திங்கள், 4 நவம்பர், 2013

உள்ளத்தை தூய்மை படுத்துவோம்!


  
"யார் தன் ஆத்மாவை பரிசுத்த படுத்திக் கொண்டார்களோ?நிச்சயமாக அவர்கள் வெற்றி பெற்றவராக ஆகிவிட்டார்.யார் தன் ஆத்மாவை அழுக்காக்கி கொண்டாரோ?நிச்சயமாக அவர் நஷ்டவாளியாக ஆகிவிட்டார்."(அல்குர் ஆன்:91- 9,10)
"எவர் தம் நப்ஸ் எனும் ஆத்மாவை சொந்தப்படுத்திக்(கட்டுப்படுத்திக்)கொண்டாரோ?அவர்தாம் அறிவாளி"என அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல்:மிஷ்காத்)
நப்ஸ் என்னும் ஆத்மாவை பற்றி இமாம் பூஸரி(ரஹ்)அவர்கள் தம்முடைய கஸீதத்துல் புர்தாவில் இவ்வாறு கூறுகிறார்கள்;

"உள்ளம் என்பது ஓர் கைக்குழந்தையை போன்றதாகும்,குழந்தைகளுக்கு 2வயது வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கலாம்.2வயதுக்கு பின்னரும் தாய்ப்பால் கொடுத்துப் பழக்கினால் வாழ்நாள் முழுதும் பால் கேட்டுக்கொண்டேதான் இருக்கும்."

இது போலத்தான் ஆத்மா என்னும் உள்ளத்தை வழிகேட்டின் பக்கம் செலுத்தினால் வாழ்நாள் முழுதும் ஆத்மா வழிகேட்டில் தான் இருக்கும்.
மாறாக ஆத்மாவை நேரான வழியில் செலுத்தினால் வாழ்நாள் முழுதும் ஆத்மா பரிசுத்தத்திலேயே இருக்கும்.
சிறு குழந்தைக்கும் புரிவதை போல இமாம் பூஸரி(ரஹ்)அவர்கள் கூறியுள்ள இவ்விஷயம் உள்ளம் பற்றிய சிந்தனையை நமக்குள் உருவாக்க வேண்டும்.
ஹழ்ரத் உமர்(ரலி)அவர்களின் உள்ளத்தை உரசிப்பார்த்த மக்கள்;

ஜெருஸலத்தை வெற்றி கண்ட போது அந்நாட்டு மக்கள் ஹழ்ரத் உமர்(ரலி)அவர்களுக்கு மூன்று விதமான பொருள்களை அன்பு பரிசாக வழங்கினர்;

அழகுமிக்க ஓர் அடிமைப்பெண், வாசனை திரவிய குப்பி ஒன்றும், விஷம் நிறைந்த குப்பி ஒன்றும் கொடுத்து கலிபா அவர்களே,

இந்த விஷத்தை நைல்நதியில் கலக்கி விட்டால் இந்நதி நீரையே குடித்து வாழும் நதிக்கு அப்பால் உள்ள நமது எதிரிகள் செத்து மடிந்து விடுவர் எனக்கூறினர்.
ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஹழ்ரத் உமர்(ரலி)அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட அடிமைப் பெண்ணை உரிமை விட்டதுடன்,வாசனை திரவியத்தையும் மற்றவருக்கு கொடுத்து விட்டு,

என்னருமை மக்களே;எதிரிகளானாலும் அவர்களை விஷம் வைத்து கொள்வது நயவஞ்சக செயலாகும்.நீங்கள் விரும்பினால்,இந்த விஷத்தை நானே அருந்திக்கொள்கிறேன் என்று கூறியதும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்,

ஒருவர் மனமுவந்து கொடுத்த அன்பளிப்பை திருப்பிக் கொடுத்து அவரின் மனதை புண்படுத்தாதீர் என்ற நபிகளின் வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையிலேயே ஹழ்ரத் உமர்(ரலி)இவ்வாறு கூறினார்கள்.
எதிரிகளானாலும் அவர்களை போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமே தவிர நயவஞ்சகத்தால் அல்ல என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்கள் நபித்தோழர்கள்.
உங்கள் நாவுகளால் கூட பிறரை நோவினை படுத்தாதீர். என்ற எம்பெருமானாரின் வார்த்தையை வாழ்வியல் நெறியாக அமைத்துக் கொள்ளும் வகையில்,முஃமீன்களாகிய நம் அனைவரின் உள்ளங்களையும் நாம் பரிசுத்தப் படுத்திக்கொள்வோமாக!

மறுமையில் பரிசுத்த ஆத்மாக்களின் கூட்டத்தோடு நம் அனைவருடைய ஆத்மாவும் சேர்ந்து கொள்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள்புரிவானாகவும் ஆமீன்!


                                                                                      (கீழை நிஷா புதல்வன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக