புதன், 9 நவம்பர், 2016

குடும்பம் ஒரு கதம்பம்.






காலத்தின் பெரும்பகுதியை கணவன் வெளிஉலகிலே கழிக்க வேண்டியிருக்கலாம் இருப்பினும் வீட்டிற்கு வந்து விட்டால் வெளிஉலகின் பாதிப்புகளை மனைவிமார்களிடம் காட்டாமல் கிடைத்த சிறிது நேரத்தை இன்பமாக கழிப்பதே இல் வாழ்வில் இன்றியமையாததாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَحِلُّ لَكُمْ أَن تَرِثُوا النِّسَاءَ كَرْهًا ۖ وَلَا تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا
சிறந்த முறையில் அந்த பெண்களுடன் இல்லறவாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள்.
                                                                                                           (அல்குர்ஆன். 4 - 19.)


நபிகள் நாயகம்  صلى الله عليه وسلم அவர்கள் தனது நேரத்தின் பெரும் பகுதியை இறை வழிபாட்டிலும் மற்றொரு பகுதியை நாட்டு நடப்பிலும் நண்பர்களுடனும் கழத்தாலும், தனது மனைவியருடன் உறவாடுவதற்கென ஒரு பகுதியை ஒதுக்கி அதில் வெளி உலக கோப தாபங்கள் பிரதிபலிக்காத வண்ணம் மனைவியருடன் இன்பமாக கழித்து வழி காட்டியுள்ளார்கள்.

இரவெல்லாம் நின்றுவணங்கி இறைவனின் அன்பில் திளைத்தாலும் இரவின் பிற்பகுதியில் கல்லிமி யாஆயிஷா.... ஆயிஷாவே ஏதாவது பேசு என்று கூறி பேசிக்கொண்டிருந்து பொழுது போக்குவதில் குறைவு செய்ததில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தில் மனைவியருடன் இல்வாழ்க்கையை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கும் ஹதீதுகள் சிறந்த சான்றுகளாகும்.


நானும் நாயகமும் ஒரே தட்டில் உணவருந்துவோம். ஒரே இறைச்சித் துண்டை அவர்கள் ஒரு பக்கத்தில் கடிப்பார்கள் நான் மற்றொரு பக்கத்தை பிடித்துக் கடித்திழுப்பேன். எங்காவது பிரயாணம் மேற்கொள்ளும் போது நானும் நாயகமும் தனித்திருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஓட்டப்பந்தயம் விளையாடுவோம். முதல்முறை நான் வெற்றியடைந்தேன் மற்றொரு முறை நான் தோல்வியுற்றேன். அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இதற்கு அதுபகரம் என்று கூறினார்கள்.


மனைவி என்பவள் கணவனுக்கு இன்பத்தின் துணை மட்டுமல்ல அவன் வெளியிற்ச் சென்ற போது அவனது செல்வத்தைப் பாதுகாக்கும் காவலாளியாகவும், அவனது வேலைகளை செய்யும் வேலைக்காரியாகவும் யோசனை சொல்லும் மந்திரியாகவும் அவன் நோயுற்றால் பணி செய்யும் தாதியாகவும் பின் தூங்கி முன  எழுந்து அவனை கண் இமைப்போல் காக்கும் தாயாகவும் திகழ்கின்றான் எனவே அவளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பதை நாயகம் ஸல் அவர்கள் அழகாக சுட்டிக்காட்டுகிறார்கள்.


இந்த பெண்கள் கணவன் நல்லவனாக இருந்தால் மிஞ்சி நடப்பார்கள். கணவன் அற்பனாக இருந்தால் அவன் அவர்களை அடக்கியாள்வான் ஆனால் நான் மிஞ்சப்படும் நல்லவனாகவே இருக்க விரும்புகிறேன்.
                                               
                                                  அல்ஹதீஸ்.

 وعن أم المؤمنين عائشة -رضي الله تعالى عنها- قالت: قال رسول الله صلى الله عليه وسلم:  خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي  أخرجه الترمذي

மனைவியிடம் நல்லவரே உங்களில் நல்லவராக ஆவார் நான் என் மனைவியர்க்கு நல்லவராக இருக்கிறேன். அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் அண்ணல் பெருமான் ஸல் இல்லத்தில் இருக்கும் போது என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் வீட்டு வேலைகளில் எங்களுக்கு உதவியாக இருப்பார்கள் ஆட்டில் பால் கறப்பார்கள் துணிகளைத் தைப்பார்கள். செருப்பை சீர் செய்வார்கள் வீட்டை சுத்தம் செய்வார்கள் எனறு பதிலுரைத்தார்கள்.


மனைவி சிறந்த மந்திரி.


மனைவியர்க்கு கௌரவம் அளிக்க வேண்டும் அவர்கள் நமக்கு ஆலோசனை வழங்கினாள் அந்த யோசனை நன்மை பயக்குமெனில் அதை ஏற்க பின் தங்ககூடாது.


ஹிஜ்ரி -6 ம் வருடம் நபிகள் நாயகம்صلى الله عليه وسلم  அவர்கள் 1500 ஸஹாபாக்களுடன் உம்ராச் செய்வதற்காக மக்கா செல்கிறார்கள் ஆனால் வழியிலேயே குரைஷிகள் மக்கா செல்லவிடாமல் தடுத்து விடுகிறார்கள். முடிவில் நீங்கள் இவ்வாண்டு சென்று விட்டு அடுத்த ஆண்டு வாருங்கள் வழி விடுகிறோம் என்று கூறினார்கள். அதைக் குறிக்கும் வகையில் ஹுதைபியா உடன்படிக்கை கையெழுத்தானது.


நபிகள் நாயகம ஸல் அவர்கள் ஸஹாபாக்களிடம் உம்ராவுக்கு கட்டியிருந்த இங்ராமை நீக்க சொல்கிறார்கள் ஸஹாபாக்களுக்கோ விருப்பமில்லை மக்காவுக்கு செல்லலாம் என்ற கட்டுக் கடங்காத ஆசையுடன் வந்த அவர்களுக்கு அந்த ஆசை நிறைவேறாமல் போனது துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. எனவே நாயகத்தின் கட்டளையை உடனே ஏற்க யாரும் முன்வரவில்லை. நாயகம் ஸல் அவர்களுக்கு நிலைமையை சமாளிப்பது சிரமமாகிவிடுகிறது.


கூடாரத்திற்குள் சிந்தனைவயப்பட்டவர்களாக குறுக்கும் நெடுக்குமாக நடைபோடுகிறார்கள் அதை கண்ணுற்ற அவர்களின் நாயகி அன்னை உம்மு குல்ஸூம் ரலி அவர்கள் நாயகமே நான் கூறும்படி செய்யுங்கள். நீங்கள் வெளியில் செல்லுங்கள் யாருடனும் பேசாமல்  உங்கள் தலை ரோமத்தை களைந்து இஹ்ராமை நீக்கி கொண்டு வாருங்கள் என்றார்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மனைவியின் அந்த ஆலோசனையை ஏற்று செயலாற்றினார்கள். என்ன ஆச்சரியம் ஸஹாபாக்கள் அனைவரும் தாங்கள் தங்கள் உரோமங்களை நீக்கி இஹ்ராமை முறித்துக் கொண்டார்கள்.


ஊடல்கள்.


இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே ஊடல்கள் சிறுசிறு பிணக்குகள் ஏற்படுவது சகஜம். அப்போது இருவரில் ஒருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தை நடத்திச் செல்ல வேண்டும். சிறுசிறு பிணக்குகளை பெரும்பெரும் பிரச்சனையாக உருவாக்கிவிடலாகாது.
ஒருசமயம் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது ஹஸ்ரத் அபூபக்கர் ரலி அவர்களை நடுவராக நியமித்தார்கள் தன் மனைவியை நோக்கி ஆயிஷாவே நீ உன் பிரச்சனையை முதலில் கூறுகிறாயா...? நான் கூறட்டுமா...? என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கேட்டார்கள் அது கேட்ட ஆயிஷா ரலி அவர்கள் நான் தான் முதலில் என் பிரச்சனையை கூறுவேன் என்றார்கள். நடுவராக ஹஸ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் தனது மகளை நோக்கி என்ன ரஸூலுல்லாஹி ஸல் அவர்களை முந்திப் பேசுகிறாயா...? என்று கோபமாக கூறி கன்னத்தில் அடித்து விட்டார்கள். அதை கண்ணுற்ற நாயகம் ஸல் அவர்கள் நீங்கள் நடுவராக இருக்க வந்தீர்களா...? அல்லது சண்யையிட வந்தீருக்கிறீர்களா...?  என்று கடிந்து விட்டு தன் மனைவிடம் தானே சமாதானம் செய்து கொண்டார்கள்.


கண்டிப்பு.


மனைவிக்கு சலுகை காட்ட வேண்டிய சந்தர்பத்தில் சலுகை காட்ட வேண்டியது தான். அதே போன்று கண்டிக்க வேண்டிய தருணத்தில் கண்டிக்கவும் தவறக்கூடாது.

ஒருசமயம் நாயகத்தின் மனைவிமார்கள் நீங்கள் எங்களுக்கு அளிக்கும் உணவுத் தொகை போதாது என்றொரு பிரச்சனையை கிளப்புகிறார்கள், அது பெரும் பிரச்சனையாக உருவாகி விடுகிறது. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண முயலுகிறார்கள் முடியவில்லை. உடனே உங்களில் யாருடனும் நான் தொடர்பு வைக்க மாட்டேன் என்று கூறி ஒருமாதம் பிரிந்து வாழ்ந்தார்கள்.பிறிவாற்றாமை தாளாமல் வழிக்கு வந்துவிட்டார்கள்.


வாழ்க்கையின் கஷ்டநஷ்டத்தில் ஒத்துப் போவது மனைவியின் கடமை அதில் அவள் தவறும் போது அவளை படுக்கையிலிருந்து பிரித்துப் போடுவது சிறந்த தண்டனையாகும் என்பதை மேற்கூறிய சம்பவம் உணர்துகிறது. அதையே அல்லாஹ்வும் கட்டளையாக பிறப்பிக்கின்றான்.
ஒத்துப் போகாத தன்மை உணர்ந்து பெண்களுக்கு உபதேசம் புரியுங்கள் படுக்கையிலிருந்து பிரித்து விடுங்கள் அடியுங்கள்.
                                                          அல்குர்ஆன்.


கண்டிக்கும் போது மனைவிக்கு கேவலம் ஏற்படாதவாறு இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டுமென்பது நபி ஸல் அவர்களின் போதனையாகும்.


மௌலானா மௌலவி அல்ஹாஜ் .எம். அப்துல் காதிர் பாகவி.
இமாம். ஜாமிஆ மஸ்ஜித். மந்தைவெளி. சென்னை-28.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக