ஞாயிறு, 29 மார்ச், 2020

நிர்வாகத் திறன்.




அல்லாஹ்வின் அருள் கொண்டு நீவிர் அவர்களிடம்
நளினமாக நடந்து கொண்டீர். உள்ளம் இறுகிய முரடராக
நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டும் சிதறி
ஓடியிருப்பார்கள்
(அல் குர்ஆன் 3:159)

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு துறையை நிர்வாகம்
செய்பவனாகவே இருக்கிறான்
நாட்டை ஆளுவோர் சிலர்! வீட்டை ஆளுவோர் சிலர்! குறைந்த பட்சம் தான் தொழில் செய்யும் அலுவலகத்திலுள்ள சிலரையாவது ஆள்வோர் சிலர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்

அறிந்து கொள்ளுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் நிர்வாகம்
செய்பவராகவே இருக்கின்றீர்கள் 

உங்களின் நிர்வாகம் பற்றி மறுமையில் நீங்கள் விசாரிக்கப்பட இருக்கிறீர்கள். நாட்டின் தலைவன் குடிமக்களின் நிர்வாகி அவன் அதுபற்றி
விசாரிக்கப்படுவான். சாமானியன் தன் குடும்பத்தின் நிர்வாகி. அவன்
அதுபற்றி விசாரிக்கப்படுவான். ஒரு பெண் தன் கணவன் உடமைகளுக்கும்
குழந்தை களுக்கும் நிர்வாகி, அவள் அது பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு
வேலைக்காரன் முதலாளியின் உடமைகளுக்கு நிர்வாகி, அது பற்றி அவன்
விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள். உங்களில் ஒவ்வொருவரும்
நிர்வாகம் செய்பவர்களே! அது பற்றி நீங்கள் விசாரணை செய்யப்படுவீர்கள்
அறிவிப்பவர் : ஹளரத் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)
நூல் : புகாரி, முஸ்லிம்

எனவே நிர்வாகத் திறமை என்ற கலையை ஒவ்வொருவரும் அறிந்து
வைத்திருப்பது அவசியமாகும். அதற்கு அறிவு, திறமை, கற்பனை, துணிச்சல்
முடிவெடுக்கும் திறன், வியூகம் என்ற இவற்றுடன் மிக முக்கியமாகத்
தேவைப்படுவது பழகும் தன்மைதான்

அதிகாரத்தின் முன்னிலையிலோ, செல்வாக்கின் முன்னிலையிலோ
பணத்தின் பின் பலத்திலோ, ஒரு தலைவனின் செல்வாக்கின் நிழலிலோ, ஒருவர்
ஒரு பதவியைப் பெறக்கூடும். ஆனால் பிறருடன் அவரால் ஒத்துப்போக
முடியவில்லையானால் பிறருடன் கமூகமாக அரவணைத்துப் பழக முடியவில்லை என்றால், அவரின் பதவி நிலைக்கா து அரசியல் உலகில் இத்தகைய
ஆர்ப்பாட்டக்காரர்கள் பதவி ஆட்டம் காண்பதையும், பிறகு அவர்கள் பிறர்
காலில் விழுவதையும், அன்றாடக் காட்சியாக நாம் காண்கிறோம். அதே நேரம்
மனித உயர்வுகளை மதித்து தன் நிர்வாகத்திற்குட்பட்டோருடன் சுமூகமாகப்
பழுகுவோர் வெற்றியடைவதையும் நாம் காணுகிறோம்

ஒரு நிர்வாகம் என்றால் அதில் பலதரப்பட்ட மக்கள் இருப்பார்கள். ஐந்து
விரலும் ஒன்றாகாது என்று கூறுவதைப் போன்று, பல நிலையிலுள்ளவாகள்
இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்்டும்

ஒரு கிராமவாசி ஹள்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து
யாசகம் கேட்டார். அவர்கள் அவருக்கு தேவையானதை அளித்துவிட்டு "நான்
உமக்கு தேவையானவற்றைத் தந்துவிட்டேனா” என வினவினார்கள்

அவரோ “இல்லை நீர் ஒன்றும் பிரமாதமாகச் செய்து விடவில்லை
என்றுரைத்தார். பெருமானாரின் சன்னிதானத்தில் மரியாதைக்குறைவான
வார்த்தையை அவர் பயன்படுத்தியதைக் கண்ட அவையோருக்கு அவர் மீது
கோபம் பிறந்தது. எனவே அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்
நிலமையைக் கண்ணுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை மீட்டு தனது
இல்லத்தினுள் அழைத்துச் சென்றார்கள். இல்லத்திலிருந்து சில பொருட்களை
அவருக்கு அன்பளிப்புச் செய்து "இப்போது கூறும்
தேவையானவற்றைத் தந்து விட்டேனா” என்று கேட்டார்கள். "ஆம்! நீர் எனக்கு
அதிகமாகவே தந்துவிட்டீர். இறைவன் உமக்கும் உமது குடும்பத்தாருக்கும்
நற்கூலி வழங்குவானாக" என்று கிராமவாசி கூறினார் நான் உமக்கு நண்பரே! நீர் முதலில் என்னிடம் நடந்து கொண்ட முறையினால் எனது நண்பர்கள் உம்மீது கோபமடைந்துள்ளார்கள். அவர்களின் கோபத்தை நான் போக்க விரும்புகிறேன். எனவே என்னைப்பற்றி தற்போதைய உமது அபிப்பிராயத்தை அவர்கள் முன் வந்து கூறுகிறீரா" என நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அவர் சம்மதித்ததும் பெருமானார் (ஸல்) அவரை தன்
நண்பர்களிடம் அழைத்துச் சென்று “நண்பர்களே! சற்று முன் என்னிடம் தகாத
வார்த்தை உபயோகித்ததற்காக தாங்கள் அனைவரும் இவர் மீது கோபம்
கொண்டீர்களல்லவா? ஆனால் இப்போது அவர் என்ன கூறுகிறார் தெரியுமா என்று கேட்டுவிட்டு அவர் கூறிய உபச்சார வார்த்தைகளைக் கூறினார்கள் பின்னர் அக்கிராமவாசியை நோக்கி "அப்படித்தானே” என்றார்கள், அவரும் 'ஆம்!” என்றுரைத்தார்

சிறந்த நிர்வாகத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சீரிய வழி காட்டியுள்ளார்கள். வேலைக்காரருக்கு வியர்வை உலரும் முன் கூலியை வழங்குவதும், சக்தியைத் தாண்டிய வேலைப்பளுவைத் தந்து விட்டால் தாமும் அவருக்கு உதவ முன் வருவதும் தரமான உணவைத் தயாரித்த சமையல்காரருக்கு, அதே தரமான உணவைத்தர முன் வருவதும் பெருமானார் கூறும் ஆலோசனை களாகும்

சுருங்கக் கூறுமிடத்து நிர்வாகத்துகுட்பட்டோரிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்

நீதிக்குப் பேர்போன ஜனாதிபதி ஹஸள்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ்
அவர்கள் ஒருநாள் இரவில் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை
நடத்திக் கொண்டிருந்தார்கள், திடீரென விளக்கு அணைந்து விட்டது
அவர்கள் தானே எழுந்து சென்று விளக்கு ஏற்றினார்கள். சமீபத்தில் தூங்கிக்
கொண்டிருந்த வேலைக்காரரை எழுப்பவில்லை. அதைக் கண்ணுற்ற
அதிகாரிகளுள் ஒருவர் தாங்கள் வேலைக்காரனை எழுப்பியிருக்கலாமே எனைக்
கேட்டார். ஆழ்ந்த நித்திரையிலிருக்கும் வேலைக்காரனை இந்த சிறு
வேலைக்காக நான் எழுப்ப விரும்பவில்லை. விளக்கை ஏற்றியதால் எனக்கு
ஒன்றும் குறைந்து விடவில்லை. அதற்கு முன்னும் உமராகத்தான் இருந்தேன்
அந்த வேலையைச் செய்தபிறகும் உமராகத்தான் இருக்கிறேன் என்று ஜனாதிபதி
கூறினார்கள்

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது ஜனாதிபதி ஹளரத் உமர்
(ரலிஅவர்களின் நிர்வாகத் திறமையை காலத்தைக் கடந்தும் உலகே வியந்து
போற்றுகிறது. அத்தகைய பேருக்கும், புகழுக்கும் காரணம் அவர்களிடம் இருந்த
பழகும் தன்மையே 

ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒரு சமயம் நீண்ட தூரம் பயணம்
மேற்கொண்டார்கள். அவர்கள் ஒட்டகத்தில் பிரயாணம் செய்கிறார்கள். அடிமை
அயாஸ் நடந்து ஒட்டகத்தை ஓட்டி வருகிறார். சிறிது தூரம் சென்றதும் ஹளரத்
உமர் (ரலி) அவர்கள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி அடிமை அயாஸை மேலே
ஏறி பயணிக்கக் கூறினார்கள் அடிமையான நான் ஒட்டகத்தில் ஏறி
முதலாளியான தாங்கள் ஒட்டகத்தை ஒட்டி வருவது எங்ஙனம் நியாயமாகும்
எனக் கூறி அயாஸ் ஏற மறுக்கிறார்

ஆனால் ஹளரத் உமர் (ரலி) அவர்கள் விடவில்லை. மறுமையில் எனது
பாவச் சுமையை நீயா சுமப்பாய்எனக் கூறி அயாஸை ஏறக்கோரி தான்
ஒட்டகத்தை ஒட்டி வருகிறார்கள்

அதிசயமான அந்தக் காட்சியைக் கண்ட யூதர் ஒருவர் தவ்ராத்தில்
ஜனாதிபதி உமரைப் பற்றி இவ்வாறுதான் சித்தரிக்கப் பட்டுள்ளது என்று
கூறினார்


எதிரும் - புதிரும்

எதிரும், புதிருமான இரு நிலைகளில் உள்ளவர்களை நிர்வாகம் செய்யும்
பொறுப்பு, சிலருக்கு அமைந்து விடலாம். ஒரு வரை திருப்திப்படுத்தினால்
மற்றவர் அதிருப்தி அடைவார். ஒரு குடும்பத் தலைவன் தன் துணைவியையும்
தன் தாயாரையும் நிர்வாகம் செய்யும்போது அத்தகைய சிக்கல் தோன்றும். தன்
உறவினர், தன் உறவினரல்லாதவர் ஆகிய இரு வகையானவர்களை
தொழிலாளிகளாகக் கொண்ட ஒரு தொழிலதிபருக்கும் அத்தகைய சிக்கல்
தோன்றும். பல மொழி பேசும் மக்கள், பல மதங்களைக் கொண்டோர், பல
கட்சிகளைச் சார்ந்தோர் வாழும் ஒரு நாட்டை ஆளுவோருக்கும் அத்தகைய
சிக்கல் தோன்றும். அத்தகைய இக்கட்டான நிலையைச் சமாளிப்பதில்தான் ஒரு
நிர்வாகியின் திறமையே வெளிப்படும். தர்மசங்கடமான அந்தச் சூழ்நிலையில்
ஒரு சார்புடையவராக தம்மைக் கருத அவர் இடமளித்து விடலாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்துப் போரில் வெற்றி
கொள்கிறார்கள் அப்போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களை இல்லாதோருக்கு தேவைக்குத்தக்க பகிர்ந்தளிக்கப்படுகிறது. அப்போது
மதீனாவாசிகளான அன் சாரி இளைஞர்கள் சிலர் தமக்குள் பேசிக்
கொள்கிறார்கள். “அல்லாஹ் பெருமானாரை மன்னிப்பானாக அவர்கள்
மக்காவாசிகளான குறைஷ் குலத்தோருக்கு வெற்றிப்பொருட்களை
வழங்குகிறார்கள் நம்மை விட்டு விடுகிறார்கள். ஆனால் நமது வாள்கள்
மக்காவாசிகளின் இரத்தத்தால் நனைந்துள்ளன. அல்லாஹ்வின் மீது
ஆணையாக இது வியப்பான செயலாகும். யுத்தம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால்
நாம் அழைக்கப்படுகின்றோம். ஆனால் வெற்றிப் பொருள்கள் மற்றவர்களுக்கு
அளிக்கப்படுகிறது. அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க இது நடைபெற்றால் நாம்
பொறுமையைக் கடைப்பிடிப்போம்! அதே சமயம் இது நபிகள் நாயகத்தின்
விருப்பப்படி நடைபெற்றால் நாம் குறை காணுவோம்!"

இளைஞர்கள் இவ்வாறு பேசிக் கொண்டது பெருமானாரின் காதுக்கு
எட்டியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூத்த அன்சாரிகளை தன்
கூடாரத்தில் ஒன்று கூட்டினார்கள். சந்று நேரம் மவுனமாக இருந்தார்கள்
பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் "உங்களில் சிலர் இவ்வாறு
பேசிக்கொண்டது உண்மைதானா" என வினவினார்கள். "யாரஸுலல்லாஹ்
எங்களில் வயதிலும், அனுபவத்திலும் குறைந்தசிலர் அறியாத் தனமாக பேசி
விட்டார்கள். எங்களை நீங்கள் மன்னித்து விடுங்கள்” என அன்சாரிகள் பதில்
கூறினார்கள்


உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அன்பர்களே! நீங்கள் வழி
தவறியவர்களாக இருந்தீர்கள்.நான் உங்களுக்கு வழி காட்டினேன், நீங்கள்
ஏழைகளாக இருந்தீர்கள். நான் உங்களை செல்வந்தர்களாக்கினேன். நீங்கள்
சண்டையிட்டுக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களை ஒன்று கூட்டினேன்
அல்லவா” என வினவினார்கள். அன்சாரிகள் கவலையுடன் மவுனமாக
இருந்தார்கள்

மீண்டும் பெருமானாரே பேசினார்கள். நீங்கள் ஏன் பதில் சொல்லாமல்
மவுனம் சாதிக்கிறீர்கள். நீங்கள் என்னை நோக்கி இப்படிக் கேளுங்களேன்.
நீங்கள் மக்காவாசிகளால் பொய்ப்படுத்தப்பட்ட நிலையில் எங்களிடம்
வந்தீர்கள். நாங்கள் உங்களை உண்மைப்படுத்தினோம். நீங்கள் ஏமாற்றப்பட்ட
நிலையில் வந்தீர்கள், நாங்கள் உங்களுக்கு உதவி செய்தோம். நீங்கள்
விரட்டப்பட்டு வந்திீர்கள், நாங்கள் உங்களுக்கு பயமற்ற தன்மையைத் தந்தோம்
என்று கூறுங்களேன்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
அன்சாரிகள் பதில் சொல்ல வகையற்று திகைத்துப் போயிருந்ததைக் கண்ணுற்ற
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசினார்கள்

"அன்பர்களே! பிறமக்கள் பணங் காசுகளை தங்கள் இல்லத்திற்கு
கொண்டு செல்லும்போது நீங்கள் அல்லாஹ்வின் தூதரை உங்கள் வீடுகளுக்கு
கொண்டு செல்கிறீர்களே! இது உங்களுக்கு திருப்தியளிக்கவில்லையா
அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் எடுத்துச் சென்றதை விட நீங்கள்
எடுத்துச் செல்வதே மிகச் சிறந்ததாகும். என் சரித்திரத்தில் மக்காவிலிருந்து
நாடு துறக்கும்பகுதி மட்டும் இடம் பெறவில்லையாயின் நானும் அன்சாரிகளில்
ஒருவனாகவே பிறந்திருப்பேன். பிற மக்கள் ஒரு பாதையிலும், அன்சாரிகள் ஒரு
பாதியிலும் சென்றால் அன்சாரிகள் செல்லும் பதையிலேயே நான் செல்லுவேன்

பெருமானாரின் இந்த வாக்கியங்களைச் செவியுற்ற அன்சாரிகள்
உணர்ச்சிப் பிழம்பாக மாறினார்கள் "யாரஸுலுல்லாஹ்! நாங்கள் அல்லாஹ்வின்
ரஸுலையே எங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் செல்ல விரும்புகின்றோம்" என்று
ஒருமித்த குரலில் அவர்கள் கூறினார்கள்

சரியான நிர்வாகத்தை வழி நடத்த முன் வருவோருக்கு பெருமானாரின்
வரலாறு சிறந்த பாடமாகும்.


கனிவுடன் கண்டிப்பு.

நிர்வாகத் திறமைக்கு கனிவு அவசியம் தேவை. ஆனால் 
நிர்வகத்துக்குட்பட்டோர் நிர்வாகத்துக்கு ஊறு விளைவிக்கும் போது அளவான
கண்டிப்பும் தேவையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்கு ஒருவர்
தொல்லை தந்தால் பாராமுகமாக இருப்பார்கள். ஆனால் தன்
நிர்வாகத்துக்குட்பட்டோர், தான் கொண்டு வந்த கொள்கைக்கு எதிராக
நடந்தால் கடுமையான முறையில் கடிந்து கொள்ளுவார்கள். செம்மாதுளை
முத்துக்களை கொட்டிக் குவித்ததைப் போன்று அவர்கள் வதனம் கோபத்தால்
சிவந்து விடும்

வீட்டினுள் நுழைந்தால் வீட்டு வேலைகளில் துணைவியர்களுக்கு துணை
செய்யும் பெருமானார் (ஸல்) அவர்கள் துணைவியரிடம் தவறு கண்டால்
கண்டிக்கவும் தவறமாட்டார்கள். செலவு தொகை அதிகமாக வேண்டுமென
பிடிவாதம் பிடித்த துணைவியர்களிடம் ஒரு மாதம் பேசாமலிருந்து தனது
கண்டனத்தைத் தெரிவித்து அவர்களின் பிடிவாதத்தை மாற்றினார்கள்

கனிவும் கண்டிப்பும் நிர்வாகத்தின் இரு கண்களாகும்


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக