திங்கள், 29 ஜூலை, 2024

எங்கே நிம்மதி. (கதை).

 


அரசன் ஒருவனுக்கு திடீரென்று தனது சுக போகங்கள் திகட்டிவிட்டது. தனிமையில் உப்பரிகையில் இருந்தவாறே எதில் நிம்மதிகிடைக்கும் என எண்ணிக் கொண்டிருக்கையில்,

ராஜவீதியில் பிச்சைக்காரன் ஒருவன் அரைகுறை கிழிந்த ஆடைகளுடள் ஆனந்தமாக ஆடிப்பாடியவாறே செல்வதைக் கண்டான்..

அவன் பைத்தியமும் இல்லை என அறிந்து கொண்ட அரசன், தன் நிம்மதிக்கு அவனிடத்தில் பதில் தேட எண்ணி தன் மெய்க்காவலர்களை அனுப்பி அவனை அழைத்து வரச் சொன்னான்.

காவலரும் அவனிடம் சென்று அரசன் அழைப்பதாக கூற...

அவனோ அரசனிடத்தில் எனக்கு ஆகவேண்டிய காரியம் ஏதும் இல்லை...!! அரசருக்கு என்னிடம் ஆகவேண்டிய காரியம் ஏதும் இருந்தால்...? அவரை வரச்சொல் என்றான்...!!



அதைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், இவர் சாதாரணமானவர் அல்ல என எண்ணி விரைந்து வந்து அவரை சந்தித்தான்.

ஐயா, தங்களிடம் உடுத்த நல்ல ஆடைகூட இல்லை..!! ஆனால் தாங்கள் எவ்வித கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறீர்கள்.

ஆனால் என்னிடமோ இந்த நடே இருக்கிறது ஆனால் நிம்மதி மட்டும் இல்லை..? நிம்மதி எங்கே கிடைக்கும்.? என பவ்வியத்துடன் கேட்டான்..!



அந்த மனிதரோ சிரித்துக் கொண்டே உன்னிடத்தில் இருக்கும் நாடு செல்வங்கள், அரண்மனை வீரர்கள் நாட்டுமக்களை காக்க வேண்டுமே என்ற சுமையே உன் நிம்மதியின்மைக்கு காரணம்..!!

அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு என்னுடன் வந்துவிடு....!! நான் காட்டுகிறேன் நிம்மதியே என்று கூற...

திகைத்து நின்றான் அரசன். இப்போது அவனுக்கு நிம்மதி எங்கே கிடைக்கும் என்று தெரிந்தாலும்...? தான் அதை அடைய அந்த நிலைக்கு செல்ல முடியாது..! என்பது தெளிவாகி...

ஐயா எனக்கு நிம்மதி என்ன என்பது நன்கு புரிந்து விட்டது ஆனால் இப்போதே என்னால் அதை அனுபவிக்க முடியாது, தக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு அந்நிலை அடைய முயற்சிக்கிறேன்...!!


என் அறிவுக்கண்னை திறந்த தாங்கள் இந்த பட்டாடையே உடுத்திக் கொள்ளுங்கள் என்று தனது விலையுயர்ந்த மேலங்கியை அவரிடம் கொடுத்தான்..

அதைப்பார்த்த பிச்சைக்காரன், வாய்விட்டு சிரித்தவாரே...!

ஏன் என் நிம்மதி பறிபோகவா என்ற கேள்வியுடன் அதை உதாசீனப் படுத்திவிட்டு தன் வழியே நடக்கலானார்..!


°•°•°•°•°•


பூங்காவில் மரத்தடியில் விரக்தியாக வானத்தை வெறித்தபடி இருந்த ஒருவருக்கு இந்த கதையை பெரியவர் ஒருவர் கூறி, ஆகவே தாங்கள் இதை கடைபிடித்தால் பறிபோன தங்கள் நிம்மதி மீண்டும் கிடைக்கும் புரிந்ததா என கேட்டாராம்.. அவனும் நல்லா புரிஞ்சுடுச்சி என்றான்..!!



தனது அறிவுரையால் ஒருத்தனுக்காவது நிம்மதி கிடைத்ததே என மகிழ்ச்சியாக என்ன புரிஞ்சுகிட்டீங்க என திரும்ப கேட்க...?

அவரும், சிரித்துக் கொண்டே.... இனி பூங்காவுக்கு வந்தால் உங்க கண்ணுலயே படக்கூடாதுன்னான்....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக