வெள்ளி, 13 ஜூன், 2014

ஈருடல் ஓருயிர்.....!





இஸ்லாத்தை FAMILY ORIENTED RELIGION என்று கூறுவார்கள் . இஸ்லாத்தில் குடும்பங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன பின்னர்தான் இஸ்லாத்தை   COMMUNITY RELIGION என்பார்கள். குடும்பங்கள் என்பது வீடுகளில் தானே உருவாகும்..... வீடுகள் தான் நமது நம்பிக்கைகள். அவை தகர்ந்தால்..... இஸ்லாமிய எழுச்சி என்பது இன்னும் பலகாலம் கானல் நீராகவே இருக்கும்.



வீட்டின் முக்கிய தூண்கள் கணவன் மனைவி உறவு.  தம்பதியர்களுக்கிடையே அன்பு இல்லையெனில் அப்புறம் என்ன பேசியும் பயன் இல்லை. திருமணமான புதிதில் மட்டும் கணவனும் மனைவியும் நேசித்து விட்டு, நாள்கள் செல்ல செல்ல நீ யாரோ.. நான் யாரோ பாணியில் வாழ்வை உப்பு சப்பில்லாமல் தொடரும் தம்பதியர் வீடுகள் எப்படி சுவனமாக மாறும்….?   நேசம் என்பதை காலம் காலமாக தொடரச் செய்ய முடியாதா...?  வீட்டை காதலால் நிரப்ப முடியாதா...? முடியும்..! நேசம் நாசமாகி போகும் காரணங்களை தெரிந்து கொண்டாலே அதை சரி செய்ய முடியும்.


நேசத்தை எப்படி இழக்கிறோம்...


1. திருமணமான புது கணவனும் – மனைவியும் பேச்சோ பேச்சென்று பேசுகிறோம். அப்படி என்னதான் பேசினோம் என்பதை இப்போது நினைத்தால் சிரிப்பு மட்டும் மிஞ்சும். பின்னர் பேச்சி குறைந்து, பேசுவதற்கு எதுவுமில்லை என்று நினைப்பது முதல் காரணம்.


2. வீட்டை விட்டு வெளியே செல்ல நினைப்பது, கணவனின் சிந்தனையெல்லாம் எப்படா வீட்டிலிருந்து போவோம் என்று ஒவ்வொரு ஐடியாவாக யோசித்து வெளியே செல்வது.


3. ஒருவரை ஒருவர் குறை கூறத் துவங்குதல். கணவனுக்கு மனைவியின் நிறைகளை மறந்து குறைகளும், மனைவிக்கு கணவனின் நிறைகளை மறந்து குறைகள் மட்டுமே கண்ணுக்கு தெரிவது. கெட்ட கண் கொண்டு ஷைத்தான் பார்க்க தூண்டுகிறான். காதலித்து திருமணம் செய்திருப்பவர்களுக்கும் இதே பிரச்சனை தான். காதலிக்கும் போது தெரியாத குறைகள் இப்போது கண்ணுக்குத் தெரிகின்றன. இதுவும் ஒரு காரணம்.


4. வீட்டுக்கு வெளியே அன்பை தேடுவது. இது அல்லாஹ்வுக்கு கோபம் தரும் ஒரு மோசமான குணம் ஆகும்.


கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம் இது. இந்த சிந்தனை வந்து விட்டாலே பின்னரி ஷைத்தான்  சிறுக சிறுக அதை அலங்கரித்து மனங்களில் அதை காட்சி பொருளாக்கிவிடுவான். மோசடியிலும் துரோகத்திலும் ஈடுபடுபவர்களுக்கு  மறுமையில் ஒரு கொடி கொடுக்கப்படும்.  இவன் ஒரு மோசடிக்காரன் என்று எழுதப்பட்டு அனைத்து படைப்பினங்களுக்கு மத்தியில் இவன் கேவலப்படுத்தப்படுவான் .  என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லையா...?


சில ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தொடர்புகள் மிகமிக அரிதாகவே இருந்தன. ஆனால் இன்று பெண்கள் கூட துரோகம் செய்யும் நிலைமையை பார்த்தால் கவலைக்குரியதாய் மாறிவிட்டது. ஒருவருக்கொருவர் ஆடையைப்போல் என்கிறான் அல்லாஹ். ஆடை ரகசியங்களை பாதுகாக்கும். ஆனால் அவற்றையும் வெளியே சொல்லும் கேடுகெட்ட கலாச்சாரம் கணவன் மனைவி உறவை அப்படியே துண்டாக்கி விடுகிறது.


ومن آيته  ان خلق لكم من انفسكم ازواجا  لتسكنو اليها وجعل بينكم مودة ورحمة  ان فى ذلك لايت لقوم يتفكرون.


மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும்  தோற்றுவித்தான் திருக்குர்ஆன். 30-21.


தம்பதியரிடையே இருக்கும் அன்பும், காதலும் இறைவன் ஏற்படுத்தியது. அதனால் தான் இருவரில் ஒருவர் இறந்த பின்பும் சில சமயம் அந்த நேசத்தை உணருகிறோம்.


கதிஜா (ரலி) இறந்து 14 ஆண்டுகள் கழிந்த பின் மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்குள் நுழைகின்றார்கள். எல்லோரும் நபியைத் தங்கள் தங்கள் வீட்டில் விருந்தினராக தங்கும்படி கூற நபியோ,  கதிஜாவின் கப்ருக்கு பக்கத்தில் எனக்கு கூடாரம் அடியுங்கள் என்றார்கள். 14 ஆண்டுகள் ஆன பின்பும் அண்ணலாரின் மறவாத அன்பை பாருங்கள்.


உலகில் எத்தனையோ காதல் காவியங்களை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம் ரோமியோ – ஜுலியட், லைலா – மஜ்னு என்று, ஆனால் இவை அத்தனையும் கற்பனை காவியங்கள். இந்த உலகின் உண்மையான ஒரு காதல் காவியம் உண்டு என்றால் அது நபி (ஸல்) – கதிஜா (ரலி) ஜோடி என்று  உறுதியுடன் கூறலாம். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறந்த முன் மாதிரி என்றால் இல்லற வாழ்வியலிலும் தானே..


கதிஜா (ரலி) அவ்ர்கள் இறந்தபோது ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து,  இறைதூதர் அவர்களே...  உங்களுக்கு குழந்தைகள் உள்ளனர், தாங்கள் இன்னொரு திருமணம் செய்யக்கூடாதா..  என்று கேட்ட போது நீண்ட நேரம் மௌனமாக இருந்த நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர்.  தலை கவிழ்ந்து இருந்த நாயகம் (ஸல்) அந்த பெண்மணியிடம் கூறினார்கள். கதிஜாவை போல் யார் இருக்கிறார்கள்... அவரை போல் யாருமில்லையே.... அந்த பெண்மணி பின்னர் கூறும் போது  நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தையை கேட்ட பின்பு திருமணத்தை குறித்து கூறாமல் இருந்திருந்திருக்கலாமே என்று நினைத்தேன்.  என்கிறார்.


மதினாவில் ஒருநாள் தம் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் இருக்கும் போது ஒரு பெண்மணி உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள். அந்த பெண்மணியின் குரலைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ் இது கதிஜாவின் குரலை போன்றல்லவா உள்ளது என்று வேகமாக சென்று கதவை திறக்க அங்கே கதிஜாவின் சகோதரி ஹாலா (ரலி) நிற்கின்றார்கள். இருவருக்கும் ஒரே குரல். நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியும்  தம் மனைவி இறந்து விட்டார்கள் என்பது. என்றாலும் அந்த அடிமனதின் அன்பை பாருங்கள் .


உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தரும் சிறந்த பரிசு அவர்களின் தாயை நீங்கள் நேசிப்பதாக உங்களை காண்பது. நீங்கள் பிள்ளைகளுக்கு முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் வளரும் பிள்ளைகளிடம் குடும்பம் என்றால் இதுதானோ என்ற எண்ணம் தோன்றி விடாதா......


வெளியூரிலிருந்து வீட்டுக்கு வரும்போது தங்கள் வருகையை முன்னரே அறிவிப்பது நபி (ஸல்) அவர்களின் பாணி. ஏனெனில் தங்களை அவர்கள் தயார்படுத்தவும், அலங்கரித்து கொள்ளவும் அது வாய்ப்பாகும் என்பதால், திடிரென்று சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்து  சர்ப்ரைஸ் கொடுப்பதுதான் நம்மில் பலருடைய செயல். மனைவி முகத்தில் சிறிது கரி, கையில் கொஞ்சம் மசாலா என்று வரவேற்றால் எந்தக் கணவனுக்கும் மனைவியை பார்க்கும் பார்வையில் அன்பிருக்காது.


தாதுர் ரிகாப்  என்ற போரிலிருந்து திரும்பி வரும்போது தம்முடன் வந்த ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து நபி (ஸல்) கூறினார்கள்.
ஜாபிர்.... நாம் மதினாவை நெருங்கினால் உள்ளே நுழைய வேண்டாம். நம் மனைவியருக்கு நம் வருகையை அறிவித்த பின் செல்லலாம். தங்கள் தலையணைகளை சரிசெய்ய அது நல்ல வாய்ப்பாக இருக்கும்.  என்றார்கள். இது போன்ற நாகரீகத்தை உலகம் கற்பனை செய்துகூட பார்த்திராத சமயத்தில் இதை செயல்படுத்தினார்கள் நபி (ஸல்) அவர்கள்.


 வரலாற்று எடுத்துகாட்டுகள்

தம் மரணப்படுக்கையில் அபூபக்கர் (ரலி) அவர்கள் செய்த வசிய்யத் நாம் நினைத்து பார்க்க முடியாதது.  என் ஜனாஸாவை என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) குளிப்பாட்டட்டும்  என்பது தான் அது.  ஏன்”…? என்று கேட்ட போது என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் செய்தாள் மிகப் பிடித்தமானதாக இருக்கும்  என்றார்கள்.  அவர்கள் மரணித்தபின் உண்மையில் அவ்வாறே செய்யப்பட்டது. தம் மனைவி மீது அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு எவ்வளவு பாசம் இருந்திருக்க வேண்டும் இப்படி ஒரு வசிய்யத் செய்ய...!



அலி (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து கேட்டார்,  அல்லாஹ்வின் தூதரின் மகளுடன் உங்களின் தொடர்பு எப்படி இருந்தது, விவரியுங்களேன்  என்ற போது, அலி (ரலி) கூறினார்கள்  எனது மணப்பெண்ணும் மன அமைதியும் முஹம்மதின் மகளே.. அவளே எனது வாழ்வு... அவளே எனது மனைவி.. அவளின் சதைத்துண்டு என் சதை துண்டுடனும், இரத்தத்துடனும் கலந்துவிட்டது.



ஒருநாள் பாத்திமா (ரலி) அவர்கள் அராக் மரக் குச்சியினால் பல் துலக்கி கொண்டிருந்தார்கள். உடனே கிண்டலடிக்கும் தொனியிலும் மனைவியை சிரிக்க வைக்கும் எண்ணத்திலும் இவ்வாறு கவிதை பாடினார்கள்.
அவளுடைய பற்களுக்கிடையில் இருப்பதால் நீ ஜெயித்து விட்டாய் அராக்கே... உன்னை நான் பார்ப்பேன்  என்ற பயமில்லையா உனக்கு ...  நீ மட்டும் வீரனாக இருந்திருந்தால் சண்டை போட்டிருப்பேன் உன்னோடு.  அவளுடைய பற்களுக்கிடையில் இருப்பதால் நீ ஜெயித்து விட்டாய் அராக்கே…! ”

பாத்திமா (ரலி) சிரித்து விட்டார்கள்.


எவ்வளவு அன்பு, நேசம், ஒருவரை ஒருவர் புரிதல் இருந்திருக்க வேண்டும்.. வீட்டில் ஏதோ பக்திமான் போன்று சிரிக்காமல் அல்லாஹ்வையும் ரசூலையும் நாங்கள் சிந்திப்போம்  என்று நகைசுவையின் சாயலே இல்லாதவர்கள் சிந்திக்கட்டும்.


அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரலி)  தாபியீன்களில் பிரபலமானவர். ஒரு வருடம் ஜிஹாதுக்கு போனால் மறு வருடம் ஹஜ்ஜுக்கு போவார். மனைவியை அதிகம் பிரியும் சந்தர்ப்பங்கள்.  ஹஜ்ஜுக்காக ஒரு தடவை சென்ற போது மனைவியின் நினைவு வருகிறது.  உடனே கடிதம் எழுதுகிறார்.  என் உயிர் உன் உயிரை தேடுகிறது... நீ அதை அங்கே உணர்ந்தாயா.....?”  எவ்வளவு அழகான வார்த்தைகள்....? எவ்வளவு ஆழமான அன்பு.,,

                                                                                   
கணவன் மனைவிக்கிடையே அன்பு என்பது அல்லாஹ் ஏற்படுத்தியது என்று  நாம் உணர வேண்டும். அல்லாஹ் ஏற்படுத்திய அன்பு ஒருநாளும் அணையாது. ஆனால் நாம்தான் அதை மறைத்து வைத்துள்ளோம்.

                                                                      
                                 மௌலவி நூஹ் மஹ்ளரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக