சனி, 29 ஆகஸ்ட், 2015

சிந்தித்து செயல்பட்டால்...





ஒரு மான் தனது குட்டிகளுடன் காட்டில் விளையாடிக்கொண்டு இருந்த போது வழிதவறி சிங்கத்தின் குகைக்குள் சென்று விட்டது.
உள்ளே சென்றதும் சிங்கம் சாப்பிட்டு மீதம் வைத்திருந்த எலும்புகளை பார்த்து பயந்து, தன் குட்டிகளுடன் வெளியேற நினைக்கையில், வெளியே இரை தேட போயிருந்த சிங்கம் இரைகிடைக்காத விரக்தியில் திரும்ப வந்து விட்டது.



குகையினுள் ஆரவாரம் கேட்ட சிங்கமோ, இன்று நமக்கு நல்ல வேட்டைதான் என நினைத்து உள்ளே செல்ல எத்தனைக்கையில், சிங்கத்தை தூரத்திலே பார்த்து விட்ட புத்திசாலி மானோ, உடன் தன் குட்டிகளைப் பார்த்து பிள்ளைகளே நீண்ட நாட்களாக சிங்க கறி சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்டீர்களே, இது தான் சிங்கத்தின் குகை.
வெளியே சென்ற சிங்கம் திரும்ப வந்ததும் ஒரே அடியில் அடித்துக் கொன்று உங்களுக்கு சுவை மிக்க சிங்க கறி இன்று எப்படியாவது கொடுத்து விடுகிறேன் என்று சப்தமாக பேசியது.


அது குகையில் எதிரொலித்து சிங்கத்தின் காதை வந்தடைந்ததும், பயந்து போன சிங்கம் நம்மைவிட பெரிய வலிமையான விலங்கு நம்குகைக்குள் வந்து விட்டதே, நாம் உள்ளே சென்றால் நம்கதி அதோகதிதான் என நினைத்து விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடியது.
மானும் நிம்மதியாயிற்று.


இது முடிவல்ல தொடர்ந்து படியுங்கள்....!!


மூச்சிறைக்க ஓடி வந்த சிங்கத்தை வழியில் பார்த்த தந்திரம் மிக்க நரி ஒன்று என்ன விவரம் எனக் கேட்க சிங்கமும் நடந்ததை கூறியது. உடனே சிங்கத்தை பார்த்து ஏளனமாக சிரித்த நரி, நீதான் காட்டுக்கே ராஜா, உன்னை விட வலியையான விலங்கு இந்த காட்டிலேயே கிடையாது.
நீயே இப்படி பயந்து செத்தால் யார் உன்னைப் பார்த்து பயப்படுவார்கள்.
வா, நானும் உன்னுடன் வருகிறேன். குகைக்குள் சென்று அது எந்த விலங்கு என்று பார்த்து விடலாம். ஆனால் நீ அந்த விலங்கை அடித்துக் கொன்றால் எனக்கும் பாதி கொடுத்துவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் திரும்ப குகைக்கு சிங்கத்தை அழைத்து வந்து விட்டது.


இதை கவனித்துவிட்ட அந்த புத்திசாலி மான், இந்த முறை அதிக சத்தத்துடன் சிரித்து தன் குட்டிகளிடம், பார்த்தீர்களா தப்பியோடிய சிங்கத்தை, நரி நம்மிடம் ஒப்புக் கொண்டது போல் ஆசை வார்த்தை காட்டி அழைத்து வந்துவிட்டது.
ஆகவே நம் ஒப்பந்தப்படி சிங்கத்தை அடித்துக் கொன்று, நமக்கு பாதியும் நரிக்குப் பாதியாகவும் பிரித்துக் கொள்ளலாம். பிறகு ஒருநாள் உங்களுக்கு முழு சிங்கம் அடித்து கொடுக்கிறேன், அமைதியாக இருங்கள் என்றது.
அவ்வளவுதான் சிங்கம் சினத்தோடு நரியை துரத்த நரியோ ஓட்டமெடுத்தது.
மான்களும் நிம்மதியாக தனது புதருக்கு சென்று விட்டது.


ஆக எந்த ஒரு நிலையிலும் நாம் தடுமாறாமல் சமயோஜிதமாக, தீர்க்கமாக சிந்தித்து செயல்பட்டால், மலையளவு பிரச்சனையையும் சிறு கடுகு போல் சமாளித்து விடலாம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக