சனி, 11 ஏப்ரல், 2020

குர்பானி சம்பந்தமான கேள்வி பதில்கள்.



துல்ஹஜ் முதல் பத்து

துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற
நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களைவிட அல்லாஹு தஆலாவுக்கு மிக உவப்பானதாகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)


இறைவனுக்காக வணக்கம் புரிய துல்ஹஜ்ஜின் பத்து நாட்களைவிட
சிறந்த காலம் ஏதுமில்லை. அந்நாட்களில் ஒரு நாள் நோன்பு வைப்பது வருடம் முழுவதும் நோன்பு வைத்ததற்கு நிகராகும். மேலும் அந்நாட்களில் இரவுகளில் ஓரிரவு வணக்கம் புரிவது லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்கியதற்கு நிகராகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்
அறிவிப்பளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ, இப்னு மாஜா

துல்ஹஜ் ஒன்பதாம் நாள்

அரஃபாவின் நோன்பு (துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளின் நோன்பு) நான் அல்லாஹ்வின் மீது அவன் அந்நாளின் முந்தைய ஆண்டு, பிந்தைய ஆண்டு இரு ஆண்டின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆக்குவான்' ஆதரவு வைக்கிறேன்" என நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் பகன்றுள்ளார்கள்
அறிவிப்பாளர்: அபூ கத்தாதா (ரலி), நூல்: முஸ்லிம்

துல்ஹஜ் பத்தாம் நாள் இரவு

இரு பெருநாட்களின் இரவுகளில் யார் நன்மையை நாடியவராக வணக்கம் புரிகிறாரோ அவரது இதயம் மனிதர்களின் இதயங்கள் மரணிக்கும் போது மரணிக்காது என நபி (ஸல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள் அறிவிப்பாளர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி), நூல்: இப்னு மாஜா

துல்ஹஜ் பத்தாம் நாள் (பெருநாள்) பகல்

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
அல்லாஹுதஆலா தனது திருமறையில் எனவே, உமது இறைவனை தொழுது வருவீராக (குர்பானி)அறுத்துப் பலியிடுவீராக! (சூரத்துல் கவ்ஸர்:2) என்று இயம்புகின்றான்


அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் "வசதியிருந்தும் குர்பானி கொடுக்காதவர் நமது தொழும் இடத்திற்கு வரவேண்டாம் என்று, கூறினார்கள் நூல்: முஸ்னது அஹ்மத், இப்னு மாஜா

குர்பானி பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மை கிடைக்கும்" நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல்: முஸ்னது அஹ்மது, இப்னு மாஜா
அத்துடன் "நபி (ஸல்) அவர்கள் இரண்டு கொழுத்த கொம்புள்ள செம்மறி கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். தங்களது திருக்கரத்தாலேயே அவற்றை அறுத்தார்கள். பிஸ்மில்லாஹ் சொன்னார்கள் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறினார்கள். அவர்கள் தமது பாதத்தை பிராணியின் கழுத்தின் மீது வைத்திருந்தார்கள் (நூல்: முஸ்லிம்

வருடத்தில் ஏனைய நாட்களில் நிறைவேற்ற முடியாத இரண்டு
பிரத்யேகமான அமல்கள் இந்த நாட்களிலேயே நிறைவேற்றப்படுகிறது.

1 தக்பீருத் தஷ்ரீக், 2. குர்பானி

தக்பீருத் தஷ்ரீக்

துல்ஹஜ் பிறை 9 ஃபஜ்ர் முதல், பிறை 13 அஸ்ர் வரையிலான 23 நேர ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப்பின் ஆண்கள் மிதமான சப்தத்துடனும் பெண்கள் சப்தமின்றியும்

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா இலாஹஇல்லல்லாஹு வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து
என்று சொல்வது கடமையாகும். (இவையல்லாத வழமையிலுள்ள அதிகப் படியான தக்பீர்களும் விரும்பத் தக்கதாகும்.) பெருநாள் அன்று செய்ய வேண்டிய சுன்னத்தான அமல்கள்:

1, மிஸ்வாக் செய்வது,
2. குளிப்பது,
3 மார்க்க வரம்புக்குட்பட்டு தம்மை அலங்காரம் செய்வது,
4. புதிய அல்லது துவைத்த நல்ல ஆடைகள் உடுத்துவது,
5. நறுமணம் பூசுவது அன்றைய தினம்
6. அதிகாலையிலேயே எழுவது,
7. ஈத்காவுக்கு அதிகாலையிலேயே செல்வது,
8. தொழுகைக்குமுன் பேரீச்சம் பழம் போன்ற வற்றை சாப்பிடுவது,
(இது நோன்பு பெருநாளில் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழும்வரை எதுவும் சாப்பிடாமல் தொழுதபின் தனது குர்பானி
யின் இறைச்சியை சாப்பிடுவது சுன்னைத்தாகும்.)
9. தொழுகைக்கு முன் ஸதகா செய்வது,
10. ஒரு வழியில் சென்று வேறு வழியாக திரும்புவது
11.முடிந்தவரை நடந்து செல்வது,
12, செல்லும் வழியில் சப்தமிட்டு
தக்பீர் முழங்கிக்கொண்டே செல்வது. இதில் வெட்கமோ கூச்சமோ
கொள்ளக் கூடாது. இஸ்லாமிய எழுச்சியை பறைசாற்றுவதே இத்தக்பீர் முழக்கத்தின் நோக்கம்.
13. வசதியிருப்பின் ஈத்காவில் தொழுகையை நிறைவற்றுவது

குர்பானி கொடுக்கும் நபர், துல்ஹஜ் பிறை பார்த்ததிலிருந்து குர்பானி
கொடுக்கும்வரை நகம், முடியை அகற்றாமல் இருப்பது, முஸ்தஹப் விரும்பத்தக்கது

கேள்வி : ஹஜ்ஜுப் பெருநாளில் செய்ய வேண்டிய சிறந்த அமல் எது..?

பதில்: குர்பானி கொடுப்பதாகும் "துல்ஹஜ் பிறை பத்தில் மனிதன்
செய்யும் குர்பானியைவிட வேறந்த செயலும் (அமலும்) அல்லாஹு
தஆலாவிடம் மிக விருப்பமுள்ளதாக இருக்க முடியாது. குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு தனது கொம்புடனும், குளம்புடனும், முடியுடனும் கியாமத்நாளில் வரும். அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது அல்லாஹு தஆலாவிடம் ஒப்புக் கொள்ளப்பட்டுவிடுகிறது. எனவே, (அல்லாஹ்வின் குர்பானியை அடியார்களே பரிபூரணமான மனமகிழ்வுடன்
நிறைவேற்றுங்கள்" என்று பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதீ, இப்னுமாஜா

கேள்வி : குர்பானி யார் தொடுக்க வேண்டும்...?

பதில்: பருவமடைந்த, அறிவுத் தெளிவான, வசதி பெற்ற முகீமான
ஒவ்வொரு முஸ்லிமும் கொடுப்பது வாஜிபாகும். (ஷாஃபிஈ மத்ஹபில் சுன்னத் முஅக்கதா' வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.)

கேள்வி : வசதி பெறுதல் என்றால் என்ன...?

பதில்: ஜகாத் கொடுக்குமளவு வசதி பெற்றிருக்க வேண்டும். (ஷாஃபிஈ மத்ஹப் முறைப்படி: துல்ஹஜ் 10 முதல் 13வரை உள்ள நாள்களுக்குத் தேவையான அத்தியாவசிய செலவுகள் போக குர்பானி பிராணி வாங்கும் அளவுக்கு வசதி உள்ளவர்மீது குர்பானி கொடுப்பது சுன்னத் முஅக்கதாவாகும்.

கேள்வி : ஜகாத்தைப் போன்றே அப்பொருளின் மீது ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டுமா...?

பதில்: இல்லை. ஜகாத்திற்கும், குர்பானிக்கும் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன 

ஐகாத்

1. தங்கம், வெள்ளி, வியாபரப் பொருட்கள், பணம் போன்றவற்றில் மட்டுமே நிஸாபை கணக்கிடப்படும்

2. நிஸாபை அடைந்து அதன் மீது ஒரு வருடம் பூர்த்தியாகி
இருக்க வேண்டும்

குர்பானி

1. இந்த (தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள்) நான்கு பொருட்கள் மூலம் நிஸானபை அடைந்தாலும் கடமையாகும். அஃதன்றி அத்தியாவசியத் தேவைபோக மீதமுள்ள நான்கல்லாத பொருட்களின் பெறுமானத்தின் மூலம் நிஸாபை அடைந்தாலும் குர்பானி கடமையாகும்

2. வருடம் பூர்த்தியாக வேண்டும் என்ற அவசியமில்லை இன்னும் சொல்லப்போனால், குர்பானியின் நாள்களான 10 முதல் 12 வரை உள்ள மூன்று நாள்களில், மூன்றாவது நாளின் மாலைக்குள் ஒருவருக்கு இந்நிஸாபுடைய அளவுக்குப் பொருள் ஏதாவது ஒரு வழியில் கிடைத்துவிட்டாலும் அவர்மீது அன்றைய தினம் குர்பானி கொடுப்பது வாஜிபாகும்

கேள்வி : குர்பானி கொடுக்கும் நாள்கள் எத்தனை..?

பதில்: பிறை 10 முதல் 12 வரையுள்ள மூன்று நாள்களாகும்.

(ஷாஃபி மத்ஹப் 10 முதல் 13 வரையுள்ள நான்கு நாள்களாகும்.)

கேள்வி : குர்பானியின் ஆரம்ப நேரம் எப்போது பதில்: ஈத் தொழுகை நடத்த ஷரீஅத்தில் அனுமதியில்லாத அளவு குக்கிராமமாக இருந்தால், துல்ஹஜ் பிறை 10ஆம் நாள் சுப்ஹு ஏற்பட்டதிலிருந்து குர்பானியின் நேரம் ஆரம்பமாகும். நகரவாசிகள் பெருநாள் தொழுகைககு முன்னர் குர்பானி கொடுப்பது கூடாது. தொழுகைக்குப் பின்னரே கொடுக்கவேண்டும். அவ்வூரில் ஏதாவது ஓர் இடத்தில் தொழுகை நடைபெற்றைருந்தால் போதும்

கேள்வி : நகரவாசிகள் தொழுகைக்கு முன்னரே குர்பானியை அறுத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

பதில்: மீண்டும் ஒரு பிராணியை தொழுகைக்குப் பின்னர் குர்பானி
கொடுக்க வேண்டும்..

கேள்வி : குர்பானியுடைய நாள்களில் குர்பானி கொடுப்பதற்குப் பதிலாக அதற்குரிய பணத்தில் வேறு வகையான தானதர்மங்கள் செய்தால் அது குர்பானியின் கடமைக்கு ஈடாகுமா..?

பதில்: ஈடாகாது. இது அறவே கூடாது. அப்படி செய்தால் அவர்
குர்பானி கொடுக்காத குற்றத்திற்கு ஆளாவார்.

கேள்வி : குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணிகள் எவை..?

பதில்: ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று மட்டும்தான். இவற்றில்
அனைத்து வகையும் (செம்மறி, வெள்ளாடு, பசு, எருது, எருமை) கூடும்
இவையல்லாத கோழி, வாத்து, மான், முயல் போன்ற பிராணிகள்
சாப்பிடுவது ஹலாலாக இருந்தாலும் குர்பானியாக கொடுப்பது கூடாது

கேள்வி : குர்பானிப் பிராணிகளின் வயது வரம்பு என்ன..?

பதில்: 1. செம்மறியாடு, தும்பையாடு:- ஒரு வயது பூர்த்தியாகி இருக்க
வேண்டும். அல்லது ஆறு மாதமாகி நன்கு கொழுத்து ஒரு வயது உடையது போல் இருந்தால் அதனை குர்பானி கொடுப்பது கூடும்

2. வெள்ளாடு: ஒரு வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்

3. மாடு: இரண்டு வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்

4. ஒட்டகம்: ஐந்து வயது முழுமை பெற்றிருக்க வேண்டும்

(ஷாஃபிஈ மத்ஹபுப்படி வெள்ளாடு இரண்டு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். செம்மறி, தும்பையாடு ஒரு வயதைவிடக் குறைவாக இருந்து பல் விழுந்திருந்தால் கூடும்.)

கேள்வி : குர்பானிப் பிராணிகள் குறையற்று இருக்க வேண்டுமா
பதில்: ஆம். குர்பானிப் பிராணிகள் குறையற்று இருப்பது அவசியமாகும்..?

பின்வரும் குறைகள் காணப்பட்டால் குர்பானி கூடாது
1. மூக்கு அறுபட்டது
2. புற்பூண்டுகளை சாப்பிட முடியாத அளவு நாக்கு அறுபட்டு இருப்பது
3. ஆடு (எந்த வகையாக இருப்பினும்) அதன் ஏதேனும் ஒரு மடியில்
பால் வராமல் இருத்தல்.
4. மாடு, ஒட்டகம் (எவ்வகையாக இருப்பினும்) அதன் இரு மடியில்
பால் வராமல் இருத்தல்
5. பிராணி மடி துண்டிக்கப்பட்டதாக இருத்தல். அல்லது மடியில்
காயம், புண் உண்டாகி அதன் மூலம் கன்று, குட்டி, பால் குடிக்க
இயலாத அளவில் இருத்தல்
6. கண்கூடாகத் தெரியக்கூடிய அளவில் பிராணிக்கு நோய் இருத்தல்
7. ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத பிராணியாக இருத்தல்  
(ஷாஃபிஈ மத்ஹபில் இது கூடும்)
8. பிராணி குருடாக இருத்தல், ஒற்றைக் கண் உள்ளதாக இருத்தல் ஒரு கண்ணின் பார்வையில் மூன்றில் ஒரு பாகம் அல்லது அதிகமாக பார்வை குறைவு ஏற்பட்டிருத்தல்
9. பிராணிக்கு இயற்கையிலேயே காது (இரண்டுமோ அல்லது
இரண்டில் ஒன்றோ) இல்லாமல் இருத்தல். அது போல் மூன்றில்
ஒரு பாகம் அல்லது அதைவிட அதிகமாக காது துண்டிக்கப்பட்டு
இருத்தல், சிறிய காதாக இருப்பது இடையூறல்ல 
10. மூன்றில் ஒரு பங்கு அல்லது அதைவிட அதிகமாக வால்
துண்டிக்கப்பட்டிருத்தல்
11. கால் ஊனமான பிராணி. அதாவது மூன்று கால்களால் மட்டுமே நடக்கிறது. நான்காவது காலை பூமியின் மீது வைக்க முடியவில்லை அல்லது வைக்கிறது. ஆனால் அதன் மூலம் நடக்க முடியது என்றிருந்தால் குர்பானி கூடாது

ஆனால் நடக்கும்போது அந்த ஊனமுற்ற காலையும் பூமியில் ஊன்றி அதன் மூலமும் நடக்கிறது என்றாலோ, அல்லது செல்வதற்காக அதன் மீது ஊன்றிக்கொண்டு நொண்டிச் செல்கிறது என்றாலோ அப்பிராணியை குர்பானி கொடுப்பது கூடும்

12. எலும்புகளிலுள்ள மூளை இல்லாமல் போய்விடுமளவு, அல்லது
அறுக்கும் இடம்வரை தானே நடக்க இயலாத அளவு மெலிந்து
இருத்தல்

இவ்வாறின்றி சாதாரணமாக மெலிந்திருந்தால் குர்பானி கொடுக்கலாம். எனினும், நன்கு கொழுத்த பிராணியை குர்பானி கொடுப்பதுமிகவும் ஏற்றமாகும்

13. பிராணிக்கு அனைத்து பற்களும் இல்லாமல் இருத்தல். அல்லது
தீனியை மெல்ல முடியாத அளவு அதிகமான பற்கள் இல்லாமல்
இருத்தல்

14. பிராணிக்கு இயற்கையிலேயே கொம்பு இல்லாவிட்டாலும் அல்லது கொம்பு இருந்து ஓடிந்துவிட்டாலும், அல்லது கொம்பின
உறை குழன்றுவிட்டாலும் பரவாயில்லை. அதைக் குர்பானி கொடுக்கலாம். ஓடிந்ததன் பிரதிபலிப்பு மூளையைப் பாதித்திருந்தால் குர்பானி கொடுப்பது கூடாது

15. மாறு கண், பைத்தியம், சொறி ஆகிய குறைபாடுள்ள பிராணியை
குர்பானி கொடுத்தால் கூடும். எனினும், பைத்தியத்தின் காரணமாக
சாப்பிட, குடிக்க இயலாத அளவுக்கு ஆகிவிட்டால், அதைப் போன்று
சொறியின் காரணமாக மிகவும் மெலிந்து (பலவீனமானதாக) விட்டால் அப்பிராணியை குர்பானி கொடுப்பது கூடாது

கேள்வி : மலட்டுப் பிராணியை குர்பானி கொடுக்கலாமா..?

பதில்: கொடுக்கலாம்

கேள்வி : எந்தப் பிராணிகளை குர்பானி கொடுப்பது சிறப்பு

பதில்: 1. காயடிக்கப்பட்ட பிராணி. ஏனெனில், இதில் இறைச்சி
அதிகமாக, சுவையாக இருக்கும்

2. விலை உயர்ந்த பிராணி

3. வெள்ளாடு, ஒட்டகம், மாடு இவற்றில் பெண் பிராணி சிறந்தது
(
ஷாஃபிஈ மத்ஹபில் எல்லாப் பிராணிகளிலும் ஆண் சிறந்தது. ஆனால் அது அதிகமாக பெண் பிராணியுடன் சேர்ந்ததாக இருக்கக் கூடாது அப்படியிருந்தால் அத்தகைய ஆண் பிராணியைவிட குட்டி ஈன்றிராத.பெண் பிராணி சிறந்ததாகும்

கேள்வி : மேற்கண்ட ஏதேனும் குறைகள், அறுக்கும்போது ஏற்பட்டால் என்னசெய்வது..?

பதில்: அறுக்கும்போது துள்ளுவதாலோ, குதிப்பதாலோ மேற்கண்ட
ஏதேனும் குறை ஏற்பட்டால் பரவாயில்லை. அப்பிராணியை குர்பானி
கொடுக்கலாம்

(
ஷாஃபிஈ : அறுக்கும்போது குறை ஏற்பட்டாலும் அப்பிராணியை
குர்பானி கொடுக்கக் கூடாது. அப்படி அறுத்தால் அது குர்பானியாக
நிகழாது. இறைச்சிக்காக அறுக்கப்பட்டது போன்றாகிவிடும்.)

கேள்வி : பிராணி சூல் (கர்ப்பம்) கொண்டிருந்தால், அது குறையாகுமா....?

பதில்: அது குறையன்று. அதைக் குர்பானி கொடுக்கலாம். எனிலும்
பேறு காலத்திற்கு நெருக்கமாக உள்ள பிராணியை அறுப்பது மக்ரூஹ் ஆகும்

அறுத்தபின் வயிற்றிலிருக்கும் குட்டி உயிருடன் வெளியே வந்தால்
அதனை அறுத்து சாப்பிடலாம். இறந்த நிலையில் எடுக்கப்பட்டால் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களின் கருத்துப்படி சாப்பிடுவது கூடாது

(ஷாஃபிஈ மத்ஹபில் சூல் கொண்ட பிராணியை குர்பானி கொடுப்பது
கூடாது

கூட்டுக் குர்பானி

கேள்வி : குர்பானியை எந்தெந்த முறையில் நிறைவேற்றலாம்...?

பதில்: குர்பானியை 1. தனித் தனியாகவும், 2. கூட்டாகவும் இரு
முறைகளில் நிறைவேற்றலாம்

கேள்வி : கூட்டுக் குர்பானியில் எத்தனை பேர் கூட்டு சேரலாம்? எந்தெந்த பிராணியில் கூட்டு சேரலாம்..?

பதில்: மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏழு பேர் கூட்டு சேரலாம். கூட்டு சேர்பவர்கள் அனைவரும் ஏழில் ஒரு பங்கின் விலையை விட குறையாமல் பணம் செலுத்த வேண்டும்

ஆட்டில் கூட்டு சேர முடியாது. ஒருவர் மட்டுமே ஓர் ஆட்டைக் குர்பானி கொடுக்க இயலும்

கேள்வி : இவ்விரு முறைகளில் எது சிறந்தது...?

பதில்: ஒட்டகம் அல்லது மாட்டில் கூட்டு சேர்ந்து ஏழில் ஒரு பங்கு
கொடுப்பதைவிட தனியாக ஓர் ஆடு கொடுப்பது சிறந்ததாகும். யாரையும் கூட்டாக்காமல் முழு ஒட்டகம் அல்லது முழு மாடு கொடுப்பது, ஓர் ஆட்டைக் கொடுப்பதைவிடச் சிறந்ததாகும்

கேள்வி : கூட்டு சேர்பவர்கள் அனைவரும் குர்பானியின் நிய்யத்
வைத்திருக்க வேண்டுமா...?

பதில்: அவசியமில்லை. ஆனால், அனைவரின் நிய்யத்தும் வணக்கமாக இபாதத்தாக) இருக்க வேண்டும். எனவே ஒருவர் அகீகாவையும் மற்றவர் குர்பானியையும் நாடினாலும் கூடும். யாரேனும் ஒருவர் வணக்கம் (இபாதத்தை நாடாமல் வெறும் இறைச்சிக்காக மட்டும் பங்கு சேர்கிறாரோ அவரது குர்பானி நிறைவேறாது.)

(ஷாஃபிஈ மத்ஹபுப்படி: யார் எப்படி நிய்யத் வைத்தாலும் கூடும்)

கேள்வி : கூட்டு எப்போது சேர வேண்டும்? அனைவரும் பணம் போட்டு மொத்தமாக பிராணியை வாங்க வேண்டுமா? அல்லது ஒருவர் பிராணி வாங்கி வைத்துவிட்டார் அவரிடம் சென்று தன்னை அதில் பங்காக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வது கூடுமாஏதேதும் முறைகள் இருந்தாலும் விளக்குக...!

பதில்: கூட்டு சேர்வதற்குப் பல முறைகள் உள்ளன

1. முதலில் பிராணியை வாங்குவதற்கு முன்பாகவே அனைவரும் கூட்டு சேர்ந்துவிடுவது. இதுவே சிறப்பானதும் பேணுதலும் ஆகும்

2. முதலில் ஒருவர் ஒரு பங்கு அல்லது இத்தனை பங்குகள் எனக்குப் போக மீதமுள்ள பங்குகளில் யாரேனும் கூட்டு சேர்ந்தால் கூட்டு சேர்த்துக்கொள்வேன் என்ற எண்ணத்தில் பிராணியை வாங்கி பின் மற்றவர்கள் அதில் பங்கு சேர்ந்தால் கூடும்

3. எந்த எண்ணமும் இல்லாமல் பிராணி வாங்கினார். பின்னர் மற்றவர்களை அதில் கூட்டாக்கினால் இம்முறையும் கூடும். அனைவரின் குர்பானியும் செல்லும்

4. வாங்கும்போது இப்பிராணி முழுவதையும் தன் ஒருவர் சார்பாக
மட்டும் குர்பானி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாங்கி, பின்பு அதில் பிறரைக் கூட்டாக்கினால் அப்போது பார்க்க வேண்டும். வாங்கியவர் யார்? அவர் குர்பானி வாஜிபாகும் அளவு வசதியுள்ள நிஸாபுடையவராக இருந்து, இவ்வாறு கூட்டு சேர்த்துக்கொண்டால் குர்பானி அனைவரின் தரப்பிலும் நிறைவேறும். எனினும், இது மக்ரூஹாகும்

மாறாக, குர்பானி கடமையாகாத நபராக இருந்து அவர் முழுவதையும் குர்பானி கொடுக்கும் நிய்யத்தில் வாங்கியிருந்தால் இப்பொழுது அவர் பிறரைக் கூட்டு சேர்ப்பது கூடாது. ஏனெனில், குர்பானி கடமையாகாதவர் குர்பானியின் நிய்யத்துடன் குர்பானி பிராணியை வாங்கிவிட்டால் அது நேர்ச்சை குர்பானி போன்று ஆகிவிடுகிறது. அதனை முழுமையாக நிறைவேற்றுவது அவசியமாகும்

5. குர்பானிப் பிராணியை அறுத்த பின்னர் கூட்டாகுதல். அதாவது
அறுத்த பின்னர் ஒருவர் பணம் கொடுத்து எனக்காக ஒரு பங்கு கொடுங்கள் என்று கூட்டு சேர்வது கூடாது

கேள்வி : கூட்டு சேர்ந்தவர்களில் ஒருவர் இறந்துவிட்டால்...?

பதில்: கூட்டுக் குர்பானிக்காக கூட்டு சேர்ந்தவர்களில் யாரேனும்
மரணித்துவிட்டால், வாரிசுதாரர் அனுமதியளித்தால் அந்தப் பிராணியை குர்பானி கொடுக்கலாம். மரணித்தவர், மற்றுமுள்ள கூட்டாளிகளுக்கும் குர்பானி நிறைவேறும்.

வாரிசுதாரர் இவ்வாறு அனுமதியளிக்காத நிலையில் குர்பானி கொடுத்தால் கூடாது. மற்ற எவருக்கும் குர்பானி நிறைவேறாது

கேள்வி : கடமையில்லாதோர் குர்பனி கொடுக்கலாமா? அதற்கென கடன் வாங்கலாமா..?

பதில்: கடமையல்லாதோரும் குர்பானி கொடுக்கலாம். நன்மை கிடைக்கும். ஆனால், கடனைத் திருப்பி செலுத்துவது சிரமமான நபர் கடன் வாங்கிக் கொடுப்பது சிறந்ததன்று. அப்படி செய்தால் கூடிவிடும்.

கேள்வி : கடமையல்லாத நபர் குர்பானிக்காக பிராணி வாங்கிவிட்டால் அதன் சட்டம் என்ன...?

பதில்: கடமையல்லாத நபர் குர்பானி பிராணியை வாங்கிவிட்டால்
அவர் அந்தப் பிராணியையே குர்பானி கொடுப்பது வாஜிபாகிவிடும்
ஏனெனில், அப்பிராணி (நத்ர்) நேர்ச்சை செய்யப்பட்டதன் சட்டத்திற்கு
கீழ் வந்துவிடும்

கேள்வி : குர்பானி பிராணி காணாமல் போய்விட்டால், அல்லது
திருடப்பட்டுவிட்டால், அல்லது மரணித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...?

பதில்: இது போன்ற ஏதாவது காரணத்தால், பிராணி கையை விட்டு
நீங்கிவிட்டால் வாங்கியவர் குர்பானி கடமையானவராக இருந்தால் கடமை நீங்காது. அவர் வேறு பிராணியை வாங்கி அறுப்பது கடமையாகிவிடும்

வாங்கியவர் கடமையாகாதவராக இருப்பின், வேறு பிராணி வாங்கி
அறுக்க வேண்டியதில்லை

கேள்வி : காணாமல் போன பிராணி திரும்பக் கிடைத்துவிட்டால்...?

பதில்: கடமையான நபர் வேறு பிராணி வாங்கி குர்பானி கொடுத்த பிறகு காணாமல் போன முதல் பிராணி வந்துவிட்டால் அதனை அறுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனினும், அதையும் குர்பானிகொடுப்பது சிறப்பாகும்.

கடமையாகாதவரிடமிருந்து காணாமல் போன பிராணி மீண்டும் வந்து விட்டால், அவர் அதைக் குர்பானி கொடுப்பது அவசியமாகும். இவர் காணாமல் போன பிராணிக்குப் பகரமாக வேறு பிராணியை குர்பானி கொடுத்திருந்தாலும் சரியே

கேள்வி : மாடு, ஒட்டகம் போன்றதை முழுமையாக தனி ஒருவர் தனக்காக மட்டும் குர்பானி கொடுக்கலாமா...?

பதில்: ஆம், தாராளமாகக் கொடுக்கலாம்

கேள்வி : வசதி பெற்றவர் குர்பானி கொடுக்காமல் இருந்து குர்பானியின் நாட்கள் முடிந்துவிட்டால் என்ன செய்வது? அவர்மீது ' களா' அவசியமா..? அவசியமெனில், எவ்வாறு செய்ய வேண்டும்...?

பதில்: மேற்சொன்ன நபர் 'களா' செய்வது அவசியமாகும். 'சுளா' என்பது பிராணியை வாங்காமலேயே இருந்து இவ்வாறு நாட்கள் கழிந்துவிட்டால் பிராணியின் விலை மதிப்பிற்கு (ஸதகா) தர்மம் செய்ய வேண்டும்.

குறிப்பு: பணமாக ஸதகா செய்யும்போது, ஓர் ஆட்டின் விலையைக்
கொடுக்க வேண்டும். மாடு அல்லது ஒட்டகத்தின் ஏழு பங்கில் ஒன்றைக் கொடுப்பது கூடாது

பிராணி வாங்கியபின் இவ்வாறு குர்பானி கொடுக்காமல் காலம் முடிந்து விட்டால், அப்பிராணியை உயிருடன் (ஸதகா) தர்மம் செய்துவிட வேண்டும்

கேள்வி : கழிந்த வருடத்தின் குர்பானியை இந்த வருடத்தில் கொடுத்து களா செய்யலாமா...?

பதில்: கூடாது

கேள்வி : இரவு நேரங்களில் குர்பானி கொடுக்கலாமா..?

பதில்: குர்பானி நாட்களில் எந்த நேரத்திலும் குர்பானி கொடுக்கலாம்.
இரவில் கொடுத்தால் கூடும். எனினும், பகலில் கொடுப்பது சிறப்பாகும்.

கேள்வி : குர்பானி பிராணியின் பால், முடி போன்றவற்றை பயன்படுத்தலாமா..?

பதில்: குர்பானி பிராணியை சில நாட்களுக்கு முன்னரே வாங்கி
வளர்ப்பது சிறப்பாகும். எனினும், இச்சமயத்தில் அதன் பாலை பயன்படுத்தக் கூடாது. ஸதகா (தர்மம்) செய்துவிட வேண்டும். முடியை வெட்டக் கூடாது இவ்வாறு பாலை பயன்படுத்தினாலோ, முடியை வெட்டி பயன்படுத்தினாலோ அதன் கிரயத்தை ஸதகா (தர்மம்) செய்வது கடமையாகும்

கேள்வி : கூட்டுக் குர்பானியை நிறைவேற்றியபின், இறைச்சியை துல்லியமாக அளந்துதான் பங்கு பிரிக்க வேண்டுமா? அல்லது தோராயமாக பிரிக்கலாமா..?

பதில்: கூட்டு சேர்ந்தவர்கள் தன் பங்கு இறைச்சியை பிரித்தே ஆக
வேண்டும் என்ற அவசியமில்லை. பிரிக்காமல் மொத்தமாகவும் தர்மம் (ஸதகா) செய்துவிடலாம். ஆனால், யாரேனும் ஒருவர் தனது பங்கு வேண்டும் என்று கேட்டால், அவரது பங்கை பிரிப்பது அவசியமாகும். மேலும் எடை போட்டே பிரிக்க வேண்டும். தோராயமாகப் பிரிக்கக் கூடாது.

கேள்வி : மரணித்தவரின் சார்பாக குர்பானி கொடுப்பது கூடுமா...?

பதில்: கூடும். இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பொதுவாக, குர்பானி இறைச்சியை குர்பானி கொடுப்பவர் சாப்பிடலாம். ஆனால், மரணித்தவருக்காக குர்பானி கொடுப்பதில் இரண்டு முறைகள் உள்ளன

1. மரணித்தவர் தனக்காக குர்பானி கொடுக்குமாறு வஸிய்யத்தோ
கட்டளையோ இட்டிருந்து, அதற்காக குரபான கொடுத்தால், குர்பானி
கொடுத்தவர்கள் அந்த இறைச்சியை சாப்பிடக் கூடாது. முழுவதுமாக ஸதகா தர்மம் செய்துவிட வேண்டும்

2. மரணித்தவர் ஏதும் சொல்லாமல் இவர்களாக குர்பானி கொடுத்திருந்தால் கொடுப்பவர் சாப்பிடலாம்

இறைச்சி தோல் பற்றிய சட்டங்கள்

கேள்வி : குர்பானி இறைச்சியின் சட்டம் என்ன...?

பதில்: குர்பானி இறைச்சியை குர்பானி கொடுத்தவர் பின்வருமறு
உபயோகிக்கலாம்.

1. இறைச்சி முழுவதும், குர்பானி கொடுத்தவர் மற்றும் அவர்
குடும்பத்தாரே சாப்பிடுவது

(ஷாஃபிஈ மத்ஹபுப் படி: இறைச்சியில் சிறிதளவையேனும் தர்மம்
(
ஸதகா) செய்வது கடமையாகும். எனவே, அதுபோக மீதமுள்ள முழு
இறைச்சியை சாப்பிடலாம்.)

2. முழுவதையும் நண்பர்கள், உறவினர்களுக்கு அன்பளிப்பாக
கொடுத்துவிடுவது

(ஷாஃபிஈ மத்ஹபுப் படி: கடமையான கொஞ்ச இறைச்சியை ஸதகா செய்த பின்னர் இவ்வாறு அன்பளிப்பு செய்யலாம்.)

3. முழுவதும் ஏழைகளுக்கு ஸதகா செய்து விடுவது

4. இறைச்சியை மூன்று பங்குகளாக்கி, அதில் ஒன்றை தமக்கும் தம்
குடும்பத்தாருக்கும், மற்றொன்றை உறவினர்கள், நண்பர்களுக்கு
அன்பளிப்பாகவும், மூன்றாவதை ஏழைகளுக்கு ஸதகாவாகவும்
கொடுப்பது சிறப்பான விரும்பத்தக்க முறையாகும்

கேள்வி : குர்பானி தோலின் சட்டம் என்ன...?

பதில்: குர்பானி தோலை பதனிட்டு தானே பயன்படுத்தலாம். அல்லது தோலை பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். அல்லது ஏழைகளுக்கு ஸதகாவாக கொடுக்கலாம். விற்பது கூடாது. அப்படி விற்பனை செய்துவிட்டால் அக்கிரயத்தை ஏழைகளுக்கு ஸதகா செய்துவிடுவது கடமையாகும். அஃதன்றி அக்கிரயத்தை தான் பயன்படுத்துவதோ அல்லது பிறருக்கு அன்பளிப்பாக கொடுப்பதோ கூடாது

கேள்வி : தோலை யாருக்குக் கொடுக்கக் கூடாது

பதில்: 1. மஸ்ஜித் கட்டடப் பணி, மராமத்துப் பணிகளுக்காகவும்

2. அறுத்து உரிப்பவர், உதவியாளர் ஆகியோருக்கு ஊதியமாகவும்

3. முஅத்தின், இமாம் ஆகியோருக்கு சம்பளமாகவும் கொடுப்பது
கூடாது

கேள்வி : மதரஸாக்களுக்கு கொடுக்கலாமா..?

பதில்: மதரஸாவின் கட்டுமானப் பணி, மராமத்துப் பணிகளுக்கோ
கொடுக்காமல் அங்கு பயிலும் மாணவர்களுக்காக கொடுப்பது கூடும்

கேள்வி : தோலை செல்வந்தர்களுக்கு கொடுத்கலாமா..?

பதில்: தோல் தோலாக உள்ள நிலையில் செல்வந்தர்களுக்கு
அன்பளிப்பாக கொடுப்பது கூடும். தோலை விற்று பணமாக ஆக்கிவிட்டால் அக்கிரயத்தை ஏழைகளுக்கு ஸதகா (தர்மம்) செய்வது வாஜிபாகும் செல்வந்தர்களுக்கு கொடுக்கக் கூடாது

அறுப்பதன் சட்டங்கள்

கேள்வி : அறுப்பதன் முறைகள், நிபந்தனைகள் யாவை..?

பதில்: குர்பானிக்கான நிபந்தனை ஒன்றாகும். பொது நிபந்தனைகள்
மூன்றாகும். ஆக மொத்தம் 4

1. அறுப்பவர் முஸ்லிமாக இருப்பது

2. பிஸ்மில்லாஹ் சொல்லி அறுப்பது, பிஸ்மில்லாஹி அல்லாஹு
அக்பர் என சொல்வது சிறப்பாகும்

3. தொண்டை குழிக்கும், தொண்டைக்கும் மத்தியிலுள்ள இரண்டு
இரத்தம் ஓடும் குழாய்களையும், மூச்சுக் குழாய், உணவுக் குழாய் மொத்தம் 4 குழாய்களை துண்டிக்க வேண்டும்

4. குர்பானி கொடுப்பதை நிய்யத் செய்வது

விரும்பத் தக்கவையும், சுன்னத்துகளும்

1. கத்தியைக் கூர்மையாக்கிக்கொள்ளல்
2. பிராணிக்கு தண்ணீர் புகட்டல்
3. மய்யித்தை கப்ரில் வைப்பது போன்று வலப் பக்கம் தலையும்
இடப் பக்கம் காலும் வைக்கப்பட்டு முகத்தை கிப்லாவின் திசையில்
திருப்பிவைத்து அறுப்பது
4. மூன்று கால்களை கட்டியும், ஒரு காலை (வலது கால்) கட்டாலும் வைத்திருப்பது
5. அறுப்பவர் கிப்லாவை முன்னோக்கி நின்று அறுப்பது இயன்றால், குர்பானி கொடுப்பவரே அறுப்பது. முடியாவிட்டால்
அறுக்கும்போது அவ்விடம் இருப்பது இயன்றால் இன்னீ வஜ்ஜஹ்த்து எனும் துஆவை ஒதுவது அல்லாஹும்ம மின்க, வ இலைக அல்லாஹு அக்பர் என்று ஒதுவது அறுத்த பின்னர் "யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்தும் உனது கலீல் இப்ராஹீம் (அலை) அவர்களிடமிருந்து நீ ஏற்றுக்கொண்டது போல் என்னிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என துஆக் கேட்பது பிறருக்காக இருந்தால் 'என்னிடமிருந்து என்பதற்குப் பதிலாக இன்னாரிடமிருந்து' என அவர் பெயரை கூற வேண்டும்

வெறுக்கத்தக்கவை

1. பிராணியின் முன்னிலையில் கத்தியைத் தீட்டுவது
2. ஒரு பிராணியின் முன்னிலையில் மற்றொரு பிராணியை அறுப்பது
3. கழுத்தின் மேல் பாகத்தில் இருந்து அறுப்பது
4. அறுத்தவுடனே தோலை உரிப்பது. இது ஹராமாகும். அறுக்கப்பட்டு அதன் உயிர் போன பின்னரே உடல் சூடு தணிந்து பரிபூரணமாக குளிர்ச்சியான பின்பே தோலை உரிக்க வேண்டும்
5. அறுப்பவர் கிப்லாவின் திசையை பின்னோக்கியவராக இருப்பது

கேள்வி : கண் பார்வையற்றவர் அறுக்கதலாமா..?

பதில்: கண் பார்வை இருக்க வேண்டும் என்பது அறுப்பதன் நிபந்தனைகளில் உள்ளதன்று. அறுக்கும் முறை பேணி கண் பாரவையற்றவர் அறுத்தாலும் கூடும். எனினும், அதில் குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் தவிரந்து கொள்வது நல்லது

கேள்வி : ஊமை அறுத்தால் கூடுமா...?

பதில்: முஸ்லிமான ஊமை அறுத்தால் கூடும். அவரால் நாவால்
பிஸ்மில்லாஹ் மொழிய முடியாததை மன்னிக்கப்படும்

கேள்வி : முஸ்லிம் அறுக்கும்போது மாற்று மதத்தவர் பிராணியை
பிடித்திருந்தால் கூடுமா..?

பதில்: மாற்று மதத்தவர் பிராணியை பிடிக்க முஸ்லிம் அறுத்தால் அது கூடும். ஹலாலாகும். ஏனெனில், பிராணியைப் பிடித்திருப்பவர்
பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டுமென்பதில்லை. மேலும், பிடித்திருக்கும் மாற்று மதத்தவர் பிஸ்மில்லாஹ் சொன்னாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை

குறிப்பு: மேற்சொன்ன சட்டம் பிராணியைப் பிடித்தல் என்ற உதவினயை மட்டும் செய்தால்தான். ஆனால், அறுப்பவர் அறுக்கும்போது கத்தியை வேகமாக செலுத்த அல்லது அறுப்பவரின் கைக்கு வலு சேர்க்க போன்ற உதவிகள் செய்தால் அப்போது உதவி செய்பவர் பிஸ்மில்லாஹ் சொல்வது அவசியமாகும். எனவே, அவ்வுதவியாளர் முஸ்லிமாக இருப்பது அவசியமாகும். இல்லாவிட்டால், அறுத்ததை சாப்பிடுவது ஹராமாகும்

கேள்வி : பெண்கள் அறுத்ததைச் சாப்பிடலாமா...?

பதில்: பெண்கள் அறுத்தாலும் அது ஹலாலாகும்

கேள்வி : பிறருடைய குர்பானி பிராணியை அவருடைய அனுமதியின்றி அறுத்துவிட்டால்..?

பதில்: பிறருடைய குர்பானி பிராணியை அவருடைய அனுமதியின்றி
அறுத்துவிட்டால், அறுத்தவர் பிராணியின் உரிமையாளருக்காக நிய்யத் செய்து அறுத்திருந்தால் பிராணியின் சொந்தக்காரரின் சார்பாக நிறைவேறி விடும். மேலும், அறுத்தவரின் மீது எந்தக் குற்றமும் இல்லை அறுத்தவர் தனக்காக வேண்டி அறுத்திருந்தால் பிராணியின் சொந்தக்காரருக்கு இரண்டு விதமான உரிமைகள் உள்ளன

1.அறுக்கப்பட்ட பிராணியை தன் சார்பாக ஆக்கிக்கொண்டுஅறுக்கப்பட்ட பிராணியை எடுத்துக்கொள்ளலாம். அறுத்தவரின் மீது எந்தக் குற்றமும் இல்லை

2. அறுத்தவருக்காகவே இதனை ஆக்கிவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம்

கேள்வி : அமானிதமாக இரவலாக கொடுத்துவைக்கப்பட்ட பிராணியை கொடுத்துவைக்கப்பட்ட நபர் குர்பானிக்காக அறுத்துவிட்டால் என்ன சட்டம்...? குர்பானி நிறைவேறுமா..?

பதில்: பிராணியின் உரிமையாளர் தானே எடுத்துக்கொண்டாலும் அல்லது பிராணிக்குப் பகரமாக தண்ட பணம் வாங்கிக்கொண்டாலும் எந்த நிலையிலும் இக்குர்பானி நிறைவேறாது

கேள்வி : இரண்டு பேர், தவறுதலாக ஒருவர் மற்றவரின் பிராணியை தன்னுடையது என எண்ணி அறுத்துவிட்டால் என்ன சட்டம்...?

பதில்: இருவரின் குர்பானியும் நிறைவேறிவிடும். மேலும் யார்மீதும் தண்டம் கடமையில்லை

கேள்வி : குடும்பம் முழுவதற்கும் சேர்த்து ஒரு குர்பானி போதுமாகுமா? ஒரு நபர்மீது எத்தனை குர்பானி அவசியம்? மனைவி மக்கள்மீது குர்பானி கடமையா..?

பதில்: குடும்பம் முழுவதற்கும் சேர்த்து ஒரு குர்பானி போதுமாகாது மாறாக, குடும்பத்தில் உள்ளவர்களில் எத்தனை பேரிடம் ஜகாத்தின் அளவு சொத்து இருக்குமோ அவர்கள் ஒவ்வொருவர்மீது குர்பானி கடமையாகும்
ஒருவர் எவ்வளவு பணமுள்ளவராக இருப்பினும் அவர்மீது ஒரு குர்பானி தான் கடமையாகும். மனைவி, மக்களுக்கு ஜகாத்துடைய அளவுக்குள்ள பொருள் அவரவர் (மில்கியத்) சொந்தத்தில் இருக்குமேயானால், அவரவர் மீதும் குர்பானி வாஜிபாகும். இல்லையெனில், கணவர்மீதோ, பெற்றோர் மீதோ வாஜிபாகாது

கேள்வி : பெற்றோர் தனது பிள்ளைகளுக்காக குறிப்பாக பெண் பிள்ளைகளுக்காக நகைகள் சேர்த்து வைத்திருந்தால் அது ஜகாத் அளவு இருந்தால் அதில் குர்பானி கொடுப்பது அவசியமா? குர்பானி அவசியம் என்றால் யாருக்காகக் கொடுக்க வேண்டும்..?

பதில்: பருவமடையாத சிறுமிகளுக்குப் போடப்பட்டிருக்கும் நகைகள் பெற்றோரின் பங்கிலேயே சேர்க்கப்படும். பருவமடைந்த பெண் மக்களுக்குப் போடப்பட்டிருக்கும் நகைகள் அவர்களுக்கே சொந்தமாக கொடுக்கப்பட்டிருந்து, அது நிஸாப் அளவு இருந்தால், அப்பெண் தனியாக குர்பானி கொடுக்க வேண்டும். சொந்தமாக கொடுக்கப்படாமல் இருப்பின், பெற்றோரின் பங்கில் சேர்க்கப்படும்

தொகுப்பு: மெலவி முஹம்மது ஃபாரூக் காஷிஃபி.

டிசம்பர் மாதம் 2007 மனாருல் ஹுதா இதழிலிருந்து..



மேலும் விபரங்களுக்கு...

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

1 கருத்து:

  1. Assalamu alaikum
    கண்ணியத்திற்குரிய ஆலிம் அவர்களுக்கு
    அறுக்கும் சுன்னத்தான முறைகளில் பிராணியை கீழே கிடத்தும் முறையை பின்வருமாறு மாற்றிக் கொள்ளும்படி பணிவுடன் கோருகிறேன்

    பிராணியை இடது விலாப்புறமாக படுக்க வைக்க வேண்டும். இடது கையால் பிராணியின் தலையை பிடித்து வலது கையில் கத்தி இருப்பது போன்று அமைத்துக் கொள்ள வேண்டும். வலது கால் மேலாக கட்டப்படாமல் இருக்க வேண்டும். முகத்தை கிப்லா வின் திசையில் திருப்பிவைத்து அறுப்பது.
    இப்படிக்கு
    முஹம்மது பாரூக்
    கட்டுரை தொகுத்தவன்

    பதிலளிநீக்கு