சனி, 10 ஆகஸ்ட், 2024

அடுத்தவருக்கு நல்லது நினைத்தால் (கதை)

 

ஒரு நாள் அப்பா, இரண்டு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து சாப்பாட்டு மேசை மேல் வைத்தார். 


ஒரு கிண்ணத்தில் கஞ்சியின் மேலே ஒரு முட்டை. அடுத்த கிண்ணத்தின் கஞ்சியின் மேலே முட்டை இல்லை.


அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ எடுத்துக் கொள். நான் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். என்னுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.


அப்பா சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சரியம். அவருடைய கிண்ணத்தில் கஞ்சிக்கு அடியில் இரண்டு முட்டைகள். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக வருத்தப் பட்டேன். 


அப்பா மென்மையாகச் சிரித்தபடி சொன்னார். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்.


அடுத்த நாளும் இரண்டு பெரிய கிண்ணங்களில் கஞ்சி சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். 


முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டை இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. 


அப்பா என்னிடம் கேட்டார். உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்..’


இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித் தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப் படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். 


அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். 


கிண்ணத்துக்குள் அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. 


அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்.

`எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். 

இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்.


மூன்றாவது நாள். 


மறுபடியும் இரு கிண்ணங்களில் கஞ்சி சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்தில் முட்டை... மற்றொன்றில் இல்லை.


அப்பா கேட்டார் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’. இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னேன்.

`அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.


அவர் முட்டை இருந்த கஞ்சிக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் முட்டை இல்லாத கஞ்சியைச் சாப்பிட ஆரம்பித்தேன்.


அன்றைக்கும் எனக்கு ஆச்சரியம். என் கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகள் இருந்தன. அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.


நினைவில் வைத்துக் கொள். 


மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்!


எப்பேர்ப்பட்ட தத்துவம் பார்த்தீர்களா... 


அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக