சனி, 3 ஆகஸ்ட், 2024

ரொம்ப சிரிக்காத.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் .


எனது பெயர்…….


நான் சிரிப்பைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். 


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.


சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் அருளியுள்ள அற்புதமான செயல்தான் சிரிப்பு! 


இந்த உலகில் மனிதனைப் போன்று சிரிக்கும் உயிரினம் எதுவுமில்லை.


சிரிப்பைப் பற்றி எத்தனையோ பழமொழிகள் இருக்கிறது. 


"சிரிப்பே சிறந்த மருந்து" என்பதாக சொல்வார்கள் .


இன்னும் சிலர் "வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்'" என்பதாகவும் சொல்வார்கள்.


ஆனால்.. எல்லாம் நல்லா தன் அருள் மறையாம் திருக்குர்ஆனில் சிரிப்பைப் பற்றி என்ன கூறுகிறான் என்றால்

 فلْيَصْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا

அவர்கள் குறைவாகச் சிரிக்கட்டும் அதிகமாக அழட்டும். 

அல்குர்ஆன் 9:82 என்பதாக கூறுகிறான் 


இவ்வசனம் முனாபிக்களுடைய விஷயத்தில் இறங்கியது. இதில் பொதுவாக உலகில் சிரிப்பதைக் குறைத்திட வேண்டுமென்றும் மறுமை வாழ்வை நினைத்து அதிகம் அழுதிட வேண்டுமென்றும் கூறுகிறான். 



கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…


நமது உயிரினும் மேலான மன்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரிப்பை பற்றி இப்படி சொல்லி இருக்கிறார்கள். 



) وَاللَّهِ لَوْ تَعْلَمُوْنَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا



مشكوة


'அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அறிந்துள்ளவற்றை நீங்கள் அறிந்திருந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்" என நபிகள் பெருமானார் (ஸல் ) அருளியுள்ளார்கள்.


மற்றோர் ஹதீஸில்.


و لا تكثر الصَّحْكَ فَإِنَّ كَثْرَةَ الصَّحْكِ تُمِيتُ الْقَلْبَ


"அதிகமாகச் சிரிக்காதே, ஏனெனில், அதிகமாகச் சிரிப்பது இதயத்தை மரணிக்கச் செய்து விடும்" என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் அருளியுள்ளார்கள்


இம்மாதிரியான பல அறிவிப்புகள் மூலம் உலக வாழ்வினில் அதிகமாகச் சிரிப்பது கூடாது என்பதையும், அதனால் இதயம் இறந்து. இருள் சூழ்ந்து பாவங்கள் செய்கின்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பதையும் அல்லாஹ்வின் தூதரவர்கள் தெரிவிக்கிறார்கள், 


என் அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே..


எனவே, குறைவாகவே சிரித்திட வேண்டும். மரணத்தையும் மறுமை வாழ்வையும் எண்ணிக் கவலை கொண்டு அழவேண்டும்.


தேவையில்லாமல் சிரிப்பதும்.


 தேவையானபோது தேவையற்ற அளவு சிரிப்பதும்.

 

பிறர்மனம் வருந்தும் படி சிரிப்பதும்.


 மனிதனை மதிப்பிழக்கச் செய்துவிடும். அதாவது மக்களிடையே அவனது மரியாதை குறைந்து விடும்.


கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…


சிரிப்புகள் என்பது பலவிதம் உண்டு.


 எதற்காகச் சிரிக்கலாம்; எதற்கெல்லாம் சிரிக்கக் கூடாது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


உள்ளத்தில் அடுத்தவர்களை கேவலமாக நினைத்து சிரிக்கும் ஏளனச் சிரிப்பை நாம் சிரிக்க கூடாது.

 

அடுத்தவர்களை ஏமாற்றி சிரிக்கும் ஏமாற்றுச் சிரிப்பை நாம் சிரிக்க கூடாது.


பலரும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் சப்தமாக சிரிக்கும் அட்டகாசச் சிரிப்பை நாம் சிரிக்க கூடாது.


அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்து அதனால் அவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்து சிரிக்கும் அநியாயச் சிரிப்பை நாம் சிரிக்க கூடாது.


அடுத்தவர்களை கேலி செய்து சிரிக்கும் பரிகாசச் சிரிப்பை நாம் சிரிக்க கூடாது.


அடுத்தவர்களை பயமுறுத்தும் வண்ணம் பயங்கரச் சிரிப்பை நாம் சிரிக்க கூடாது.


ஏதாவது ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெற்று விட்டால் மக்கள் மத்தியில் ஆணவமாக சிரிக்கும் வெற்றிச் சிரிப்பு சிரிக்க கூடாது.


அப்படி என்றால் நாம் வாழ்வில் சிரிக்கவே கூடாதா என்றால் சிரிக்கலாம் ஆனால் அந்த சிரிப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால்

நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடியதாக அதே நேரம் அடுத்தவர்களுக்கு தொல்லை தராததாக இருக்க வேண்டும்.



நமது வாழ்க்கையில் சந்தோசம் அதிகரிக்கும் போது நாம் சிரிக்கும் சந்தோஷச் சிரிப்பாக இருந்தாலும் சரி.


அடுத்தவர்களை சமாதானப்படுத்தும் போது புன்னகையோடு அவர்களைப் பார்த்து நாம் சிரிக்கும் சமாதானச் சிரிப்பாக இருந்தாலும் சரி.


இது போன்ற சிரிப்புகள் கூட நம்மிடம் அளவுடன் இருக்க வேண்டும்.


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே…

ஓயாமல் சிரிப்பவன் கிறுக்கன்.


ஒடவிட்டுச் சிரிப்பவன் வஞ்சகன்.


இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.


இருப்பதைத் தவறவிட்டுச் சிரிப்பவன் ஏமாளி.


தெரியாதென்று சிரிப்பவன் பசப்பாளி.


தெரியுமென்று சிரிப்பவன் நடிப்பாளி.


தோல்வியிலே சிரிப்பவன் வீரன்.


துன்பத்திலே சிரிப்பவன் மனிதன்.



எனவே அளவோடு சிரிப்போம். அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடி வாழ்வோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக