சனி, 4 ஜூன், 2011

சொர்க்கத்துக்குச் சொந்தக்காரர்




அப்துல்லாஹ் என்பது அவருடைய பெயர். அவர் ஒரு யூதர். அதிலும் மார்க்க அறிஞர். யூத சட்டதிட்டங்களையும் தவ்ராத் வேதத்தையும் கரைத்துக் குடித்தவர். மதீனாவிற்கு இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தவுடன் ஊரெல்லாம் இஸ்லாமைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.

யூதர்களின் வேதமான தவ்ராத்திலும் இறுதித்தூதரைப் பற்றி கூறப்பட்டிருந்தது. அப்துல்லாஹ் ஒரு மார்க்க அறிஞர் என்பதால் ஏற்கனவே அதைப்பற்றி அறிந்திருந்தார். சத்தியம் இதுதான் என்று தெரிந்த பிறகு அவர் சற்றும் தாமதிக்கவில்லை. உடனே, இறைத்தூதரைச் சந்தித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.

ஒருநாள் இரவு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கனவு! வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனம்.தென்றல் தாலாட்டில் பூக்கள் எல்லாம் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. பச்சை நிறத்தை பனியில் நனைத்து காணும் இடமெல்லாம் தூவியது போன்ற தோற்றம்.

பூமியில் உள்ள அழகை எல்லாம் ஒன்றாக ஓரிடத்தில் கொட்டியது போலக் காட்சியளிக்கின்றது அந்த அற்புத நந்தவனம். அழகு வனத்தின் நடுவே ஓர் இரும்பு தூண். தூணின் கீழ்ப்பகுதி பூமியில் நன்றாக ஊன்றப்பட்டு இருந்தது. மேற்பகுதியோ வானின் உச்சி வரைக்கும் நீண்டிருந்தது.

அந்தத் தூணின் மேற்பகுதியில் பிடி ஒன்று காணப்பட்டது. ''பிடியைப் பிடித்து மேலே ஏறு!'' என்று யாரோ கூவினார்கள். மேலே ஏறுவது ஒன்றும் இலேசான காரியமாக இல்லை. ''என்னால் முடியாதே!!'' என்றார் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு. அப்போது வேலைக்காரன் போல தோற்றம் அளித்த ஒரு மனிதன் பின்னால் முளைத்தான்.

அப்துல்லாஹ்வை நெருங்கி அவருக்குப் பின்னால் நின்று கொண்டான். அவருடைய ஆடையை பின்னால் பிடித்துத் தூக்கினான். அந்த மனிதனின் தயவால் மேலே ஏற்றப்பட்ட அப்துல்லாஹ் எட்டி அந்தப் பிடியைப் பிடித்தார். ஒரு வழியாக அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு மேலே ஏறிவிட்டார்.

''நன்றாகப் பிடித்துக் கொள்! விட்டுவிடாதே!'' என்று யாரோ கூறினார்கள். நன்கு இறுக்கமாக அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அந்தப் பிடியைப் பற்றிக் கொண்டார்.... அவ்வளவு தான் கனவு கலைத்துவிட்டது. மெதுவாக அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு விழித்து எழுந்தார். என்ன கனவு கண்டோம்? அதற்கு என்ன பொருள்? எதுவுமே விளங்கவில்லை. இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று விளக்கத்தை கேட்டோம் என்று நினைத்துக் கொண்டார்.

இறைத்தூதரின் அவைக்குச் சென்று கனவில் கண்ட எல்லாவற்றையும் எடுத்துக் கூறினார். இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். ''அந்த நந்தவனம் இஸ்லாம் ஆகும்! அந்தத் தூண் இஸ்லாமின் தூண் ஆகும்!! நம்பிக்கையின் பிடி என்று அல்லாஹ் கூறுகிறானே, அதுதான் அந்தப்பிடி!(காண்க- அல்குர்ஆன் 2:256).

நீங்கள் இறக்கும் வரைக்கும் இஸ்லாமின் மீதே நிலைத்து இருப்பீர்கள் என்பதுதான் இந்தக் கனவின் பொருளாகும். அல்லாஹு அக்பர்! மரணிக்கும் வரை முஸ்லிமாக இருப்போமா என்பது யாருக்குமே தெரியாது. உண்மையான ஒவ்வொரு முஸ்லிமும் அதை எண்ணி பயந்துகொண்டே இருப்பான். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாயில் இருந்தே இத்தகைய ஓர் உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்ட அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு எத்தகைய நல்ல மனிதராக இருந்திருப்பார்?

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஸஹாபாக்கள் ''இதோ சொர்க்கவாசி வருகிறார்: இதோ சொர்க்கவாசி வருகிறார்!'' என்று கூறத் தொடங்கினார்..! உண்மைதானே? எவ்வளவு பெரிய பாக்கியம்! அல்லாஹ் உங்களையும் என்னையும் இத்தகைய மனிதர்களோடு சொர்க்கத்தில் ஒன்றாகச் சேர்த்து வைக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக