நபிகள் நாயகம் அவர்களின் நன்மொழிகளை இவ்வுலகுக்கு அளித்திட்ட உத்தமர்களின் வரிசையில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு மாமேதையை இன்று நாம் காண்போம்.
அவர் கல்வியில் சிறந்து விளங்கினார் என்பது மட்டும் அல்ல, கொடை வள்ளல் பட்டியலிலும் அவரது பெரும் புகழ் நீடித்து நிற்கிறது.
அந்த மகான் தான் அபுல் ஹாரித் அல்லைஸ் இப்னு ஸஃது இப்னு அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள்.
எகிப்து நாட்டின் கெய்ரோவில் ஹிஜ்ரி 94-ம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 14 வியாழக்கிழமை பிறந்த இவர் துவக்கத்தில் அடிமையாகத் தம் வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான் என்றாலும் தனது கவனத்தை கல்வியின் பக்கம் திருப்பினார்கள்.
அப்போது ஹதீஸ் கலை வேகமாக பரவி கொண்டிருந்தது. அதில் தானும் இணைந்தார். ஆயிரக்கணக்கில் அல்ல. இலட்சக்கணக்கில் ஹதீஸ்களை மனனம் செய்தார்.
அத்தோடு நின்றுவிடவில்லை. ஹதீஸ்களிலிருந்து சட்டங்களை வகுத்து தந்திடும் "ஃபிக்ஹ்" கல்வியிலும் கவனம் செலுத்தினார். அந்நேரத்தில் பிரபலமான முஹத்தீஸ்களாகத் திகழ்ந்த இமாம் அதா இப்னு அபீரபாஹ் (ரஹ்) இமாம் ஸுஹ்ரி (ரஹ்) போன்ற கல்விக் கடல்களிடம் கல்வியை கற்று தேர்ந்தார்.
இவர்களின் காலமும் இமாமுல் அஃளம் அபூ ஹனிபா (ரஹ்) அவர்களின் கால மும் ஒன்றாக இருந்தது. எனவே ஃபிக்ஹ் கலையை இவர்கள் அபூஹனிபா அவர் களிடம் கற்றுத் தேர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தொகுத்து அளித்த ஸஹீஹுல் புஹாரி ஷரீஃபின் ஏராளமான ஹதீஸ்கள் இந்த மாமேதை லைஸ் இப்னு ஸஃது (ரஹ்) அவர்களின் மூலமாக ரிவாயத் செய்யப்பட் டுள்ளது என்பதிலிருந்தும் "ஹதீஸ் கலையை பொறுத்தவரையில் அத்துறையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர்களில் லைஸ் இப்னு ஸஃது தவிர வேறு யாரையும் நான் காணவில்லை" என்று இமாம் யஹ்யா இப்னு புகைர் (ரஹ்) கூறுவதிலிருந்தும் இவரின் பெரும் திறமையை நாம் உணரலாம்.
அடிமையாக வாழ்க்கையைத் துவக்கிய இந்த மாமேதையின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
ஆம்! பெரும் செல்வந்தராக மாறினார். ஆண்டுதோ ரும் 80 ஆயிரம் தீனார் தங்கக் காசுகள் அவருக்கு வருமானம் வரக்கூடிய அளவுக்கு அல்லாஹ் பரக்கத் செய்தான்.
ஒரு தீனார் என்பது 4.25 கிராம் எடையுள்ள தங்க நாணயமாகும். இதன் மதிப்பு இன்றைய நிலவரப்படி பார்த்தால் ஒரு தீனார் பத்தாயிரம் ஆகிறது. அப்படியானால் ஆண்டொன்றுக்கு வருமானம் எத்தனை கோடி என்று கணக்கிட்டுப் பாருங்கள்.
இவ்வளவு வருமானம் வந்தும் கூட அவருக்கு ஜகாத் கடமையாகவில்லை என் பது தான் உலகம் வியக்கக்கூடிய செய்தியாக உள்ளது. இவ்வளவு அதிகமான தொகையை வைத்துக் கொண்டு இருப்பவருக்கு ஜகாத் கடமையாகவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன என்ற சந்தேகம் எழலாம்.
ஆம்! ஜகாத் கடமையாகுவதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அதாவது அந்தப்பொருள் தன் கைவசம் வந்தபின் சரியாக ஒரு வருடம் அது தன்னிடத்தில் இருக்கவேண்டும்.
ஒரு வருடம் ஆகுவ தற்கு ஒரு நாள் முன்பு செலவாகிவிட்டால் கூட அதற்கு ஜகாத் கடமையில்லை என்பதே இஸ்லாமியச் சட்டம். இப்போது மிகப்பெரும் செல்வந்தராகவும் மாபெரும் கல்வி மானாகவும் திகழ்ந்த மாமேதை லைஸ் இப்னு ஸஃது (ரஹ்) அவர்களுடைய வாழ்க் கையை நாம் பார்த்தால் வியப்பின் எல்லைக்கே நாம் செல்ல வேண்டியிருக்கிறது. தன் வருமானத்தை அவர்கள் அள்ளி அள்ளி வழங்கி தானம் செய்வதில் கண்ணுங்கருத்துமாய் இருப்பார்கள்.
எண்பதாயிரம் தங்க நாணயங்கள் என்பது அந்த காலகாட்டத்தில் மிகப்பெரிய சொத்தாகும். அக்கால வழக்கப்படி ஒரு சில தீனார்களை வைத்து ஒரு வருடத்தைக் கூட கழித்து விடலாம். இப்படி இருந்தும் கூட இம் மாமேதை அவ்வளவு தொகை யையும் தானம் செய்து விடுவார் என்பதால் தான் அவர்களை மிகப்பெரும் வள்ளல் களில் ஒருவராக வரலாறு புகழ்கிறது.
அவர் வாரி வாரி வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. ஒவ்வொன்றும் அற்புதமான அதிசயமான வரலாறு ஆகும்.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மதீனா முனவ்வராவிலிருந்து பேரீத்தப் பழப் பெட்டி ஒன்றை இவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள். இவர் எகிப்தில் இருந்தார் (மதீனாவாசிகள் பொதுவாக அன்றிலிருந்து இன்றுவரை தம் நண்பர்க ளுக்கு பேரீத்த பழங்களைப் பெட்டியில் வைத்து அன்பளிப்பு வழங்குவது வழக்கத் தில் இருந்து வருகிறது) பேரீத்தம் பழப்பெட்டியைப் பெற்று கொண்ட இம்மாமேதை அதற்கு பதிலாக அதே பெட்டியை திருப்பி அனுப்பி வைத்தார்.
ஆனால் அப்போது அந்த பெட்டி முழுவதும் தங்க நாணயங்கள் நிறைக்கப்பட்டு இருந்தன. "இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தம்மிடத்தில் இருப்பவற்றில் மிகச்சிறந்த பழத்தை அன்பளிப் பாக வழங்கியபோது நாம் நம்மிடத்தில் இருப்பவற்றில் மிகச்சிறந்ததை அன்பளிப்பாக வழங்க வேண்டாமா? என்று இம்மாமேதையவர்கள் நினைத்தே அவ்வாறு செய் தார்கள்.
وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا
"உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டால் அதை விடச் சிறந்ததை நீங்கள் அன்பளிப்பாக வழங்குங்கள் அதற்கு வசதி இல்லை என்றால் அதை போன்ற தையே திரும்பவும் நீங்கள் அனுப்பி வையுங்கள்" என்ற குர்ஆன் 4:86 வசனத்தின் படி செயல்பட்டார்கள்.
பக்கத்து வீட்டில் ஒரு பெண் தன் கணவர் சுகமில்லாமல் இருப்பதாகவும் அவ ருக்கு மருந்து கொடுப்பதற்கு கொஞ்சம் தேன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள் தேன் வாங்கி செல்வதற்காக வேண்டி உடன் ஒரு சிறிய புட்டி வைத்திருந்தார். ஆனால் அந்த மாமேதை அவர்களோ ஒரு தோல்பை நிறைய தேனை கொடுத்து அனுப்பும்படி சொல்வதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டு போனார்கள்.
அந்தப் பெண் கேட்டது சிறிய அளவுதான், அவர் கொண்டு வந்திருக்கும் புட்டியும் சிறியது. அதுவே போதுமானது என்று அவரிடம் சொன்ன போது "அந்தப் பெண் தன் தேவைக்கேற்பவும் தனது தகுதிகேற்பவும் கேட்டிருக்கிறார் என்பதற்காக அப்படியே கொடுப்பது அழகல்ல. நாம் நமது தகுதிக்கேற்ப கொடுப்பது தான் முறை" என்று எடுத்துக் கூறினார்கள்.
மக்களிடையே கல்வியாலும், கொடைத்தன்மையாலும் பிரபலமாகிவிட்டிருந்த மகான் லைஸ் இப்னு ஸஃது (ரஹ்) அவர்கள் எகிப்திலிருந்து பக்தாதுக்கு ஹிஜ்ரி 161 ஆம் வருடம் வருகை தந்தபோது அங்கிருந்த மன்னர் மன்ஸூர் எகிப்தின் ஆளுந ராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
ஆனாலும் இம்மாமேதை தம்மை மன்னித்துக் கொள்ளுமாறு கெஞ்சி கேட்டதுடன் அப்பதவியை ஏற்க மறுத்து உதறித் தள்ளிய இம்மாமேதைக்கு மக்களின் உள்ளங்களில் மாபெரும் ஆட்சியும் அதிகாரமும் இருக்க, வேறு என்ன தேவை?
தம் மாணவர்களுக்கு அடிக்கடி விருந்து வைப்பார்கள். அப்போது அவர்கள் அவர்களுக்கு வழங்கிய பண்டங்கள் ஒவ்வொன்றிலும் பொற்காசுகள் வைத்து விடு வார்களாம். காரணம் அதிகமான பண்டங்களை அவர்கள் சாப்பிட வேண்டும். அதன் மூலம் அதிகமான பொற்காசுகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் தான்.
சுப்ஹானல்லாஹ்! இப்படியும் ஒரு வள்ளலா? என்று நாம் புருவத்தை உயர்த்து கிறோம் அல்லவா? இப்படி வாழ்ந்த பெரும் மேதை தமது 81-வது வயதில் ஹிஜ்ரி 175- ஆம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 15 வெள்ளிக் கிழமையன்று தம் மண்ணக வாழ்வை முடித்து கொண்டு விண்ணகப் பயணம் மேற்கொண்டார்கள்.
"இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"
மாபெரும் மேதையாகவும் மிகப்பெரும் வள்ளலாகவும் திகழ்ந்த இம்மகானின் வாழ்வு உலகம் உள்ளவரை மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதில் என்ன சந்தேகம்?
மார்க்கத்துக்காகவே தம்மை அர்ப்பணித்து வரும் உலமாப் பெருமக்கள் ஒவ் வொருவரும் அந்த மகான்களைப்போல பிறருக்கு வாரி வழங்கும் வள்ளல்களாக கொடுக்கும் கரங்களாகவே வாழ
அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்.
மௌலானா S. லியாகத் அலி மன்பஈ
பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக