ஞாயிறு, 30 ஜூன், 2024

எலி பொறி (கதை)

 

பண்ணையார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது.ஒரு நாள் தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.


எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.


வீட்டின் எஜமானனும்,எஜமானியும்,ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.


ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.


உடனே ஒரே ஓட்டமாக ஓடி வீட்டில் இருந்த 🐓கோழியிடம் போய் சொன்னது.


"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார்.எனக்கு பயமாக இருக்கிறது என்றது".


இதைக் கேட்ட கோழி விட்டேத்தியாகச் சொன்னது"


உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி.

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது.


வான்கோழியும்🦃 அதேபதிலைச் சொல்லியதோடு,"நான் எலிப் பொறியை எல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்..." என்றது.


மனம் நொந்த எலி அடுத்தாக பக்கத்தில் இருந்த 🐏ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது.


ஆடும் அதேபதிலைச் சொல்லியது.அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து,என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.


அன்று இரவு...எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும்,அவர் மனைவியும், தூங்கப் போயினர்.


ஒரு அரை மணி நேரத்தில்,,"டமால் " என்றொரு சத்தம்.


எலி தான் மாட்டிக் கொண்டு விட்டது என்று எண்ணிய பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.


ஆனால் எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளை கடித்து விட்டது.


எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

விஷத்தை முறிக்க ஊசி போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு விஷம் இறங்கவேயில்லை.


அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது என்று யோசனை சொன்னாள்.


கோழிக்கு வந்தது வினை.கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது.கோழி உயிரை விட்டது.


அப்போதும் பண்ணையார் மனைவியின் காய்ச்சல் தணியவில்லை. உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்.வான்கோழியும் உயிரை விட்டது.


சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை.....விருந்தாக 🐏ஆடும் உயிரை விட்டது.


நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.


பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.


"எலி தப்பித்து விட்டது. அப்பாடா..."


நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன..? என்றாவது கேளுங்கள்.ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.


அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.ஏனெனில்,இந்த நேரத்தில் உணவு உடை தண்ணீர் கிடைக்காத மக்களுக்கு இது அவர்கள் பிரச்சனை என்று பாராமல் அனைத்து பொதுமக்கள் பிரச்சினையாக பாருங்கள்.ஆகவே உங்களால் முடிந்ததை உதவுங்கள்.அவர்கள் சின்ன வாழ்த்து கூட நம் பிள்ளைகளுக்கு போய் சேரும் நம் குடும்பம் நல்லா இருக்கும்.இதை நாம் அனைவரும் உணர்ந்து நம்மால் முடிந்ததை பிறருக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக