக்கின்றனர். இப்படிச் சொல்லாதீர்கள் இரத்தம் அசுத்தமானது, எப்படி குடிக்கலாம் என்றெல்லாம் விமர்சனம் செய்கின்றனர்

இவர்களுக்கு இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்: யார் நபி (ஸல்) அவர்களது உடம்பின் எந்தப் பகுதியிலாவது இரத்தம், சிறுநீர், சளி, எச்சில் போன்ற- அல்லது அவற்றின் பரக்கத்தினால் நோய் நிவாரணம், பாவமன்னிப்பு கிடைப்பது போன்றவற்றிலாவது உறுதி கொள்ளவில்லை என்றால் அவரது இறுதி முடிவு ஈமானுடன் ஏற்படாது
"பாபு மா ஜாஅ ஃபீ இஸ்திஷ்பாயி பிஸவ்பி ரசூலில்லாஹி (ஸல்)" என தனிப்பாடம் அமைத்து இத்தகைய செய்கைகள் நபித்தோழர்களின் வழமை அன்னாரின் புற உடல்மீது கொண்ட காதல் என எழுதுகிறார்கள்

மேற்கத்திய கலாச்சாரத்தில் தம்மை பறிகொடுத்த ஃபேஷன்
இஸ்லாமியர்கள் இதை ஆட்சேபிக்கலாம்

ஹள்ரத் ஹன்ஸா (ரலி)

ஹள்ரத் ஹன்சா (ரலி) அவர்கள் மரண அஞ்சலியை கவிதையாகப்
புனைவதில் தன்னிகரற்றவர். அறியாமைக் காலத்தில் நடந்த ஒரு போரில் தம் சகோதரர்கள் கொலையுண்டதால் அவர் பாடிய இரங்கற்பாவிற்கு இன்று வரை யாராலும் நிகர் செய்ய முடியவில்லை. அன்னார் உஹுதுப் போருக்காக தம் புதல்வர்களை அனுப்பியிருந்தார். ஒவ்வொருவராக இறந்து விட்ட செய்தி வந்தது, தம்மை ஆறுதல்படுத்திக்கொண்டார்.

திடீ ரென நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார் என்ற வதந்தி வந்தது அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. உஹுதை நோக்கி ஓடினார்கள் வழியில் தன் புத்திரர்களின் மரணச் செய்தியை மற்றவர்கள் கூறும்போதெல்லாம் இன்னா லில்லாஹி என்று கூறிக்கொண்டு எனது நேசர் எப்படி இருக்கிறார்? என்று அரற்றியவர்களாக ஓடி உஹுது மலையின் அடிவாரத்திற்கே வந்துவிட்டார்கள். மக்கள் உங்கள் நேசர் நலமாக இருக்கிறார் என்று சொல்லும்போது, இல்லை! நான் அவர்களைக் காண வேண்டும் என துடியாய்த் துடிக்கிறார்கள். கடைசியாக கண்மணி (ஸல்) அவர்களின் கால் பாதம் கண்டதும், யா ரசூலல்லாஹ்! உங்களை உயிரோடு
பார்த்தபின் இனி எனக்கு எந்த துன்பங்கள் வந்தாலும் அது பற்றி எனக்கு கவலையில்லை. என்றுரைத்தார்கள்.

ஆக, அத்தனை நபித்தோழர்களின் உள்ளமும் மின்னிப் பிரகாசிக்கக்
காரணம் இந்த ஆழிய அன்பின்றி வேறென்ன

ஸுஹ்பத் (தோழமை)

இந்த தோழமை எனும் சகவாசம் குறித்து ஒரு நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம்

ஹள்ரத் ஹன்ளழா (ரலி) எனும் நபித்தோழர், தான் நயவஞ்சகராகி
விட்டதாக கூறிக்கொண்டே விதியில் செல்கிறார். அவர்களை இடைமறித்த அபூபக்ர் (ரலி) அவர்கள் நீர் சிறந்த முஃமினாயிற்றே! எனக் கூறி காரணம் கேட்கிறார். அப்போது ஹன்ளலா (ரலி) அவர்கள் இல்லை! நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் நான் இருக்கும்போது எனது நிலை ஒரு விதமாகவும் வீட்டிற்குச் சென்றால் வேறு விதமாகவும் மாறிவிடுகிறது. இது நயவஞ்சகத்
தன்மையின்றி வேறென்ன எனக் கேட்கிறார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் நிலை இவ்வாறெனில் நீர் மட்டுமல்ல இந்த அபூபக்ரும் முனாஃபிக்தான் என்று கூறிவிட்டு, இருவரும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வருகிறார்கள்

இத்திலாஃ - இத்திபாஃ

இத்திலாஃ என்பது தன் குறையைச் சொல்லி மருந்து வேண்டி அதை
முறைப்படி பயன்படுத்துவது
நபித்தோழர்கள் தற்புகழ்ச்சி கொள்ளமாட்டார்கள். மாறாக, 'தன்னிடம் இந்தக் குறை இருக்கிறது' எனக் கூறி அதற்கான நிவாரணம் பெற விழைவார்கள்

ஒரு நபித்தோழர் வந்து கேட்கிறார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே
என் உள்ளம் மிக இறுகிய நிலை உள்ளதாக காணப்படுகிறது
நபி (ஸல்) அவர்கள் அற்புத மருந்தைக் கூறினார்கள்: "நீர் அநாதைகளின் தலையை வருடிவிடுவீராக என்று கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக