ஞாயிறு, 19 ஜூன், 2022

"ஐந்து உபதேசங்கள்"

 

ஹம்து ஸலவாத் சொல்லிக் கொளளவும்.

 அல்லாஹ்வின் நல்லடியார்களே...

பாவக்கடலில் மூழ்கிவிட்ட ஒரு மனிதர் ஒரு இமாம் அவர்களே வந்து தன் அவலநிலையை சொன்னார்:

 

"இமாம் அவர்களே! எல்லா பாவங்களையும் செய்து அதற்கு அடிக்ட் ஆகிவிட்டேன். இப்போது தவ்பா செய்து திருந்தி வாழ நினைக்கிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. அல்லாஹ் தங்களுக்கு அருள்புரியட்டும்!. எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள். பாவங்களை நான் விடும்படியான நல்லுபதேசம் செய்யுங்கள்" என்றார்.

 

இதை கேட்ட அந்த இமாம் தம்பி! நீ பாவம் செய்ய வேண்டுமென்றால் தாராளமாக செய்துகொள். ஆனால் இந்த ஐந்தே ஐந்து விஷயங்களை செய்துவிட்டு பாவம் செய்து கொள்" என்று கூறினார்.

 

இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் சந்தோசமாக. "இமாம் அவர்களே! உடனே சொல்லுங்கள். இப்போதே செய்கிறேன்" என்றான்.

 

"தம்பி! அல்லாஹ்விற்கு மாறு செய்வதானால் செய்து கொள். ஆனால் அவன் படைத்த பூமியில் செய்யாதே!" என்றார்

 

இந்த பூமி முழுவதுமே அவனுக்கு சொந்தமானது தானே?." இந்த பூமியை விட்டு என்னால் எங்கே செல்ல முடியும் என்று கேட்டான்

 

அப்படியென்றால் அவனுடைய நிலத்தில் இருந்து கொண்டு அவனுக்கே மாறு செய்ய உனக்கு வெட்கமாக இல்லையா?" என்றார்.

 

வந்த அந்த இளைஞன் மனதில் சலனம் ஏற்பட்டது. "இரண்டாவது செய்தியை சொல்லுங்கள்" என்றான்.

 

"தம்பி! அல்லாஹ்விற்கு மாறு செய்வதானால் செய்து கொள். ஆனால் அவனுடைய ரிஸ்கை உணவை சாப்பிடாதே!" என்றார்.

 

நாம் சாப்பிடும் அனைத்து உணவும் ரிஸ்க்குகள் எல்லாமே அவனுக்குஅல்லாஹ்வுக்கு  சொந்தமானது தானே? அதை எடுத்து உண்ணும் கை உட்பட!" என்றான்.

 

அப்படியென்றால் அவன் ரிஸ்கை சாப்பிட்டு விட்டு அவனுக்கே மாறு செய்ய நீ வெட்கப்பட வேண்டாமா? என்றார்.

 

அந்த இளைஞன் மனம் மேலும் கலங்கியது. "மூன்றாவது செய்தியை சொல்லுங்கள்" என்றான்.

 

"தம்பி! அல்லாஹ்விற்கு மாறு செய்வதானால் செய்து கொள். ஆனால் அவன் பார்க்கிற இடத்தில் செய்யாதே!" என்றார்.

 

அதெப்படி எங்கு போய் செய்ய முடியும்?. அவன் தான் மொட்டைப் பாறையில் கும்மிருட்டில் கருப்பு எறும்பு ஊறுவதைக்கூட அறிவானே?.  அதெப்படி மறைந்து கொள்ள எங்கு போவேன்?. எங்கு மறைப்பேன்?. அவன் தான் மறைந்தது, மறையாதது அனைத்தையும் அறிகிறானே?" என்று புலம்பினான்.

 

அப்படி என்றால் "அல்லாஹ் உன்னைப் பார்க்கிறான். நீ மாறு செய்வதை அறிகிறான் என்று தெரிந்தும் மாறு செய்ய உனக்கு உடம்பு  கூசவில்லையா?. உன்னைப் பார்ப்பவர்களிலேயே அவன் உனக்கு அவ்வளவு இளக்காரமாகிவிட்டானா என்ன?" என கேட்டார்.

 

ஆடிப்போனான் இளைஞன்: "நான்காவதை சொல்லுங்கள் இமாம்" என்றான்.

 

"தம்பி! அல்லாஹ்விற்கு மாறு செய்வதானால் செய்து கொள். ஆனால் உன் உயிரைப் பறிக்க மலக்குல் மவ்த் வரும் போது, இந்த பாவங்களிலிருந்து நீ தவ்பா செய்யும் வரை உனக்கு கொஞ்சம் அவகாசம் வழங்கும்படி அவரிடம் சொல்ல முடிந்தால் தாரளமாக மாறு செய்து கொள்!" என்றார்

 

அது யாரால் முடியும்?.

 وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ‌ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏

ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய காலம் வரும் பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன் : 7:34)" என்று அல்லாஹ்வே கூறுகிறான்

 

 ஒன்றையும் கேட்டு திருந்தி விட தயாரானான். "இமாம் அவர்களே! ஐந்தாவதையும் சொல்லி விடுங்கள்" என்றான்.

 

"தம்பி! அல்லாஹ்விற்கு மாறு செய்வதானால் செய்து கொள். ஆனால் உன்னிடம் மறுமையில் நரகத்திற்கு உன்னை இழுத்துச் செல்ல நரகத்தின் காவலர்கள் வரும் போது, அவர்களிடமிருந்து தப்பித்து சுவர்க்கம் செல்ல முடியுமானால் மாறு செய்து கொள்!"

 

அவ்விளைஞன் கண்ணீர் விட்டு அழுதான். கத்தி சொன்னான்: "இது போதும் இமாம்... இது போதும். ஒழுங்கான முறையில் நான் தவ்பா செய்து திருந்தி விட்டேன். அதற்கு அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன். 

யா அல்லாஹ்! எங்கள் மவ்த்திற்கு முன் தவ்பாவை எழுதிவிடுவாயாக. 

மவ்த்தின் போது ஷஹாதத்தை சொல்லும் பாக்கியத்தை தந்தருள்வாயாக

மறுமையின் போது எங்கள் நபி அவர்களின் சந்திக்கும் பாக்கியத்தை தந்தருள்வாயாக!"

 

(அரபி தகவல் உதவி:

 Thondi Musthafa Rashadi  ஹஜ்ரத் அவர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக