ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இறைவன் நம்மை சோதிப்பது ஏன்?



குரு குலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது.
யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்என்கிறார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? சோதனைகளை சந்திக்காமல், கஷ்டங்களை சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்கிறான்.


நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்என்று கூறுகிறார் குரு.

மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள். மாணவர்களுக்கு முன்னாள் இரண்டு மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள் இருக்கின்றன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன. இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” என்று மாணவர்களை பார்த்து கேட்கிறார் குரு.
.
மாணவர்கள் ஒரு கணம் கழித்து இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான் என்றார்கள்.
.
இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா? என்று குரு மாணவர்களை பார்த்து கேட்கிறார். மாணவர்கள் தெரியவில்லை என்று கூறினார்கள்.
.
ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.
.
ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது.
.
இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும் போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது.
.
நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்என்றார் குரு.
.
மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? என்று கேட்டார். மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்! என்றார்கள்.
.
இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்றுயோசித்து பாருங்கள்! கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான் ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை.
.
இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால்தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக