புதன், 25 நவம்பர், 2015

ஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால் வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலை பார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள்.
ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை
ஆனால் என்ன குறை என்பதையும் அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை ஆனால் தன்னிடம் கூலி வாங்கி ஜீவனம் செய்யும் கூலித் தொழிலாளி தன் குடும்பம் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறானே இது எப்படி முடிகிறது என தன் வீட்டு மேனேஜரிடம் கேட்கிறார்
உடனே மேனேஜர் அவன் இன்னும் 99'ஆவது சங்கத்தில் அங்கத்தினராக வில்லை, என அதற்கான ஒரு காரணத்தை சொல்லுகிறார். மேலும் அவனை அங்கத்தினராக்க கூடவே ஒரு ஆலோசனையும் சொல்லுகிறார்.
அவரின் ஆலோசனையின் படியே 99 தங்க்காசுகளை ஒரு பையில் இட்டு அதை அந்த ஏழை கூலித் தொழிலாளியின் வீட்டு வாசலில் இரவிலேயே போட்டு விடுகிறார்கள்.
விடிந்ததும் கூலித் தொழிலாளி கதவை திறக்கும் போது வாசலில் ஒரு பை இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் எடுத்து பிரித்து பார்க்கிறார். அதில் 99 தங்க காசுகள் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அதிர்ச்சி, ஆனால் சந்தோஷத்தை கொண்டாடமல் மீண்டும் அந்த தங்க காசுகளை எண்ணி பார்க்கிறார்.
அதே 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது ஆனாலும் மீண்டும் எண்ணி பார்க்கிறார் அப்போதும் 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது அங்கும் இங்கும் தேடிப்பாத்தும் 100 தங்கக்காசுகள் கிடைக்கவில்லை.
ஆனால் இப்போது இவருக்கு 99 தங்கக்காசு கிடைத்த போது சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு தங்க காசுக்கு ஏங்குகிறார் 99 தங்க்காசுகளை 100 ஆக எப்படியும் மாற்றி விட முடிவு எடுக்கிறார்.
கூலித்தொழிலாளி தன் மேனேஜரிடம் சென்று, தனக்கு கொஞ்சம் பணத்தேவை இருப்பதாக சொல்லி தன்னை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கும் படி கேட்கிறார். அதற்கு மேனேஜரும் சம்மதிக்கிறார்.
அன்று முதல் எப்படியும் ஒரு தங்க காசு வாங்கி தன்னிடம் இருக்கும் 99 தங்க காசுகளை 100 தங்க காசுகளாக சேர்த்துவிட வேண்டுமென்ற வெறியில் பல மணி நேரம் உழைக்கிறார்.
இப்படி போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய மகன் அப்பா எனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என கேட்கிறான். ஆனால் அதுவரை மகனிடம் கோபப்படாத தந்தை இப்போது மிகுந்த கோபத்துடன் இப்படி தேவையில்லாத செலவுகளுக்கு எல்லாம் பணத்தை வீணாக்க முடியாது என்பதாக கடினமான வார்த்தைகளை பிரயோகித்து மகனுடன் கூட நேரம் செலவலிக்காமல் ஒரு தங்க காசு மட்டுமே குறியாய் இருக்கிறார்.
இதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா?
இப்படித்தான் இன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கு கிடைப்பதை வைத்து நாம் சந்தோஷப் படுவதில்லை 10 ரூபாய் கிடைத்தால் 20 ரூபாய் கிடைக்காதவென மனது ஏங்கும் இலட்ச ரூபாய் கிடைத்தால் மனம் கோடிக்கு ஆசைப்படும்.
நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தை நாம் பணத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மனதை ரணமாக்கி நம் சந்தோஷத்தையும் இழந்து நம் குடும்பத்தினர் சந்தோஷத்தையும் சேர்த்தே அழித்து விடுகிறோம்...?
உலகத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் எல்லோரையும் பார்த்து நமக்கு பொறாமையோ, ஆற்றாமையோ இருக்கும். பொதுவாக அவர்களுக்கு என்ன அவர்களிடம் எல்லாம் இருக்கிறது என்பதாக நினைப்போம் ஆனால் அவர்கள் நிலையோ நாம் மேலே பார்த்த கூலித்தொழிலாளி கதையாகத் தான் இருக்கும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக