செவ்வாய், 28 ஜூன், 2022

இஸ்லாம் கூறும் தர்ம சிந்தனை


 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

وَأَحْسِن كَمَآ أَحْسَنَ ٱللَّهُ إِلَيْكَ ۖ

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் வலிமார்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு இஸ்லாம் கூறும் தர்ம சிந்தனை என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் ஸலாத்தைக் எனது உரையை துவங்குகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...

 

இஸ்லாம் கூறும் தர்ம சிந்தனை ரொம்ப வித்தியாசமானது அதுமட்டுமல்ல அதோட வழிகள் விசாலமானது. பணங் காச தானம் கொடுப்பது மட்டும் தர்மம் கிடையாது.. அதையும் தாண்டி சின்னச்சின்ன நற்ச்செயல்களும் இஸ்லாத்தின் பார்வையில் தர்மங்கள் தான்.

வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள செல்வங்களை தர்மம் செய்றாங்க. வசதியற்றவர்கள், தாங்கள் செய்யும் நற் செயல்களின் வழியே தர்மம் செய்கிறாங்க. இந்த மாதிரி ஏழைபணக்காரன் இருவருக்குமே தர்மம் செய்யும் வாய்ப்பை இஸ்லாம் வெவ்வேறு வழிகளில் வழங்கி  இருவரையும் சமநிலைப்படுத்துகிறது.

وَأَحْسِن كَمَآ أَحْسَنَ ٱللَّهُ إِلَيْكَ ۖ

இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்என்று என்று வல்லோன் அல்லாஹ் தன் அருள் மறையாம் திருக்குர்ஆன் (28:77) வசனத்தில் கூறுகிறான்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம்.

வழி தவறியவருக்கு வழிகாட்டுவதும் தர்மம்.

பார்வையற்றோருக்கு வழிகாட்டுவதும் தர்மம்.

கல், முள், எலும்பு போன்றவற்றை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம்.

உங்களது வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மமேஎன நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூதர் (ரலி), நூல் : திர்மிதி)

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

நபியவர்களின் இந்த  நபிமொழியில் பலவிதமான தர்ம சிந்தனை கள் இடம்பெற்றிருக்கிறது. அதுல ஒன்னு கூட பொருள் சம்பந்தப்பட்டது கிடையாது. தர்மம் என்றால் இஸ்லாத்தின் பார்வையில் பொருளுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அது பரந்த மனப்பான்மையுடன் தொடர்புடையது என்பதை இதன் நபிமொழியின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

உணவை தானம் செய்வதும் தர்மம் தான்

ஒரு பெண், வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அந்த தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அது போன்றே கருவூலக்காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விடமுடியாதுஎன நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இதுமட்டுமல்ல ஒருதடவை நபி ஸல் அவர்கள் தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்என கூறியதும் நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால் ....?’ நாங்கள் என்ன செய்வது எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) ஏதாவது கைத்தொழில் செய்து, தானும் அதன்மூலம் பலனடைந்து, மற்றவர்களுக்கும் தர்மம் செய்ய வேண்டும்என்றார்கள்.

அப்போதும் நபித்தோழர்கள் அதுவும் முடியவில்லை என்றால்...எனக் கேட்டதற்கு, ‘தேவையுடையவர்களுக்கு, உதவி தேடி நிற்கும் கஷ்டப்பட்டவர்களுக்க உதவவேண்டும்என பதிலளித்தார்கள். தோழர்கள், ‘அதுவும் செய்ய முடியவில்லைஎன்றதும் நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), நூல்:புகாரி)

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

நமது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.  மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தன்னுடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும், அல்லது அவரது பயணச்சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மமாகும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

இதுபோன்ற ஏராளமான ஹதீஸ்கள் அதாவது நபி ஸல் கூறிய வார்த்தைகள் ஹதீஸ் புத்தகங்களில் வந்துள்ளது,

மற்றொரு தடவை ‘‘நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபியவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால் அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தான தர்மம் செய்கின்றனர் (அவ்வாறு தான தர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே)என்று தங்களின் வறுமை நிலையால் அவர்களைப்போல் தானதர்மம் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கத்தோடு கூறினர்.

அதற்கு நபியவர்கள் யார் சொன்னா உங்களுக்கும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை வழியை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது) தர்ம மாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு (அல்லாஹூ அக்பர்) சொல்லும் தர்மமாகும். ஒவ்வொரு புகழ் மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு’’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் அபூதர் (ரலி), நூல்: புகாரி)

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

உன் சகோதரனைப் பார்த்து புன்னகை புரிவதும் தர்மமேஎன்பது நபிமொழி ஆகும். உன் மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவு ஊட்டுவதும் தர்மம் ஆகும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஸஃதுபின் அபிவக்காஸ் (ரலி), நூல் : புகாரி)

செவிடருக்கும், வாய் பேச முடியாதவருக்கும் அவர்கள் விளங்கும் வரைக்கும் கேட்க வைப்பதும் தர்மமே. அநீதி இழைக்கப்பட்டவன் அவன் உதவி தேடும்போது அவனுக்காக விரைந்து செல்வதும் தர்மமே. பலவீனமானவருக்காக உதவி புரிய உனது கையை உயர்த்துவதும் தர்மமேஎன நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: அஹ்மது)

இதுபோன்ற தர்ம சிந்தனைகளை இஸ்லாம் அதிகம் அதிகம் விதைத்திருக்கிறது. தேவையுடையவர்களை வைத்து தர்மத்தின் நிலைகளும் மாறிவிடுகிறது. தர்மத்தை செல்வத்துடன் மட்டும் இஸ்லாம் சுருக்கி மட்டுப்படுத்தவில்லை.

எனவே தேவையானவர்களுக்கு தேவையான சமயத்தில் வழங்கும் சின்ன சின்ன நற்கருமங்களும் தர்மங்கள் தான். இத்தகைய விசாலமான தர்மசிந்தனைகளை வாழ்வில் கடைப்பிடித்து தர்மசீலர்களாக வாழ வல்லோன் அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக,

ஆமின்.

 

மவுலவி. அ. செய்யது அலி மஸ்லஹி,  பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக