புதன், 3 ஜூலை, 2024

மன உளைச்சல். (கதை)


 அந்த மன்னன் ஒரு மாவீரன். ஒரு முறை போரில் தோல்வி ஏற்பட்டு எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார். தோல்வி அடைந்த மன்னனை கைது செய்யப்பட்டு தனிச்சிறையில் தனிமையில் அடைத்தனர். 

 

      சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசிக்காலம் கழிந்தது.. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும் என்று கூறி அவரிடம் கொடுத்தார். 

 

    ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மன்னருக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவனம் போகவில்லை. சிறிது காலத்தில் அந்த மன்னன் இறந்தும் போனார்... 

 

        சில நாள் கழித்து சிறையில் இருந்த அவருடைய உடைமைகளை சுத்தம் செய்த போது அதில் இருந்த சதுரங்க அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

 

      அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்... பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது.... 

 

     எலி சாதாரணமாக இருக்கும்போது உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தனது கூரான பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போட்டு நாசம் செய்யும்.  

 

      அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது. 

 

    ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும். பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும். 

 

      நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும். அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது. 

 

    மாவீரனானாலும் சரி.... சிறிய எலியானாலும் சரி... பதட்டமும் மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது. 

 

    மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக