வெள்ளி, 8 மே, 2020

திருமணமின்றி அமையாது உலகு


மெளலானா S.A. காஜா நிஜாமுத்தீன் யூசுஃபி, திண்டுக்கல்

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ

உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும், அவர்களை நாம் மனைவி மக்களுடையவர்களாகவே ஆக்கிவைத்திருந்தோம். அல்குர்ஆன் 13:38)


நல்லவர்களுக்கு மனைவிமார்கள் இருக்கக்கூடாது" என்ற தவறான கொள்கை நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. இறைத்தூதர்கள் இறைவனோடு மட்டும் தானே தொடர்பு கொள்ளவேண்டும். மனைவியோடு தொடர்பெதற்கு? என்று நினைக்கலாம். இறைத்தொடர்பு இறுதியாவதற்கு இணைத் தொடர்பும் அவசியம் என்பதை அவர்கள் உணரவில்லை. முன்னர் வந்த நபிமார்களுக்கும் மனைவிமார்கள் இருந்திருக்கின்றனர். வழிகாட்டிகள் திருமணம் முடிப்பது மார்க்கத்திற்கு முரணல்ல, என்பது தவிர மனைவி மக்களுடன் வாழ்வதுதான் மனிதனின் இயற்கை என்பதையும் இவ் வசனம் உணர்த்துகிறது.

நிகாஹ்' எனது வழிமுறை" என்று கூறிய நபி அவர்கள் வெட்கம், நறுமணம் பூசுவது, மிஸ்வாக் செய்வது. திருமணம் முடிப்பது, ஆகிய நான்கும் நபிமார்களின் வழிமுறை என்றும் கூறினார்கள். அகசுத்தம், புற சுத்தம் இரண்டையுமே இறைத்தூதர்களின் இனிய பண்புகளாக இந்நபிமொழி கூறுகிறது. குளிக்காமல் அழுக்குடன், துர்நாற்றத்துடன் இருப்பதையும் திருமணம் முடிக்காமல் வெட்கக்கேடான காரியங்களில் ஈடுபடுவதையும் யார் தான் ஏற்றுக் கொள்ள முடியும்


எந்தக் கல்வியறிவும் இல்லாத மெளட்டீக காலத்தில் கண்ணியமிகு கஃபாவை வெட்கமின்றி நிர்வாணமாக வலம் வந்து விட்டு அதுதான் புண்ணியம் நிறைந்தது என்றும் கடவுள் அப்படித்தான் உத்தரவிட்டிருக்கிறார் என்றும் வியாக்கியானம் பேசிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து,


قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ ۖ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
"மானக்கேடானவற்றைச் செய்யும்படி அல்லாஹ் எப்போதும் உத்தரவிடமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மேல் ஏற்றிச் சொல்கிறீர்களா? என்று குர்ஆன் கேட்டது . 7:28)

பெண்களே ஷைத்தானுடைய ஆயுதம்

இஸ்லாத்தைப் போல் வேறெந்த மதமும் திருமணத்திற்கு ஆர்வமூட்டியிருக்க முடியாது, எல்லா வசதியுமிருந்து கல்யாணம் செய்யாமல் இருந்த அக்காஃப் (ரலி) அவர்களைப் பார்த்து நபி அவர்கள் கடுமையான வார்த்தைகளை கூறியிருக்கிறார்கள்.

அக்காஃபே! நீர் ஷைத்தானுடைய சகோதர். கிருத்துவ மதத்தில் இருந்திருந்தால் அவர்களில் ஒரு துறவியாக இருந்திருப்பீர். திருமணம் செய்வதுதான் நம்முடைய நெறிமுறை. உங்களில் மோசமானவர்கள் பிரமச்சாரிகள் தான். இறந்தவர்களில் கேவலமானவர்களும் பிரமச்சாரிகள் தான். ஷைத்தானிய செயல்களிலா ஈடுபடுகிறீர்கள்? ஷைத்தானிடத்தில், திருமணமானவர்களைத் தவிர நல்லடியார்களுக்கெதிராக பெண்களை விட காரியமாகக்கூடிய ஆயுதம் வேறெதுவும் கிடையாது, மணமுடித்தவர்களே பரிசுத்தவான்கள், (அவர்கள்தான்) அருவருப்பான பேச்சுக்களை விட்டும் விலகியிருப்பார்கள்." இதுபோன்ற கடுமையான எச்சரிக்கைகளை கேட்ட அக்காஃப் (ரலி அவர்கள் உடனடியாக அங்கேயே திருமணமும் முடித்துக் கொண்டார்கள். (முஸ்னத் அஹ்மது 5-164)

பிரமச்சாரியம் புண்ணியம் நிறைந்தது என்று கருதும் சமூகத்தில், "குடும்பத்துடன் வாழ்பவன் தான் பரிசுத்தவான்" என்று பகிரங்கமாக அறிவிக்கிறது இஸ்லாம்

போர் பிரகடனம்

தகிய்யுத்தீனுஸ்ஸுபுகீ (ரஹ்) அவர்கள், "திருமணம் முடிப்பது மனிதனுடைய இயற்கை குணம், எனவே, அதை மார்க்க ரீதியாக கட்டாயமாக்கத் தேவையில்லை என்றாலும் ஓர் ஊர்வாசிகள் திருமணத்தை வெறுத்து விட்டார்களென்றால் அவர்களுடன் போர் புரிய வேண்டுமென்று போர்ப்பிரகடனம் செய்துள்ளார்கள்

காது செவிடாகிவிடும்

இறையச்சத்திற்குப் பிறகு (ஸாலிஹான) சிறந்த மனைவியைத் தவிர வேறெதையும் தனக்கு நல்லதாக ஒரு முஸ்லிம் பெற்றுக் கொள்ளமாட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா ஒரு மனிதன் பாவத்தை விட்டும் விலகவேண்மென்றால் முதலில் இறையச்சம் தேவை. "தக்வா" இல்லாமல் பாவங்களை விட்டும் தப்பமுடியாது. நல்லடியார்களைக் கூட ஷைத்தான் பெண்களின் மூலம் பாவத்தில் சிக்க வைத்து விடுகிறான் என்றும் நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள், எனவே இறையச்சத்தை அடுத்து அவனுக்கு பொருத்தமான மனைவிதான் பாவங்களிலிருந்து தப்பித்து கொள்ள தகுந்த ஆயுதமாக பயன்படுகிறாள்

சிறந்த மனைவியை அல்லாஹ் யாருக்கு வழங்கிவிட்டானோ அவருடைய பகுதி மார்க்கத்தில் உதவி செய்துவிட்டான் மற்றொரு பகுதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளட்டும் என்று நபி கூறியுள்ளார்கள். (ஹாகிம்

காமம் கண்ணை குருடாக்கும்; காதைச் செவிடாக்கும். அறிவை மழுங்கடித்துவிடும். அபூ முஸ்லிமுல் கவ்வானி (ரஹ்) அவர்கள், "உடலுறவு கொள்வதின்பால் (பெண்ணின் மீது) உள்ள தேட்டமும் ஆசையும் மோசமானது. அந்த மோகம் வந்து விட்டால் சரியான யோசனையோ சிந்தனையோ இருக்காது. சொல்லப்போனால் அவனுக்கு காதே இருக்காது" என்று கூறினார்கள். (அல் உலமாவுல் உஸ்ஸாப்) அதாவது அவனுக்கு சொல்புத்தியும் இருக்காது; சுயபுத்தியும் இருக்காது. உபதேசத்தை கேட்கவும் மாட்டான், ஏற்றுக்கொள்ளவும் மாட்டான், அவனாகவே கூட தனக்கு நல்லது எது? கெட்டது எது? நாம் என்ன செய்கிறோம்? அதன் பின் விளைவு எப்படி இருக்கும்? என்றெல்லாம் யோசிக்கவும் மாட்டான்.

எனவே, "உங்களுடைய பெண்களுக்கும் விதவைகளுக்கும் திருமணம் முடித்து வையுங்கள்" என்று கெளலானீ ரஹ தம்முடைய கோத்திரத்தாருக்கு கோரிக்கை வைக்கிறார். திருமணம் தான் ஒரு பெண் மானபங்கப் படுத்தப்படுவதை விட்டும் பாதுகாக்கும்

கோட்டைப் பாதுகாப்பு

எதிரி பலசாலியாக இருக்கிறான். தாக்குதலும் கடுமையாக இருக்கிறது. எதிர்த்துத் தாக்குவதற்குத் தேவையான பலம் இவனிடம் இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தற்காலத்தில் குண்டு துளைக்காத மேடை, குண்டு துளைக்காத மாளிகை, வாகனம் இருப்பது போல் அந்தக் காலத்தில் கோட்டைக்குள் பதுங்கிக்கொள்வான். எதிரியின் தாக்குதலைவிட்டும் காப்பாற்றக்கூடிய பாதுகாப்புக் கவசமாக கோட்டை இருப்பது போல் மானக்கேடான காரியங்கள், தவறான நடத்தைகளை விட்டும் விலக்கிவைக்கக்கூடிய கோட்டை என்றே திருமணத்தை குர்ஆன் வர்ணிக்கிறது

திருமணமான பெண்களை குர்ஆன் "வல் முஹ்ஸனாத்" கோட்டையில் பாதுகாக்கப்பட்ட பெண்கள் என்ற பொருள்கொண்ட வார்த்தையால் திருமறை அழைக்கிறது, பார்வையை அந்நியப் பெண்களின் மீது ஓட விடாமல் பூமியோடு ஒட்டிவைக்கக்கூடிய கருவி என்றும் கெட்ட நடத்தைகளிலிருந்து மறைவிடத்தை பாதுகாக்கும் கோட்டை என்றும் நபி அவர்கள் திருமணத்தை புகழ்ந்திருக்கிறார்கள். (புகாரி

கேவலமான சமூகச் சீர் கேட்டை விட்டும் இந்த சமுதாயத்தை பாதுகாக்க வேண்டுமானால் அது முறையான திருமணத்தின் மூலம் தான் முடியும்

பெற்றோர் கவனிக்க

யாருக்காவது குழந்தை பிறந்தால் அழகிய பெயர்வைத்து' நல்லொழுக்கத்தை கற்றுத்தரட்டும். வயதுக்கு வந்துவிட்டால் திருமணம் முடித்துவைக்கட்டும். திருமணத்தை தள்ளிப் போடுவதால் ஏதாவது தவறு செய்து விட்டால் அந்தப் பாவம் தந்தையின் மீதே விழும்." என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள், (மிஷ்காதுல் மஸாபீஹ்) மற்றொரு ஹதீஸில் சன்மார்க்க நெறியில் பிடிப்புள்ள - நல்லொழுக்கமுள்ளவர் உங்களிடம் பெண் கேட்டு வந்தால் அவருக்கு திருமணம் முடித்துக்கொடுங்கள் அப்படி செய்யவில்லையானால் இந்த பூமியில் முடிவில்லா குழப்பங்களும் தீராத பிரச்சினைகளும் ஏற்பட்டுவிடும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி

தற்காலத்தில் இந்த நபிமொழிகள் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டும் பெண்களுடைய உயர்கல்விக்கு நபிப் போதனைகளின் படி செயல்படுவது மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என்று பெண்களின் உயர்கல்விக்கும் கோ எஜுகேஷனுக்கும் நபிமொழியில் ஆதாரம் தேடுபவர்கள் ஏனோ அதன் பின் விளைவுகளை சிந்திப்பதில்லை. மருத்துவம் படிக்காதவன் சிகிச்சை செய்ய முடியாது. ஆனாலும் போலி டாக்டர்கள் மக்களின் உயிருக்கு உலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்

அதே போல் மார்க்கத்தை முறையாக பயின்றவர்கள் தான் மார்க்க விளக்கம் கொடுக்க முடியும். மொழிப்பெயர்ப்பை பெயரளவில் பார்த்துவிட்டு அவரவர் இஷ்டத்திற்கு மார்க்க விளக்கம் கொடுப்பதற்கு நபிமொழிகள் ஒன்றும் நகைச்சுவை கவிதைகள் அல்ல. யார் வேண்டுமானாலும் விளக்கம் சொல்லலாம் என எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டால் மக்களுடைய ஈமானுக்கே உலை வைத்ததாகிவிடும்

பெண்கள் உயர்கல்வி கற்காத போது இருந்த நல்லொழுக்க நடைமுறைகளையோ சீரான குடும்ப பிணைப்புகளையோ இப்பொழுது பார்க்க முடியவில்லை. பெண்களும் டிகிரி வாங்கவேண்டும். வயதும் 30-ஐத் தாண்டுகிறது. பிறகு மாப்பிள்ளை தேடுகிறார்கள். எங்கே கிடைக்கும்? அதே போன்று டிகிரி வாங்கிய மாப்பிள்ளை தான் வேண்டும். இரண்டு பேரும் சமமாக இருந்தால் குடும்பம் எப்படி நிம்மதியாக இருக்கும்?

உலகத்துக்கு இரண்டு கடவுளும் இருக்க முடியாது. ஒரு நாட்டுக்கு இரண்டு அரசனும் இருக்க முடியாது. சரிசமமாக இரண்டு நபர்கள் இருக்கும் இடத்தில் ஒழுங்கான நிர்வாகம் நடந்த சரித்திரத்தை காண்பது அரிது

இணையத்தில் கிடைக்கும் இணைகள்

கல்லூரியில் கல்வி'கற்கிறோம் என்ற பெயரில் எல்லாவற்றையும் கற்றுவிடுகிறார்கள். கற்பை இழந்து விடுகிறார்கள். தேவையில்லாத தொடர்புகள் தொற்றிக் கொள்கின்றன. லவ் மேரேஜுகள் சர்வ சாதாரணமாகிவிட்டன என்பதை விட அதற்கு முன்னாலேயே எல்லாம் முடிந்து விடுகின்றன

 وَلَا تُكْرِهُوا فَتَيَاتِكُمْ عَلَى الْبِغَاءِ إِنْ أَرَدْنَ تَحَصُّنًا لِتَبْتَغُوا عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَ

உலக வாழ்க்கையின் லாபத்தை தேடிக்கொள்வதற்காக உங்களுடய அடிமைப் பெண்கள் ஒழுக்கமாண்பையே விரும்புகிற போதும் அவர்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் 24:33) என்று அல்லாஹ் கூறுகிறான்.

பத்தினியாக ஒழுக்கத் தூய்மையோடு வாழ நினைக்கும் பெண்களையும் விபச்சாரத்தில் தள்ளினார்கள் அன்று இன்று, கல்வி, கடமை போன்ற உயர்ந்த உயர்ந்த போர்வைகளில் விபச்சாரத்தின் பால் ஈர்க்கப்படுகிறார்கள்

வாலிபர்களின் சிந்தனையை நாசமாக்குவதில் இன்றைய இணையதளத்திற்கு பெரும் பங்கு உண்டு. உயர்கல்வி பயிலும் ஆண்களும் பெண்களும் இந்த வலையில் சிக்கிக் கொள்கின்றனர். இது இளம் உள்ளங்களில் வித்தியாசமான உணர்வலைகளையே உண்டாக்கும், முறையான திருமணமே உலகை சீர்படுத்தும்.

நீரின்றி மட்டுமல்ல; திருமணமின்றியும் அமையாது உலகு

வணக்கமாக

தொழுகை, நோன்பு போன்றவை மட்டுமே வணக்க வழிபாடுகளல்ல. இஸ்லாத்தின் பார்வையில் மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நோக்கமும் செய்முறையும் சரியாகிவிட்டால் வணக்கமாகிவிடும். இதன்படி இருமனம் இணைவதை உயர்ந்த வணக்கம் என்று சொல்லலாம். மனைவியுடன் உறவு கொள்வதிலும் நன்மை இருக்கிறது என்று நபி அவர்கள் கூறினார்கள். திருமண உறவு ஆக உயர்வானது என்பதால் தான் ஆகுமாக்கப்பட்ட காரியங்களில் தலாக் அல்லாஹ்வுக்கு கோபமூட்டும் காரியம் என்று ஒரு நபிமொழி கூறுகிறது. (அபூதாவூத்

இப்லீஸ் தன்னுடைய சகாக்களை ஒன்று கூட்டி அடியார்களை அவர்கள் எப்படியெல்லாம் வழி கெடுத்தார்கள் என்பது பற்றி விசாரிப்பான். அப்பொழுது கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தியவனை கட்டியணைத்து வாழ்த்துவான் என்று நபி அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வை கோபமூட்டக்கூடிய செயல் ஷைத்தானை சந்தோஷப்படுத்துமென்பதில் என்ன வியப்பு இருக்கப் போகிறது

MANARUL HUDA
RABIUL AAKHIR - 1431
APRIL -2010




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக