சனி, 4 ஏப்ரல், 2020

உன்னிடம் உள்ளதா இந்த அடையாளம்.



நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம். அம்மா பஃத்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் அடியார்களே..... 

நாம் ஒவ்வொருவரும்  நமக்கொன்று ஒரு அடையாளம் இருப்பதை விரும்புவோம். ஆனால் எந்த மாதிரியான அடையாளங்கள் நம்மிடம் இருக்க கூடாது என்பதைப் பற்றி நான் இங்கு பேச வந்துள்ளேன்.

அன்றொருநாள் கியாமத்து நாள் வரும்போது உலகத்தினுடைய நிலமை எப்படி இருக்கும் என்று ஹழ்ரத் அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் கேட்ட போது ஹழ்ரத் அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

1. மனிதர்கள் தொழுகையை இறந்துபோக செய்வார்கள் அதாவது தொழுகை என்பது ஒரு உயிரற்ற சடங்கைப் போல ஏனோ தானோ என்று நிறைவேற்றுவார்கள்

2.அமானிதங்களை நிறைவேற்ற மாட்டார்கள்.

3. நியாயம் என்பது பலவீனமாகும் அநியாயம் செய்வதை மக்கள் பெருமையாக கருதுவார்கள்.

4. அதிகாரிகள் கெட்டவர்களாக இருப்பார்கள்
ஆலோசனை சொல்பவர்கள் தீயவர்களாக இருப்பார்கள்
பதவியில் இருப்பவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பார்கள் ஓதுபவர்கள் பாவிகளாக இருப்பார்கள்.

5. நியாயமாக நடப்பது குறைந்துவிடும் 
விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறும் 
வட்டி என்பது அதிகரித்துவிடும்
கர்ப்பத்தடை செய்து கொள்வார்கள். 
ஆடலும் பாடலும் அதிகமாகிவிடும்
பகல் முழுவதும் மது அருந்துவார்கள் 
சத்தியம் செய்தால் அதை நிறைவேற்ற மாட்டார்கள்.

6. கியாமத் நாளின் நெருக்கத்தில் மனிதர்கள் பள்ளிவாசலில் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு சோம்பல் படுவார்கள் 
என்றாலும் கூட பள்ளிவாசல்களில் ஆடம்பரமான மிம்பர் மேடைகளும் மினராகள் கட்டி பள்ளிவாசல்களை அலங்கரிப்பார்கள் 
குர்ஆனையும் அழகுபடுத்துவார்கள்.

7. லஞ்சம் கொடுப்பதும் மது அருந்துவதும் சர்வசாதாரணம் ஆகிவிடும்.

அறிவற்றவர்கள் அதிகாரிகளாக இருப்பார்கள் கொலை செய்வது சாதாரண விஷயமாக கருதப்படும்.

8. உலகத்துக்காக மார்க்கத்தை விற்பார்கள் உலக நலனுக்காக பெண்களை அந்தப்புரங்களில் இருந்து வெளியேற்றுவார்கள். பெண்கள் ஆண்களோடு வியாபாரத்தில் கலந்து விடுவார்கள்.

9. பெண்கள் ஆண்களைப் போல ஆடை அணிந்து பார்ப்பதற்கு ஆண்களைப் போல தோன்றுவார்கள்.

10. உலக இறுதி நாளில் மனிதர்களுடைய குணம் எப்படி இருக்குமென்றால் தோற்றத்தில் ஆடுகளை போன்ற அடக்கமும் உள்ளத்தில் ஓநாய் போன்ற குணமுடையவர்களாக இருப்பார்கள்.

11. மனதில் கசப்பும் நாவில் இனிமையும் வைத்திருப்பார்கள் 
தோற்றத்தில் அழகாக இருந்தாலும் அவர்களுடைய உள்ளம் பிணத்தை காட்டிலும் நாத்தம் உடையதாக இருக்கும்.

12. தீனுடைய விஷயத்தில் மூளையை செலவு செய்யாமல் உலக விஷயங்களில் ஆராய்ச்சியும் விசாரணையும் அதிகமாக செய்து கொண்டிருப்பார்கள். அந்நாளில் எங்கும் எப்போதும் தீமையே மிகைத்து இருக்கும் என்பதாக கூறினார்கள்.

இப்படிப்பட்ட குணத்தை விட்டும் இப்படிப்பட்ட மனிதர்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடை பெறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக