புதன், 21 பிப்ரவரி, 2024

கழிவறை ஒழுங்குகள்

 


உலகில் எந்த மதமும், மார்க்கமும் சொல்லித் தராத
கழிவறை ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்


‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ‏


அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.

(அல்குர்ஆன் : 9:108)

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த கழிப்பறை ஒழுக்கங்கள் பல உள்ளன.

* கழிவறையில் நுழையும்போது முதலில் இடது காலை வைத்து நுழைய வேண்டும். கழிவறையில் இரு பாதங்கள் வைக்குமிடத்தில் முதலில் வலது காலை வைத்து உட்கார வேண்டும். எழுந்திருக்கும்போது இடது காலை எடுத்து வைத்து வர வேண்டும்.

(நூல்:இப்னு மாஜா)



*முடிந்தவரை குனிந்து ஆடைகளைத் திறக்க வேண்டும்.

(நூல்: அபூதாவூது)

* இறைவசனம் அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமம் கண்ணுக்குத் தென்படுகிற அளவு எழுதப்பட்டுள்ள மோதிரம் போன்ற வஸ்துக்களை கழிவரையில் நுழையும் முன்பு களைந்து விட்டுச் செல்ல வேண்டும்.

(நூல்: மிஷ்காத்)

*கழிவறையில் கிப்லாவை முன்னோக்கவும் கூடாது. பின்னோக்கவும் கூடாது.

(நூல்: மிஷ்காத்)

* மலஜலம் கழிக்கும்போது அந்தரங்க உறுப்பை வலது கையால் தொடாமல் இருக்க வேண்டும்.

(நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

* மலஜலத் துளிகள் உடலில் படாது பார்த்துக் கொள்ள வேண்டும். கப்ருடைய (மண்ணறையுடைய) வேதனை பெரும்பாலும் சிறுநீர்த்துளிகளில் கவனக்குறைவாக இருப்பதினால் ஏற்படுகிறது.

(நூல்: திர்மிதீ)

* கழிவறை இல்லாத இடங்களில் காடு, கரைகளுக்குச் செல்லும்போது பிறர் பார்வை படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

(நூல்: திர்மிதீ)

* சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யுங்கள். கப்ருடைய வேதனைகளில் பெரும்பாலானவை இதில் அலட்சியம் செய்வதாலேயே ஏற்படுகிறது.

(நூல்கள்: இப்னு மாஜா, தார குத்னி, ஹாக்கிம்)

* சிறுநீர் கழிப்பதற்காகச் செல்லும்போது சிறுநீர்த்துளிகள் தெறிக்காத, நீர்களை உறிஞ்சி விடும்படியான மண்பகுதியைத் தேடிச் செல்ல வேண்டும்.

(நூல்: திர்மிதீ)

* சிறுநீர், மலம் கழிக்கும்போது பேசக்கூடாது. அதனால் அல்லாஹ் கோபப்படுகிறான்.

(நூல்: புகாரி)

* பொது இடங்களில், நடைபாதைகளில், நிழல் தரும் மரத்தடியில் அசுத்தம் செய்யக் கூடாது.

(நூல்: புகாரி)

* வலது கரத்தைக் கொண்டு பிறவி உறுப்பைத் தொடக்கூடாது.

(நூல்: புகாரி)

* தகுந்த காரணமின்றி நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது.

(நூல்: அபூதாவூது)

* பொந்தில், தேங்கி நிற்கும் தண்ணீரில், குடிநீரில் சிறுநீர் கழிக்கலாகாது.

(நூல்: அபூதாவூது)

* ஆற்றோரங்களில் சிறுநீர் கழிக்காதீர்கள். அதுபோல் சாலையின் உயர்ந்த பகுதிகளிலும், நிழல் நிறைந்த இடங்களிலும் சிறுநீர் கழிக்காதீர்கள்.

(நூல்: அபூதாவூது)

ஹதீஸில் துஆக்கள்:
கழிவறையில் நுழையும் போது

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி.
பொருள் : இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: புகாரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக