திங்கள், 30 மே, 2011

அன்னை ஆயிஷா رضي الله عنها




அன்னையின் சிறப்புகள் :

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் செல்வப் புதல்வி தான் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஆவார்கள்.



திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அன்னையவர்களைக் குறித்து பல குர்ஆன் வசனங்களை இறைவன் இறக்கியருளியுள்ளான் என்ற நற்பெருக்குச் சொந்தக்காரராவார்கள்.



இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மணந்து கொண்ட மனைவியர்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதிலும் அன்னையவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.



இன்னும் அந்த சுவனச் சோலைகளில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியாக இருப்பதற்கும் அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டுத் துணியில் வைத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் காட்டப்பட்ட நற்பெயருக்கும் சொந்தக்காரவார்கள்.



இன்னும் இவரை நீங்கள் மணக்கவிருக்கின்றீர்கள், இன்னும் இவரே மறுமைநாளிலும் உங்களுக்கு மனைவியாக இருக்கப் போகின்றவர் என்றும் அப்பொழுது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நன்மாரயம் கூறினார்கள்.



மிகச் சிறந்த அறிவாளியாகவும், அதிக ஞாபகசக்தியும் பெற்றுத் திகழ்ந்த அன்னையவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மிக நீண்ட காலங்கள் வாழ்ந்திருந்ததன் காரணமாக, அதிகமான நபிமொழிகளையும் நமக்கு அறிவிப்புச் செய்திருக்கின்றார்கள்.



இஸ்லாமிய பிக்ஹுச் சட்டங்கள், ஷரீஅத் சட்டங்கள் இன்னும் இஸ்லாமியச் சட்டங்களின் பல கிளைகளிலும் அன்னையவர்களுக்கு இருந்த தெளிவான ஞானத்தின் மூலமாகவும், அதன் விளக்கங்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டிருந்ததன் காரணமாக அவர்களுடன் அதிக நேரங்கள் இணைந்திருந்ததன் காரணமாக அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவைகள், இன்னும் நேர்மை, நாணயம், நம்பிக்கை ஆகியவற்றில் மிகச் சிறந்த விளங்கிய அன்னையவர்கள், அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தார்கள் என்றால் அதில் மிகையில்லை.



அன்னையவர்கள் மிகவும் இளகிய மனதுடையவர்கள். அவர்களது வீட்டிற்குள் நுழைந்த எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றதில்லை. வானவர் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக இறைவனின் ஸலாமைப் பெற்றுக் கொண்ட நற்பேறு பெற்றவர்கள். இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மலரிதழ்களின் மூலமாக சொர்க்கம் உண்டென நன்மாராயத்தைப் பெற்றுக் கொண்டவர்களுமாவார்கள்.



இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி வாழ்வு அன்னையவர்களின் மடியில் தான் கழிந்தது. அதிலும், அன்னையவர்கள் வாழ்ந்த அந்த வீடு தான் இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மண்ணறையாகவும், நெடுதுயில் கொள்ளும் இடமாகவும் ஆனது. அன்னையவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, இப்பொழுதும் எப்பொழுதும் அவர்கள் வாழ்ந்த அந்த இல்லம் வானவர்களால் எப்பொழுதும் சூழப்பட்ட நிலையிலும், இறைவனின் சாந்தியும், சமாதானமும், அருளும் இறங்கிக் கொண்டிருக்கக் கூடிய, புகலிடமான மதீனாவாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.



இந்த உலகத்தில் தோன்றிய, இன்னும் தோன்றவிருக்கின்ற பெண்களில் மர்யம் பின்த் இம்ரான் அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தவிர, மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சிறந்த அருட்கொடைகளுக்கு உரித்தானவராகத் திகழ்கின்றார்கள்.



வானவர் தூதர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அன்னையவர்களின் உருவத்தை பச்சைப் பட்டில் வைத்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கனவில் அன்னையவர்களின் உருவத்தைக் காண்பித்து, இவர் தான் இந்த உலகிலும், மறு உலகிலும் உங்களுக்கு மனைவியாக வாய்க்கப் போகின்ற பெண்மணி என்ற நன்மாரயத்தைப் பெற்றுக் கொண்டவர்களும்,



இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடித்துக் கொண்ட பெண்களில் கன்னிப் பெண்ணாக இருந்த நிலையில் மணமுடிக்கப்பட்டவரும்,



இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி வாழ்வு அன்னையவர்களின் மடியில் கழிந்தது. இன்னும் அன்னையவர்கள் வசித்த இல்லத்தில் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடக்கமும் செய்யப்பட்டார்கள்.



இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அன்னையவர்களும் ஒன்றாக இருந்த பல சமயங்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக வஹி அருளப்பட்ட நற்பெயருக்கு உரித்தானவரும்,



இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆருயிர்த் தோழர், உற்ற நண்பர் அபுபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளும்,



அன்னையவர்களின் மீது களங்கம் சுமத்தப்பட்ட பொழுது, அத்தகைய களங்கத்திற்கு சொந்தக்காரரல்ல என்று இறைவனே சாட்சியமளித்து திருமறை வசனத்தை இறங்கிய நற்பேற்றுக்கும் உரித்தானவரும்,

முஸ்லிமாகவே பிறந்து, முஸ்லிமாகவே வளர்க்கப்பட்டவரும், மிகவும் பரிசுத்தமான சூழ்நிலையில் வார்த்தெடுக்கப்பட்டவரும்,



வல்லோனானாம் அல்லாஹ் தனது மன்னிப்பையும், பேரரருட் கொடைகளையும் அன்னைக்கு வழங்க இருப்பதாக வாக்குறுதி அளித்த அதிர்ஷ்டத்தையும் பெற்றுக் கொண்டவர்களாவார்கள்.



பிறப்பும் வளர்ப்பும், நினைவாற்றல்



ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தாய் வழியும், தந்தை வழியும் மக்காவின் மிகச் சிறந்த பிரபலமான நன்கறியப்பட்ட குலமாக இருந்த காரணத்தால், மக்காவின் செழிப்பு மிக்க குடும்பத்துப் பெண்ணாகப் பிறந்தார்கள். இவர்களது தாயார் உம்மு ருமான் ரளியல்லாஹு அன்ஹா, தந்தையோ மிகப் பிரபலமான நபித்தோழரும், முதல் கலீபாவுமான அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள். உம்மு ருமான் ரளியல்லாஹு அன்ஹா அவர்களது முதல் கணவரது பெயர் அப்துல்லா அஸ்தி, இவருக்குப் பிறந்த மகனின் பெயர் அப்துர் ரஹ்மான். உம்மு ருமானின் முதல் கணவர் இறந்ததன் பின்னர் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவரை மணந்து கொண்டார்கள். இவருக்கும் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் பிறந்த செல்வம் தான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஆவார்கள். கி.பி. 614 ஆம் ஆண்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பிறந்தார்கள்.



இவரது தந்தையாரான அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி திருமறைக் குர்ஆனில் இறைவன் மிகவும் போற்றி சிலாகித்துக் கூறியுள்ளான். அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட நற்பேற்றைப் பெற்றவரும், இன்னும் மிகச் சிறந்த இறையச்சம் உடையவரும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தூதுத்துவப் பணிக்காலத்தில், மக்கத்துக் குறைஷிகள் சொல்லொண்ணா துயரங்களைத் தந்த போது, அந்த இக்கட்டான தருணங்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பக்க பலமாக இருந்த இறைநம்பிக்கையை வெளிப்படுத்தியவரும், இன்னும் தன்னுடைய உயிரை விட தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிரை மதித்தவரும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உற்ற தோழருமாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தை அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்த காரணத்தினால், அவரது புகழுக்கு ஏற்றவாறு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் புகழும் மிகவும் கீர்த்தி மிக்கதுதான்.



இன்னும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தை அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மரணத்திற்குப் பின்னால் கூட தன்னுடைய ஆருயிர்த் தோழரான இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிக அருகில் அடக்கம் செய்யப்பட்ட நற்பேறுக்கு உரித்தானவராகவும் திகழ்ந்தார்கள். இன்னும் சுவனச் சோலைகளில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இணைந்து நுழையும் பாக்கியம் பெற்றவர்களுமாவார்கள்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஐந்து வயதே நிரம்பிய சிறுமியாக இருந்த நேரமது. அப்பொழுது பொம்மைகளை வைத்து விளையாடுவது என்பது சிறுமிகளுக்கே உரிய பொழுது போக்கு மற்றும் விளையாட்டு என்ற அடிப்படையில், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இதில் விலக்காக இருக்கவில்லை, அக்கம் பக்கத்திலுள்ள சிறுமிகளுடன் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.



ஒரு சமயம், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறக்கை உள்ள குதிரையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கையில்,



என்ன ஆயிஷாவே! உங்களுடைய குதிரையில் இறக்கை முளைத்துள்ளது. குதிரைக்கு இறக்கை இருக்காதல்லவா? என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிண்டலாகக் கேட்டார்கள். துடிப்பும், வேடிக்கையும், நகைச்சுவை உணர்வும் கொண்ட சிறுமியாக இருந்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், அந்த இளம் வயதில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கிண்டலான பேச்சுக்கு இவ்வாறு பதில் கூறினார்கள்.



ஆம்! இறைத்தூதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இருந்த குதிரைகளுக்கு இறக்கை இருந்ததல்லவா! என்று பதில் கூறினார்கள்.



மேற்கண்ட சம்பவம் மூலம், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் புத்திக் கூர்மையுள்ள, கேள்விகளுக்கு உடனுக்குடன் தக்க பதில் கொடுக்கக் கூடிய திறன், மார்க்கத்தைப் பற்றிய அறிவு, மற்றும் வரலாறு சம்பந்தமான அறிவு ஆகியவற்றை அந்த இளம் வயதிலேயே பெற்றிருந்த பாங்ககைக் காண முடியும்!



இன்னும் கம்ப்யூட்டர் போல மிகச் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் எந்த சம்பவத்தையும் மறந்ததாக குறிப்புகள் இல்லை. அவர் எதனையும் மறந்து விட்டார் என்று கூறுவதற்குக் கூட ஆதாரங்களில்லை.



இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து, புறப்பட்ட வேளையில் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு எட்டு வயது தான் நிரம்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நடந்த சின்னச் சின்ன விசயங்களைக் கூட அன்னை அவர்கள் ஞாபகம் வைத்திருந்தார்கள். முதன் முதல் இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்று மதீனாவில் உதயமான அந்த வேளையில் நடந்த அத்தனை வரலாற்றுச் சம்பவங்களையும் அன்னை அவர்கள் மிகவும் ஞாபகப்படுத்தி வைத்திருந்தார்கள்.



மணவாழ்க்கை



இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாக அவர்கள் வாழ்க்கைப் பட்ட பொழுது, அவர்களுக்கு ஒன்பது வயது தான் நிரம்பி இருந்தது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முழுக்க முழுக்க ஆதரவளித்து அரவணைத்துக் கொண்டிருந்த அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பிரிவினால் அண்ணலார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாடிக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்தத் திருமணம் நடந்தது.



அன்றைய அரேபியாவின் இரு பெரும் தலைமைக் குலங்களாகத் திகழ்ந்த கதீஜா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் அபூதாலிப் ஆகியோர்கள், மக்காவின் அத்தனை எதிர்ப்புகளிலும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய இருவரும் ஒரு சேர இறையடி சேர்ந்து விட, அந்த இக்கட்டான தருணங்களில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனிமையில் விடப்பட்டது போலவும், எதையோ இழந்து விட்டது போலவும் மிகவும் கைசேததுக்குரியவராக இருந்தார்கள். இன்னும் இவர்கள் இருவரும் இறந்ததன் பின்னர் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களது தோழர்களும் மிகவும் கொடிய கொடூரமான கால கட்டத்தை மக்காவில் சந்திக்க ஆரம்பித்தார்கள்.



ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தில் இணைந்த பொழுது, அவர்கள் மிகப் பெரிய அரண்மனை வாழ்க்கையை வாழவில்லை. மிகப் பெரிய அறையில் தங்க வைக்கப்படவில்லை. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் பனூ நஜ்ஜார் கோத்திரத்தார்கள் வசித்த இடத்திற்கு அருகில் கட்டப்பட்ட மிகச் சிறிய அறையில் தான் தனது மண வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.



அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை 6 அடி நீள அகலத்தையும், மண்ணால் ஆன தரையையும், ஓலையால் வேய்ந்த கூரையையும் கொண்டதாக இருந்தது. மழை நீர் வீட்டினுள் விழாமல் இருப்பதற்கு துணியால் மூடப்பட்டிருந்தது. இன்னும் அந்த அறைக்கு ஒரே ஒரு கதவு தான் இருந்தது. அந்தக் கதவு என்றுமே மூடப்பட்டதுமில்லை. அந்தக் கதவில் மறைப்புக்காக ஒரு துணி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். அந்த அறையை அடுத்து ஒரு அறை சற்று உயரமாக இருந்தது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்பிக்கையாளர்களின் தாய்மார்களை விட்டும் ஒதுங்கி இருந்த கால கட்டத்தில் இந்த அறையில் தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனித்திருந்தார்கள்.



அறையின் உயரம் ஒரு ஆள் நிற்கும் அளவு உயரம் தான் இருந்தது. அந்த அறையில் பாய் ஒன்றும், தட்டு ஒன்றும், தோளால் ஆன தண்ணீர்ப் பை ஒன்றும், மரச் சிறாய்கள் வைத்து தைக்கப்பட்ட தலையணை ஒன்றும் தான் அந்த வீட்டின் சொத்தாக இருந்தது. இதனைத் தவிர்த்து, இந்த உலக வாழ்வை ஞாபகப்படுத்தக் கூடிய பொருட்கள் எதுவும் கிடையாது, இன்னும் மறுமையை ஞாபகப்படுத்தும் பொக்கிஷங்கள் தான் அங்கே காணப்படக்கூடியதாக இருந்தது.



இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த உலக வாழ்வின் ஆடம்பரங்களை விரும்பவில்லை. மாறாக, மரணத்தின் பொழுது ஏழையாகவே மரணிக்க விரும்பினார்கள். இன்னும் உயிர் கொடுத்து எழுப்பப்படக் கூடிய அந்த மறுமை நாளிலே, ஏழைகளுடனும், தேவையுடையவர்களுடனுமே எழுப்பப்பட வேண்டும் என்று தான் அவர்களது பிரார்த்தனையும் இருந்தது.



அன்னையவர்களின் தயாள குணம்



இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது மற்றும் அவர்களது தேவைகளைச் செய்து கொடுக்கும் பொறுப்பாளராக பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்தார்கள். இன்னும் அன்னையவர்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளைக் கூட பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பெற்றுக் கொண்டு, தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் வசதி கூட அவர்களுக்கு இருந்தது. இன்னும் அன்றைய அரேபியாவின் முழு ஆட்சிப் பொறுப்பும் இஸ்லாத்திடம் இருந்து கொண்டிருந்தது. இஸ்லாமிய அரசின் நிறைசேரி என்றழைக்கக் கூடிய நிதியமைச்சகத்துக்கு நாடெங்கிலும் இருந்து பொருள்களும், செல்வங்களும், தானியங்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஆனால், மிகப் பெரிய சாம்ராஜ்யத்திற்குச் சொந்தக்காரராக இருந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்த தினத்தன்று, அவர்களது வீட்டில் சமைக்கக் கூடிய தானியங்கள் இல்லாத நிலை தான் இருந்தது.



இந்த உதாரணமிக்க வாழ்வை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தங்களது இறுதி நாட்கள் வரை கூடக் கடைபிடித்து வாழ்ந்தார்கள். தனக்கு உதவிப் பணமாக நிதியமைச்சகத்திலிருந்து வரும் பணத்தை ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் செலவிடக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது இல்லத்துக்கு வந்து திரும்பும் எந்த ஏழையும் வெறுங் கையுடன் திரும்பியதில்லை.



இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்து தினமும் நிதியமைச்சுக்கு பொருள்களும், செல்வங்களும் குவிந்து கொண்டிருந்த நிலையில், அன்னையவர்கள் நினைத்திருந்தால் மிகச் சிறந்த செல்வச் செழிப்பு மிக்க வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வாழ்வை, தனது இறுதிக் காலம் வரைக்கும் கடைபிடித்து வாழ்ந்து வந்தார்கள்.
 
அப்துல்லா பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் அன்னையின் உடன் பிறந்தாளான அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா ஆகிய இருவரது கொடைத்தன்மையை இங்கு நமக்கு நினைவு இவ்வாறு நினைபடுத்துகின்றார்கள்.



அவர்கள் பெறுகின்ற அனைத்து செல்வங்களையும் அல்லாஹ்வின் பெயரால் தானம் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்ந்தவுடன் அவற்றை தேவைப்படுகின்ற ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கக் கூடியவர்களாகவும், அதே நேரத்தில் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவ்வப்பொழுது சேர்ந்த பணத்தை தானமிடக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.



அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோ, தான் கடன் வாங்கும் நிலையில் இருந்து கொண்டிருக்க நிலையில் கூட, யாராவது எதையாவது கேட்டு வந்து விட்டால் தன்னிடம் இருப்பவற்றைக் கொடுத்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்பொழுது, நீங்களே கடன் வாங்கும் நிலையில் இருக்கும் பொழுது, எதற்கு பிறருக்கு வழங்குகின்றீர்கள் என்று பிறர் கேட்கும் பொழுது, திருப்பிச் செலுத்துகின்ற எண்ணத்துடன் வாங்கும் கடனை அடைப்பதற்கு அல்லாஹ் உதவி புரிவதாக வாக்களித்திருக்கின்றான் அல்லவா! என்று கூறுவார்களாம். இன்னும் நான் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.



ஒரு சமயம், தன்னிடம் இருந்த 70 ஆயிரம் திர்ஹம்களை ஒரே நேரத்தில் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள் அன்னையவர்கள். அப்பொழுது அவர்களது கைத்துண்டு தான் அவர்களிடத்தில் மிச்சமிருந்தது. இன்னும் ஒரு மாலைப் பொழுதில் அவர்களுக்கு ஒரு லட்சம் தினார்களை முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியாவிலிருந்து அனுப்பி வைத்தார்கள். அதனை அப்பொழுதே தானமாக மக்களுக்கு வழங்கி விட்டார்கள்.



அப்பொழுது, அவர்களுக்கு பணிப்பெண்ணாக இருந்த பெண்ணொருத்தி, அன்னையவர்களே..! நீங்கள் இன்றைக்கு நோன்பு வைத்துள்ளீர்கள், உங்களுக்காக எதையாவது ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய பொழுது, நீங்கள் எனக்கு ஏன் இதனை முன்பே தெரியப்படுத்தவில்லை என்று தான் கேட்டார்கள். இன்னும் ஒரு முறை அப்துல்லா பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு லட்சம் திர்ஹம்களை அனுப்பி வைத்தார்கள். அது வந்த வேகத்தில் தானமாக வழங்கப்பட்டு விட்டது அன்னையவர்களால்..!



ஒரு நாள் அன்னையவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். அப்பொழுது ஒரு ஏழைப் பெண் தானமாக எதனையாவது பெற்றுக் கொள்ளும் நோக்கில் அன்னையவர்களின் வீட்டுக்கு வந்திருந்தாள். அப்பொழுது அன்னையவர்கள் தனது பணிப் பெண்ணை நோக்கி, நம்மிடம் இருக்கின்ற அந்த துண்டு ரொட்டியை எடுத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்குமாறு கூறினார்கள். அந்தப் பணிப் பெண்ணோ, அன்னையே..! நீங்கள் நோன்பு திறப்பதற்கு இந்த ரொட்டித் துண்டை விட்டால் நம்மிடம் எதுவும் கிடையாது என்று கூறினார்கள். அதற்கு அன்னையவர்கள், அவளோ பசியென்று நம் வீடு தேடி வந்து நிற்கின்றாள்.



முதலில் அவளது பசியைப் போக்குவோம். மாலையில் நம் பசியைப் போக்க இறைவன் வேறு எதாவதொரு ஏற்பாட்டைச் செய்வான் என்று கூறினார்கள். அன்றைய மாலைப் பொழுதில், நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு வீட்டிலிருந்து அன்னைக்காக சமைத்த இறைச்சித் துண்டு வந்திருந்தது. அப்பொழுது, பார்த்தாயா பெண்ணே..! நாம் காலையில் தானம் கொடுத்ததை விடச் சிறந்த உணவை அல்லாஹ் நமக்காக ஏற்பாடு செய்து தந்திக்கின்றான் என்று கூறினார்கள். முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு விற்ற வீட்டில் தான் அன்னையவர்கள் இருந்தார்கள், இன்னும் தனக்கு வருகின்ற பரிசுப் பணம், உதவிப் பணம் ஆகியவற்றை அல்லாஹ்வின் நேசத்திற்காக அனைத்தையும் தானம் வழங்;கக் கூடியவர்களாக இருந்தார்கள்.



இன்னும், தனது அக்காள் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது மகனான அப்துல்லா பின் சுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக அப்துல்லா பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் தனது சிறிய தாயார் மீது அளப்பரிய பாசத்தை வைத்திருந்ததோடு, அவர்களின் தேவையை நிறைவு செய்து உதவி வந்தார்கள்.



ஒருமுறை, அன்னையவர்கள் மித மிஞ்சி தான தர்மங்கள் வழங்கி வருவதையிட்டு, அப்துல்லா பின் சுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏதோ ஒரு விமர்சனமான வார்த்தைகளை, அன்னையவர்களைப் பற்றிக் கூறி விடுகின்றார்கள். அதனைக் கேட்ட அன்னையவர்கள் மிகவும் கோபம் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் எனது பொருள்களைச் செலவழிப்பதை விமர்சனம் செய்வதற்கும், அதனைத் தடுப்பதற்கும் இந்தப் பூமியில் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அவர் எவ்வாறு இப்படிப்பட்ட விமர்சனத்தைச் சொல்லலாம். இனி ஒரு போதும் நான் அப்துல்லா பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டார்கள். பின் அவர்களது கோபம் தணிந்தது. தனது தவறை நினைத்து, அதற்குப் பிராயச்சித்தமாக சத்தியமிட்டதற்குப் பகரமாக பல அடிமைகளை விடுதலை செய்தார்கள்.



இன்னும் அன்னையவர்கள் மிகவும் இளகிய மனதுடையவர்கள், எளிதில் அவர்களது கண்கள் கண்ணீரைச் சொறிந்து விடும் அளவுக்கு இளகிய மனதுடையவர்கள். ஒரு சமயம் ஒரு பெண் தனது இரு குழந்தைகளுடன் அன்னையின் வீட்டு வாசலில் தானம் கேட்டு வந்து நின்றார். அப்பொழுது அன்னையவர்களிடம் மூன்று பேரீச்சம் பழங்கள் தான் இருந்தது. அதனை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்தார்கள், அதனைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண் - தனது குழந்தைகளுக்கு முறையே ஒரு பழத்தைக் கொடுத்து விட்டு, ஒன்றைத் தானும் வாயில் போட்டுக் கொண்டாள்.



அதில் ஒரு குழந்தை தனக்குக் கொடுக்கப்பட்ட பழத்தை மிக வேகமாகத் தின்று முடித்து விட்டு, தாய் அசை போட்டுக் கொண்டிருக்கும் வாயையே பார்த்துக் கொண்டிருந்தது. தனது குழந்தைகளின் அகோரப் பசிப் பிணியை அறிந்த அந்தத் தாய், தனது வாயிலிருந்த பழத்தை வெளியில் எடுத்து, இரு குழந்தைகளுக்கு ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொடுத்தாள். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் தாங்க இயலாமல், அழுதே விட்டார்கள். அவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கி விட்டார்கள்.



களங்கம் சுமத்தியவர்களை இனங்காட்டினான் இறைவன்



அன்னையவர்களது வாழ்வு பரிசுத்தமானது, இறையச்சம் மிகுந்தது, இருப்பினும் அவர்கள் கூட நயவஞ்சகர்களின் சதித் திட்டத்திலிருந்து தப்பிக்க இயலவில்லை. ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் கதீத் என்ற இடம் நோக்கி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது படையணியை நடத்திச் சென்று கொண்டிருந்தார்கள். பனூ முஸ்தலக் என்ற கோத்திரத்தாருக்கும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது படைக்கும் இடையே சிறியதொரு போர் ஒன்று நடந்தது. இந்தக் குறிப்பிட்ட போரின் பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பல நயவஞ்சகர்கள் சேர்ந்து வந்திருந்தார்கள். அந்தப் போரின் பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது படை மரீஸா என்ற ஆற்றின் கரையை அடைந்த பொழுது, அங்கு சிறிது தங்கி இளைப்பாறி விட்டுச் சென்றார்கள்.



அந்தப் போரின் பொழுது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வந்திருந்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு 19 வயது நிரம்பியிருந்தது, இன்னும் அவர்கள் மிகவும் ஒல்லியாக இளைத்துமிருந்தார்கள். அப்பொழுது, தனது அக்காளான அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்து ஒரு கழுத்து மாலை ஒன்றை இரவல் வாங்கி அணிந்து வந்திருந்தார்கள்.



பாலைவன நடுவே படைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது, தனது சிறு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு அன்னையவர்கள் ஒதுக்குப்புறமான இடம் தேடிச் சென்று விட்டார்கள். திடீரென தான் அணிந்திருந்த கழுத்து மாலையைக் காணாத அன்னையவர்கள், தான் வந்த வழியில் எங்கேயேனும் விழுந்திருக்கக் கூடும் என்று நினைத்து, வந்த வழியே திரும்பி தேடிச் செல்ல ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் அவர்கள், தனது இருப்பிடத்திற்கு மீண்டும் திரும்பி வந்து பார்த்த பொழுது, படைகள் அந்த இடத்தை விட்டும் சென்று விட்டிருந்தன.



அந்தக் காலப் பழக்கம் எவ்வாறிந்ததென்றால் பெண்கள் ஆண்களிடமிருந்து தனித்து வைக்கப்படுவார்கள். இன்னும் பெண்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்யும் பொழுது, அவர்கள் பெட்டி போன்ற பரிகையில் அமர்ந்து பயணம் செய்வார்கள். அந்தப் பெட்டியில் திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டிருக்கும். இதனால் ஆண்கள் அவர்களைப் பார்ப்பது தவிர்க்கப்பட்டிருந்தது.



படைகள் கிளம்பும் பொழுது, ஒட்டகத்தை ஓட்டி வரக் கூடியவர்கள், பெண்கள் உட்கார்ந்திருக்கக் கூடிய அந்தப் பெட்டியை ஒட்டகத்தின் மீது தூக்கி வைக்க, ஒட்டகம் பின் எழுந்து தனது பயணத்தைத் துவங்கும். அது போல ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அமர்ந்து வந்த பெட்டியும் தூக்கி வைக்கப்பட்டது. ஆனால் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அப்பொழுது, மிகவும் இளைத்திருந்த காரணத்தால், பெட்டியைத் தூக்கி வைத்தவர்களுக்கு, உள்ளே ஆள் இருக்கின்றதா? அல்லது இல்லையா என்பதை அறிய இயலாதிருந்தது. எனவே, ஆள் இல்லாமலேயே பெட்டி தூக்கி வைக்கப்பட்டு, படைகள் அந்த இடத்தை விட்டும் நகர்ந்து வெகு தூரம் சென்று விட்டன. இந்த நிலையில், கழுத்து மாலையைத் தேடி விட்டு, திரும்பி வந்த அன்னையவர்கள் படையைக் காணாது, தன்னைக் காணாது மீண்டும் அவர்கள் தன்னை இதே இடத்திற்கு தேடி வருவார்கள் என நினைத்து, பயப்படாமல் அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டார்கள்.



அன்றைய தின வழக்கப்படி, படைகள் விட்டுச் சென்ற பொருட்களை எடுத்து வருவதற்காகவே ஒருவரை நியமித்து வைத்திருப்பார்கள். இவர் படைகள் கிளம்பிச் சென்றவுடன் மிகவும் தாமதமாக அந்த இடத்தை விட்டும் கிளம்பி வருவார். அவ்வாறு அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் தான் சஃப்வான் பின் முஅத்தல் ரளியல்லாஹு அன்ஹு என்பவர்.



இவர் படைகள் எதனையும் விட்டுச் சென்றிருக்கின்றார்களா என்று அந்த இடத்தில் தேடிக் கொண்டு வரும் பொழுது, ஹிஜாப் அணிந்த நிலையில் ஒரு உருவம் ஒன்று, அங்கு தரையில் படுத்துக் கிடப்பதைக் காண்கிறார்கள். தரையில் படுத்துக் கிடப்பது பெண் என்று தெரிந்ததும், சஃப்வான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சற்று ஒதுங்கி நின்று, தனது ஒட்டகத்தை ஓட்டும் தொணியில் குரல் கொடுக்கின்றார்கள். அந்தக் குரலைக் கேட்டு படுத்திருக்கும் பெண் எழும்பட்டும் என்று தான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். ஒட்டகத்தை அதட்டும் குரழின் ஒலியைக் கேட்ட அன்னையவர்கள் விழித்தெழுந்தார்கள். பின் அந்த ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து உட்கார, சஃப்வான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த ஒட்டகத்தை கையில் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.



அன்றைய தினம் மதிய வேளையில் இன்னொரு இடத்தில் படையணி தங்கக் கூடாரம் அடித்துக் கொண்டிருந்த பொழுது, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சஃப்வான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இன்னும் அனைத்து படைவீரர்கள் முன்னிலையிலும் அந்த ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினார்கள். இந்தக் காட்சி, குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று வந்திருந்த நயவஞ்சகர்களுக்கு அவல் கிடைத்தது போலாகி, அவர்கள் அனைவரும் அப்துல்லா பின் சலூல் என்ற நயவஞ்சகனின் தலைமையில் தங்களது சதித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இவனுக்கென்றே தனியானதொரு குணம் உண்டு. அந்த கேடு கெட்ட குணத்தை வைத்து, சந்தேகத்தையும், கிசுகிசுக்களையும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது கதை கட்டி, முஸ்லிம் படைகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த ஆரம்பித்தான்.



இந்த கிசுகிசு மதீனாவின் அனைத்து வீதிகளிலும் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த கிசுகிசுவில் ஹஸன் பின் தாபித், ஹம்னா பின் ஜஹ்ஸ், மற்றும் மஸ்தா பின் அதாதா ஆகியோரும் முன்னணியில் இருந்தார்கள். அந்தக் கிசுகிசுவில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கற்பின் மீது களங்கத்தைச் சுமத்தி பேசப்பட்டது (இறைவன் பாதுகாப்பானாக!). நயவஞ்சகர்கள் தங்களது நயவஞ்சகச் சேற்றை அன்னை மீது வாறி இறைத்த வண்ணமிருந்தார்கள்.



மேலும், இந்த கிசுகிசுக்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காதிற்கும் எட்டியது. தனது குடும்பத்துப் பெண், இன்னும் தனது பிரியமான மனைவியின் மீது களங்கம் சுமத்தப்படுத்திப் பேசப்படுவது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அதிகமான சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் தன்னைச் சுற்றி நடக்கின்ற இந்த அநாகரீக செயல்கள் எதனையும் அறியாதவர்களாக மதீனாவில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தனது கடமைகளைச் செய்து வந்தார்கள்.



ஒருநாள் இரவு, வயதான மஸ்தா பின் அதாதா (ரழி) அவர்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது சிறு தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் மதீனாவின் ஒதுக்குப் புறமான இடத்திற்குச் சென்ற பொழுது, தனது மகனின் கேடு கெட்ட செயலை மனதில் வைத்துக் கொண்டு, தனது மகனைக் குறித்து சாபமிட்டுக் கொண்டே வருகின்றார். அதனைக் கேட்ட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ஏன் நீங்கள் உங்கள் மகன் மீது சாபமிடுகின்றீர்கள், அவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட நற்பேற்றுக்கும் உரியவராவார், நீங்கள் எச்சரிக்கையுடன் உங்கள் மகனைப் பற்றிப் பேசுங்கள் என்று கூறுகின்றார்கள். தனது மகனின் இழி செயலைக் குறித்து விசனப்பட்ட அந்தத் தாய், இந்தப் பிரச்னையை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது காதுகளுக்குக் கொண்டு செல்கின்றார்.



தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பவைகள் குறித்து எதுவுமே அறியாதிருந்த அன்னையவர்கள், தனது காதில் விழுந்த அந்த செய்தியைக் கேட்டவுடன், தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதிவேலைகளை அறிந்தவுடன் அன்னையால் தாங்க முடியவில்லை. அவர்களது முகம் வெளிறிப் போனது. விரைவாக வீடு வந்து சேர்ந்த அன்னையவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தனது தாய், தந்தையரைப் பார்த்து வருவதாகக் கூறி அனுமதி பெற்றுக் கொண்டு, நேரே தனது தாய் வீட்டிற்கு வந்து விடுகின்றார்கள். மதீனாவில் உலவி வந்த இந்த கிசுகிசுக்களை அவர்களும் கேட்டிருந்த காரணத்தினால், அன்னையவர்கள் அணையுடைத்த வெள்ளம் போல அழ ஆரம்பித்து விட்டார்கள். அன்னையவர்களின் பிரியத்திற்குரிய தாயார் தனது மகளின் நிலையை அறிந்து, அவரைத் தேற்ற முயன்றும் அவர்கள் தோற்றுத்தான் போனார்கள். அன்னையவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது.


நீங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரியத்திற்குரிய மனைவியாக இருக்கின்ற காரணத்தினால், உங்கள் மீது பொறாமை கொண்டவர்கள் தான் இந்த களங்கத்தைச் சுமத்தி இருக்கின்றார்கள். எனவே, அழ வேண்டாம், எல்லாம் விரைவில் சரியாகி விடும் என்று அந்த அன்னையவர்கள் வீடு தேடி வந்த தனது மகளான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனால், தூய்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரரான அன்னையவர்கள் எந்த ஆறுதல் வார்த்தைகளையும் செவி கொடுத்துக் கேட்கும் நிலையில் இல்லை. தன் மீது களங்கம் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் தன்னால் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும், மனதில் பாரத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு நிம்மதி அடைய முடியும் என்றார்கள். இரண்டு நாட்கள் இரவும் பகலும் அழுது கொண்டே இருந்ததன் காரணமாக அன்னையின் உடல் நலிவடைந்திருந்தது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக