உம்மு சுலைம் என்ற பெண் மீது காதல் கொண்டு அவரை பெண் கேட்டு போனார் அபு தல்ஹா என்பவர்.
இந்த மணமகன் சாதாரணமானவரல்ல. அந்த ஊரிலுள்ள பணக்காரர்களில் ஒருவர். நன்னடத்தை உள்ளவர், அவர் வாழ்ந்த சமுதாயத்தின் நன்மதிப்பையும் பெற்றவர்.
அது போன்று உம்மு சுலைம் என்ற அந்த பெண்மணியும் அழகுடன் நன்னடத்தையும் நல்ல பண்பாடு மிக்க குடும்பத்தையும் சார்ந்தவர்.
அபு தல்ஹா நேரடியாகவே உம்மு சுலைமை சந்தித்து தனது காதலை அவரிடம் தெரிவித்தார். மணமுடிக்க விரும்புவதை கூறினார்.
நல்லவரும் செல்வந்தருமான அவரை மணமுடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் சிலர் இருக்கும் போது இவருக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் தம்மை தேடி வந்திருக்கிறது. அதை அவர் விட்டு விடுவாரா என்ன?
ஆனால்,
‘நான் இஸ்லாத்தை ஏற்ற ஒரு முஸ்லிம் பெண், நான் எப்படி சிலைகளை வணங்கிக் கொண்டிருக்கும் உங்களை திருமணம் செய்ய முடியும். அது முடியாது’ என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார்.
தனது காதல் நிறைவேறாமல் போனதால் கனத்த இதயத்துடன் திரும்பி சென்றார் அபு தல்ஹா.
இன்று மனம் மாறியிருக்கும். இல்லையெனில் மாற்ற வேண்டும் என எண்ணி அடுத்தநாள் மீண்டும் அவரிடம் வந்தார்.
‘நான் உங்களை திருமணம் செய்வதற்காக மணக்கொடையாக(மஹராக) நீங்கள் எதைக் கேட்டாலும் நான் தருவேன், அது எனது சொத்துக்களில் பாதியாக இருந்தாலும் சரியே’ என்றார்.
அருமையான இந்த வாய்ப்பை எவரேனும் தவற விடுவாரா?
கோடீஸ்வரியாகும் அந்த வாய்ப்பையும் ஏற்காத உம்மு சுலைம், ‘நீங்கள் கல்லையும் மரத்தையும் வணங்குகிறீர்கள், தரையில் கிடந்து மிதிபட்ட ஒரு மரத்தை தச்சன் தான் உருவமாக வடிக்கின்றான். அதை நீங்கள் வணங்குகின்றீர்களே!
நன்மையையும் தீமையையும் அது தான் தருகின்றது என நம்பும் உங்களை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும், இது மடமையல்லவா!,
படைத்த இறைவனை மட்டுமே வணங்கும் நானும் நீங்களும் இணைய முடியாது’ என்று கூறி மறுத்து விட்டார்.
அவரது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திரும்பிய அபு தல்ஹா சிந்திக்க துவங்கினார்.
மீண்டும் உம்மு சுலைமை தேடி வந்தார். மீண்டும் இவர் வருவதைக் கண்ட உம்மு சுலைம், வியப்புடன் அவரிடம்
‘என்ன?’ எனக் கேட்டார்.
‘தங்களது கேள்வி என்னை சிந்திக்க வைத்து விட்டது. நாமே உருவாக்கும் ஒரு பொருள் நம்மை எப்படி பாதுகாக்கும், இந்த சிலைகள் எனும் மரக்கட்டைகள் கீழே விழுந்தால் சுக்கு நூறாக உடைந்து போகுமே! தன்னையே பாதுகாக்க முடியாத ஒன்று நம்மை எப்படி பாதுகாக்கும். என்றென்றும் அழியாதவனும், நிலையானவனுமாகிய நம்மை படைத்த அந்த இறைவனால் மட்டுமே நம்மை பாதுகாக்க முடியும் என்பதை நான் உணர்ந்து விட்டேன். நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்’ என்றார்.
மகிழ்ச்சியால் பரவசமடைந்த உம்மு சுலைம், இதுவரை எவருக்குமே கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. உங்களது செல்வம் எனக்கு தேவையில்லை. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதையே நான் மஹராக கொள்கிறேன்’ என்று கூறி திருமணத்திற்கு சம்மதித்தார்.
அவர்களது திருமணமும் நடந்தேறியது.
இதிலிருந்து நாம் கற்கும் படிப்பினை என்ன?
சிலை வணக்கத்தில் இருப்பனும் இறைவனை மறுப்பவனும் தன்னை மணமுடிக்க விரும்பும் போது அவனது கொள்கை எதுவாக இருந்தால் என்ன, அவன் எப்படி போனால் என்ன என்று ஒரு முஸ்லிம் பெண் இருந்துவிடக் கூடாது. எரியும் நரக நெருப்புக்கு அவனை பலியிடலாமா?
அவனிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும். சத்தியத்தை உணர வைக்க வேண்டும். அது தான் உண்மையான காதலாக இருக்க முடியும்!
இறைவனை மறந்தவர்களுக்கும் மறுத்தவர்களுக்கும் மறுமையில் தண்டனை உண்டு, நாம் இவ்வுலகில் செய்த நற்காரியங்களுக்கு அங்கே பலன் கிடைக்கும், நாம் பிறருக்கு செய்த தீமைகளுக்கு அங்கே தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்த ஒரு முஸ்லிம் பெண், இஸ்லாத்தை விட்டு தான் வெளியேறி விடாமல் அதில் உறுதியாக இருந்து பிறருக்கும் உண்மையை உணர வைக்க வேண்டும். நரகத்தின் விளிம்பிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்!
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்; இணைவைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட நம்பிக்கையுள்ள ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; இணைவைக்கும் ஆண்களுக்கு – அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (நம்பிக்கையுள்ள பெண்களை) நீங்கள் திருமணம் செய்துவைக்காதீர்கள்; இணைவைக்கும் ஆண் அவன் உங்களைக் கவருபவனாக இருந்தபோதிலும், நம்பிக்கையுள்ள ஓர் அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை (நரக) நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால், அல்லாஹ்வோ தன் கட்டளையைக்கொண்டு சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் விளக்குகிறான்.
அல்குர்ஆன். 02:221
அது தான் #உண்மைக்காதல்.
பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக