செவ்வாய், 30 டிசம்பர், 2014

அண்ணல் நபி ஸல் அவர்களின் அழகிய பதில்.







அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்கான் (ரலி) அவர்கள் கூறியதாவது.


ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே...! அஸ்ஸலாமு அலைக்க..! என்று கூறினார். உடனே நான் அவரை பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர் ஏன் என்னை தள்ளுகிறாய்..? என்று கேட்டார்.
அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே என்று சொல்லக்கூடாதா....? (முஹம்மது என்று பெயர் கூறி அழைக்கிறீரே..) என்று கேட்டேன்.
அதற்கு அந்த யூதர். அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நான் அழைக்கின்றேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது பெயர் முஹம்மத் தான் இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்ட பெயர் என்று கூறினார். அந்த யூதர் நான் உங்களிடம் (சில விசயங்கள் குறித்து கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் கூறப்போகும் எந்த விசயமும் உமக்கு பயனளிக்குமா...? என்று கேட்டார்கள். அவர் நான் காது கொடுத்து கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையை கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்) கேளுங்கள் என்றார்கள்.


அந்த யூதர், இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரனை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்...? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகில் இருளில் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள்.


அவர் மக்களிலேயே முதன் முதலில் (அந்த பாலத்தை) கடப்பவர்கள் யார்...? என்று கேட்டார், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஏழை முஹாஜிர்கள்" என்று பதிலளித்தார்கள். அந்த யூதர் அவர்கள் சொர்கத்திற்குள் நுழையும் போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன  என்று கேட்டார். அதற்கு "மீனின் ஈரலில் ஒட்டி கொண்டிருக்கும் தனிதுண்டு" என்று பதிலளித்தார்கள். 


அதற்கு அடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன...? என்று அவர் கேட்க , சொர்கத்தின் ஒரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும்  காளை மாடு அவர்களுக்காக அறுக்கப்பட்டு விருந்தளிக்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்கு பின் அவர்கள் எதை அருந்துவார்கள்...? என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , அங்குள்ள (ஸல்)ஸபீல் எனஅழைக்கப்படும் நீரூற்றிலிருந்து நீர் அருந்துவார்கள் என்று பதிலளிக்க அவர் நீர் கூறியது உண்மையே என்று கூறினார்.


பிறகு பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது இரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விசயத்தை பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன் என்று கூறினார். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் கூறப்போகும் விசயம் உமக்கு பலன் தருமா...? என்று கேட்டார்கள். அவர் நான் காது கொடுத்து கேட்பேன் என்றார். பிறகு அவர் குழந்தையின் பிறப்பு குறித்து கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன் என்றார்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணின் நீர் விந்து வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும் போது ஆணின் நீர் (உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். பெண்ணின் நீர் (சினை முட்டை) ஆணின் நீரை (உயிரணுவை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண்குழந்தை பிறக்கும் என்று பதிலளித்தார்கள்.


அந்த யூதர் நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைதூதர் (நபி) தாம் என்று கூறிவிட்டு திரும்பி சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவர் எவற்றை குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றை குறித்து நான் ஏதும் அறியாதவனாக தான் இருந்தேன். அல்லாஹ் அவற்றை எனக்கு அறிவித்து தந்தான். என்று கூறினார்கள்.


                                          நூல் முஸ்லிம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக